Tuesday, January 31, 2012

எக்ஸைல்:ஒரு சந்திப்பு

கொலைவெறியை அடுத்து யூடியூபின் சென்சேஷன் விஷயமாக நான் கேவிப்பட்டது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புதிய நாவலான எக்சைளின் ட்ரைலர் தான். உண்மையில் அது ட்ரைலர் இல்லை. அவரது பதிப்பாளரும் சில நண்பர்களும் அவரும் சேர்ந்து நாவலைப் பற்றி பேசுகிறார்கள். அதை முன்னோட்டம் (preview) என்று தான் சொல்ல வேண்டும். (அதெல்லாம் பெரிய வார்த்தை அது ச்சும்மா விளம்பரம் மட்டுமே-குப்புறக்கோ )அது பெரிய விஷயமில்லை. நாவல் உலகின் மிகச் சிலரால் கையாளப்படும் Auto-fiction வகையை சார்ந்தது என்றும் உலகில் அந்த வகையறா எழுத்தாளர்களில் இரண்டாவது எழுத்தாளர் தான் தான் என்று முகத்தில் எந்த பெருமிதத்தையும் காட்டாமல் நாவலாசிரியர் சொல்கிறார்.
நாவலைப் படித்த பின் அந்த நாவலின் பிரதி(யின்)ஆசிரியரான உதயாவுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தலாம் என்று எங்கள் நண்பர்கள் குழு முடிவெடுத்தது. நண்பர்கள் குழுவில் பல தரப்பட்ட நண்பர்கள் உண்டு என்றாலும் எங்களுக்கும் உதயாவுக்கும் பொதுவான விஷயம் மார்ட்டீன். அவருக்கு ரெமி.எங்களுக்கு மஸ்கிட்டோ காயில் என்பது தான் வேறுபாடு.

உதயா காதில் ரிக்கி மார்டீனுடனும் கையில் ரெமி மார்ட்டினுடனும் வந்தமர்ந்தார். தனியாக வரவில்லை. அவரது நண்பர்கள், வாசகர்கள், ஆதரவாளர்கள், அவர்பால் இரக்கம் கொண்டவர்கள், அவருக்காக எதையும் செய்ய துணியும் தற்கொலைப்படை என்று ஒரு ஐயாயிரம் பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் அமர்ந்திருந்த அறை போதாது என்பதால் அவர்கள் அனைவரையும் வெய்யில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு உள்ளே வந்தார் உதயா.

நேர்காணல் தொடங்கியது.
பேட்டியாளர்: வணக்கம் உதயா.

உதயா : e'js trojkl' mn

பேட்டியாளர்: mms'sms'facebookb'orkut

உதயா: ??

பேட்டியாளர்: இது ஹீப்ரு. ஆங்கில எழுத்துகளுக்கு நடு நடுவே apostrophe போட எங்களுக்கும் தெரியும்.

உதயா: இது என் பிரெஞ்சு ஞானத்தை கிண்டல் செய்வது போல் இருக்கிறது. இதற்காக எத்தனை மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கற்றேன் என்பது எனக்கு தான் தெரியும். தமிழ் நாட்டில் எழுத்தாளனாக இருப்பது சாபம். அதற்கு பிரான்சில் பிச்சைக்காரனாக வாழலாம். இங்கு எல்லாமே கெட்டு விட்டது. தினம் ஒரு கற்பழிப்பு. போலிசாமியார்களின் காம விளையாட்டுகள்.பித்தலாட்டங்கள். மொரோக்காவில் அப்படி கிடையாது. அங்கு ஒரு பெண்ணை காமத்தோடு பார்த்தால் அவள் பக்கத்தில் இருக்கும் லாட்ஜுக்கு அழைத்து சென்று எல்லாம் செய்து (BJ உட்பட) பின் தனக்கு சபலம் ஏதுமில்லை என்று காண்பித்து நம்மை நாண செய்து விடுவாள். அவளது கணவன், சகோதரன் போன்றவர்கள் நம் மனம் திருந்தும்படி நம்மை அன்பான வார்த்தைகள் சொல்லி நல்வழிப்படுதுவார்கள். இங்கே அதெல்லாம் சாத்தியமா? இங்கே ஒரு கல்யாணமானப் பெண்ணை புணர ஆயிரம் தடைகள். அவளது கணவனுக்கு தெரியாமல் எத்தனை நாள் கள்ள உறவில்( இந்த வார்த்தையை இங்கே தடை செய்ய வேண்டும்) ஈடுபடுவது. இது மனதை சோர்ந்து விடச் செய்கிறது. மன உளைச்சளைத் தருகிறது. ஒருமுறை ஈபில் டவருக்கு சென்று வாருங்கள். மனைவியை புணரும் இளைஞர்களுக்கு அன்பளிப்பு தரும் பிரெஞ்சு கணவன்களைப் பார்க்கலாம். அது நாகரீகம். இங்கு எல்லாம் கெட்டு விட்டது. இங்கு யாருக்கும் காமத்தைக் கொண்டாடத் தெரியவில்லை. அதற்கெல்லாம் இந்தப் புத்தகத்தில் பதில் இருக்கிறது. நானே எழுதி இருக்கிறேன். ' இந்த புத்தகத்தை நாவலாகவும் படிக்கலாம். அல்லது காமத்தின் உச்சத்தை அடைவது எப்படி என்ற நூலாகவும் படிக்கலாம் என்று'.

(தொடர்ந்து பேசியதால் சற்று வறண்ட தொண்டையை சமாதானம் செய்ய ரெமி மார்டீனை பருகுகிறார்.எங்கள் குழுவில் லொள்ளு சபா மனோகர் போலவே தோற்றத்திலும் நடை உடை பாவனையிலும் இருக்கும் அசோகர் ஒரு இசை ரசிகன். அவன் கிடைத்த மௌனத்தை நிரப்ப எண்ணி அருகில் இருந்த சி.டி ப்ளேயரை ஆன் செய்ய அதில் இருந்து இது வரை கேட்டிராத நாரச இசை ஒலிக்கிறது.திடுமென்று நிமிர்ந்த உதயா 'இது ஹைபிஸ்கஸ் ரோசாசைனஸ் கம்போஸ் செய்த Cannis Familiaris. அட்டகாசமான பிரெஞ்சுப் பாடல் .' என்றபடி அதற்கேற்றாற்போல் 'ஜலஜா' நடனம் ஆடதுவங்குகிறார். அசோகருக்கு கிலி பிடித்துவிட்டது. தன் கோழிமுட்டைக் கண்களால் வெறித்து பார்த்தபடி திகைத்து நிற்கிறான்.எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. அது எப்போதோ சாந்தினி சவுக்கில் எலெக்ட்ரானிக் மார்க்கெட்டில் வாங்கிய சீனத் தயாரிப்பு ப்ளேயர். அசோகர் ஒரு எஸ்.ஏ.ராஜ்குமார் ரசிகன். அவன் தான் நேற்று இரவு முழுவதும் 'வானத்தைப் போல' பாடல்களை அலறவிட்டு எங்கள் ஏரியாக் காரர்களின் தூக்கத்தை காணமல் அடித்திருந்தான். இன்று அதில் கையை வைத்ததும் அது ரிவர்சில் பாடத்துவங்கி விட்டது. அதை ப்ரெஞ் என்று எண்ணி ஜலஜா ஆடும் உதயாவை எல்லோரும் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும் அதை உணராமல் முழுக்க ஆடிக் களைத்த பின்பே அமர்ந்தார் உதயா)
பின்பு சொன்னார் 'இது தான் மக்களின் இசை. இது காதுக்குள் இறங்காமல் நேராக மனதுக்குள் இறங்கும் இசை. இது காமத்தின் உச்சம் எய்தும் பரவசத்துக்கு நிகரானது. இந்தப் பாடலை கேட்டவர்கள் அருகில் இருக்கும் பெண்ணுடன் உடலுறவு செய்து இருவரும் ஆர்கசம் அடைவார்கள். தமிழிலும் ஒரு இசை அமைப்பாளர் இருக்கிறார். இசையும் தெரியாது ஒன்றும் தெரியாது. ஆனாலும் தமிழர்கள் அவரது இசையைக் கேட்டு கெட்டழிகிறார்கள். நீங்கள் Artiodactyla Suidae பாடிய Hymenopetrous formicidae கேட்டிருக்கிறீர்களா?'

அறைக்குள் மயான அமைதி நிலவியது.

சற்று நேரம் நிலவிய அமைதியினூடே (!) அடுத்த கேள்வியை கேட்டோம். அசோகர் தான் கேட்டான்.

அசோகர்: அது இன்னாது அது autofiction ? ஆட்டோக்காரங்களோட கதையா? அப்பிடின்னாலும் அதை தமிழ்லே நீங்க தான் எழுதுநீங்கன்னு எப்டி சொல்லலாம்? நக்கீரன்லே ஒர்த்தர் ஏற்கனவே தன்னோட கதையை தானே எழுதுனாரு? கதையில வர்றவங்க பேரை எல்லாம் மாத்தி மாத்தி தானே அவரும் எழுதுனாரு. பேர் பொருத்தம் கூட இருக்கே. ஆட்டோ ஷங்கர் தானே அவரு பேரு. அப்போ உங்க முன்னோடி அவரு தானுங்களே?'

தான் கேட்ட கேள்வியால் தற்பெருமை அடைந்த அசோகர் எங்கள் எல்லோரையும் ஒருமுறை பார்த்து விட்டு புருவத்தை உயர்த்தி உதட்டைப்பிதுக்கி ரகசியமாய் உதயாவின் முகத்தை எங்களுக்கு காட்டிவிட்டு அமர்ந்து விட்டான்.

உதயா இன்னும் ஒரு மிடறு ரெமி மார்டீனை உள்ளே அனுப்பினார்.
பிறகு பேசினார். ' தமிழ் நாட்டில் என்ன செய்தாலும் கேள்வி கேட்கிறார்கள். நான் ஆட்டோ பிக்ஷன் என்று சொன்னால் நம்ப மறுக்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள். இதையே ஒரு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளன் செய்தால் அவனுக்கு அங்கு ஒரு தீவையும் ஹெலிகாப்டரையும் பரிசாகத் தருகிறார்கள். கூடவே மல்லையா ஸ்டைலில் பழகிக்கொள்ள அழகான பெண்களையும் அனுப்புவார்கள். அவர்களிடம் ஒரு நாள் பழகினால் இது போன்ற நாலைந்து ஆட்டோ பிக்ஷன் நாவல்களை எழுதலாம். இங்கே நான் அவசரம் என்றாலும் ஆட்டோவில் தான் போக வேண்டி இருக்கிறது. (சென்னையில ஆட்டோவில போறவன் குபேரனா தான் இருப்பான்- குப்புறக்கோ) இல்லையென்றால் என் ஏழை மகன் கார்ப்பரேட் கம்பெனியில் கல்லுடைத்து சம்பாதித்த ஆடி காரில் தான் போக வேண்டும். அதற்கும் சரியான சாரதிகள் கிடைப்பதில்லை. ஒரு சாரதி ராத்திரி பனிரெண்டு மணிக்கு தான் வேலைக்கு வருவார். அதிகாலை பனிரெண்டு மணிக்கே கிளம்பி விடுவார். அவருக்கு பத்னைந்தாயிரம் சம்பளம். ஒரு ஏழை எழுத்தாளனுக்கு இதெல்லாம் கட்டுபடியாகுமா?

-தொடரும்

Wednesday, January 4, 2012

எக்ஸைல்:புனைவின் நிஜம்


நான் மிகவும் மதிக்கும் வடக்கு வாசல் ஆசிரியர் என்னிடம் சாரு நிவேதிதாவின் இந்நாவலைக் கொடுத்து எந்த வித முன்முடிவுகளோ அல்லது எதிர்மறைக் குரலோ அன்றி நேர்மையாக மதிப்புரை எழுதும்படி கூறினார். சாரு நிவேதிதாவின் போக்குகள் மீது கிண்டலும் கடும் விமர்சனமும் ஏற்கனவே வைத்தவன் என்ற முறையில் முதலில் தயங்கினாலும் தமிழில் தற்போது பரபரப்பாக இயங்கி வரும் எழுத்தாளரின் சமீபத்திய நாவல் என்பதால் இதை எழுதினேன். மதிப்புரை வடக்குவாசல் ஜனவரி 2012 இதழில் பிரசுரம் ஆகியிருக்கிறது. சிறு மாற்றங்களுடன் அதை இங்கு பதிவிடுகிறேன்.

