Monday, September 27, 2010

ஒரு அற்புதமும் இரு அபத்தங்களும்..



சனிக்கிழமை என் நண்பர் வரதராஜன் வீட்டுக்கு சென்றிருந்தேன். முனிர்காவில் வீடெனப்படுவது 'ரூம்' என கருத்தில் கொள்க. மிக சிறந்த இசை ரசிகரும் அரசியல் மீது தனித்த பார்வை கொண்டவருமான வரதராஜனின் அறையில் தான் நான் முன்பு தங்கி இருந்தேன். எங்களுடன் குமரன் என்ற மறக்க முடியாத நண்பர் ஒருவரும் இருந்தார். மேடை பேச்சிலும் நகைச்சுவையிலும் சிறந்த அவர் நல்ல நாடக நடிகர். இப்போது விசாகப்பட்டினத்தில் இருக்கிறார்.

சனிக்கிழமை இரவு என் நண்பன் ஓவியன் விஜயராகவனும் வந்திருந்தான். இன்னொரு ஓவிய நண்பன் முத்துசாமி எனக்கு கொடுத்த The Pianist, Perfume மற்றும் Clint Eastwood இன் கிளாசிக் அதிரடியான Pale Rider ஆகிய படங்களை திரும்பவும் ஒருமுறை நண்பர்களோடு பார்க்கலாம் என்ற ஐந்தாண்டு திட்டத்தோடு ஆசையாய் சென்றிருந்த நாங்கள் பேசிப்பேசியே இரவைப்போக்கி பிறகு தூங்கியும் விட்டோம்.

அதிகாலை (எங்களை பொறுத்தவரை )ஒன்பது மணி இருக்கும். திடீரென்று முனிர்காவே நடுங்கும்படி 'எந்திர்றா...எந்திர்றா' என்று ஒரே அலறல். ஆளாளுக்கு விலுக் விலுக்கென்று பதறியபடி எழுந்து ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்து பயந்து (!) அலறி ..பிறகு குரல் வந்த திசை பார்த்தால்..வரதராஜன் வீட்டு டி.வி. ஆன் ஆகி இருந்தது. எந்திரன் என்ற இந்தியாவின் ஆக சிறந்த படத்தின் 'வெளம்பரம்' .அதில் இன்னும் பயங்கரமாக ஜிலு ஜிலு கோட் அணிந்த முதியவரான நடிகர் ரஜினி விரல்களை ஆட்டி ஏதோ எச்சரிக்க , தூக்க கலக்கத்தில் இருந்த நாங்கள் மேலும் திகைப்புற்று அறைக்குள்ளேய அங்கும் இங்கும் ஓடி பின் ஆசுவாசம் அடைந்து , பின் சம்பவம் நடந்தது எப்படி என்று ஆராய்ந்தோம். நானும் வரதராஜனும் கீழே தரையில் படுத்திருந்தோம். விஜயராகவன் மேலே கட்டிலில் சயனித்திருந்தான். தூங்கும் முன் ரிமோட் மூலம் டி.வி.யை ஆப் செய்து பின்பு அதை கட்டிலிலேயே வைத்து விட்டு தூங்கிவிட்டான். அங்கும் இங்கும் புரண்டு கடைசியில் ரிமோட்டில் அவன் கால் பட்டு டி.வி. உயிர் பெற்றதுடன் இன்னொரு தவறான அழுத்தலில் வால்யூம் அதிகமாகி அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. பிறகு எங்கு தூங்குவது?

ஞாயிற்று கிழமை காலையில் எழுந்து பழக்கம் இல்லாத நாங்கள் பின்பு கொண்டு வந்த படங்களை பார்த்து பொழுது கழித்தோம். Perfume என்ன அருமையான படம். கண், காது என்று மற்ற உறுப்புகளை பிரதானபடுத்தி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இந்த படம் வாசனையை மையமாக கொண்ட படம்.

இதை பற்றி நிறைய எழுதி விட்டார்கள் , ஓவியரும் எழுத்தாளருமான ஜீவா அவர்கள் தனது 'திரைசீலை' என்ற புத்தகத்தில் இதை பற்றி எழுதி இருக்கிறார். ரசனை இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அந்த புத்தகம். படத்தின் ஒளிப்பதிவும் இசையும் அற்புதம். ஒரு ஞாயிறை நல்ல விதமாக கழித்தோம் என்ற சந்தோஷத்தில் இருந்த நாங்கள் ..ஒரு மாபெரும் அபத்தத்தில் சிக்குவோம் என்று எதிர்பார்க்கவில்லை.

