Tuesday, August 3, 2010

எந்திரனும் சித்தர்களும் ..



நாலைந்து டிவி பொட்டிகளை கம்பியூட்டர் போல் பாவித்து அதன் முன் நின்று சத்யராஜ் 'நெசமா.. நெசமா' என்று கேட்கும் விக்ரம் படம் வருவதற்கு முன்பிருந்தே கம்பியூட்டர் என்றாலே ரோபாட் தான் என்றொரு மயக்கம் நிறைய பேருக்கு இருந்தது. ஆங்கில படங்களும் சரி நாவல்களும் சரி அல்லது அவற்றை பிரதி எடுத்த நம்மவர்களும் சரி கி.பி. ரெண்டாயிரத்தில் எல்லா இடங்களிலும் ரோபாட் தான் புழங்கும்.. மனிதர்களுக்கு அவற்றால் தீங்கு ஏற்படும் என்கிற அளவுக்கு 'தொலைநோக்கு பார்வையில்' திளைத்தார்கள். அது ஒரு ஆர்வம் என்ற வகையில் ரசிக்கத்தக்கது தான். பிறகு நம் தமிழ் மக்கள் கணினி துறையில் மற்ற எவரையும் விட அதீதமாய் தேர்ச்சி பெற்று இன்று அமெரிக்காவின் மென்பொருள் பொறியியலில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். கம்பியூட்டரை யார் வேண்டுமானலும் உபயோகிக்கலாம், உதாரணத்துக்கு நம் சாரு நிவேதிதா கூட கம்பியூட்டர் உபயோகம் செய்து 'கருத்து' எழுதும் அளவுக்கு கணினி சல்லிசாகி விட்டது. நிற்க.
அதுபோக இந்த ரோபாட் மீதான ஆர்வம் இன்னும் தீர்ந்தபாடில்லை. பழைய (இப்போதும்) கல்கண்டு இதழ்களில் ரோபாட், மனிதன் எங்கு சென்றாலும் எடுத்து சென்று பேசும் தொலைபேசி (செல்போன் தான்!) போன்றவற்றை பற்றிய தகவல்களை படித்து ஆச்சர்யப்படாமல் யாரும் இருந்திருக்க முடியாது ..!

நம் 'ஹாலிவுட்' டின் (வருங்கால) முதல் தமிழ் இயக்குனர் (கருத்து உபயம் தத்துவஞானி ரஜினி அவர்கள்) திரு ஷங்கர் அவர்கள் சுஜாதாவின் உதவியோடு ஆரமபித்த கதை தான் ரோபோ. முதலில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டு , பின்பு ஷாருக் கான், அஜீத் வரை போய் பின்பு ரஜினியிடம் முடிவடைந்தது(!) ஷங்கரின் தேடல். இந்தியனில் 'அக்கடான்னு நாங்க ஒட போட்டா' என்ற பெண் விடுதலைக்கான சிறந்த பாடல் நினைவிருக்கும். அதில் கமல் ஒரு ரோபோ நாயை கட்டி கூட்டி வருவார். அதில் இருந்து தான் ஷங்கருக்கு இந்த ரோபோ மேல் ஒரு 'இது' வந்திருக்கும் என்பது என் அபிமானம்.

மிஷ்கினின் (இன்னும்) வெளிவராத 'நந்தலாலா' பார்த்து மாலை மாலையாக கண்ணீர் விட்டு , பின்பு அதை காரணம் காட்டி அவரை மிரட்டி நம் சாரு அவரது அடுத்த படத்தில் 'பொட்டி' தூக்குவது நம் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த துக்க செய்தி. அந்த படத்தின் ஸ்டில்லை பார்த்தே அது Kikujiro என்ற ஜப்பானிய படம் என்று ஒரு இணைய வாசகர் சொன்னார். முதலில் ஒத்துக்கொள்ள மறுத்த மிஷ்கின் பின்பு அதை 'ஒருமாதிரி' ஒத்துகொண்டார். நான் உடனே எந்திரன் , ஸ்பீல்பெர்க் போன்றோரின் முன்னோடியான ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லூகாஸ் எடுத்த THX 1138 படத்தின் நகல் என்று சொல்வேன் என்று நினைக்காதீர்கள். விஷயம் தெரிந்த என் நண்பர் ஒருவர் எதற்கெடுத்தாலும் அதை சொல்லிக்கொண்டே இருப்பதால் உங்களுக்கு இந்த தகவலை சொல்கிறேன். ஆனால் அந்த ஆங்கில படத்தின் trailer ஐ பார்க்கும் போது ஒன்று தான் தோன்றியது. இதை போல் ஷங்கரால் காப்பி அடிக்க கூட முடியாது என்று..அந்த ஆங்கில படம் வந்தது எழுபதுகளின் ஆரம்பத்தில். இந்த மாதிரி ஆங்கில படம், உலக படம் இவற்றை தமிழில் காப்பி அடிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வது மூளை சிலும்பல் என்று ஜெயமோகன் சொல்கிறார். இந்த இயக்குனர்கள் யாருக்கும் தெரியாது என்று அங்கங்கு உருவி இங்கு பிழைத்தால் கூட பரவாயில்லை , பெரிய ஜீனியஸ் என்று புகழ் பெறுவது அயோக்யத்தனம் என்று கண்டிப்பாக அவர் ஒத்துக்கொள்வார்.