------------
தமிழில் காமத்தை வெளிப்படையாகப் பேசும் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான சாரு நிவேதிதாவின் புதிய படைப்பு 'எக்ஸைல்' நாவல். கவரும் அட்டைப்படத்துடன் நல்ல லே அவுட்டில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந் நாவல் வெளிவருவதற்கு முன்பே இணைய தளங்களில் சாரு நிவேதிதாவாலும் அவரது வாசகர்களாகவும் ஒரு நட்சத்திர நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்குரிய பரபரப்புக் கிளப்பப்பட்டது. யூடியூபில் அதன் ட்ரைலர் வேறு வந்து வாசகர்களின் இதயத் துடிப்பை அதிகரித்தது. தமிழில் முதன் முறையாக ஆட்டோ பிஷன் என்ற புது வகை எழுத்துமுறையில் வந்திருப்பதாக வேறு அறிவிப்பு வர புதுமையை எப்போதும் விரும்பி வரவேற்கும் வாசகர்கள் மத்தியில் பரவச உணர்வு தோன்றி பரவியது. ட்ரெயிலரிலும் அவ்வகை எழுத்தில் இயங்கி வரும் மிகக் குறைந்த எழுத்தாளர்களில் உலகில் தான் இரண்டாவது எழுத்தாளர் என்ற பெருமிதமற்ற முகபாவனையுடன் கூடிய சாரு நிவேதிதாவின் அறிவிப்பும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. நாவல் ஆட்டோ ஃபிக்ஷன் என்ற எழுத்து வகையில் அமைந்திருக்கிறது என்ற முன்னறிவிப்போடு வந்திருப்பதால் வாசகன் தான் அறிந்த சாருவை மனதில் வைத்துக்கொண்டே தான் நாவலை அணுகுகிறான். நாவல் பேசும் உதயா என்ற எழுத்தாளன், அவனது பாலியல் தோழியான ( கடைசியில் அப்படித் தான் முடிகிறது) மூன்று குழந்தைகளின் தாயான , இடையிடையில் வந்து நாவல் பற்றிய தன் கருத்துகளை சொல்லும் கொக்கரக்கோ என்று மூன்று பிரதானப் பாத்திரங்களுடன் தடங்கல் இல்லாத மொழி நடையில் பயணிக்கிறது. உதயாவின் உலக வாழ்க்கை செக்ஸ் என்ற ஒரே வார்த்தையோடு முடிந்து விடுவதால் அவனது சமூகப் பார்வை, அதன் மீதான தன் விமர்சனம் எல்லாமே பாலியல் சார்ந்தே அமைந்து விடுகிறது.எப்படிஎன்றால் ரத்தம் வழிய அடிபட்டு நிற்கும் நாயைக் கண்ட உதயாவுக்கு உணவுக்கும் உறைவிடத்துக்குமான அதன் தேவை பற்றிய எண்ணத்தை மீறி அதன் கலவி வாழ்க்கை மீதான விரிவான பத்தி எழுதும் அளவுக்கு யாரை அல்லது எதைக் கண்டாலும் அவற்றின் கலவி வாழ்க்கை குறித்தான எண்ணங்கள் உதயாவிடம் நிரம்பி ததும்புகின்றன. நாவலில் எழுத்தாளன் என்ற சுய ஆக்கிரமிப்பை உடைத்து அவ்வப்போது தோன்றும் கதாபாத்திரங்களை தன் போக்கில் பேச அனுமதிருப்பது ஆசிரியரின் தைரியமான அணுகுமுறை எனலாம்.

பொதுவாக இணையத்தில் ஆசிரியரின் எழுத்துகளைப் படித்தவர்களுக்கு நாவலில் புதுமையைக் கண்டறிய முடியாது. புதிதாக படிக்கும் வாசகர்களை ஆசிரியர் நேரடியாக சென்றடைந்து விடுவார். இது போன்ற வகை எழுத்துகளில் இருக்கும் சவுகரியம் அப்படி.உதாரணத்துக்கு சாரு பொதுவாக எழுதும்போது தான் தமிழக எல்லைகளைத் தாண்டிய எழுத்தாளர் என்றாலும் தனக்கான மரியாதையை உலக இலக்கியம் தரவில்லை என்ற 'நியாயமான ஆதங்கம்' எப்போதும் வெளிப்படும். நாவலிலும் உதயா அடிக்கொரு தடவை இப்படிப் புலம்பிக்கொண்டே இருக்கிறான். எப்போதும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் வாழ்க்கை தரமும் அவர்களுக்கு அங்கு கிடைக்கும் மரியாதையும் உதயாவின் மனதில் பெரும் சஞ்சலத்தையும் ஆற்றாமையையும் தான் வாழும் சமூகத்தின் மீதான அசூசையையும் ஏற்படுத்துகிறது. நாற்பதாண்டுகளாக எழுதியும் ஆட்டோவில் தான் பயணிக்க வேண்டி இருக்கிறது. அதுவும் இல்லையென்றால் தன் ஏழை மகன் கார்ப்பரேட் கம்பெனியில் சம்பாதித்து வாங்கிய காரில் தான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது என்று புலம்பும் போது இன்றைய வாசகனுக்கு உதயா மேல் பரிதாபம் தோன்றுகிறது. ஏனென்றால் வாசகன் கடைசி வரை எழுத்துக்காகவே வாழ்ந்து வெறும் அவலை உணவாக உண்டு எத்தனை தொலைவேன்றாலும் நடந்தே சென்று மறைந்து போன எழுத்தாளர்களை அறிந்தவனில்லை. இது உதயாவுக்கு பெரும் சவுகரியமாகப் போய் விடுகிறது. என்றாலும் அவனைச் சுற்றி இருக்கும் நெருங்கிய வாசகர்கள், ஆத்மார்த்தமான நண்பர்கள் எல்லோருடனுமான நேரடி நட்பினால் உயர் ரக மதுவகைகள், ஆடம்பர வாழ்க்கை என்று கிடைத்தாலும் அவன் மனது அதைத் தாண்டிய வசதி வாய்ப்புகளுக்கு ஏங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது. எப்பாடுபட்டாவது எல்லைகளைக் கடந்து விடத் துடிக்கும் எழுத்தாளனான உதயா தன் சொந்தப் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறான்.


சுந்தரராமசாமியின் ஜே.ஜே யை சேங்கான் என குறிப்பிடும் சாரு தன் பாத்திரமான உதயாவை பெரும் சென்கானாகப் படைத்திருப்பது ஒரு நகை முரண். உதாரணத்துக்கு ஆடம்பர வாழ்க்கை, கார்பரேட் பாணி நடைமுறைகள், சுற்றிலும் பக்திகளின் நடமாட்டம் , அடிமைத்தனமான சீடர்கள் என்று இருக்கும் ஆன்மீக குரு குஷால் தாஸ் (நாவல் ஆட்டோ பிக்ஷன் என்பதால் நிஜ வாழ்வில் யார் அந்த குரு என்பதை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்) பற்றி ஒரே ஒரு சாமான்யப் பார்வையில் அறிந்துகொண்டிருக்க வேண்டிய விஷயங்களை சுத்தமாக அறிந்துகொள்ளாத அப்பாவியாக ,'ஞானம்' வேண்டி செல்லும் பக்தனாக சென்று மாட்டிக்கொள்கிறான். எப்படி என்றால் தலைக்கு சராசரியாக மூவாயிரம் ருபாய் வாங்கி குஷால் தாஸ் நடத்தும் ஆன்மீக சொற்பொழிவுக்கு சென்று மாட்டிக்கொண்டு , குஷாலின் அமெசூர்தனமான உரையைக் கேட்டு சகிக்காமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் பார்க்கும் உதயாவை குஷாலின் வாலண்டியர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். நல்ல பருமனான ஆறேழு பேர் நிறுத்தியும் தடுத்தும் அவர்களோடு சண்டையிட்டு ..இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு ..ஆம் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு வெளியில் வந்து விழுகிறான் உதயா. 'ஆன்மீகத்தையும் அன்பையும் போதிக்கும் ஒரு நிறுவனம் இது போன்று வன்முறையில் இறங்கலாமா' என்று 'பட்ட பின்' கிடைத்த தெளிவுடன் அறுபது வயதான பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட ஏழை எழுத்தாளன் உதயா இதயம் படபடக்க நியாயம் வேறு கேட்டு குமுறுகிறான்.

இது போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் வசமாக எதிலும் மாட்டாதவரை அவர்கள் பெயரில் பத்திரிக்கைகளில் வெளிவரும் ஆன்மீக மறுமலர்ச்சி தொடர்களின் பேய் எழுத்தாளர்களாக (ghost writers) இருக்கும் எழுத்தாளர்கள் பிரச்னை என்று வந்த பின் புலனாய்வுப் பத்திரிக்கைகளில் பரபரப்பான வெளிவராத திடுக்கிடும் உண்மைகளை எழுதுவார்கள் என்ற வழக்கத்தின் பேரில் உதயாவும் செய்து அதற்கான 'விலையை' பெறுகிறான். அவனுக்கு குஷால் தினமும் முகமன் செய்வது போல் பொழுதொரு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறான். குஷாலுடன் தொலைக்காட்சியில் தோன்றி மக்களை மகிழ்வித்த முன்னாள் நடிகையும் உதயாவின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை என்று மிரட்டுவதால் தினமும் பயந்து நடுங்குகிறான் உதயா.பரிதாபமாக இருக்கிறது. நாவலின் ஒரு முக்கியமான கட்டத்தில் உதயாவின் மனைவி பெருந்தேவி தொலைநோக்குப் பார்வை மற்றும் திடீர் ஞான திருஷ்டி இவற்றின் கலவையாக சொல்லும் வாக்கியம் இந்த நாவலில் முக்கியத்துவம் பெறுகிறது. 'குஷால் தாஸ் சரியில்லை.அவன் பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்ளப்போகிறான்' என்று அவள் சொன்ன மூன்றாம் நாள் தொலைக்காட்சிகளில் குஷாலும் நடிகையும் செய்யும் அந்தரங்க ஆன்மீக பூஜைகள் வெளிவந்து உண்மை வெட்டவெளிச்சமாகிறது. கடைசி மூன்றாம் நாள் வரை குஷாலின் நடவடிக்கையில் உதயாவும் அவன் மனைவியும் கொண்டிருக்கும் நம்பிக்கை எப்பேர்பட்ட சேங்கான்தனம் என்பது வாசகனுக்குப் புலப்படுகிறது.


தவிரவும் இந்த நாவலில் முகநூலில் (Facebook) ஒரு முகமறியாப் பெண்ணுடன் அந்தரங்க சாட் செய்து ஒரு முறை மாட்டிக்கொள்கிறான் உதயா. நாற்பது வயதைக் கடந்து விட்டால் 'அதை' வெட்டி எறிந்துவிட வேண்டுமா என்ற தார்மீக கோபத்துடன் பெண்களை பார்த்த கணத்தில் இருந்தே காமத்தில் வீழ்ந்து அவர்களுடன் பாலியல் மொழி பேசும் உதயா அந்த முகமறியாப் பெண்ணுடன் அந்தரங்கமாக காதல் மொழிப் பேச அந்த உரையாடலின் தொகுப்பு ஒரு நாள் அம்பலமாகி விடுகிறது. (Facebook இல் Friend Request அனுப்பினால் அதை எப்படி accept செய்ய வேண்டும் என்று அறிந்திராத அப்பாவி எழுத்தாளரான உதயா இது போன்ற இணைய அபாயங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்). உடனே அதை கையில் எடுத்துக்கொள்ளும் பெண்கள் அமைப்பினர் நாள் தோறும் அவன் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் நடத்தி வருவதால் மனக் கிலேசம் கொள்ளும் உதயா அந்தப் பெண் அனுமதிக்காமல் நான் அப்படி பேசி இருப்பேனா என்று பரிதாபத்துடன் கேட்கும்பொழுது மனதைப் பிசைகிறது. உதயா மீது அளவற்ற அன்பு கொண்ட கொக்கரக்கோ அந்தப் பெண்ணின் ஐ.டி. ஐ நோண்டி அவளது அந்தரங்க வாழ்க்கையின் ரகசியங்களைக் கண்டுபிடித்து அந்தப் பெண்ணும் பெரிய உத்தமமில்லை என்ற பேருண்மையை சொல்வதால் இந்த உண்மை தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் உதயா மீது மீண்டும் வாசகனுக்கு அளவற்ற இரக்கம் தோன்றுகிறது.அபலைப் பெண்கள் துயர் துடைக்க அந்தரங்க சாட்டிங்குகள், காதல் கணவனாலும் சரியாக 'கவனிக்கப் படாத' அஞ்சலி போன்ற பெண்களின் துயரம் போக்கும் வகையில் உடலுறவு மூலம் திருப்திப் படுத்துதல் போன்ற உதயாவின் செயல்களில் உள்ள முற்போக்குத் தனத்தை தவறாகப் புரிந்துகொள்ளும் அறிவற்றவர்கள் உதயாவை தினம் கடுமையாகத் தாக்கி மின்னஞ்சல்கள் அனுப்புவதைக் கண்டு மனம் வெதும்பும் உதயா தன் நிலையை உத்திரப் பிரதேசத்தில் ஜாதிய ஆதிக்கக்காரர்களால் துரத்தி துரத்தி வன்புணர்வு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட தலித் குடும்பத்தின் நிலையுடன் ஒப்பிடுவது சாலப் பொருத்தம் என்று ஆசிரியர் நினைக்கிறார் போலும். பரிதாபம்.