மாலை டெல்லி தமிழ் சங்கத்தில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசுகிறார் என்ற செய்தி கிடைத்ததும் அங்கு சென்று அவர் பேச்சை கேட்கலாம் என்று கிளம்பினோம். நாங்கள் நினைத்தது நெல்லை கண்ணன் வழக்கமாய் தமிழ் சங்கத்தில் பேசுவது போல் போல் ஒற்றை ஆளாய் அரங்கை சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தும் பேச்சாய் இருக்கும் பேராசிரியர் பேச்சு என்று. அங்கு போனவுடன் தான் தெரிந்தது அது பட்டிமன்றம் என்று. நடு நாயகமாய் பேராசிரியர் உட்கார்ந்திருக்க அவருக்கு வலமும் இடமுமாக ஆறு பெண்கள். இரண்டு வெளியூர் பேச்சாளர்கள். பாக்கி நால்வரும் டெல்லி வாழ் தமிழர்களை தங்கள் பேச்சால் மிரள வைக்கும் (என்று நாங்கள் நம்பிய !) உள்ளூர் பேச்சாளர்கள். இரண்டாம் வரிசையில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் (!) நாங்கள் இருக்கும்போது வடக்கு வாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் அங்கு வந்தார். அவர் இது போன்ற ஆபத்துகளில் சிக்காதவர் ஆயிற்றே ..என்று வியந்தபோது , பேராசிரியர் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்ததால் வந்தேன் என்றார். எனக்கு கு.ஞானசம்பததின் மீது மதிப்பு ஏற்பட காரணம், அவர் எழுதிய 'சினிமாவுக்கு போகலாம் வாங்க' என்ற புத்தகம். சிறு வயதில் சினிமா பார்த்த அது தொடர்பான நட்பில் திளைத்த எவரும் கண்டிப்பாக படித்து சிலாகிக்க வேண்டிய புத்தகம் அது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஒருவர்.. செந்தமிழில் பேசுகிறேன் பேர்வழி என்று ..படுத்தி விட்டார். 'சிறந்த பேச்சாளராக இருக்கக்கூடிய ..', 'சிறந்த சிந்தனையாளராய் இருக்கக்கூடிய ' என்றெல்லாம் வந்தவர்களை வரவேற்று பேசிய அவர்.. தொடர்ந்து ..பேராசிரியரின் மனைவியை மேடைக்கு அழைக்கும்போதும்.. ' அவரின் துணைவியாராக இருக்கக்கூடிய ' என்று தன் தமிழ் திறமையை காட்டி எங்களை தாக்கி கொண்டிருந்தார்.

நிகழ்ச்சி தொடங்கியதும் தான் தலைப்பே தெரியவந்தது. வாழ்வில் நகைச்சுவை வெளிப்படுவது வீட்டிலா , வெளியிலா (என்று தான் நினைக்கிறேன்!) என்ற வரலாற்று சிறப்பு மிக்க தலைப்பு என்று தெரிந்தவுடன், பென்னேஸ்வரன் எளிதாக எழுந்து ஓட வசதியான இருக்கை ஒன்றை (எங்களுக்கு பின் வரிசையில்..) பார்த்து அமர்ந்துகொண்டார்.
பேராசிரியரும் சிரிப்பு வரும் வகையில் தான் பேசினார் என்றாலும், நாம் பல தடவை கேட்டு பழக்கப்பட்ட நகைச்சுவை துணுக்குகளை எந்த வருத்தமும் இல்லாமல் தந்து கொண்டிருந்தார். நான் ஏற்கனவே கேட்ட ஜோக்காக்கும் ..எனவே சிரிக்க மாட்டேன் என்றெல்லாம் அடம்பிடிக்காமல் டெல்லி வாழ் தமிழ் மக்கள் பெருந்தன்மையுடன் வாய் விட்டு சிரித்து தங்கள் வீட்டு கவலைகளை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வரிசையில் இருந்து குபீர் சிரிப்பு அடிக்கடி வர , என் மதிப்புக்குரிய ஷாஜஹானின் குடும்பத்தினர் (அவர் நீங்கலாக..! அவரும் இந்த ஆபத்துகளில் சிக்குவதில்லை .) வந்திருப்பது உறுதியானது.

பேராசிரியர் பேசியதும் பிறகு இரண்டு அணி தலைவிகளும் (வெளியூர்!) தங்கள் கணவர் குடும்பங்களை பற்றி முடிந்த வரை கேவலமாக பேசி ..அவ்வப்போது அபசுரத்தில் வேறு பாடி எங்கள் உங்கள் உயிரை எடுத்துவிட்டார்கள். எந்திரன் எம்மாத்திரம் என்று நினைக்கும் அளவுக்கு அபத்தமான ஒரு 'நிகழ்வு'.

