Tuesday, April 19, 2011

அது.. - சிறுகதை


இருளை ஒரு பெரும்போர்வை ஆக்கி அதை குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து வானம் முழுதும் பரப்பி விட்டது போல் இருந்தது. மணி எப்படியும் பதினொன்றை தாண்டி இருக்கும். பைக்கின் வேகத்தில் கிழிந்த குளிர் உடலெங்கும் அப்பியது.. உடல் தோல் ஜாக்கெட்டுக்குள் நடுங்கியது. விபுல் ஏன் தான் இந்த மாதிரியெல்லாம் செய்கிறான் என்று கோபமாய் வந்தது. அவனால் தான் இந்த பேய் குளிரில் உறைந்தபடி பறக்க வேண்டியிருக்கிறது. ஆபீசிலும் அப்படி தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் பாதியை நானே செய்ய வேண்டி வரும். திடீரென்று ஆபீசுக்கு மட்டம் போட்டு விடுவான். புதிதாய் கல்யாணமானவன். வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி போன்ற இடங்களில்கூட பையன்களுக்கு இருபதுகளின் ஆரம்பத்திலேயே கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். விபுலுக்கு 24 வயது தான் ஆகிறது. பார்ப்பதற்கோ பதினெட்டு வயது பையன் போல் தோற்றம். பீகாரில் தன்னுடைய கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தான் இவன் மணந்திருந்தான். அவள் இவனுக்கு சித்தி மாதிரி இருப்பாள். ஆனாலும் மற்ற எந்த பெண்ணையும் விட ஒரு அதீத கவர்ச்சி. பையனோ ஆபீஸ் என்று ஒரு சமாசாரம் இருக்கிறது என்பதை எல்லாம் மறந்து விட்டு புது பொண்டாட்டி கூடவே சுற்றிக்கொண்டிருந்தான்.

ஐந்தாறு மாதம் கழித்து எனக்கு அடுத்து தங்கியிருந்த வீட்டை காலி செய்து விட்டு..ஷாத்ரா வை தாண்டி எங்கோ வீடு பார்த்து போய்விட்டான். போன ஒன்றிரண்டு வாரத்திலேயே அவனுக்கும் அவளுக்கும் சண்டை வர ஆரம்பித்து விட்டது. தினமும் ஏதாவது பிரச்சனை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சண்டை போடுகிறாள் என்பான். சில சமயம் அடிக்கவும் செய்திருக்கிறாள். ஒரு சண்டையில் அவன் கன்னத்தை வலுவாகஅறைந்திருக்கிறாள் . முகம் வீங்கியிருந்ததை பார்த்து எங்கள் பாஸே ஒரு மாதிரியாகிவிட்டார். உண்மையில் அவள் திருமணத்திற்கு முன்போ எங்கள் வீட்டருகில் இருக்கும்போதோ அதிர்ந்து கூட பேச தெரியாதவளாய் இருந்தாள். அங்கு போனவுடன் எப்படி இப்படியானாள் என்று புரிபடவில்லை. ரெண்டு நாட்கள் முன்பு அவள் வீட்டார் வந்து இவனை சமாதானப் படுத்தி அவளை கொஞ்ச நாட்கள் கிராமத்தில் இருக்கட்டும் என்று கூட்டி சென்று விட்டார்கள். விபுல் தனியாக தங்க ஒரு மாதிரியாய் இருக்கிறது என்று சில நாட்கள் மட்டும் கூட தங்குமாறு தொந்தரவு செய்து விட்டான்.

அலுவலகத்தில் வேலை முடிந்து கிளம்புவதற்குள் க்ளையண்ட் சொன்னான் என்று இன்னும் சில வேலைகளை முடித்து விட்டு போ என்று விட்டார் எங்கள் பாஸ். இவன் முன்கூட்டியே வீட்டுக்கு சென்று விட்டான். எல்லாம் முடிந்து கிளம்பவே பத்தரைக்கு மேலாகி விட்டது. அங்கு போய் சேர எத்தனை நேரமாகுமோ தெரியவில்லை.