முரணாக வேறு யாருக்கும் இல்லாத துணிச்சலுடன் இந்தியாவின் பெரிய ஊழலில் சிக்கி சிறையில் இறக்கும் ஒரு அரசியல் வாதியின் செயலாளராக இருந்து தற்கொலை செய்துகொண்ட பக்கிரிசாமியின் ஆவி சொல்லும் திடுக்கிடும் உண்மைக் கதைகள் நாவலின் சீரியசானப் பக்கங்கள். ஆட்டோ பிக்ஷன் என்பதால் அது யாராக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் பிறப்பது இயல்பு தான். ஆனால் வழமையாக தமிழ் அரசியல் குற்ற புலனாய்வுப் பத்திரிக்கைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு அது பெரிய ரகசியமாகத் தெரிய வாய்ப்பில்லை. பக்கிரிசாமியும் உதயாவின் பெருமைகளை எடுத்துரைப்பதில் தவறவில்லை. உதயா குடிப்பதில் கூட புதுமை விரும்பி, நுங்கு நீரை வோட்காவில் கலந்து குடிப்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி, கடவுளே உதயா முன் தோன்றி வரம் என்ன வேண்டும் எனக் கேட்டாலும் 'தன் பத்திரிக்கைக்கு விளம்பரம் தான் கேட்பான் என்று தன்னால் முடிந்தவரை புகழ்கிறான். என்ன தான் ஆட்டோ பிஷன் என்றாலும் ஏன் தன்னை புகழ்ந்து பேசுபவர்களின் குரலை மட்டும் உதயா எடிட் செய்வதில்லை என்ற எண்ணம் தலைதூக்குகிறது.


உதயாவை விட பிரதானமாக நாவலில் வரும் அஞ்சலியின் பாத்திரப் படைப்பில் ஆசிரியர் பல புதுமைகளை நாவல் நெடுகிலும் புகுத்திக்கொண்டேப் போகிறார். உதயாவுக்கு பிரான்சில் அறிமுகமாகும் மூன்று குழந்தைகளுக்கு தாயான ஆனாலும் குலையாத உடல்கட்டுடன் இருக்கும் அஞ்சலியின் பாத்திரத்தின் மூலம் தன் பெண் வாசகிகள் தங்கள் உள்ளார்ந்த குரலை எழுத்தாளர் வெளிப்படுதிவிட்டாதாக சொல்கிறார்கள் என்று சாரு பெருமையாகப் பேசக்கூடும். நாவலின் ஒரு இடத்தில உதயா பேரிளம் பெண்களின் பாலுறவு வேட்கையை அந்தரங்க சட மூலம் தீர்த்து வைப்பதாகவும் அப்படி செய்திராவிட்டால் அப்பெண்கள் வேறு முடிவுகளுக்கு சென்றிருக்கக் கூடும் என்பதால் அது போன்ற பாலியல் மொழி சாட்டிங்குகள் பெண்களின் அந்தரங்க ஆசைகளுக்கு ஒரு வடிகால் என்ற உண்மையை போட்டு உடைப்பதின் மூலம் பெண்களின் உள்ளார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு தரும் மேன்மையான எழுத்தாளனாக உதயா அறியப்படுகிறான்.


அஞ்சலியின் பாத்திரம் பேசப்பேச அவளுக்குள் உறைந்திருந்த இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருவது நாவலின் முக்கியமான தளம் என்றாலும் அதில் இருக்கும் நம்பகத் தன்மை கேள்விக்குரியதாகவும் நாவலை தொடர தொடர ஆசிரியர் மேலும் மேலும் அஞ்சலி மீது பரிதாபத்தை ஏற்படுத்த முயல்கிறார் என்ற எண்ணம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. அஞ்சலியின் இளமைப் பருவத்தில் அவளது குடும்பத்தில் நுழையும் திவாகர் நாய் (அப்படித் தான் அஞ்சலி அழைக்கிறாள்) அவளது கல்லூரிக் காலம் வரையிலும் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தமிழ் நெடுந்தொடர்களில் வரும் காட்சியமைப்புகளுக்கு எந்த விததில்லும் குன்றாத குரூரத்துடன் நம் முன் வைக்கிறார் ஆசிரியர். ஆன்மீக பித்துக்கொண்ட அஞ்சலியின் அம்மாவையும் அப்பாவையும் திவாகர் ஆன்மீகம் என்ற போர்வையில் பில்லி சூன்யம் (black magic) செய்து வசியம் செய்து விட்டதால் அவர்கள் இவள் மீதான திவாகரின் பாலியல் தொந்தரவுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் என்று ஆசிரியர் சொல்லிவிடுவதால் தைரியம் கொள்ளும் திவாகர் இன்னும் வித விதமாக அவளை சித்ரவதை செய்ய துவங்குகிறானோ என்று கூட தோன்றுகிறது.


சுரேஷை காதலித்து திருமணம் செய்து மூன்று குழந்தைகளையும் பெற்ற பின்னும் அஞ்சலி போன்ற பெண் உதயாவுடன் கட்டுப்பாடற்ற பாலுறவு கொள்வதற்கு உள்ளீடான காரணம் சிறு வயதில் அவள் மீதான அந்த பாலியல் தாக்குதல்கள் தான் என வாசகர்களை எண்ண வைக்க ஆசிரியர் அளவுக்கு மீறி பிரயத்தனப் படுவதாக தோன்றுகிறது. கடைசியில் அவர் கிண்டல் செய்யும் ஜன ரஞ்சக எழுத்தாளரான ரமணி சந்திரனின் குடும்ப உறவுச் சிக்கல் கதை போலாகிறது. ஆனாலும் ரமணிக்கும் சாருவுக்கும் இதில் பெரிய வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. அவர் தைரியமில்லாமல் மார்பகம் என்று சொல்வார் ..சாரு துணிச்சல்காரர் என்பதால் முலை என்று எழுதிவிடுவார். இது போன்ற விஷயங்களை கூட இருந்தே கிண்டல் செய்யும் கொக்கரக்கோ பாத்திரமும் சுவாரஸ்யம். உன்னை காதலிக்கும் பெண்கள் மட்டும் என் கூடை நிறைய சோகக்கதைகளை சுமக்கின்றனர் என்று உதயாவை உரிமையுடன் கிண்டல் செய்கிறான். ஜே.ஜே. தன் மனைவி பிரம்பால் தன் மகளின் புட்டத்தை வெளுப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் என்ற விமர்சனம் வைத்த சாரு அஞ்சலியை திவாகர் சவுக்கு மிளாரால் அடித்து சித்ரவதை செய்தான் என்று எழுதுகிறார்.அது அஞ்சலியின் அம்மாவுக்கு தெரிவதே இல்லை. பில்லி சூன்யம் வைத்தால் ஒரு தாய்க்கு தன் மகள் உடலில் சவுக்கு மிளார் அடித்துப் பிளந்த காயங்கள் தெரியாமல் போகுமா என்ன? இத்தனைக்கும் அஞ்சலியின் அம்மாவே இளம் வயதில் தன் சொந்த சகோதரனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானவள். ஆனாலும் இவற்றை கொக்கரக்கோவே கேட்டு விடுவதால் எல்லாம் சரி என்று நினைத்து விடுகிறார் ஆசிரியர்.


நாவலில் குறிப்பிடத்தக்க விஷயம் நாகூர் பற்றிய குறிப்புகள். ஆசிரியர் தன் ஊரின் தெருக்களைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார்.நடிகரும் பேச்சாளருமான சிவகுமார் எப்படி பூக்களின் பெயரை சொல்லி முடிக்க மணிக்கணக்கில் ஆகுமோ அது போல தெருக்களின் பெயர் மட்டும் இரண்டு மூன்றுப் பக்கங்களுக்கு ஓடுகிறது.( இது போன்ற பட்டியல்கள் நாவலில் அடிக்கடி தென்படுவது வேறு விஷயம்) என்றாலும் எந்த ஒருவனுக்கும் தன் சொந்த ஊரைப் பற்றி சொல்ல சலிக்கவே சலிக்காது என்பதும் உண்மை தானே.கொசத்தேருவில் இருந்து ரயிலடி வரை செல்லும் தூரம் தன் இளம் வயதில் வட துருவத்தில் இருந்து தென் துருவத்துக்கு செல்வது போல் இருக்கும் எனும்பொழுது இளமையில் அவரவர்க்குள் தத்தம் தெருக்கள் எத்தனை பிரமாண்டமாய் உறைந்து போயிருக்கின்றன என்று தோன்றுகிறது. அதே போல் அன்பு ஒன்றை மட்டும் காட்டத் தெரிந்த தன் பெரியம்மா பற்றி உதயாவின் விவரிப்பும் நெகிழ்வு. ஆனால் தன் பெரியம்மா பிம்பத்தை அஞ்சலியில் கண்டேன் என்று உதயா சொல்வது புருடா. அவன் அவளிடம் கண்டது பெற்றது எதிர்பார்த்தது எல்லாம் உடல் சுகம் மட்டுமே. அத்துடன் நாகூர் கதை முடிந்த விடுவதால் நாவலின் கனம் திரும்பவும் குறைந்து விடுகிறது.


நாவலில் சுய முரண்கள் அடிக்கடி தென்படுகின்றன. குறிப்பாக பாலுறவு சிந்தனையில் முற்போக்கு தீவிரம் கொண்ட உதயா அவ்வப்போது பாலியல் நியாயம் பேசுகிறான். அடுத்தவனின் மனைவியான அஞ்சலி உறவு கொள்ளும்போது அவளது கணவன் சத்தமெழுப்ப அனுமதிப்பதில்லை என்று தெரிந்தவுடன் கொதிக்கிறான் உதயா.'படுக்கையில் கூட ஒருத்திக்கு சுதந்திரம் இல்லையா?' அதே சமயம் அவள் முத்தமிடப் போகிறாள் என்று நினைக்கையில் அவள் வேறொன்றை அவனுக்கு சுவைக்க தர முயல்கிறாள். அதுவும் பொது இடத்தில். உதயா திடீர் இனச்சிந்தனையுடன் தமிழ் பெண்ணா நீ ராஸ்கல் என்று கண்டிக்கிறான். அதற்கு அஞ்சலி தரும் பதில் இன்னும் அட்டகாசம்' என்னை இப்படிக் கெடுத்ததே நீதான்'. அதே போல் ஒழுக்கக் கோட்பாடுகளில் எந்த வித நம்பிக்கையும் இல்லாத பக்கிரிசாமியின் ஆவி ஒரு இடத்தில் ஒரு நடிகையைப் பற்றிப் பேசுகிறது. பக்கிரிசாமி தான் செயலாளராக வேலை பார்க்கும் அரசியல்வாதிக்கு சேவை செய்ய வந்திருக்கும் அவள் முன்பு ஒருமுறை தன் பிறப்புறுப்பு தெரியும்வண்ணம் உள்ளாடை அணியாமல் வந்து மீடியாவில் பரபரப்பை ஏற்றி பின் நிறைய சான்ஸ் பெற்றுக்கொண்டவள் என்பதால் அவள் மீது கடும் கோபத்தில் இருக்கிறான்.கோபத்துக்கு அது மட்டும் காரணமில்லை 'நீ எதை வேண்டுமானாலும் அணியாமல் இரு. தமிழ் நாட்டுக்கு வந்தவுடன் யோகா, பரதநாட்டியம் என்று பேசாதே' என்கிறான். விபச்சாரம் செய்தால் நேரடியாக செய் ஏன் பத்தினி வேஷம் போடுகிறாய்?
அதே போல் மூன்று வயதிலேயே சுய இன்பம் செய்யத் தொடங்கி விட்ட உதயாவுக்கு அப்படியென்றால் என்னவென்று கல்லூரிக் காலத்தில் தான் தெரியவே வந்தது என்று மாபெரும் புருடா ஒன்றை விடுகிறான். பல இடங்களில் இது போன்ற அபத்தங்கள்.