தமிழ் சங்க வழக்கப்படி சங்க நிர்வாகிகளின் மனைவிகள் , மகன்-மகள்கள் , பேரன்- பேத்திகள் அல்லது வேறெந்த விதத்திலாவது வேண்டப்பட்டவர்கள் தான் மேடையில் ஏறி 'பெர்பார்ம்' பண்ண முடியும் என்ற மிக சிறந்த நடைமுறைப்படி சில பெண்களும் அங்கு பேசினார்கள். ஒரு பெண் எழுந்து சன்னமான குரலில் என்னவோ பேசியபடி நடுவரை பார்க்க அவரும் பெருந்தன்மையுடன் அந்த பெண்ணின் பேச்சை மொழிபெயர்த்து ..ஒலிபெருக்கி எங்களுக்கு எடுத்து சொல்லும் பெரும்பணியில் ஈடுபட்டிருக்க .. வெறுத்துப்போன நாங்கள் திரும்பி பார்க்க , பென்னேஸ்வரனின் இருக்கை ..காலியாய் இருந்தது.

பிறகு நாங்களும் பின்னங்கால் பிடரியில் அடிக்க தலைதெறிக்க ஓடி தத்தம் வீடுகளுக்குள் (ரூம்..!) சென்று தஞ்சம் அடைந்தோம்.

பி.கு: தமிழ் சங்கம் வரும் டிசம்பரில் தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் , சிந்தனாவாதிகள் ஆகியோரை கொண்டு (நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன் உட்பட )ஒரு நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.என்னை பொறுத்தவரை தமிழ் சங்கம் செய்யும் உண்மையான நற்பணி இது தான் என்று சொல்வேன்.

30 comments:

  1. பட்டிமன்றங்கள் என்றால் அந்த காலத்தில் பெருமதிப்பு கொண்டவை என்று என் தந்தை சொல்ல கேட்டிருக்கிறேன். ஜீவா, குன்றக்குடி அடிகளார், புலவர் கீரன் என்று பெரும் மேதைகள் ஆண்ட பூமியில் இன்று கோமாளிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். மலிவான ரசனை...ஆங்காரக்குரல், அபத்த நகைச்சுவை என்று அந்தியூர் குதிரைச்சந்தை சர்க்கஸ் பார்ப்பது போல் இருக்கிறது...ஆனாலும் அந்த சர்க்கஸ் உழைப்பாளிகளால் கட்டபெற்றது...இது போல் காசுக்கு வசனம் பேசும் கும்பல்களினால் அல்ல! இதற்க்கு விழுந்து விழுந்து ரசித்து சிரிக்கும் ரசிகப் பெருமக்கள் இருக்கும் வரை அவர்களுக்கு பொற்காலம்தான்!!!!

    ReplyDelete
  2. ஷாஜஹான்September 27, 2010 at 4:30 PM

    இதுவரை கருத்துகள் ஏதும் வெளியிடாத நான் கருத்தைப் பதிவு செய்வதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் - இதுவரை நீங்கள் எழுதியதிலேயே எனக்குப் பிடித்தது இதுதான் என்னும் என் எண்ணம். நான் இதுபோன்ற பட்டிமன்ற ஆபத்துகளில் சிக்குவதில்லை என்பதும், இதுபோன்ற ஆபத்துகளில் சிக்காதவன் கணவனாக வாய்த்த துரதிருஷ்டமும் சேர்ந்துதான் என் குடும்பம் நகைச்சுவை என்று பெயர் கேட்டாலே விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறது... வீட்டில்தான் நகைச்சுவையே இல்லை என்பதால் இருக்கலாம். நகைச்சுவை வெளியில் (இணையத்திலும்) இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் பதிவு. பியானிஸ்ட் என்னிடம் இருக்கிறது. பர்ஃப்யூம், பேல் ரைடர் ... அடுத்தமுறை வரும்போது கொண்டுவரவும், பார்க்க விருப்பம்.
    சங்கத்தில் டிசம்பரில் நடைபெற இருக்கும் கருத்தரங்கில் பங்கேற்க இருக்கும் வேறு சிலர் பெயரையும் தமிழ்கூறு நல்லுலகம் (!) தெரிந்து கொள்ளட்டும் - அம்பை, அமரந்தா, லிவிங்ஸ்மைல் வித்யா, சிற்பி, கலாப்ரியா, முத்துலிங்கம், இமையம், பத்ரி சேஷாத்ரி, சந்திரபோஸ், வெளி ரங்கராஜன், ரவி சுப்பிரமணியன், தியடோர் பாஸ்கரன், பிரேம், காந்தளகம் சச்சிதானந்தன், பேராசிரியர் சிவப்ரகாஷ். அப்புறம்... அப்துல் கலாம் இல்லாமலா?