இடமும் பயங்கரமாக தான் இருந்தது. டிசம்பர் குளிரில் டெல்லியே பெரும் ரஜாய்க்குள் சுருண்டு கிடந்தது. பாவி இப்படி என்னை போட்டு வதைக்கிறானே என்று தோன்றியது.அவன் வீட்டை கண்டு பிடிப்பதற்குள் உடல் உண்மையிலேயே மரத்து போய்விட்டது. நல்லவேளை பையன் வோட்கா சிக்கன் என்று தடபுடலாய் வரவேற்றான். வீடு தான் பூகம்பத்தில் தப்பிய கட்டிடம் போல் இருந்தது. வீட்டின் வெளிச்சுவர்களில் ஏதோ பச்சையம் பரவி இருந்தது போல் இருந்தது. இவன் வீட்டின் மேல் தலத்தில் இருந்தான். கீழ் வீட்டில் வீட்டு ஓனர் இருந்தார். அவரே பாதி நாட்கள் அங்கு இருப்பதில்லை என்றான். அவருக்கு ஏகப்பட்ட வீடுகளாம். அதனால் பெரும்பாலும் கீழ் வீடு பூட்டியே தான் இருக்கும் என்றான்.

சரி தான் இது நன்றாய் தான் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் இங்கு தங்கலாம் என்று முடிவு செய்தேன். பையன் குடிக்கவே தெரியாதவன். பெருங்குடி மகன் போல் வீட்டில் நான்கு பாட்டில்கள் வைத்திருந்தான். சந்தோசம் என்று தங்கிவிட்டேன். இரவு குடி சாப்பாடு பேச்செல்லாம் முடிந்து அதிகாலையில் தான் தூங்கவே ஆரம்பித்தோம். எத்தனை நேரம் தூங்கினேன் தெரியவில்லை. என்னவோ ஒரு கனவு. கனவை தொடர்ந்து தொந்தரவு. உடலெல்லாம் மரத்து விடுவது போல் இருந்தது. குழிக்குள் இருந்து மேலே தாவுபவன் போல் கட்டிலில் இருந்து எழுந்து விட்டேன். நைட் லாம்பின் வெளிச்சத்தில் யாரோ உட்கார்ந்திருந்தது போல் இருந்தது. திடுக்கிட்டு பார்த்தால் விபுல். ரஜாயை தலைக்கு மேல் போர்த்திக்கொண்டு தன கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தான். உண்மையிலேயே பயந்து விட்டேன். என்னை மௌனமாக பார்த்துக்கொண்டே எனக்கு பின்னால் இருந்த ஜன்னலை கை காட்டினான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பயத்தில் 'என்னடா' என்றேன் தமிழில்.

"இந்த வீட்டில் பேய் இருக்கு .." என்றான் அவன் தெளிவான ஹிந்தியில்.கை நீட்டியபடியே இருந்தது.

"இப்ப தான் ஜன்னலை தட்டியது " என்றான் நடுங்கும் குரலில்.

திரும்பி பின்னால் பார்த்தேன். அந்த ஜன்னலுக்கு அருகில் தான் நான் படுத்திருந்தேன். மெதுவாக எழுந்து அவன் கட்டில் பக்கம் நகர்ந்தேன். அவனே பேய் மாதிரி தான் இருந்தான். அவன் பக்கத்தில் போகவும் பயம். மெல்ல அவன் கட்டிலின் மறு முனையில் அமர்ந்து கொண்டு அவனை பார்த்தேன். எனக்கு உண்மையில் நடப்பது நிஜமா கனவா என்று புரிபடவில்லை. சற்று நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தோம். குளிரா பயமா தெரியவில்லை உடல் கட கட வென்று நடுங்கியது. இத்தனை நாளாக இவன் பயந்தது இவன் மனைவிக்கா இல்லை இவன் சொல்லும் பேய்க்கா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