நிற்க. இந்த படத்தின் இசை ஒரு கலக்கு கலக்குகிறது என்று எல்லோரும் வயிற்றை பிடித்துக்கொண்டு சொல்கிறார்கள். இங்கெல்லாம் இசையை வெளியிட்டால் என்ன மதிப்பு என்று பொதுக்குழு கூடி தீர்மானித்து (அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்) மலேஷியா சென்று ரிலீஸ் செய்யப்பட அந்த படத்தின் பாடல்களை ரெண்டு நாட்களாக யாரும் சோறு தண்ணி இல்லாமல் கேட்டு விட்டு 'ஒண்ணுமே பிரியலேப்பா' என்று ஆங்காங்கு சூனியம் வைக்கப்பட்ட்வர்களைப் போல் குறுக்கும் மறுக்கும் சென்றபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே பாட்டு 'காதல் அணுக்கள்' என்று தொடங்கும் பாடலில் ரஹ்மானுக்கு ஜனங்களின் மேல் உள்ள (கொஞ்சம்) பரிதாபம் தெரிகிறது.. பாட்டு கேட்க கேட்க தான் நல்லா இருக்கும் ..அதுக்குள்ளே ஏன்யா இப்படி காய்ச்சுகிறீர் என்று என் மீது பாய்பவர்களிடம் நான் கேட்பது ஒன்று தான். ரஹ்மான் பாட்டு என்றால் அதை நூறாயிரம் முறை எப். எம். இன்டர்நெட் டிவி என்று தொடர்ந்து போட்டு போட்டு கேட்டு பின்பு நாளடைவில் ஒருமாதிரி புரிந்து அது ஹிட் என்று அலறி தீர்ப்பது தான் ஒரு இசை அமைப்பாளரின் வெற்றியா? ஒரு முறை கேட்டால் அது 'பச்சக்கென' மெல்லப்பட்ட பபிள் கம் போல் ஒட்டிக்கொள்ளவேண்டாமா?

ரஜினி ரசிகர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை. அவர்கள் முறையே முத்து, படையப்பா, பாபா போன்ற படங்களின் பாடல்களை கேட்டு 'கவுண்டமணி' போல் காதில் கைவத்து கடுப்பாகி ரஹ்மான் வீட்டை தாக்க முற்பட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பின்பு நான் முன்பு சொன்னது போல் பல்லாயிரக்கணக்கான முறையில் எல்லா தகவல் தொடர்பு சாதனங்களையும் பிரம்ம அஸ்திரம் போல் பிரயோகித்து பாடல்களை ரீச் ஆக செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். படம் வரட்டும் என்று எல்லோரும் காத்திருப்பதை போல் நானும் காத்திருக்கிறேன். என் அபிப்ராயப்படி ஷங்கர் இந்தியாவிலேயே (ஏன் நம்ம வோர்ல்டிலேயே..!) சிறந்த ஆல்பம் இயக்குனர் எனலாம். நீங்கள் பார்த்து 'கற்பனை' வளர்க்கும் சீன்கள் ஒரு பாடலில் வந்து விடும் என்று நினைக்கிறேன்..

இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பல தத்துவங்களை உதிர்த்தார். ரஹ்மான் இவ்வளவு (?) சாதனை செய்து விட்டு இன்னும் எவ்ளோ அடக்கமா இருக்கார் பாருங்கள். அவர் ஒரு சித்தர். ஏனென்றால் ஆன்மீகவாதியான ஒருவருக்கு எந்த ஈகோவும் இருக்கக்கூடாது(!?) இவரிடம் ஈகோ இல்லை எனவே யோகி , சித்தர் என்று ஒரே புகழ்மாலை தான். எனக்கு ஒரு சந்தேகம் ஈகோ என்பது 'திமிராய்' நடந்து கொள்வது தான் என்று நீங்களாகவே எப்படி முடிவு செய்யலாம்? எவன் ஒருவன் புகழுக்கும், விருதுக்கும் , பணத்துக்கும் ஆசைப்பட்டு ஏஜென்ட் மூலம் வேலை செய்ய துவங்குகிறானோ அவன்தான் மிகப்பெரிய egoist!!
சரி இதை எல்லாம் சொன்னால் புரிந்து கொள்வார் என்று ரஜினியிடம் எதிர்பார்ப்பது தவறு தானே..ரைட் வுடு!