    ReplyDelete
  3. அன்புள்ள சந்திரமோகன் ,

    1992 அக்டோபரில் தமிழ் நாடக உலகின் நகைச்சுவை ஜாம்பவான் ஒருவர் தன் ரெகுலர் டீம் இல்லாததால் அவசர அவசரமாக ஒப்பேற்றிய ஒரு டீமுடன் தில்லி வந்திருந்தார். AIFACS இல் முதல் மூன்று நாட்கள் பழைய பிரபல நாடகங்களை ஓரளவு நன்றாகவே அரங்கேற்றினார். ஆனால் கடைசி நாள் ஜோதிடம் மற்ற மூட நம்பிக்கைகளைச் சாடுகிறேன் பேர்வழி என்று ஒரு அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்தார். ஒரு கணிசமான தொகையை நம்முடைய வங்கிக் கணக்கில் அவர் டெபாசிட் செய்தால் கூட நீங்களும் நானும் சிரிக்க மாட்டோம். அந்த அபத்த ஜோக்குகளுக்கு ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரித்த சிரிப்பு இருக்கிறதே! நண்பர்களால் பொறுமைசாலி எனக் கருதப்படும் நானே இன்டர்வல்லுக்குப் பிறகு தாங்க முடியாமல் எழுந்து ஓடி விட்டேன்!

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  4. நல்ல பேச்சாளர்களுக்கும் பஞ்சமில்லை...எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், சிற்பி பாலசுப்ரமணியம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், மரபின் மைந்தன் முத்தையா, அப்துல் காதர் பேச்சுகளையும் கேட்டிருக்கிறேன். கூப்பிடுங்கள் இவர்களையெல்லாம் தில்லிக்கு!

    ReplyDelete
  5. வயிறு வலிக்குது ........ சிரித்து சிரித்து

    ReplyDelete
  6. அன்புள்ள ஜீவா சார்..
    நீங்கள் சொல்வது மிக சரியான விஷயம். இங்கு யாரும் பயனுள்ள தலைப்புகளில் விவாதம் செய்வதில்லை. நகைச்சுவை மூலம் எளிதாக 'விஷயங்களை' சொல்லலாம் என்று எந்த புண்ணியவான் கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. மிக மட்டமான 'கருத்துகளை' நகைச்சுவை என்ற பயரில் உளறி கொட்டி வருகிறார்கள், பேச்சாளர்கள். பேராசிரியர் நிறைய படித்தவர். அவர் புத்தகத்தை நான் படித்தவரை நல்ல ரசனையும் உள்ளவர் என்றே நினைக்கிறேன். அவரும் இது போல் இறங்கிவிட்டதில் வருத்தம் தான்.

    //நல்ல பேச்சாளர்களுக்கும் பஞ்சமில்லை...எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், சிற்பி பாலசுப்ரமணியம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், மரபின் மைந்தன் முத்தையா, அப்துல் காதர் பேச்சுகளையும் கேட்டிருக்கிறேன். கூப்பிடுங்கள் இவர்களையெல்லாம் தில்லிக்கு!//

    நிச்சயம் இதை படிக்கும் தமிழ் சங்க நண்பர்கள் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்..

    மிக்க நன்றி..!!

    ReplyDelete
  7. மிக்க நன்றி ஷாஜஹான் சார்..

    உங்கள் முதல் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் தமிழ் சங்கத்துடன் நீண்ட காலம் தொடர்பிலும் பொறுப்பிலும் இருந்தவர்.
    நான் உங்களிடம் நேர் பேச்சில் சொன்னது போல் , நான் வரும் முன்பு கூட இலக்கிய நிகழ்வுகள் தமிழ் சங்கத்தில் இருந்துள்ளன. (ஒருவேளை என் ராசியோ என்னவோ.. !) டெல்லி வந்து கிட்டத்தட்ட ஐது வருடம் கழித்து இப்போது தான் , (டிசம்பரில் நடக்கவிருக்கும்) நிகழ்சிக்காக சந்தோஷப்படுகிறேன். கலந்துகொள்பவர்களின் பெயர்களை பார்க்கும்போது இதில் உங்கள் பங்கு அதிகம் என்றும் தோன்றுகிறது.
    அடுத்த முறை வரும்போது நிறைய நல்ல படங்களை கொண்டு வருவேன்..
    மேடம் என்மேல் கோபம் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்களையும் படிக்க சொல்லுங்கள்.
    மிக்க நன்றி சார்..

    ReplyDelete
  8. நன்றி சினிமா விரும்பி சார்..