இது வரைக்கும் இருந்த நடைமுறையை உடைக்கிறேன் பேர்வழி என்று எழுதுபவர்களுக்கு ஒரு பெருத்த சவுகரியம் உண்டு. யார் யாரிடம் என்ன பேசுகிறார்கள். முற்றுப்புள்ளி, கம்மா போன்ற வஸ்துகளை தூக்கி ஓரங்கட்டி விட்டு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். இந்நாவலில் அப்படி இருக்கும் சமாச்சாரங்கள் நிறைய. சமையல் குறிப்புகள், மதுபான விருந்துக்கு தேவையான பொருட்களின் பட்டியல், நீண்ட நேரம் கலவியில் ஈடுபட தேவையான அறிவுரை, பெண்களின் உள்ளாடை பற்றிய தகவல்கள், உணவு மற்றும் உணவகங்கள் பற்றிய விவரணைகள் ...இத்தியாதிகள் நிச்சயம் பக்கம் நிரப்புவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. இவற்றை எல்லாம் விடாமல் கோர்த்துப் பார்த்து நாவலின் போக்கை வாசகனே தீர்மானிக்க வேண்டும் என்ற என்னமன்றி வேறேதும் இல்லை. அதே போல் கதைக்கு எந்த வித தொடர்புமில்லாத பிரெஞ்சு. முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைந்த ஆங்கிலமோ என்று தான் நினைக்க வைத்தது . அதிலும் உதயஆம் அஞ்சலியும் பேசிக்கொள்ளும் காதல் கடிதங்களில் ' கண்ணே மணியே...உன்னைப் பார்க்காமல் எனக்கு தூக்கம் வரவில்லை' என்ற காவிய வார்த்தைகளே தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் (!) தென்படுவதால் சுவாரசியம் குறைவு.லகுவான நடை நாவலின் ஓட்டத்தை தடை செய்யவில்லை என்றாலும் உள்ளீடான கட்டமைப்பு ஆட்டோ ஃபிக்ஷன் என்ற பெயரில் இருந்தாலும் பெரிய அளவில் அர்த்தங்களோ முடிச்சுகளோ இல்லாததால் தொக்கி நிற்பது தெரிகிறது. இது போன்ற 'முயற்சிகள்' உண்மையில் தாங்கள் எழுதும் வகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்த்தவல்ல பொய்மையும் ஆர்ப்பாட்டங்களும் சுய தம்பட்டங்களும் அற்ற நேர்மையான எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்பட்டால் தமிழில் நிச்சயம் இன்னும் புதிய வகை எழுத்து வளரும்.

நன்றி: வடக்குவாசல்.

Saturday, December 31, 2011

மன்னன் முகம்..

அரசர்களின் ஓவியங்களை பல முன்னோடிகள் வரைந்திருக்கிறார்கள். ஒரு ஆசைக்கு நானும் வரைந்துகொண்டிருக்கிறேன்.முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓவியங்கள் இவை. உங்கள் பார்வைக்கு..(ஓவியங்களின் மீது க்ளிக் செய்யவும்)









Wednesday, November 16, 2011

ராபின்சன் க்ரூசோ: தனிமையை எதிர்கொள்ளுதல்


தனிமையின் ருசி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி . சிலருக்கு தனிமையில் இருக்கவே பிடிக்காது. எப்போதும் நண்பர்களுடனும் குடும்பத்துடனுமே இருக்க விரும்புவார்கள். சிலர் தனிமை விரும்பிகள். யாருடனும் ஒட்டாமல் தனக்கான தீவை தானே உருவாக்கி அதில் வாழ விரும்புபவர்கள். வாழ்வின் துயரங்களுள் சுழலும் மனம் அவற்றில் இருந்து நீந்தி கரை சேர எங்கோ தனிமையில் சென்று விட வேண்டும் என்று ஏங்கும்.யாருமே இல்லாத பூங்கா ஒன்றில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கும்போது கிடைக்கும் அமைதியும் நிம்மதியும் தனி. பலருக்கு யாருமே இல்லாத தீவொன்றில் சென்று குடியேறிவிட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.அந்த இடத்தில நாம் மட்டுமே இருக்கலாம். விருப்பப் பாடலை மனதுக்குள் மட்டும் ஒலிக்க விடாமல் சத்தமிட்டுப் பாடலாம். இயற்கையின் பின்னணி இசையில் பாடல் காற்றில் கரைய நம் சுயத்தின் குரல் நம்மிலிருந்து முழுமையாக வெளிவரலாம். நம்மிடம் நாமே விவாதம் செய்யலாம். கடலலையும் காற்றும் சாட்சிகள். நினைக்கவே அருமையான கற்பனை.

ஆனால் எதிர்பாராமல் ஒரு தனிமை தீவொன்றில் சென்று மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும். பல கடலோடிக் கதைகளில் இப்படியான தனிமைத்தீவுகள் பற்றி எழுதப்பட்டிருக்கின்றன. நம் சிந்துபாத் தனது எழு கடற்பயணங்களில் விபத்தாகும் கப்பலில் இருந்து தப்பித்து ஏதாவது தீவுக்கு அல்லது பெயர் தெரியாத நாட்டுக்கு செல்வான். அங்கு தனிமையில் அவன் காணும் அதிசயங்கள், எதிர்கொள்ளும் அபாயங்கள், மேற்கொள்ளும் சாகசங்கள் அற்புதமானவை. மிகப்பெரிய ருக் பறவை, பிரமாண்டமான வெள்ளை மண்டபம் போன்ற அதன் முட்டை, பயணிகளை தன் குகையில் வைத்து நாளுக்கொன்றாய் பிடித்து விழுங்கும் ஒற்றைக்கண் ராட்சஷன், தீவில் ஒதுங்குபவர்களை நடக்க இயலாதவன் போல் ஏமாற்றி அவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்து, பின்பு கால்களால் கழுத்தை நெரித்துக் கொல்லும் கடலின் முதுமகன், கடலில் ஒரு தீவு போலவே மையம் கொண்ட உயிருள்ள பிரமாண்டமான மீன் என்று சிந்துபாத் கதைகள் எழுதும் சித்திரங்கள் மனதின் உட்சுவர்களில் என்றுமே அழியாவண்ணம் பதிவானவை. யாருமற்ற தனிமையில் மனிதனின் மனம் கொள்ளும் உறுதியைப் பற்றி பேசுபவை.

பதினைந்து வருடங்களுக்கு முன் தினமணிக்கதிரில் ரா.கி.ரங்கராஜன் மொழிபயர்த்த ஆங்கிலக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. புயலில் சிக்கிய கப்பலொன்றில் இருந்து தப்பித்து தீவில் ஒதுங்கும் ஒருவனுக்கும் அந்த தீவில் இருக்கும் எலி ஒன்றுக்குமான போராட்டம் அந்தக் கதை. இவனிடம் மிஞ்சியிருக்கும் பிஸ்கட்டை கைப்பற்ற எலி எடுக்கும் முயற்சிகளும் அதை முறியடித்து தன் ஒரே உணவைக் காப்பாற்ற அந்த மனிதன் செய்யும் முறியடிப்புகளுமாய் தொடரும் அந்தக் கதை. ஒரு கட்டத்தில் இருவருமே போதிய உணவில்லாமல் மெலிந்து கொண்டு வர இருவரில் யார் முதலில் இறந்தாலும் மற்றவர்க்கு அந்த மரணம் சிறிதுகாலத்துக்கு தேவையான உணவிற்கான உத்திரவாதம் என்ற அளவில் ஆகி விடும்.எலி இறந்தால் கூட மனிதனுக்கு அது பெரிய அளவிலான உணவில்லை. ஆனால் அவன் இறந்தால் எலிக்கு கொண்டாட்டம் அல்லவா? யார் இறப்பார் யார் ஜெயிப்பார் என்று நாம் எதிர்பார்க்கும்போது ஒரு கப்பலில் வரும் மாலுமிகள் அவனைக் காப்பாற்றி கப்பலில் ஏற்றி செல்வார்கள். நினைவு திரும்பியதும் அவன் 'அந்த எலியைக் காப்பாற்றுங்கள் ..எங்கள் போட்டி பாதியில் முடிவது நியாயம் இல்லை' என்று அரற்றுவான். மாலுமிகள் அந்தத் தீவுக்கு சென்று நிறைய பிஸ்கட்டுகளை எலியின் உணவாகப் போட்டு விட்டு வருவார்கள். மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தில் தோல்விகள் தரும் வலியை மறக்கும் வண்ணம் கிடைக்கும் வெற்றிகளின் போது அந்தப் போராட்ட கணங்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்று தோன்றும் அந்த கதை படிக்கும்போது.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எங்கிருந்தோ கிடைத்த புத்தகம் ஒன்றில் பல ஆண்டுகாலம் தனிமைத் தீவில் காலம் கழித்த மனிதனின் கதை படிக்கக் கிடைத்தது. அவன் தான் ராபின்சன் க்ரூசோ. இங்கிலாந்தில் இருந்து கப்பலில் சென்று கொண்டிருக்கும் க்ரூசோ கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்க ஆரம்பிக்க எப்படியோ நீந்தி ஒரு தீவுக்கு சென்று சேர்வான். இங்கிலாந்து கப்பல் ஒன்று வரும்வரையில் அந்த தீவிலேயே கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் வாழ்வான். இடையில் நரபலி கொடுக்கும் ஆதிவாசிகள், க்ரூசோவால் அந்த ஆதிவாசிகளிடம் இருந்து தப்புவிக்கப்பட்டு பின் நன்றிக்கடனுடன் நண்பனாகி அவனுடன் சேர்ந்து வாழும் ஃப்ரைடே (Friday) என்று சில மனிதர்களும் வருவார்கள். தனிமை விரும்பிகளின் கற்பனைகளுக்கு இந்தக்கதை எந்த குறையும் வைக்காது.



கரையில் ஒதுங்கும் க்ரூசோ தன்னோடு வந்தவர்களில் வேறுயாருமே உயிர் பிழைக்கவில்லை என்று தெரிந்தவுடன் அந்தத் தீவருகே ஒதுங்கும் கப்பலின் பாகங்களில் இருந்து சிறிது உணவு, ஒரு நாய், இரண்டு பூனைகள், தேவையான உபகரணங்கள் போன்றவற்றைக் கொண்டுவருவான்.பின் எஞ்சிய கோதுமைகளைக் கொண்டு விவசாயம் செய்வான். வேட்டையாடுவான். தன்னைக் காப்பாற்றிய கடவுளின் மீது நன்றி கொண்டு தீவிர பக்தனாகி விடுவான். பைபிளை தீவிரமாகப் படிக்க தொடங்குவான். ஃப்ரைடே மற்றும் ஃப்ரைடேயின் தந்தை போன்றவர்களின் துணையுடன் இறுதியில் ஒரு கப்பல் புரட்சியை முறியடித்து அந்த கப்பலின் கேப்டனுடன் இங்கிலாந்து சென்று சேர்வான். ஃப்ரைடேயும் கூடவே வருவான். மிக முக்கியமாக அவன் கிறிஸ்துவனாக மாற்றப்பட்டிருப்பான்.

எந்தக் கதையைப் படித்தாலும் அதை ஒரு காட்சியாக உள்வாங்கிப் படிப்பவர்கள் அது திரைப்படமாக வரும்போது தான் உள்வாங்கி கற்பனை செய்த காட்சிகள் திரைப்படத்தில் சரியாகப் பொருந்தி வந்திருக்கிறதா, கதாநாயகன் மூலக்கதாபாத்திரத்தின் ஜாடைகளை ஒத்திருக்கிறானா என்ற தேடலுடனே அந்தப் படத்தை அணுகுவார்கள்.
நாவல் சார்ந்த தங்கள் கற்பனையில் வேறொருவர் தலையிடுவதை விரும்பாதவர்கள் திரைப்படத்தை தவிர்த்துவிடுவார்கள். நான்
எனக்குப் பிடித்த சில சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாக வரவேண்டும் என்ற கட்சி. ஜெயமோகனின் 'காடு', அலெக்சாந்தர் புஷ்கினின் 'கேப்டன் மகள்', சிங்கிஸ் ஐத்மாதவின் 'முதல் ஆசிரியன்' போன்ற நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டால் மிகவும் அருமையாக இருக்கும். சமீபத்தில் வெளிவந்த 'வாகை சூட வா' படத்தின் கதையை கேட்கும்போது 'முதல் ஆசிரியனின்' சாயல் தெரிந்தது. என்னை பாதித்த கதைகளில் ஒன்று.களவாணி புகழ் இயக்குனர் என்பதால் படத்தைப் பார்க்கத் துணியவில்லை.