16 comments:

  1. now only I understood annan charu knows computer! chey antha alavukku computer kevalama pochu!

    ReplyDelete
  2. not only THX 1138
    Centinal man
    I robo
    all these mix in robot!
    Annd more over Mr. Shankar, my senior in school didn't plagiarize Gaint robota copy adikila.

    Using these robots is a very very very old concert which came in 1930s.

    right from Frankenstein monster of 1930 to Lost in space, forbidden planet to HG wells time machine, all movies showed Robots in similar concept.

    ReplyDelete
  3. http://en.wikipedia.org/wiki/Bicentennial_Man_%28film%29

    ReplyDelete
  4. வயதாகிவிட்டால் இப்படி புலம்பத் தோன்றுவது இயல்புதான். நாம் சேர்ந்து புலம்புவோம்.

    ReplyDelete
  5. Write an article on Kamal's Nayagan (Godfather), Aalavanthan (Apocalypse now)also. That would serve the overall cause of improving the quality of tamil cinema better.

    ReplyDelete
  6. நன்றாக எழுதி உள்ளீர்கள். உங்கள் எழுத்தில் இழையோடும் அங்கதம் அருமை. நிறைய புதுமைப்பித்தன் படிப்பீர்களோ. சினிமா பற்றிய 3 கட்டுரைகளும் நன்றாக இருந்தது. கதை சொல்லும் பதிவுலக மற்றும் எழுத்துலக “விமர்சனங்களி“லிருந்து விலகி அனுகியிருப்பது நன்றாக உள்ளது. கருத்துக்களும் எழுதிய முறையும். ரகுமான் ரஜனி பற்றிய உங்கள் “ஆன்மீக“ “ஈகோ“ “சித்த“-க் கருத்துக்கள் அருமை. அது ஒரு புதவிதமான நோயாகப் பரவிக் கொண்டு உள்ளது. வைரஸ் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இப்படி எழுதி எழுதிதான் கண்டுபிடிக்க வேண்டும். பார்க்கலாம் என்னத்தான் ஆகிறது என்று..

    ReplyDelete
  7. நண்பரே இதனை பேஸ்புக்கிலும் (முகநூலிலும்) ஷெர் செய்துள்ளேன். அங்குதான் ரவுடிகள் அதிகம் ))) நன்றி.

    ReplyDelete
  8. ரஹ்மானின் பாடல்கள் பல முறை கேட்டபின்பு தான் ஹிட் ஆகிறது என்று நீங்கள் சொல்லும் கருத்திற்கு என் விளக்கம்:
    இன்றும் நினைவிருக்கிறது..பம்பாய் பட பாடல் கேசட் வெளியான நேரம்.. வாங்கி வந்து உற்சாகமாக கேட்டேன்... 'அரபிக் கடலோரம்' என்ற பாடல் 'பபுள் கம்' போல ஒட்டிக் கொண்டது.. பல முறை துள்ளலோடு கேட்டேன்..பிறகு 'உயிரே உயிரே' என்ற பாடலை கேட்டதும் எரிச்சல் வந்தது.. 'அட என்னடா உயிரே' தயிரே' என்று..
    படம் வெளியானது...பார்த்தேன்... 'அரபிக் கடலோரம்' என்ற பாடலை இன்று வரை நானே விரும்பிக்கேட்டதில்லை.. 'உயிரே உயிரே பாடலை எத்தனை முறை கேட்டேன் என்பதற்கு கணக்கில்லை.... பபுள் கம் போல் ஓட்டிகள் கொள்ளும் ரஹ்மானின் பாடல்கள் அதன் தன்மையை போலவே சீக்கிரம் துப்பப்படும்.. ஒரு படத்தின் இதய நாதத்திற்கு ஒத்திசைவோடு வெளிவரும் அவரது பல பாடல்கள் காலப்போக்கில் தான் அதன் உண்மையான வெற்றியை தக்கவைத்திருக்கின்றன..