    நீங்கள் குறிப்பிட்டதை போலவே இந்த பதிவு படித்து விட்டு என் நண்பர் ஒருவர் (அவரும் டெல்லியில் நீண்ட காலம் இருப்பவர்) இது போன்ற அபத்த நிகழ்ச்சிகளை பற்றி சொன்னார். உண்மையில் டெல்லியில் நல்ல நிகழ்ச்சிகள் அதிகம் நடந்தால் ஒரு வேளை நம் மக்களும் ,எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து 'ரசிக்க மாட்டார்கள்.'

    சுந்தர ராமசாமியை , சுந்தரம் ராமசாமி என்று 'நாமகரணம்' சூட்டிய பெருமக்களும் நம் டெல்லி தமிழ் சங்கத்தில் இருந்தார்கள்..என்ன சொல்வது?

    கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  9. மிக்க நன்றி தினா.. . பாவம் தமிழ் மக்கள். எந்திரன் படத்தை இவர்கள் எடுத்தாலும் எடுத்தார்கள்.. நம் காது ஜவ்வு பிய்கிறது.....!!!

    ReplyDelete
  10. கைத் தட்டலுக்காக தங்கள் தமிழையும் அடகு வைக்கிற வாயுள்ள பிள்ளை பிழைக்கும். வாயுள்ள பிள்ளைகள் பிழைக்க காதுகளை கடன் கொடுக்கும் பிள்ளைகள் பிழைக்காது.நல்ல சொல் இருட்டை வெளிச்சப்படுத்துமாம்.சுடர்மிகு சொற்களால் தமிழர் வாழ்வு வெளிச்சப்படுவது என்றோ? .

    ReplyDelete
  11. அது எப்படி 'ஒரு ' அபத்தம்?எந்திரனையும் சேர்த்து இரண்டு அபத்தங்கள் அல்லவா?நல்ல வேளை கலைஞர் தொலைக்காட்சி வராமல் இருந்ததே அப்பொழுது..வந்திருந்தால், 'செம்மொழியான தமிழ் மொழி' குத்துக்(கூத்து)கொலையாவதைக் கண்டு இன்னும் அதிர்ந்திருப்பீர்கள்!!

    பட்டி மன்றத்தில் எவ்வளவு பேர் 'தமிழை' 'தமிலாகவும்' 'கொள்கிறேனை ' 'கொல்கிறேன்' ஆகவும், 'வண்ணங்களை' 'வன்னங்கள்' ஆகவும் ஆக்கினார்கள் என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்..

    ReplyDelete
  12. அன்புள்ள சந்திரமோகன்..
    நீங்கள் சொல்வது உண்மைதான்.குன்றக்குடி அடிகளார் தலைமையில் அருமையான பட்டிமன்றங்கள் ராமாயணம், சிலப்பதிகாரம் பற்றிய அறிமுகம் எனக்கு அங்கு தான் கிடைத்தது..இப்ப நடக்கும் பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் என் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.. ஜீவாவின் திரைச்சீலை சினிமா ரசிகர்களுக்கு ஒரு அருமையான் அறிமுகப் புத்தகம்..

    நல்ல பதிவு சந்திரமோகன்

    ReplyDelete
  13. நன்றி வெற்றி சார்..

    முன்பு பட்டிமன்றம் என்றால் பொறுப்பான ஆட்கள் சமூகத்துக்கு தேவையான கருத்துகளை ஆணித்தரமாக சொல்வார்கள். சிலர் எளிமை என்ற பெயரில் நகைச்சுவையை புகுத்த பின்னால் வந்தவர்கள் அதையே சாக்காக்கி தம் அறிவின் அளவை மறைக்க நகைச்சுவை என்ற பெயரில் அநியாயம் செய்ய தொடங்கி விட்டார்கள். உண்மையில் கஷ்டமான விஷயம் நகைச்சுவை தான். இவர்கள் செய்வது நகைச்சுவையும் இல்லை. நாகரிகமும் இல்லை. ஆனால் அதற்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும்போது ..என்ன சொல்வது?

    ReplyDelete
  14. நான் என் பையனை எந்திரா என்றுதான் எழுப்புகிறேன். ரஜினியால்தான் எவ்வளவு பயன்? முதியவர் என்ற தட்டச்சுப் பிழை உள்ளது. கவனிக்கவும்.

    ReplyDelete
  15. அப்படியா ஹரன்..

    ரஜினியால் நிறைய பலன் உள்ளது உண்மை தான். அவர் ஒரு நல்ல நடிகராக 'இருந்தார்'. இப்போ வெறும் வியாபாரி மட்டுமே.
    அவரை முதியவர் என்று எழுத்விட்டேன். மன்னிக்கவும். அவருக்கு இருபத்தேழு வயது தான் ஆகிறது என்று இணைய செய்திகள் சொல்கின்றன. தவறு என்னுடையது தான்.. :)

    ReplyDelete
  16. ராஜேந்திரன் சார்..
    நீங்கள் சொல்வது மிக சரி. ஒன்றை இரண்டாக்கி விட்டேன். தலைப்பில்.