இந்தக் கதையைப் பொறுத்தவரை மூலக் கதையைப் படித்தவர்களுக்கு அதன் திரைவடிவமான பியர்ஸ் பிராஸ்னன் நடித்த 'ராபின்சன் க்ரூசோ' மிகப் பெரிய ஆச்சர்யம் தந்திருக்கும். சிலருக்குப் பிடிக்காமல் கூடப் போயிருக்கலாம்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாகசக் கதாநாயகனாக ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும் பிராஸ்னன் இந்தப் படத்தில் நிறைவாகவே செய்திருக்கிறார். கப்பல் கடல்புயலில் சிக்கி நொறுங்கும் காட்சிகளும் தீவுக் காட்சிகளும் அருமை. மிக முக்கியமாக படத்தில் ஃபிரைடேயின் பாத்திரப்படைப்பு அற்புதம். மூலக்கதை கொண்டிருக்கும் சில முரண்பாடுகளுக்கு எதிராகவோ அல்லது அதை மறைத்து வேறு விதமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடோ எடுக்கப்பட்டிருந்தாலும் நிச்சயம் பாராட்டத் தக்க மாற்றத்தைப் படத்தில் பார்க்கலாம். மூலக் கதையில் ஃப்ரைடே ஒரு க்ரூசோவால் கிறிஸ்துவனாக மதமாற்றப்பட்டு இங்கிலாந்து செல்கிறான். ஆனால் படத்தில் அவன் க்ரூசோ புகழும் அவனது கடவுளான இயேசுவை ஏற்க மறுக்கிறான்.

நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டியாக தான் கதையிலும் படத்திலும் க்ரூசோ ஃ ப்ரைடேயைப் பார்க்கிறான். கதையில் அவன் அடிமைகளை வாங்க வரும் கப்பலில் வரும்போது தான் விபத்துக்குள்ளாகிறான். ஆனால் படத்தில் அந்த விஷயங்கள் சொல்லப்படுவதில்லை. தன் காதலியை மணக்க முயலும் தன் நண்பனை நேரடி வாட்சண்டையில் கொல்ல நேர்ந்ததால் கொலைப்பழியுடன் நண்பனின் சகோதரர்களின் துரத்தலுக்கு பயந்து கொஞ்ச காலத்துக்கு தலைமறைவாக இருப்பதற்காகவே கப்பலில் பயணிக்கிறான்.

ஒரு காட்சியில் நரமாமிசம் உண்ணுவதை கடுமையாக விமர்சனம் செய்யும் க்ரூசோ ஃ ப்ரைடேயிடம் கடவுள் குறித்து நடத்தும் விவாதம் அருமை. தன் கடவுள் தான் உண்மையான கடவுள் என்று இருவரும் கடுமையாக வாதிடுவார்கள். போக்யா என்ற முதலை தான் மனிதர்களை படைத்தது என்கிறான் ஃப்ரைடே . அவனைப் பொறுத்தவரை முதலை தான் கடவுள். க்ரூசோ கொடுக்கும் பைபிளை புரட்டிவிட்டு இதில் கடவுள் எங்கே காணோமே? என்னுடன் வா என் கடவுளைக் காட்டுகிறேன் என்கிறான். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்து பிரிகிறார்கள். படத்தில் இரண்டு முறை இப்படி வாக்குவாதத்தால் பிரிந்து பின் ஒன்று சேர்வார்கள்.



ஒரு காட்சியில் க்ரூசோவின் சொந்த நாடான பிரிட்டன் பற்றிய பேச்சு வர க்ரூசோ தான் ஒரு வெள்ளைக்காரன் என்று சொல்ல , வெள்ளை ஐரோப்பியர்களின் அடிமை முறையால் தன் உறவினர்களை இழந்த ஃப்ரைடே அப்படியென்றால் தான் அவனுக்கு அடிமையா எனக் கடுமையாக கேட்பான். அமெரிக்க ஆப்ரிக்க அடிமைகளின் வரலாறைப் படித்திருப்பவர்களுக்கு இதன் ஆழம் புரியும்.

க்ரூசோவின் வளர்ப்பு நாய் எதிர்பாராத விதமாக இறந்துவிட அதை புதைக்கும்போது 'அந்த நாயின் ஆத்மாவுக்கு உன் கடவுளின் சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா ?' என்று ஃப்ரைடே கேட்பான். 'மனிதர்களுக்கு மட்டும் தான் ஆன்மா இருக்கிறது. விலங்குகளுக்கு கிடையாது' என்று பதில் தருவான் க்ரூசோ. உடனே தன் கடவுளான போக்யாவிடம் அந்த நாயின் ஆன்மாவைக் காக்க ஃப்ரைடே வேண்டும் காட்சி அற்புதமானது.

படத்தில் கடைசிவரை க்ரூசோவுக்கு நன்றியுள்ள நண்பனாக இருந்தாலும் சுயகௌரவத்தை கைவிடாதவனாக வரும் ஃப்ரைடே தான் படத்தின் கதாநாயகன் என்பேன். உயிர்பிச்சையும் நல்ல நட்பும் கிடைத்த ஃப்ரைடே க்ரூசோவிடம் சொல்லும் ஒரு வசனம் மிக முக்கியமானது. வரலாற்றின் அந்தக் காலகட்டத்துக்கு மட்டுமல்லாது இப்போதும் கூட சில இடங்களில் பொருந்தக் கூடியது.
"You are not a white man.You are good man"

பின்குறிப்பு :
மூலக்கதையின் ஆசிரியர்:Daniel Defoe

படம் அடிக்கடி ஸ்டார் மூவீஸில் ஒளிபரப்பாகி இருக்கிறது. யூட்யூபில் கூட பாகங்களாகக் கிடைக்கிறது.

Sunday, October 30, 2011

மீண்டு(ம்) வா ராஜா!


தொண்ணுத்தேழு என்று நினைக்கிறேன். விகடனில் ராஜாவை பற்றிய கட்டுரை வந்தது.ராஜா ரசிகர்கள் மத்தியில் புயலைக் கிளப்பிய அந்த கட்டுரையின் தலைப்பே ரசிகர்களுக்கு செய்யும் துரோகம் என்று கடுமையாக இருந்தது. பல நேரடியான கேள்விகளைக்கொண்ட அந்த கட்டுரை எனக்கு அப்போது பெரும் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவ்வளவும் நியாயமான வாதங்கள். கோடம்பாக்கத்திலேயே பொழுதைக் கழிக்காமல் உலக அளவில் ராஜா பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அந்த கட்டுரை ராஜாவை கேட்டுக்கொண்டது. ரஹ்மானின் வருகையும் தன் மலிவுப்பதிப்பாக கோடம்பாக்கத்தில் வளர்ந்து வந்த தேவா போன்ற புதியவர்களின் வருகையும் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளும் நிச்சயமாக ராஜாவை பாதித்திருக்க வேண்டும்.

விகடனின் மாணவப் பத்திரிக்கையாளர்கள் சிலர் ராஜாவை நேர்காணல் செய்தபோது ' தற்போது இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒருவரின் இசைப்பாணியே பின்பற்றப்படுகிறது..ஜனங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்று சொன்னார். அவதாரம் பாடலில் 'பாட்டுன்னு நெனப்பதேல்லாம் ..இங்கு பாட்டாக இருப்பதில்ல' என்ற வரிக்கு 'அது ஏம் பாட்டில்ல ' என்று அவசரமாக பதில் தருவார். ஆனால் உண்மையில் ராஜா தான் தன் இனிமை நிறைந்த இசைக்கோர்வைகளை நம்மைப் போன்ற ரசிகர்களுக்கு தர மறந்துவிட்டார். அதற்கு மிக முக்கியக் காரணம் அவரின் இசைப்பசிக்கு தீனி போட தகுந்த இயக்குனர்கள் இல்லாது போனது. பாரதிராஜா, பாலச்சந்தர்,மணிரத்னம் போன்ற தமிழ் சினிமாவின் மிக முக்கிய தலைகள் ராஜாவுக்கு மாற்றாக யாராவது கிடைப்பார்களா என்று தேடிக்கொண்டிருக்க ரஹ்மான் கிடைத்ததும் பிறகு ரஹ்மான் மிகப் பெரிய அளவில் வளர்ந்ததும் வரலாறு. ராஜாவுக்கு கிடைத்தவையோ உப்பு சப்பில்லாத படங்கள். அவரால் அதைத் தாண்டி எதுவும் புதுமையாய் செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமானப் படங்களே கிடைத்தன என்பதுவும் உண்மையே.

ராஜாவும் தன் பங்குக்கு தன் வழக்கமான பாணி இசையை முற்றிலும் தவிர்த்துவிட்டு விருப்பமில்லாமல் இசை அமைப்பது போல் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு உதாரணம் சொல்லலாம். பாலச்சந்தரின் சிந்துபைரவிக்கு கர்னாடக இசைப்பின்னணியில் இசை தந்திருந்தாலும் பட்டிதொட்டியெங்கும் கேட்கும்படியான, பாமர ரசிகர்களை சேரும் விதமான அதே சமயத்தில் தரத்தில் சமரசமில்லாத பாடல்களை தந்த ராஜா, பின்னாளில் தி.ஜானகிராமனின் மோகமுள் நாவல் படமாக்கப்பட்டபோது நல்ல பாடல்கள் தந்திருந்தாலும் அவற்றில் ராஜாவின் முத்திரை அறவே இல்லை.இன்றும் கர்நாடக இசை நன்கு தெரிந்த ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பாடல்கள் என்றபோதிலும் ராஜாவின் இசைச்சாரம் அதில் துளியும் இல்லை. இது போன்ற பல படங்கள்.பாடல்கள்.

தேவதை படத்தின் end credit title இசை மிக சிறப்பாக வந்திருப்பதாக விமர்சனத்தில் எழுதிய விகடன், படம் முடிந்தவுடன் எழுந்துசென்றுவிடாமல் ராஜாவின் அந்த டைட்டில் இசையைக் கேட்டுவிட்டு செல்லுமாறு எழுதியது. அதற்காகவே பலதடவை அந்தப் படத்தைப் பார்த்தேன். அற்புதமான இசை தந்திருந்தார். அப்போது சென்னையில் என் அண்ணன் வீட்டில் தாங்கி இருந்த நான் இந்த இசை ஆடியோ கேசட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டு இரண்டு வெவ்வேறு கடைகளில் வாங்கி ஏமாந்தேன். கேசட்டில் குறிப்பிடப்பட்டும் அதில் அந்த இசை பதிவு செய்யப்படவில்லை. எனக்கோ பெருத்த ஏமாற்றம். அதற்கு முன்பே பல படங்களில் ராஜாவின் இசைக்காக என்றே சேகரிப்புக் காசுகளில் வாங்கிய கேசட்டுகள் எக்கச்சக்கமாய் ஏமாற்றி இருந்தன. ராசையா ,தேசியகீதம் போன்ற எத்தனையோ படங்களில் ராஜாவின் ஏமாற்றம் தரும் இசை கேட்டு வெறுத்துப் போனேன். ராஜாவின் இசைச்சுவடே அந்தப்பாடல்களில் பதியவில்லை. நிரவல் இசையில் இந்தியாவிலேயே சிறந்தவரான ராஜாவின் பிற்காலப் பாடல்களில் நிரவல் இசை என்னென்னவோ சத்தங்களால் நிரப்பபட்டிருந்தது பெரிய வருத்தம் தந்தது. என் எண்ணமெல்லாம் யார் என்ன செய்தால் என்ன.. ராஜா தன் மிகப் பெரும் பலமான அந்த ஆர்கெஸ்ட்ரேஷனை ஏன் கைவிட்டு சிந்தசைசரை மட்டும் நம்பத் தொடங்கினார் எனபது தான். என் நண்பர் ஒருவர் ராஜாவின் சம்பளம் மிக மிக குறைவு என்றும் அதனால் அவரது விருப்ப இசைக்கருவிகளான வயலின், செல்லோ போன்றவற்றை வாசிக்கும் பலருக்கு சம்பளம் தருவதில் சிக்கல்கள் இருப்பதால் எளிய முறையிலேயே இசை அமைக்கிறார் என்ற தகவலை சொன்னார். என்னால் அந்த தகவல் தந்த வருத்தத்தை தாங்க முடியவில்லை.

