Tuesday, April 12, 2011

கிரிக்கெட்: ஒரு கடிதம்


கிரிக்கெட் பற்றிய என் கட்டுரைக்கு நண்பர் அகஸ்டஸ் எழுதிய கடிதம்:

பால்யகால கிரிக்கெட்: இன்றும் கூட இந்தியா வென்றுவிட்டது என்று சொன்னால் நான் அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்று சற்று சிரிப்பேன். மற்றபடி எனக்கு லியண்டர் பீஸ், மஹேஷ் பூபதி, சானியா மிர்ஸா, அபினவ் பிண்ட்ரா, சமீப குத்துச்சண்டை வீரர்கள் வென்றால் கிடைக்கும் மகிழ்ச்சி/புல்லரிப்பு கிரிக்கெட் வீரர்கள் பெயரில் கிடைப்பதில்லை.ஏனென்று யோசித்தபோது கிடைத்ததிந்த நதிமூலம். நான் அப்போது St. Xaviers High School, Tuticorin ல் படித்துக் கொண்டிருந்தேன். 1979-80. அங்கு football team, volleyball team, strong basket ball team எல்லாம் இருந்தது எனக்குத் தெரியும். Even Navy, NCC, NSS, etc. க்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அந்த அந்த வாத்தியார்கள் அலைவதைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்து மாணவர்களை தேர்வு செய்வார்கள். Cricket Team பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சூசை மாணிக்கம், என் தமிழ் வாத்தியார், முதல் வகுப்பு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். 1 மணிநேரம் சென்றிருக்கும். வகுப்பறை வாசலில் நின்று உட்புறமும் வெளிப்புறமும் பார்த்தபடி பாடம் எடுத்துக்கொண்டிருந்தவர், அய்யா, எல்லாரும் சத்தமின்றி எட்டிபாருங்கள் என்றார். பார்த்தோம். எங்களது சரித்திர வாத்தியார், பெயர் சொன்னால் உங்களுக்கு விஷயம் புரிந்துவிடும், ஒரு கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்தபடி தலை குனிந்தபடி ஸ்கூல் சுவரையொட்டி நடந்தபடி உள்ளேவர, அவர் பின்னே சுமார் 10 மாணவர்கள் தலை குனிந்தபடி வந்துகொண்டிருந்தனர். அத்தனை மாணவர்களூம் சின்னவர்களாக, நன்றாக டெரிகாட்டன் சட்டை டவுசர் போட்டவர்களாக இருந்தனர் (அப்போது தான் டெரிகாட்டன் துணிகள் தூத்துக்குடிக்கு வந்திருந்தன. பாலியெஸ்டர் வரவில்லை) மட்டை, பந்து, பேட் என்று ஒவ்வொருவரும் ஏதேதோ தூக்கியபடி, ஒரு போலித்தனமான துக்கத்துடன் சுவர் ஓரமாக நடந்து ஸ்கூலுக்குள் நுழைந்தனர். ’நேற்றைக்கே தோத்திட்டாங்கடா. காலைலே வந்திருக்கலாம். என்னமோ விளையாண்டு களைச்சமாதிரி இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்கான்வ. வாங்கிட்டுப்போன துட்டை கொஞ்சமாவது செலவு பண்ணனும்னு உடிப்பி ஹொட்டல்லெ காலைலே சாப்பிட்டு வந்திருக்கான்வ (உடுப்பி ஹோட்டல் ஸ்கூல் வாசல்லெ இருந்தது)என்றவர் சட்டென்று கோபத்துடன் நேராக அந்த சரித்திர வாத்தியாரை சுட்டியபடி (எங்களுக்கு மட்டுமே கேட்கும் குரலில்) ஐயா, உன்னைத்தான் கேட்கேன், ஜேம்ஸ், விக்டர், ஜெரொம், கிரியெல்லாம் பாத்தா உனக்கு எப்படித் தோணுது? (இவர்களெல்லாம் என் சக மாணவர்கள். அப்போதே 5 அடிக்கு மேலிருப்பார்கள்) விளையாடமாட்டங்கனான்னா. போய்யா, போ. பேட் உயரம்கூட இல்லை இந்த சிறுசுகள் தான் கிடைச்சதா என்று புலம்பியபடி பாடம் நடத்த ஆரம்பித்தார். சுமார் 3 வருடமாக அந்த சரித்திர வாத்தியார் எங்களுக்கு பாடம் எடுத்திருக்கின்றார். ஒருமுறை கூட cricket என்ற வார்த்தை அவரது வாயிலிருந்து வந்ததில்லை. உயரமான மாணவனை வேறு யாரும் கொத்துமுன் கொத்திக்கொள்ளும் Basketball Master மாதிரியோ, கிட்டத்தட்ட 50 மாணவர்களை மாறி மாறி விளையாடவிட்டு 5 மாணவர்களை வாலிபாலுக்குத் தேர்ந்தெடுக்கும் PT Master Xavier மாதிரியோ இல்லை. மற்ற எல்லா விளையாட்டும் PT Masters கையிலிருக்க, இவர் எப்படி இந்த விளையாட்டை மட்டும் கையிலெடுத்துக்கொண்டார் என்பது எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று. அதுவும் சர்வ வல்லமையுடன், கிரிஸ்தவ பாதிரிகள் ஆட்சி செய்யும், சேவியர்ஸ் ஸ்கூலில்.

அவர் நினைத்திருக்கலாம். என்னுடைய கிரிக்கெட் டீம் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டின் புனிதத்தைக் காப்பற்றுவது அதைவிட முக்கியமானது என்று.

இருக்கலாம். ஆனால் என்னால் அந்த நினைப்பைக் கழற்றிவுட்டு அந்த ஒரு விளையாட்டை மட்டும் பார்க்க முடியவில்லை.

---செல்வக்குமார்(அகஸ்டஸ்)

1 comment:

  1. உங்களுக்கு வந்த செல்வகுமாரின் கடிதத்தினை எங்களுடனும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மோகன். நல்ல கடிதம்.

    ReplyDelete