இவனுக்கு மட்டும் ஜன்னலை தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. அதனருகிலே படுத்திருந்த எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு வேளை அந்த சத்தத்தில் தான் நானும் எழுந்து விட்டேனோ என்று யோசித்தேன்.
"எப்பவும் இப்படி தான் நடக்குமா?" என்றேன்.
"வந்த ரெண்டாவது நாளில் இருந்தே இந்த சத்தம் கேட்கிறது.." என்றான். போனவாரம் ஒரு பக்கம் ஜன்னலையும் ஒரு பக்கம் கதவையும் மாறி மாறி தட்டியதாம். பயத்தில் மனைவியை கட்டிப்பிடித்தபடியே தான் கிடந்தானாம்.

நான் வீட்டின் ஜன்னலை மாடிப்படியில் ஏறும்போது பார்த்ததை நினைத்து பார்த்தேன். மடிப்படியிலோ அல்லது அதன் கைப்பிடி சுவற்றிலோ நின்று கொண்டு கை நீட்டினாலும் தொட முடியாத உயரத்தில் தான் இருந்தது ஜன்னல். பிறகு எப்படி இந்த மாதிரி சத்தம் வரும் என்று நினைத்தேன். என்ன தான் பேய் பிசாசை நம்பாதவன் என்றாலும் பக்கத்தில் படுத்திருந்தவன் இருட்டில் இப்படி எழுந்து உட்கார்ந்து நடுங்கி கொண்டிருந்தான் என்றால் யார்க்கு தான் பயம் வராது. அவன் பயத்தை நானும் பங்கு போட்டுக்கொண்டேன்.



விடியும் வரை அப்படியே அமர்ந்த படி தூங்கி போய் இருந்தோம். காலையில் கிளம்பும்போது கேட்டேன்." ஸாலா ..இவ்வளவு பிரச்னை இருக்கும்போது இந்த வீட்டை ஏன்டா காலி பண்ணாமல் இருக்கே?"
"இல்லை மோகன்ஜி என் மனைவி தான் வேண்டாம்..இந்த வீடு நல்லா தான் இருக்கு என்று சொல்லிவிட்டாள் " என்றான். சரிதான் அவளுக்கு பேய் தான் பிடித்திருக்கிறது. அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தான் பையன் அல்லாடிக்கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டேன்.

அதை தொடர்ந்து வந்த ஆறு நாட்களுக்கு நான் அங்கு தான் தங்கியிருந்தேன். இரவில் சரியாக பனிரெண்டு ஒரு மணிக்கெல்லாம் விழிப்பு தட்டிவிடும். ஆனாலும் எந்த சததத்தையும் நான் கேட்கவில்லை. அவனோ முதல் நாள் பார்த்த மாதிரியே தான் பயந்து போய் உட்கார்ந்திருந்தான் ஒவ்வொரு முறையும். நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று அவனை தேற்றி தூங்க வைத்து கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக ஊரில் இருந்து அவள் மனைவியும் வந்து விட்டாள். அவள் வந்தவுடன் எனக்கு முன்பாகவே அவளை தழுவிக்கொண்டான். அவளும் அவன் மேல் உயிரே வைத்திருந்தை போல் கண்ணீர் விட்டாள்.
அப்புறம் ரெண்டு மூன்று நாட்களில் வேறு வீடும் பார்த்து போய் விட்டார்கள் இருவரும். அதற்கு பிறகு அவள் சண்டை எல்லாம் போடுவதில்லை ரொம்ப அன்பாக இருக்கிறாள் என்று சொல்வான் விபுல். நான் தான் அவன் பயந்து போய் உட்கார்ந்திருந்ததை நடித்துக்காட்டி அலுவலகத்தில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தேன். விபுல் ஆபிஸ் வேலையாக இரண்டு நாள் வெளியில் சென்றிருந்த போது நான் அவன் வீட்டுக்கு சென்று வந்ததை மட்டும் யாரிடமும் சொல்லவில்லை. அழுத்தக்காரி. சுலபத்தில் உடன்படவில்லை. பிறகு தான் அவள் கட்டாயப்படுத்தி அவனை ஷாதிராவில் வீடு பார்க்க சொன்னாள் எனபதும் நான் மட்டுமே அறிந்தது.