மேலும் எக்கச்சக்க சர்ச்சைகள் வேறு. தொன்னூத்தி ரெண்டில் லண்டன் ராயல் ஃபில்ஹார்மொனிக் குழு ராஜா எழுதிய சிம்பனியை லண்டனில் ரெகார்ட் செய்த போது தமிழகமே சந்தோஷத்தில் பூரித்தது.அதுவும் ரிலீசாகாமல் இருப்பது பற்றி இன்றும் யாராவது ஒருவராவது இணையத்தில் வருந்தி எழுதுவதை காண முடிகிறது. தொண்ணூறுகளின் மத்தியில் குமுதம் புதிய பாடலாசிரியர் தேர்வு என்று ஒரு போட்டி வைத்தது. ராஜாவின் ட்யூனுக்கு சிறந்த பாடல் வரிகளை எழுதுபவருக்கு தங்கப்பேனா பரிசளிக்கப்படும் என்றது அறிவிப்பு. அப்போது பிரஷாந்த் நடித்துக்கொண்டிருந்த 'ஜோக்கர்' என்ற படத்தில் அதே பாடல் உபயோகிப்படும் என்பதால் ராஜாவின் இசையில் பாடல் எழுத பலர் போட்டியிட்டனர்.முடிவில் எங்கள் ஊரை சேர்ந்த கருணாநிதி என்பவர் ஜெயித்து ராஜாவின் கையால் தங்கப்பேனா வாங்கினார். படம் மட்டும் வளரவே இல்லை. பிறகு கருணாநிதி அண்ணன் ராஜா சிம்பனி செய்ததற்கு நடந்த பாராட்டு விழா மலர் ஒன்றை எனக்கு படிக்கக் கொடுத்தார். அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தவிர மற்ற எல்லா தென் மாநில முதல்வர்களும் ஏன் கவர்னர்களும் கூட ராஜாவை வானளாவப் புகழ்ந்து வாழ்த்துக் கடிதம் எழுதி இருந்தார்கள். வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் பலரும் ராஜாவின் திறமையை வியந்து பாராட்டி இருந்தனர். ஆனால் மறைந்த சுப்புடு தவிர வேறு யாரும் ராஜாவின் சிம்பனியை இன்று வரை கேட்க முடியவில்லை.

அந்த இசையை கண்டக்ட் செய்த ஜான் ஸ்காட்டிடமே இது பற்றி ராஜா ரசிகர் இணையத்தில் கேட்டிருந்தார். விமர்சகர்களின் குருட்டுத்தனமான வார்த்தைகளுக்கு பயப்படாமல் ராஜா அதை ரிலீஸ் செய்யவேண்டும் என்பது தான் தனது ஆசையும் என்று பதில் தந்திருந்தார் ஸ்காட்.

இது போன்ற பல குறைகளுக்கு ராஜாவிடம் இருந்து பதில் வந்ததே இல்லை. மாறாக அவர் முன்பை விட அதிக உற்சாகத்துடன் மீடியா முன் வருகிறார். நிறைய நேர்காணல் தருகிறார். தன் இசைப்பதிவுகளை புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதிக்கிறார். ஹங்கேரி இசைக் கலைஞர்களை வைத்து மட்டும் பல படங்களுக்கு இசை அமைத்து விட்டார். அதில் முதல் படமான குரு (மலையாளம்) தவிர எந்தப் படத்தின் இசையும் சிறப்பாக அமையவில்லை என்பது தான் சோகம். நீண்ட நாட்களுக்குப் பின் 'பழசிராஜா' வில் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருந்தார்.ஒரே சந்தோஷம் தமிழ் தவிர ஏனைய மொழிகளில் கொஞ்சம் நல்ல இசையை தருகிறார். ஒரு மராத்தி மொழிப்படத்துக்கு இசை அமைக்கிறார். அந்த படத்தின் இயக்குனர் ராஜாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெறுவதைப் பார்க்கும்போது அவ்வளவுப் பெருமையாக இருந்தது. அதே போல் பங்கஜ் கபூர் நடிக்கும் ஹேப்பி படத்தின் ட்ரைலர் இசை உயிரை உருக்குகிறது. ஆனால் இதே போல் உயிரை உருக்கும் ட்ரைலர் இசை கொண்ட பா படத்தில் ஏனோ சிறந்த பின்னணி இசை அமையவில்லை. அதே போல் ஹங்கேரி இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசை அமைத்த கமலின் ஹேராம் பின்னணி இசையில் மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. ஒரு சில காட்சிகளைத் தவிர மற்ற எங்கிலும் ராஜாவின் சிம்பனியைக் கேட்க முடியவில்லை. அதே போல் ராஜா இசை அமைத்ததாக நாம் நம்பிக்கொண்டிருந்த ஒரே ஆங்கிலப்படமான ரஜினி நடித்த ப்ளட் ஸ்டோன் படத்திலும் ஆங்கிலப் பதிப்பில் அவர் இசை இல்லை என்று நண்பர் தினா சொன்னார். ராஜாவின் பல மேற்கத்திய இசைக் கோர்வைகளைக் கேட்கும்போது நிச்சயம் அவர் இந்திய இசை உலகுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை என்று தோன்றும். அவர் இசை உலகின் மற்ற பாகங்களிலும் கேட்கவேண்டும் என்ற பேராசை இல்லாத ராஜா ரசிகன் உண்டா என்ன?

முன்பு கூட அதற்கான வாய்ப்புகளில் சிக்கல் இருந்திருக்கலாம். இப்போது எவ்வளவு வாய்ப்புகள் இருக்கும். அவரை தேடி வரும் வாய்ப்புகளை கூட மறுத்துவிடுகிறார் என்று கேள்விப்பட்டேன். திருவாசகம் போன்ற ஒரு எல்லை கொண்ட விஷயங்கள் தவிர உலகிலேயே இயற்கையை இசையாக மொழிபெயர்க்க தகுதியான ராஜா, இயற்கை சார்ந்த சிம்பனிகளை எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. வெளிநாட்டுக் கலைஞர்களுடன் இணைந்து நிறைய ஆல்பங்கள் செய்யலாம். ஆனால் ராஜா அவற்றில் ஆர்வம் செலுத்துவதில்லை. ஒரு நேர்காணலில் நீங்கள் மற்ற மொழிகளில் ஆல்பங்கள் செய்யலாமே என்று கேட்கப்பட்ட போது 'நீங்கள் எல்லாம் டவுன்லோட் செய்தே கேட்கிறீர்கள்' என்ற நேரடியாக கேட்டார். இணைய உலகில் அது நிஜம் தான் என்றாலும் மகத்தான இசைத் திறமையைக் கொண்ட ஒரு மாபெரும் இசைஅமைப்பாளர் இது போன்ற காரணங்களுக்காக தன் எல்லையை சுருக்கிக்கொள்வதா என்ற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. அதே போல் கி.ராஜநாரயணன் தமிழின் வர்ணமெட்டுகளை ராஜா நிறைய எழுத வேண்டும் என்ற விருப்பத்தை முன்பு தினமணியில் எழுதி இருந்தார். ராஜா அவற்றை எல்லாம் எங்கே படிக்கப் போகிறார்.

சமீபத்தில் ராஜா ஒரு பிராட்வே நாடகம் ஒன்றுக்கு (Who's afraid of Virginia Woolf) இசை அமைத்தார். அது பற்றிய செய்தி படித்தவர்களுக்கு அது மிகப்பெரும் சந்தோஷத்தை தந்தது. ஆனால் அதிலும் ராஜா தன் முத்திரையை பதிக்கவில்லை என்று அதைப்பார்த்தவர்கள் எழுதுவதைப் படிக்கும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. அவரது இசையில் உருவான பல படங்கள் இன்னும் ரிலீசாகாமலே இருக்கின்றன. பல படங்களுக்கு ஏனோதானோ என்று தான் இசை தருகிறார். அப்படி இருக்க அவர் சினிமாவை கொஞ்ச நாள் ஒதுக்கி விட்டு உலகளாவிய இசைப்பயணங்கள், உலக சினிமா- ஹாலிவுட் சினிமா போன்றவைகளுக்கு தன் இசைப்பங்களிப்பை தருதல், மேற்கத்திய இசை ஆல்பங்களுக்கு இசை அமைப்பது போன்ற விஷயங்களையும், நம் கிராமிய இசைக்கு சினிமாவில் புத்துணர்ச்சி தந்தவர் என்ற வகையில் நாட்டுப்புறப் பாடல்களை சேகரித்து கிராமிய கலைஞர்களுடன் இணைந்து ஆல்பங்கள் போன்றவற்றை செய்யலாமே. ராஜாவிடம் இன்னும் எதிர்பார்க்கும் ரசிகர்களை நான் இணையத்திலும் நேரிலும் நிறையப் பார்க்கிறேன். பலரும் அவரது இசை இன்னும் உலகெங்கிலும் பரவ வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தான் இருக்கிறார்கள்.

ஆனால் அவ்வப்போது ராஜாவிடம் எதிர்பார்த்து ஏமாறுகையில் அவரது பொற்காலமான எண்பதுகளின் இசைக்கோர்வைகள் அவர் மீதான பிரமிப்பை நொடிக்கு நொடி ஏற்றிக்கொண்டே தான் செல்கின்றன. ராஜா நிச்சயம் ஒரு மாயக்க்காரர் தான்.

எனவே தான் அவரிடம் இன்னும் நமக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

Thursday, August 11, 2011

கார்லிடோஸ் வே: நிழலில் கரையும் நியாயங்கள்


வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் தரையில் படுத்துக்கொண்டு டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும் சுகத்தின் மேன்மையை என்னை போன்ற சோம்பேறிகள் அறிவார்கள். அதிலும் எதிர்பாராதவிதமாக ஏதாவது நல்ல படங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ காணக்கிடைத்தால் ஒரு இன்ச் கூட நகராது உடல். திரையில் நானா படேகரோ, டென்சல் வாஷிங்க்டனோ , ஜான் ட்றவால்டோவோ தோன்றினால் அடுத்த சேனல் பட்டனுக்கு விரலும் நகராது. படம் சாதாரணமாய் இருந்தாலும் தங்களது தனித்த நடிப்பால் படத்தை தாங்கி நிற்பார்கள். அலட்சியமான அதே சமயத்தில் தீவிரத்தன்மை குறையாத நடிப்பு திறன் கொண்ட இந்த நடிகர்களின் வரிசையில் எனக்கு மிகவும் படித்தவர் அல் பசினோ. அவர் படங்களில் எனக்கு காட்பாதர் வரிசை படங்கள் மிக விருப்பமானவை. பேசும் கண்களும் உயர்ந்து தாழும் புருவங்களும் போதும் ; எந்த வசனமும் தேவைப்படாது காட்சியின் சூழலை புரிந்து கொள்ள. அற்புத நடிகர்.நமக்கெல்லாம் நன்கு பரிச்சயப்பட்ட நடிப்பு, உடல்மொழி , முகபாவனை என்று நம்மிடம் இருந்து அதிகம் அந்நியப்படாத ஒருவராக அல் பசினோ காட்சி தர கமல்ஹாசனே காரணம். நகல் நாயகனுக்கு நன்றி.