    ReplyDelete
  17. இனிய நண்பர்க்கு வணக்கம், பல நாட்களாக என்னுடைய வலைபதிவில் எதுவும் எழுதுவதில்லை என்று என் நண்பர்கள் குறை கூற ஆரம்பித்து விட்டனர்.
    நானும் என்னுடைய நேரம் போதாமையை சொல்லி சமாளித்து வருகின்றேன்.
    உங்களுடைய பதிவை பார்க்க வேண்டி வந்தது.
    உடனேயே என்னுடைய தாக்குதலை தொடங்கி விட்டேன்.
    உங்கள் மீது அல்ல உங்கள் எழுத்துக்கள் மீது.

    உங்களின் பதிவை படித்தவுடன் , கிராமங்களில் சில பெரிசுகள் திண்ணையில் உட்கார்ந்து அரட்டை , அல்லது புரணி பேசுவது என்னுடைய நினைவிற்கு வந்து தொலைகிறது.


    உங்களுடைய பதிவையே மூன்று பகுதிகளாக பிரிகின்றேன்.

    முதலாவது,
    ரஜினியை ( எந்திரனை)தாக்கி எழுதி இருபது.

    இரண்டாவது
    தமிழ் சங்கத்தை தாக்கி எழுதி இருப்பது.

    மூன்றாவது

    ஞாசம்பன்தனை தாக்கி எழுதி இருப்பது.

    ReplyDelete
  18. நீங்கள் கில்லாடி தான் தோழரே,

    ஏனா,

    ரஜினியை தாக்கி எழுதி இருப்பதால் அவர் உங்களுக்கு பின்னூட்டம் போட போவது இல்லை.உங்களுக்கு அவர் தன்னுடைய கண்டனத்தை தெரிவிக்க போவது இல்லை,இல்லாட்டி, ஜாகுவார் தங்கத்தின் வீட்டை தாக்கியது போல யாரும் தாக்க போவது இல்லை, அவர் உங்களை சட்டை செய்ய போவதும் இல்லை,


    ஞான சம்பந்தன் கதையும் இப்படி தான்,
    நீங்கள், கண்டனம் செய்வது ,குப்பை என்று சொல்லாமல் சொல்வது எல்லாமே இந்த தைரியத்தில் தான்.

    தமிழ் சங்க உறுப்பினர்கள், சில பேர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எல்லா மேடை மரியாதை செய்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
    ஏன் பெயரை வெளியிட வில்லை தோழரே,?


    பயமா???

    சிலர் யார் என்று எங்களுக்கு காண்பித்தால் எங்களை போல பலருக்கு உபயோகமாக இருக்கும் தோழரே,,,,

    ரஜினி , ஞான சம்பந்தன் பற்றி நீங்கள் எழுதியது ஒன்னும் நடக்காது என்ற தைரியத்தில் ........

    தமிழ் சங்கத்தை பற்றி நீங்கள் எழுதியது மறைமுக பயத்தில்.......


    உங்களுக்கு பின்னூட்டம் செய்தவங்களும் இது தான் செய்றாங்க.....

    ReplyDelete
  19. சரி விசயத்துக்கு வர்ரேன்.....


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,,,,



    இப்பவே கண்ண கட்டுதா??????




    இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே நான்......




    ரஜினி பத்தி பேசலாம்,

    நீங்க ரஜினி ரசிகர் இல்லைன்னு சொன்ன நாங்க கேட்டுட்டு போகபோறோம்
    அவர் முதியவர், பட வெளம்பரம் அப்டின்னு சொல்லி தாக்கி எழுதி இருக்கீங்க.....

    நீங்க பட வெளம்பரம் பாத்தே பயப்படுறீங்க......
    நாங்க படமே தைரியமா பாக்க போறோம்....

    நீங்க படம் வெளிவந்து அத விமர்சனம் பண்ணி இருந்தாலோ, அந்த படத்தின் உடைய வியாபார விசயத்த பத்தி சொல்லி இருந்தாலோ, மாறன் சகோதரர்களின் பட ஏகாதிபத்தியத பத்தி சொல்லி இருந்தாலோ சரின்னு சொல்லலாம்.....


    ஆனா குழந்த பிறப்பதற்கு முன்னமே பேர் வைக்ரமாதிரி இருக்கு.....உங்க விமர்சனம்....

    என்ன நான் சொல்றது......



    அப்ப நீங்க சொல்ல வர்றது , விமர்சனம் இல்ல ,தாக்குதல்,,,,,,


    ஞான சம்பந்தனுக்கு வர்ரேன்....