ஒரு மாதம் கழித்து எனக்கு குர்கானில் வேறு வேலை கிடைத்து அங்கு வீடெடுத்து தங்கிவிட்டேன். நல்ல வீடு. .
மேல் தளத்தில் இருந்தது . சுற்றிலும் அழகான மரங்கள் வேறு. வேலை முடிந்து வீடு திரும்ப நேரமானாலும் பயமே இருக்காது. ரம்யமான இடம். இடையில் ஒரு முறை விபுல் தன் மனைவியுடன் இங்கு வந்து பார்த்து விட்டு " வீடு அருமையாய் இருக்கிறது மோகன். குர்கானில் ஒரு வேலை கிடைத்தால் நான் உங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே வந்து விடுவேன்.." என்றான். அவள் எதுவும் பேசவில்லை. ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த என் சட்டையை பார்த்துக்கொண்டே இருந்தாள். அன்று அணிந்திருந்தது.

போன மூன்றாவது வாரத்தில் ஓர் இரவில் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன். நல்ல வெயில் காலம். காற்றே இரவில் கூட கடும் வெப்பமாய் இருக்கும். எல்லா ஜன்னலையும் திறந்து வைத்திருந்தேன். யாரோ என்னை பெயர் சொல்லி அழைத்தார்கள். மெல்ல எழுந்து ஜன்னலை பார்த்தேன். ஜன்னலின் கம்பியை பிடித்துக்கொண்டு தலை முடி காற்றில் அசைய ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். " இருக்கீங்களா மோகன் பையா " என்றாள்.சற்று ஊடுருவிய பார்வையில் தெரிந்தது விபுலின் மனைவி. அவள் குரலோடு இன்னொரு ஆணும் சேர்ந்து பேசுவது போல் இருந்தது. இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாள் என்று ஒன்றுமே புரியவில்லை. அவள் தான் என்றாலும் தலைமுடியெல்லாம் கலைந்து பார்க்கவே பயங்கரமாய் இருந்தாள். என்னவோ ஆர்வமும் மித மிஞ்சிய காமமும் உந்தித்தள்ள கதவை திறந்தேன். நீண்ட நாள் திறக்கப்படாமல் இருந்த சவக்கிடங்கு திறந்தது போல் நாசிஎங்கும் ஒரு வித நாற்றம் நிறைந்தது. கதவு திறந்த வேகத்தில் ஒரு மின்னலைப்போல் பாய்ந்தவள் என்னை அணைத்துக்கொண்டு அப்படியே தரையில் சாய்த்தாள். புடைவையின் தலைப்பு சரிய, பளீரென தெரிந்த மார்புகள் மேலும் கீழும் மூச்சுக்கு ஏறி இறங்கின. " நான் வேணும்னு தானே பையா விபுலை அன்னிக்கு வெளியூருக்கு அனுப்புனீங்க ..?" என்றாள். ஆண் குரலும் கலந்திருந்தது.
அவள் என் மேல் இயங்க தொடங்கும்போது தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் திடீரென்று ஜன்னலுக்கு கீழே வெளிப்புறத்தில் நிற்பதற்கு இடமே இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

3 comments:

  1. சலங்கை சத்தம் இல்லை....சிலந்தி வலை இல்லை....வெள்ளை புடவை இல்லை....அப்புறம் என்ன கதை!!!! ஆனாலும் இது கதை...பின்னி எடுத்துட்டீங்க!!!

    ReplyDelete
  2. நன்றாக 'கதை' விட்டிருக்கிறீர்கள். :-) நன்று.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஜீவா சார்..!!
    மிக்க நன்றி சுரேஷ்..ஜன்னலை தட்டிய பேய் மட்டும் என் சொந்த அனுபவம். (உண்மையில் நான் எந்த சத்தத்தையும் கேட்கவில்லை :) )

    ReplyDelete