என்ன தான் ஒலக சினிமா ரசிகர் என்றாலும் ஹாலிவுட் படங்களில் "இட் சீம்ஸ் டு பீ டெட்" என்ற எளிய (!) வாக்கியம் கூட காதில் விழும்போது புரிபடாது. "இட் சிம் டு பீடேட்" என்று அமெரிக்க தோரணையில் உச்சரிப்பு மிரட்டும் . என்னை போன்ற 'ஆங்கிலப்புலமை' கொண்ட பாமரர்களுக்கு என்றே நல்லுள்ளம் கொண்ட ஆங்கில திரைப்பட சேனல்காரர்கள் ஆங்கிலத்திலேயே சப் டைட்டில் போடுகிறார்கள். (மணிரத்னம் , கௌதம் மேனன் போன்ற மேதைகளின் படங்களில் தமிழிலேயே சப் டைட்டில் தேவைப்படுவது வேறு விஷயம்!). எனவே படத்தின் கதையையும் வசனங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

போன வாரம் ஹோம் பாக்ஸ் ஆபீசில் Carlito's way என்ற படம் வந்தது. அல் பசினோவும், தற்போது லஜ்ஜையின்றி நகல் எடுக்கப்பட்டு தலை தெறிக்க ஓடி தமிழகத்தின் தரைகளை கண்ணீரால் கழுவிக்கொண்டிருக்கும் "தெ. தி. மகள்" படத்தின் மூலப்பட நடிகர் சீன் பென்னும் நடித்தது. சீன் பென்னின் "Dead man walking" திரைப்படம் என்னை உறைய வைத்த படங்களில் ஒன்று. பின்னணி இசையில் நம் பக்கத்துக்கு வீட்டு வித்வான் மறைந்த நுஸ்ரத் பதே அலிகானின் ஆலாபனைகள் நம்மை உலுக்கி எடுக்கும். மரண தண்டனை கைதிக்கும் அவரை தண்டனையில் இருந்து காப்பாற்ற போராடும் கிருஸ்துவ பாதிரிப் பெண் ஒருவருக்கும் நடக்கும் பாசப்போராட்ட கதை. கூடிய சீக்கிரத்தில் இதை நம் தமிழ் சினிமா மேதைகளான விஜய், கௌதம் மேனன் அல்லது கமல்ஹாசனே கூட தமிழ் மொழி கொண்டு தழுவி தன் சொந்தப்படம் என்று தம்பட்டம் அடிக்கலாம்.(இந்த தழுவல் விஷயங்கள் பற்றி சில இணைய மேதைகள் குத்தங்கொறை சொல்லி அக்கப்போர் செய்து வருவதாக இன்னொரு இணைய மேதை ஒருவர் ஆர்ப்பரிதுக்கொண்டிருப்பது வேறு விஷயம்..!)

Carlito's way யின் பல காட்சிகளை ஏற்கனவே நம் திரைப்பெருமக்கள் உருவி எடுத்து உண்டு வாழ்கிறார்கள் என்ற தகவலை எனது நண்பர் ஒருவர் தெரிவித்தார். உண்மை. எளிய கதை. ஏற்கனவே நாவலாய் வந்த கதை என்று நண்பன் விக்கி சொன்னான். நாவலின் இரண்டாவது பாகத்தை சார்ந்து எடுக்கப்பட்ட படம் என்கிறான் அவன்.

படம் குண்டு காயங்களுடன் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படும் கார்லிடோ வின் (அல் பசினோ) க்ளோஸ் அப்புடன் ஆரம்பிக்கிறது. அவனது பார்வையில் படும் ஓவியம் ஒன்றில் ஒரு பெண் கடற்கரையில் நடனமாடுகிறாள்.அவனது நினைவலைகள் காட்சிகளாய் விரிகின்றன. ஒரு காலத்தில் போதை மருந்து போன்ற தொழில்களில் தேர்ந்த தாதாவான கார்லிடோ அவனது வழக்கறிஞரும் நண்பனுமாகிய க்லீன்பெல்டின் (சீன் பென்) சாதுர்யத்தால் நீண்ட தண்டனைக்காலத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.தன்னை காப்பாற்றிய நண்பன் என்பதால் அவன் மேல் அளவற்ற நன்றி கொண்டிருக்கிறான். விடுதலைக்கு பிறகு தன் சிறைக்காலத்தில் நிழல் உலகத்தில் பெரிய மாற்றம் வந்திருப்பதை பார்க்கிறான். அவனது சொந்தக்கார பையன் ஒருவன் கூட இப்போது தொழிலில் இருக்கிறான். போதை மருந்து கடத்தும் குமபல் ஒன்றுக்காக வேலை பார்க்கும் அந்த இளைஞன் கார்லிடோவையும் பேச்சு துணைக்கு அழைக்கிறான்.அவன் கையிலோ முப்பதாயிரம் டாலர்கள்.சம்பளப்பணம். " ஒரு காலத்தில் நீங்க எவ்ளோ பெரிய ஆள்.. நீங்க என்கூட வந்தா ஒரு கெத்தா இருக்கும்" என்று அவன் சொல்ல விருப்பம் இல்லாமல் அவனுடன் செல்கிறான் கார்லிடோ. எதிர்பாராத விதமாய் அங்கு அந்த இளைஞனை அந்த கும்பல் கொலை செய்ய, கூட சென்ற கார்லிடோ கும்பலையே கொன்று குவிக்கிறான். முப்பதாயிரம் டாலர் கார்லிடோ கையில். அதை வைத்து செட்டில் ஆகி விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அவனுக்கு வேறு விதமான பிரச்சனை வருகிறது.

வழக்கறிஞரான க்லீன்பெல்டின் க்ளையன்ட் ஒருவன் சிறையில் இருக்கிறான். அவன் க்லீன்பெல்ட் தன் பணமான ஒரு மில்லியன் டாலரை திருடி வைத்திருக்கிறான் என்று குற்றம் சாட்டுகிறான்.அதோடு தன்னை சிறையில் இருந்து தப்ப வைக்குமாறு கேட்கிறான். க்லீன்பெல்ட் செய்ய வேண்டியது..அந்த கைதி தப்பிக்கும்போது சிறைக்கு அருகில் இருக்கும் ஆற்றுக்கு படகுடன் வந்து இவனை கொண்டு செல்ல வேண்டும். பதறிப்போகும் க்லீன்பெல்ட் தன் ஒரே நம்பிக்கைக்கு உரியனான கார்லிடோவிடம் விஷயத்தை சொல்ல. அவன் உதவி செய்ய முன்வருகிறான்.தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றியவன் என்பதால் பணம் வாங்கக்கூட மறுக்கிறான் கார்லிடோ.

ஆனால் அவனை காதலிக்கும் டான்சரான கெய்ல் உள்ளுணர்வு உறுத்த க்லீன்பெல்டுடன் படகில் செல்ல வேண்டாம் என்று மன்றாடுகிறாள். கார்லிடோவுக்கோ இது ஒரு கடமை.அவள் வேண்டுகோள்களை புறக்கணித்து க்லீன்பெல்டுடன் செல்ல , அங்கு அவனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தான் படத்தின் திருப்பு முனை. அந்த காட்சி படமாக்கப்பட்ட விதம், இசை இரண்டும் அற்புதம். பிறகு இந்த விஷயங்களில் இருந்து விடுபட்டு தன் காதலியுடனும் அவள் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தையுடனும் மியாமிக்கு தப்பிக்க திட்டமிடும் கார்லிடோ திரும்பவும் வஞ்சகத்தால் வீழ்கிறான். தனக்குப்பிறகு கெய்ல் தன் குழந்தையுடன் புது வாழ்க்கைக்கு தயாராவாள் என்ற நம்பிக்கையுடன் இறக்கும் கார்லிடோவின் குரல் கரைய அவன் கண்ணில் படும் ஓவியம் உயிர்பெறுகிறது. அலைபாயும் கடலோரத்தில் கெய்ல் நடனமாடிக்கொண்டு இருக்கிறாள்.

படத்தில் நிழலுகத்தில் நட்பு என்ற ஒன்று கிடையாது என்ற செய்தி பல முறை முன்வைக்கப்படுகிறது. கார்லிடோவின் உறவினனான அந்த இளைஞன் தான் சரக்கு கொண்டு போய் கொடுக்கும் இடத்தில இருப்பவர்கள் எல்லாம் என் நண்பர்கள் என்கிறான். பின்னர் அவன் கழுத்தறுபட்டு கிடக்கும்போது "இந்த தொழிலில் நண்பர்களே இல்லை..பார் உன் நிலைமையை " என்று வருந்துகிறான் கார்லிடோ. அதே போல் தனக்கு துரோகம் செய்த க்லீன்பெல்ட்டின் துப்பாக்கியை எடுத்து அவன் கைக்கெட்டும் வகையில் வைத்து விட்டு "எதிரி வரும்போது எடுத்து சுட வசதியாக இருக்கும்" என்று சொல்லி வெளியேற, க்லீன்பெல்டை பழி தீர்க்க வருகிறான் அவனால் கொல்லப்பட்ட கைதியின் மகன். பதறி துப்பாக்கியை இயக்கும் க்லீன்பெல்டின் துப்பாக்கி வெடிப்பதில்லை.. வெளியில் சென்றுகொண்டிருக்கும் கார்லிடோ துப்பாக்கி ரவைகளை குப்பையில் வீசும் காட்சி இடையில் வந்து மறைய ..எதிரியின் துப்பாக்கி குண்டு க்லீன்பெல்ட் மேல் பாய்கிறது. தன் காதலி தடுத்தும் உதவிக்காக போன தனக்கு துரோகம் செய்த க்லீன்பெல்டை கார்லிடோ மன்னிக்கவில்லை. அதே சமயம் அவனது மன்னிப்புக்கும் அர்த்தம் இல்லாமல் போகிறது. நைட் க்ளப்பில் தகராறு செய்யும் ஒருவனை அடித்து துவைத்தாலும் அவனை கொல்லாமல் விட்டு விடுகிறான் கார்லிடோ.கடைசியில் அவனும் கார்லிடோவின் நம்பிக்கைக்கு உரிய நண்பனும் இவன் இறப்புக்கு காரணமாகிறார்கள். அதே போல் கார்லிடோ ஒளித்து வைத்திருக்கும் பணத்தை க்ளப்பின் இன்னொரு உரிமையாளனான சாசோ திருடிக்கொள்கிறான்..இப்படி படம் முழுக்க நிழல் உலகின் துரோகங்கள், வஞ்சகங்கள் விரவிக்கிடக்கின்றன. பலர் முன்னிலையில் ஸ்ட்ரிப்டீஸ் ஆடும் கெய்ல் தன் குழந்தையின் தந்தையான காதலன் எந்த பிரச்னையிலும் மாட்டிக்கொள்ளாமல், போலீஸ் கையால் சுடப்பட்டு சாகாமல் இருக்க வேண்டும் என்று பதறுகிறாள். ஒரு ஒப்புமை தான் இது. இன்ஸ்பிரேஷன் (!) ஆதரவாளர்கள் கொதிக்க வேண்டாம். விருமாண்டியில் தனக்கு தெரியாமல் நடக்கும் சதியை அறியாமல் நெப்போலியன் ஆட்கள் இருக்கும் இடத்துக்கு மன்னிப்பு கேட்க கமல் செல்வதற்கு முன், கிணற்றுக்குள் அமர்ந்து விருமாண்டியிடம் அவனது காதலி பேசும் காட்சி நினைவுக்கு வருகிறது.

அதே போல் தனக்காக தன் காதலியை ரயில்வே ஸ்டேஷன் வரை கூட்டி வரும் நண்பனே கடைசி தருணத்தில் துரோகம் செய்வது போன்ற காட்சிகளை தமிழ் சினிமாவில் அரைத்து மாவாக்கி பலமுறை (புளித்த!) ஆப்பம் சுட்டிருக்கிறார்கள். படத்தில் வழக்கறிஞர் க்லீன்பெல்டாக வரும் சீயான்.. ஸாரி சீன் பென்னின் நடிப்பும் அபாரம். அப்பாவி போல் இருந்து கொண்டு பின்பு தனது கொடூர குணத்தை காட்டும் கதாபாத்திரத்தில் மின்னுகிறார். படம் எடுக்கப்பட்டது 1993 இல்.ஆனால் கதை நடப்பது '75 இல். அந்த காலகட்டத்தை சேர்ந்த உடை, சிகை அலங்காரம் எல்லாம் அவ்வளவு நேர்த்தியாக இருப்பதால் சீன் பென்னின் வயதை நினைத்து குழம்பி விட்டேன். படம் ப்ளாஷ்பேக்கில் தொடங்கினாலும் ஒரே நேர்கோட்டில் செல்கிறது. எளிய உறுதியான திரைக்கதை. நம்பகத்தன்மை இருக்கும் பட்சத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை நாமும் சுமக்கிறோம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்கள் எப்படி கையால்வார்களோ என்று பதறுகிறோம். உண்மையான கலையின் வெளிப்பாடே இது தான். கலையே போல செய்தல் என்றாலும் அதிலும் ஒரு நம்பக தன்மை அவசியம்..ஒன்றுக்கொன்று உறுதியாக பிணைக்கப்பட்ட கதை சம்பவங்கள் ஒரு நல்ல திரைக்கதைக்கு முக்கியம். அந்த வகையில் ஒரு சில குறைபாடுகளுடன் இருந்தாலும் தேர்ந்த திரைக்கதை மற்றும் நடிப்பு மூலம் படம் பலம் பெறுகிறது.