    முதல்ல என்ன தலைப்புனே தெரியாம வந்து தமிழ் சங்கத்துக்குள்ள வந்து உக்காந்துட்டு இருக்கீங்க....

    தமிழ் சங்கதுதுல பல பேரோட தொடர்புள்ள இருக்றவர்,

    நிரய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் விஷயம் தெரிஞ்சவர் இப்படி சொல்லலாமா???

    இது எப்படி இருக்குனா, பரீட்சை என்னான்னு தெரியாமலயே பரீட்சை எழுத வந்து உட்காந்த மாதிரி இருக்கு....

    ReplyDelete
  20. /////////
    இரண்டாம் வரிசையில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் (!) நாங்கள் இருக்கும்போது வடக்கு வாசல் ஆசிரியர் பென்னேஸ்வரன் அங்கு வந்தார். அவர் இது போன்ற ஆபத்துகளில் சிக்காதவர் ஆயிற்றே ..என்று வியந்தபோது ///////


    ஆசிரியர் பென்னேஸ்வரன் இது போன்ற ஆபத்துகளில் சிக்காதவர் என்று நீங்கள் சொல்வதிலிருந்தே, நீங்கள் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னமே ஒரு முடிவோடு தான் நீங்கள் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று முடிவாகிறது...



    //////
    வெறுத்துப்போன நாங்கள் திரும்பி பார்க்க , பென்னேஸ்வரனின் இருக்கை ..காலியாய் இருந்தது.

    பிறகு நாங்களும் பின்னங்கால் பிடரியில் அடிக்க தலைதெறிக்க ஓடி தத்தம் வீடுகளுக்குள் (ரூம்..!) சென்று தஞ்சம் அடைந்தோம். ////////



    அவர் கிளம்பியவுடன் நாங்களும் கிளம்பிட்டோம்னு சொல்லி இருக்கலாம் அத விட்டுட்டு ஞான சம்பந்தனை குறை கூறுவது சும்மா.......



    கிரிக்கெட் போட்டியில் முதல் ஐந்து விக்கட் விழுந்த பிறகு இந்த போட்டியில் தோல்வி தான்னு நீங்களா டிவி ய ஆப் செய்த கதை தான் இது......


    கடைசி ஓவர்ல சிக்ஸ் அடிச்சு மேட்ச் ஜெயிக்க வச்சதா பாக்காம போட்டி நல்லா இல்லன்னு சொன்னா எப்படி தோழரே....



    இதுல இருந்து உங்களுக்கு பொறுமை கம்மின்னு சொல்லாம சொல்லிடீங்க...


    இன்னும் பல குறை உங்க பதிவுல பாக்க முடியுது.....

    ஆனா ஒன்னு

    என் தாக்குதல் உங்கள் மீது அல்ல உங்களின் தாக்கி எழுதும் எழுத்துக்கள் மீது......

    உங்களுடைய அடுத்த தாக்குதலை எதிர் நோக்கி காத்திருக்கும்

    அன்புடன்
    தோழன் நிவாஸ்.....

    ReplyDelete
  21. அன்புள்ள நிவாஸ்..
    உங்கள் பின்னூட்டங்கள் சில கேள்விகளை கொண்டுள்ளன. அதற்கு நிச்சயம் நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்..
    முதலில் எந்திரன்..
    நல்ல சினிமா பார்ப்பவர் நீங்கள் என்று நம்பிய எனக்கு இது ஆச்சர்யம் தான். எந்திரன் படமும் மற்ற குப்பைகளைப்போல் மேலுமொரு குப்பை தான். ஆனால் அதை தயாரித்தவர்களின் அல்பத்தனம் பற்றி உலகுக்கே தெரியும். நேற்று கூட தினகரனில் 'காதல் அணுக்கள்' என்ற மிக சிறந்த பாடலின் மகத்தான படபிடிப்பை பற்றி ஒரு பெரிய 'நியூஸ்'. அதுவும் இப்போது டி.வி யில் ஒரு 'வெளம்பரம்'. சிறு முதலீட்டில் வரும் பல படங்களை ஒன்றும் இல்லாமல் செய்யப்போகும் படு அபத்தமான படம் (இப்போதே சொல்கிறேன்..) தான் அது. அதை பற்றிய முன்முடிவை நான் எடுக்க ஷங்கரின் முந்தைய அபத்த படங்களும், சன் டி.வி. தயாரித்த 'மாசிலாமணி' போன்ற காவியங்களும் ..ரஜினியின் குப்பைகளும் தான் காரணம். தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு மடத்தனங்களை ஷங்கர் செய்தார் என்று அறிய முடியவில்லை என்றால், நீங்கள் ஒரு நல்ல சினிமா ரசிகராய் இருக்க எந்த தகுதியும் இல்லாத ஆள் என்றே சொல்வேன்.