    ReplyDelete
  9. @ ஜமாலன்

    உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சார்.. இப்போது தான் எழுத தொடங்கி இருக்கும் என்னை ஊக்குவிக்கும் விதமாக நீங்கள் எழுதியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.. உண்மை தான். நான் புதுமைப்பித்தனின் 'அங்கதத்துக்கு' மிக பெரிய ரசிகன்..அவரது 'வேதாளம் சொன்ன கதையும்', 'காலனும் கிழவியும்' படித்து ரசித்து சிரித்திருக்கிறேன். என்றென்றும் மறக்க முடியாத ' கடவுளும் கந்தசாமி பிள்ளையும்' எனது மிக விருப்பமான கதை.
    ரஜினி போன்றவர்கள் அளவுக்கு மீறி சம்பாதிப்பதுடன் மிக எளியவர் போல் 'வேடம்' போடுவதையும் அதை நம் மக்கள் ஆராதிப்பதையும் சகிக்க முடியவில்லை. எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் குறைந்த காசில் நடிக்க வேண்டியது தானே..(இப்படத்துக்கு ஆன செலவில் பாதி அவரை இளமையாக காட்டுவதில் கரைந்திருக்கும் ) ! ரஹ்மானின் பாடல்கள் எனக்கு நிறைய பிடிக்கும்.. தொட தொட மலர்ந்ததென்ன என் All time favourite! ஆனால் அவர் சுமாராக இசை அமைத்த பாடல்களை விடாமல் ஒலிபரப்பை நல்ல பாடல் போல் பீற்றுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது.. அதை தான் பதிவு செய்தேன்..

    உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது..

    ReplyDelete
  10. அன்புள்ள கார்த்தி..
    எனக்கும் ரஹ்மான் பிடிக்கும்.. மேலே உள்ள பின்னூட்டம் படியுங்கள்..

    ReplyDelete
  11. அன்புள்ள சந்திரமோகன்.. உங்கள் பின்னூட்டத்தை படித்தேன்.. மகிழ்ச்சி..
    ஈகோ என்றால் என்ன? இந்திய தத்துவ விளக்கப்படி: 'every act is a form of ego' அதாவது உங்களுக்கு இயற்கை கொடுத்திருக்கும் அடிப்படை தேவைகளைத் தாண்டி நீங்கள் யாசிக்கும் அல்லது செயல் புரியும் எல்லாமே ஈகோவின் வெளிப்பாடு தான்.. நான் எழுதிக்கொண்டிருப்பதும், நீங்கள் எழுதியிருப்பதும் ஈகோவின் வெளிப்பாடு என்று கொள்ளலாம்.. அப்படிப்பார்த்தால் சராசரி வாழ்வில் யாராலும் ஈகோ இல்லாமல் இயங்க இயலாது என்று சொல்லலாம்... ரஜினி அவர் பேச்சில் சொல்ல விழைவது பொது புத்தியின் அடிப்படையில்: 'ரஹ்மான் தான் மனிதன் என்பதை மறவாமல் இருக்கும் தன்மையைத் தான்.. எத்தனை உச்சத்தை அடைந்தாலும் தானும் சக மனிதனைப் போல் மல-ஜலம் கழிப்பவன் தான் என்பதை தன்னியல்பாக கொண்டிருக்கும் குணத்தைத் தான்..

    ரஜினி எளிமையானவர் என்று பொதுபுத்தியில் பதிந்திருக்கும் விஷயம் விவாதத்திற்குரியது தான்.. இருப்பினும் இங்கே ஒரு மனிதன் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்பதை வைத்து அவன் எளிமையானவனா இல்லையா என்று அளவிடுவதெல்லாம் காலாவதியாகிப்போன விஷயம்,..நீங்கள் idealistic தன்மையுடன் பார்கிறீர்கள்.. context என்று ஒன்று இருக்கிறது.. நான் கேட்கிறேன் : உலகில் எங்காவது ஒரு சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுபவர், தன் திரை பிம்பத்திற்கு சற்றும் பொருந்தாத (அதாவது எந்த WIG'கும் இல்லாமல் ) பஞ்சப் பராரியை போன்று தைரியமாக பொது வாழ்வில் தோற்றமளிக்கும் நபரை காண்பியுங்கள் பார்க்கலாம்..!!

    ReplyDelete
  12. //கவுண்டமணி போல் காதில் கை வைத்து...//

    ஹா ஹா ஹா ஹா உண்மையிலேயே வாய்விட்டுச் சிரிச்சேன் நண்பரே.. நல்ல நையாண்டி.. :)

    ReplyDelete