Saturday, May 14, 2011

தேர்தல் தரும் பாடம்..



ஜெ.க்கு கிடைத்த வெற்றி உண்மையில் எதிர்பார்த்தது தான் என்றாலும் உணர்ச்சி வேகத்தில் 'அந்த பக்கம்-இல்லேன்னா-இந்த பக்கம்' என்று மாற்றி மாற்றி குத்தும் வாக்களர்கள் இம்முறை அவர் பக்கம் சாய்ந்ததன் பலனை வெகு சீக்கிரத்தில் அனுபவிக்கவும் இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவராய் எந்த துரும்பையும் கிள்ளி போடாமல் 'மைனாரிட்டி தி.மு.க அரசு' என்று செயற்கை பணிவு குரலில் ஜெயா டிவியில் பேசியதோடு சரி. தமிழ் நாட்டுக்கு என்ன பிரச்சனை வந்தால் எனக்கென்ன என்று கொடநாட்டில் ஓய்வு எடுத்து கொண்டுதான் இது நாள் வரை இருந்தார், ஜெ. உண்மையில் மக்களை பற்றி கவலைப்படாத அரசை மட்டும் குறை சொல்லி பயனில்லை. அதற்கு சரியான முறையில் குரல் எழுப்பி தம் எதிர்ப்பை பதிவு செய்வதன் மூலம் ஆட்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வராத எதிர்க்கட்சி தலைவரையும் தான். ஈழப் பிரச்சனயில் காங்கிரசோடு சேர்ந்து தி.மு.க செய்த துரோகம் மன்னிக்க முடியாதது என்றால், "போர் என்றால் மக்கள் மடிய தான் செய்வார்கள்" என்று திருவாய் மலர்ந்த ஜெ. செய்ததும் துரோகம் தான்.

அதே போல் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியாமல் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்பது போன்ற தொனியிலேயே பேசி வருபவர்கள் அதன் உள்விவகாரங்களை கருத்தில் கொள்ளாமல் ராஜா மாட்டினாரா..அப்படி தான் வேண்டும். கனிமொழி கைதாவது எப்போது? போன்ற திண்ணை பேச்சுகளிலேயே திருப்தி அடைகின்றனர்.

மேலும் ஊழல் பெருச்சாளிகளை விரட்டுகிறோம் என்ற எண்ணத்தில் அதில் ஊறி திளைத்த மலைப்பாம்புகளை ஆதரிக்கின்றனர். சாதரணமாக பேசும் நம் மக்கள் "அவன் கொஞ்ச நாள் கொள்ளையடிச்சான் ..இப்போ இவனுங்க அடிச்சிட்டு போகட்டுமே "என்பார்கள். என்ன செய்வது நமக்கு இருக்கும் இரண்டு ஆப்ஷன்களில் எது தற்சமயம் சரியாய் இருக்கிறதோ அதற்கு போடுவோம் என்று சொல்வது தவிர்க்க முடியாததாய் ஆகி விட்டது. ஆனால் ஜெ.வின் ஆணவ போக்கை கடந்த காலங்களில் கவனித்தவர்கள் தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் இருந்தால் மட்டுமே ஜெ. தனது ஆணவ போக்கை (சற்று!) தளர்த்தி கொள்வார் என்கிறார்கள். இப்போதோ மெஜாரிட்டி. இனி என்னென்ன செய்வார் என்பதையெல்லாம் தமிழகம் பார்க்க தான் போகிறது.

அதே சமயத்தில் இது நாள் வரை ஒரு ராஜா போலவும் தனது வாரிசுகள் இளவரச-ரசிகள் போலவும் எண்ணிக்கொண்டு பல தவறுகள் செய்த கருணாநிதிக்கும் அவரது கட்சி (அதாவது குடும்பம்!) யினருக்கும் கிடைத்த சம்மட்டி அடி இது என்பதில் பேரு மகிழ்ச்சி. ஆங்கிலம் ஹிந்தி ரெண்டும் தெரியாத அழகிரியை மத்தியில் ஆட்சிக்கு கொண்டு வந்தது, ஈழ பிரச்னை உச்சகட்டத்தில் இருக்கும்போது டெல்லிக்கு வந்து வாரிசுகளுக்காக பதவி பேரம் நடத்தியது, இலவசங்கள் மூலம் புது கடன்களை ஏற்படுத்தியது, சினிமா உள்ளிட்ட எல்லா துறைகளையும் வளைத்து போட்டது ..போன்ற பட்டியலில் அடங்கா பாவங்களுக்கு கிடைத்த தண்டனையன்றி இது வேறு அல்ல. அதுவும் விஜயகாந்தின் கட்சியிடம் எதிர்க்கட்சி தலைமையை பறி கொடுத்தது அதன் உச்சகட்டம்.

மேலும் காங்கிரஸ் தமிழ் நாட்டில் தோற்றது என்றால் , என்ன என்று கூட கேட்க வேண்டியதில்லை. அது அப்படி தான். ஆனால் அறுபத்தி மூன்று சீட் கேட்க அவர்களுக்கு வந்த தைரியத்தின் பின்னணி ஜெ. டெல்லி வந்து சோனியாவை சந்திக்க்ம்போது தெரியவரும்.
நேற்று ஜெயா டி.வி.யில் ரபி பெர்னாட் சந்தோஷத்தில் குழைந்தபடி ஜெ,விடம் கேட்கிறார்.
"எப்போ டெல்லிக்கு போறீங்க?".ஜெ. சிரித்தபடி கேட்கிறார் "எதுக்கு?" கேட்டவருக்கும் கேட்க சொன்னவருக்கும் தெரியாதா எதற்கு என்று? அடுத்த அறிவிப்பு டெல்லியில் இருந்து வரும் என்று எதிர்பார்ப்போம்.

No comments:

Post a Comment