    ReplyDelete
  22. இரண்டாவது தமிழ் சங்கம்..
    அங்கு நடக்கும் கேலி கூத்துகளை நான் பலமுறை நேரில் கண்டவன். அங்கு பொறுப்பில் இருக்கும் பலரோடும் தொடர்பில் உள்ளவன். சில விஷயங்கள் மட்டும் தான் நான் கோடிட்டு காட்டினேன். எந்த 'திராபை' படம் அல்லது நிகழ்ச்சி நடந்தாலும் பொழுது போக்குக்காக தமிழ் சங்கம் செல்லும் சிலரை போல் (நீங்கள் அதில் உண்டா..தெரியவில்லை.. ) நான் செல்வதில்லை. என் காதுக்கு நல்ல செய்திகள் வந்தால் அங்கு வருவேன்.

    மற்றபடி ஞானசம்பதை நான் தாக்கியதாக எழுதியதில் இருந்து உங்கள் 'புரிதலின்' அளவு எனக்கு புரிகிறது.. அவரது புத்தகம் படித்து அவர் மேல் அதிக மரியாதை கொண்டவன் நான். படித்தவுடன் அவரோடு தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியவனும் அடியேனே.
    அதற்காக அபத்தங்களை பொறுத்துக்கொள்ள நான் , நீங்கள் இல்லை. உங்களை நேரில் அறிந்த வரை உங்கள் உண்மையான ரசனை தெரிந்தவன் என்ற வகையில் ('' கௌதம் மேனன் காப்பி அடிச்சாலும் நல்ல படம் தான் எடுக்கிறான் ...'') நீங்கள் இன்னும் வளர வேண்டும் என்று விரும்புவேன்.

    இந்த அபத்தங்களை தாக்க நான் ஜாகுவார் தங்கமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எழுதியது.. சற்று மூன்றாம் தரமாய் இருக்கிறது.. மற்ற கேள்விகளுக்கு நன்றி.

    தவிர..
    //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
    போன்ற அபத்த சத்தங்களை எழுப்ப இது மூன்றாம் தர தளம் அல்ல. உங்கள் லெவல் என்ன என்று காட்டவே இதை பிரசுரமும் செய்தேன்.

    ReplyDelete
  23. சந்திரா..
    மிக சரியான பதில். சற்று கோபத்துடன் எழுதியது போல் இருந்தாலும் தேவையான பதில்.
    இது போன்றவர்கள் திருந்துவது கஷ்டம் தான்..

    ReplyDelete
  24. நன்றி ராகவேந்திரன்!

    நான் கோபப்படவில்லை. ரசனையும் கருத்தும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஆனால் சிலருக்கு அடிப்படை விஷயங்களே புரியவில்லை. அபத்தங்களை பிரித்தறியும் பக்குவம் இல்லை என்பதில் நிச்சயம் வருத்தம் உண்டு.

    நம் கருத்தை இன்னும் அதிகமாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.. ஒரு சிலராவது 'திருந்த' வாய்ப்பு இருக்கிறது.. (என்று நம்புகிறேன்.. :) )

    ReplyDelete
  25. No chance I say..These 'craps' will never realise or come forward to welcome good things - to avoid cheap things ...You may expect that they can be changed. But my opinion is they are just craps.

    I expect your next post too..

    Ramesh.P.C

    ReplyDelete
  26. @ Ramesh

    //These 'craps' will never realise or come forward to welcome good things - to avoid cheap things ...//

    Well said..I agree with you. 1000%

    ReplyDelete
  27. My reply to Nivas: What else can I say about you Nivas!

    http://www.raaga.com/play/?id=123957

    ReplyDelete
  28. Very good post..'Nach' nu eluthi irukkeenga thalaiva..
    Read this link :http://pitchaipathiram.blogspot.com/2010/09/faqs.html

    ReplyDelete
  29. அன்புள்ள சந்திரா..
    இன்று தான் உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்தேன்.
    அருமையாக எழுதிகிறீர்கள். உங்கள் பார்வை மிக தனித்துவமானது. குறிப்பாக சொல்வனம் இதழ்களில் வெளியான கட்டுரைகள் மிக சிறப்பானவை. அதே போல் நல்ல நகைச்சுவை உணர்வும் உங்களுக்கு அபாரமாக இருக்கிறது.
    மிக பிரபலமான எழுத்தாளராக எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. Thank you Ragavendran..
    I'm trying to give good works. As a great fan of Goundamani i have comedy sense (honestly speaking!). In literature, as i have already mentioned 'puthumaipithan' is the source of my writings, whether it's humorous or serious.

    Thanks..

    ReplyDelete