படத்தை மிஷன் இம்பாசிபிள், அன்டச்சப்ல்ஸ் படங்களின் இயக்குனர் ப்ரையன் டி பால்மா எடுத்திருக்கிறார். எந்த சண்டைக்கும் போகாமல் இருக்க முடிவு செய்த பின் , தன் சொல்லுக்கு அடங்காமல் துள்ளும் பென்னி ப்ளாங்கோவை புரட்டி எடுத்து விஸ்வரூபம் எடுக்கும் காட்சி, தன்னை வசமாக ஏமாற்றிய சீன் பென்னை அடையாளம் காணும் காட்சி என்று அல் பசினோ நடிப்பில் மிளிர்கிறார். தமிழில் இது போன்ற படங்கள் அவ்வப்போது வருகின்றன. தெளிவான திரைக்கதை இல்லாமல் காணாமல் போகின்றன. சமீபத்தில் நான் பார்த்த ஆரண்ய காண்டம் இந்த வரிசையில் தமிழின் சிறந்த படம் என்பேன்.

Sunday, June 19, 2011

அவன் இவன்: ஏக வசனம்


சேது படத்தின் வெற்றிக்கு பிறகு சிவாஜி- அஜித்தை வைத்து எடுக்கப்படவிருந்து பின்னர் சூர்யா-ராஜ்கிரண் நடித்த நந்தா திரைப்படத்தின் திரைக்கதை போதும் பாலாவின் திறமையை பறைசாற்ற. படம் வந்த சமகாலத்தில் வெளிவந்த - தமிழ் அறிவுஜீவி இயக்குனர் மணிரத்னம் எடுத்த- கன்னத்தில் முத்தமிட்டால் போலவே அரைகுறை புரிதலுடன் இலங்கை தமிழர் வாழ்வை ஒரு துணைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட படம். தான் நேசிக்கும்(!) மனிதரின் இறப்பு தவிர உலகத்தில் வேறெந்த விஷயத்தாலும் பாதிக்கப்படாத தன்மையுடைய நாயகர்களை தமிழ் சினமாவில் உருவாக்கிய பெருமை பாலாவுக்கு தான் சேரும். அவரது பாதிப்பில் படம் எடுத்த பலர் இதை தான் தம் கதை நாயகர்களின் முக்கிய அடையாளமாக முன்வைத்தார்கள்.சூர்யா முதன்முதலாக 'நடித்த' அந்த படம் பாலாவின் வழக்கமான க்ளிஷேக்களை ஆரம்பித்து வைத்தது .தன் நெருங்கிய நண்பனை கூட அற்பமான விஷயங்களுக்கு முரட்டு தனமாக அடிப்பது; ,பெண்களை தலையில் ஓங்கி அடிப்பது; அடித்த கையோடு அடுத்த நொடியே தன் காதலியை நினைத்து உருகுவது (ஊரே கொண்டாடிய மைனா திரைப்படத்தில் ஒரு பெண்ணை தலையில் ஓங்கி ஓங்கி அடித்துவிட்டு உடனே ஒரு ரொமான்சு லுக்கு விடுவார் அந்த தலைசீவாத நாயகன்) ,பெண்களை தலையில் ஓங்கி அடிப்பது, ஆண் என்ற ஒரு தகுதி இருந்தாலே எந்த பெண்ணையும் 'காதலிக்கலாம்' என்ற தற்போதைய தமிழ் சினிமா (தலை) விதியை ஆரம்பித்து வைத்த காட்சிகள் என்று பாலா செய்த தவறுகள் கணக்கில் அடங்காதவை.

பிதாமகனில் கிட்டத்தட்ட ஓநாய் மனிதன் போல் பிணம் எரிப்பவராக நடித்த விக்ரம் பாத்திரத்தை சித்தரித்திருப்பார். ஒரு பாடல் காட்சியில் அவருக்கு சவரம் செய்ய வருபவரின் கையில் கத்தி பார்த்து திடுக்கிட்டு அவரை தள்ளி விட்டு ஓடுவார்.சுடுகாட்டிலேயே இருக்கும் மனிதனுக்கு சவரம் செய்வது பற்றி தெரியாதா என்ன?பாலாவிடம் அப்படியான ஒரு கதாபாத்திரம் நிஜத்தில் இருக்க முடியுமா என்று கேட்டபோது அது எனது கற்பனை மட்டுமே என்றார். அதே போல் கஞ்சா கேசில் உள்ளே போகும் விக்ரமை பொட்டி கேசில் ஜாமீன் வாங்குவது போல் வெளிக்கொண்டு வருவது; நான் கடவுள் படத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அகோரி சாதுவை கடவுள் ரேஞ்சுக்கு ஒரு நீதிபதி நடத்துவார். போலிஸ் அவர் கக்கா போய் கழுவும் வரை காத்திருக்கும்.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் அவர் சித்தரித்த விளிம்பு நிலை மனிதர்களின் இருட்டு உலகம் 'நான் கடவுளில்' ஓரளவுக்கு வெளிப்பட்டது எனினும், சம்பந்தமே இல்லாமல் அகோரி (அதிலும் சித்தர் பாடல் சொல்லும் அகோரி!) கதாபத்திரத்தை பிச்சைக்காரர்களின் வாழ்வோடு எந்த இடத்தில சேர்ப்பது என்பதில் மூன்றரை வருடம் குழம்பி ஒரு படமாய் தந்து நம்மை குழப்பினார்.பிச்சைக்காரர்களின் சோக வாழ்வில் பங்கெடுத்து அவர்களை காப்பாற்ற எதற்கு காசி போய் ஒரு காவியை (இதில் கருப்பு!) கூட்டி வரவேண்டும்? அதே ஊரில் இருக்கும் உடல் வலிவுள்ள மனிதர்கள் அல்லது மனம் உள்ள மனிதர்கள் போதாதா? ஒருவரை கொன்று தான் அவரை 'காப்பாற்ற' முடியும் என்ற புது தத்துவத்தை சொன்ன அந்த படம் பாலாவிடம் ஸ்டாக் தீர்ந்து போனதை அப்பட்டமாக சொன்னது. அதற்கும் தேசிய விருது கிடைத்தவுடன் பாலாவுக்கு அதீத நம்பிக்கை வந்து விட்டது போலும். அதன் விளைவு தான் அவன் இவன்.

ஒரு ஜமீந்தாருக்கு பாசமிகு அடிமையாக இருக்கும் கிராமம். திருட்டு பிராதன தொழில் என்று வாழும் அம்மக்களோடு கொஞ்சி குலவும் அந்த ஜமீந்தார் அடிக்கும் கூத்துகள் ஆபாசத்தின் உச்சம். முதல் காட்சியில் ஜமீந்தாருக்கு திருநங்கைகள் அலங்காரம் செய்து கூட்டி வருகின்றனர் . 'விலாவை சிறப்பிக்க' பெண்கள் மட்டுமே பங்கு பெறும் (ஆரம்பத்தில் பெண்கள் மட்டும் தான் பார்க்கவே முடிகின்ற நடனம் என்று நினைத்தேன்!) நடனம். "நாங்கள் மட்டும் தான் கலந்துக்குவோம்" என்று அந்த பெண்கள் பற்களை தேவையில்லாமல் கடித்துக்கொண்டு மிரட்டுவது எதற்கு என்று தெரியவில்லை. எரிச்சல் அப்போதே தொடங்கி விட்டது. பழைய எம்ஜியார் படங்களில் பொதுவாக எல்லா தமிழ் நாயகர்களின் படங்களிலும் பெண்கள் ஏதோ காரணத்துக்காக ஆண் வேஷத்தில் வருவார்கள். நம் நாயகர்கள் அவர்களை பெண்கள் என்று அறியாமல் (!?) தொட்டு தொட்டு பேசுவார்கள். கிட்டத்தட்ட ஓரின சேர்க்கை விருப்பம் உள்ளவர்கள் போல் தேவையில்லாமல் அந்த ஆணின் (!) அந்தரங்க அங்கங்கள் வரை தொட முயல அந்த பெண்கள் (!) அசடு வழிய விழிப்பார்கள். அதே போல் இந்த பெண்கள் கூட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு அந்த பெண்கள் ஆடும் அதே ஸ்டெப் போட்டு ஆடுகிறார். அவரை கடைசி வரை பெண் என்று நம்பி 'இந்த குத்து குத்துறாளே...யாருடி இவ ?" என பொருமுகிறார்கள். அவரோ வெறி வந்து ஆடும் பேய் போல் இருக்கிறார். கடைசியில் அவர் தலைமுடி கீழே விழும்போது தான் அவர் பெண்ணென்றே மற்ற பெண்கள் கண்டுபிடிக்கிறார்களாம்! எந்த காலத்தில் இருக்கிறீர்கள் பாலா? பாடல் காட்சிஎன்றோ நகைச்சுவை என்றோ இதை விட்டு விட முடியாது. பெரிய இயக்குனர் என்ற பேர் பெற்ற பிறகு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த அரிய காட்சியை வடிவமைத்தீர்கள்? முதல் கோணல் என்பது போல் படம் முழுவதும் அபத்தம். நகைச்சுவை என்ற பெயரில் மூன்றாம் தர கூத்துகள்.

விளிம்பு நிலை மனிதர்கள் தங்கள் வாழ்வியல் கஷ்டங்களை நகைச்சுவை உணர்வுடன் கடக்க முயல்வார்கள் என்பது உண்மை தான். அதற்காக தம் வாழ்வில் எந்த விஷயத்தையும் நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு நகர்வார்களா என்ன? விஷால் - ஆர்யா இருவரின் அம்மாக்கள் செய்யும் அட்டூழியங்கள் பேசும் வசனங்கள் ஆபாசம் என்றால் அவர்களை டி போட்டு கூப்பிடும் மகன்கள் ஆபாசத்தின் உச்சம்.இயல்பில் இதை விட கேவலமாக பேசிக்கொள்ளும் விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாலா காட்டுவது வெற்று ஆபாசம். "குஞ்சுமணியை புடிச்சிக்கிட்டு ஒண்ணுக்கு கூட சரியா போக தெரியாத பயல்" என்று தன் சக்களத்தியின் மகனை ஒரு பெண் சொல்கிறாளாம். அதுவும் பீடி புகை வாயிடுக்கில் கசிய. இது தான் ஒரு படைப்பாளியின் படைப்பு சுதந்திரமா? கதைக்கு அது எந்த விதத்தில் தான் பயன்படுகிறது? "இப்பெல்லாம் ராத்திரி தண்ணியடிக்காம தூக்கம் வர மாட்டேங்குது" என்று தன் மகனிடம் புலம்பும் தாய் தான் தமிழ் சினிமா தற்போது முன்வைக்கும் தாய்-முகம்.

கரகாட்டக்காரன் என்றொரு மகத்தான வெற்றிப்படம் வந்தது. படத்தின் வெற்றிக்கு முப்பது சதவீதம் இசை,முப்பது சதவீதம் நகைச்சுவை காரணம் என்றால் மீதி நாற்பது சதவீதம் கதை-முக்கியமாக திரைக்கதை இருந்தது. பாலாவின் படங்களில் திரைக்கதை என்ற ஒரு அம்சமே கிடையாது. பிதாமகனில் சிம்ரன் கடத்தல் நடனம் என்ற படத்தின் கருவுக்கு துளியும் சம்பந்தமில்லாமல் ஒரு நீண்ட காட்சி. அதே போல் கமல் நடித்த 'அன்பே சிவம்' படத்தின் காட்சிகள் ஒரு அளவை மீறி அந்த படத்தில் காட்டப்படும். எல்லாம் நேரத்தை கடத்த தானே ஒழிய வேறெந்த 'வித்தியாச கண்ணோட்டமும்' இல்லை. நான் கடவுளில் அதே போல் ஆர்யாவின் கதாபாத்திரம் பிச்சைக்காரர்களின் வாழ்வோடு எப்படி பொருந்துகிறது என்ற கவலை சிறிதும் இல்லாமல், மிக சில வினாடிகளே காட்டப்பட வேண்டிய காவல் நிலைய நடன காட்சி பல ந்மிடங்களுக்கு நீள்கிறது . அதில் எந்த சம்பந்தமும் இல்லாமல் நடனமாடும் திருநங்கை ஒருவர் பயத்தில் சிறுநீர் கழிக்கும் காட்சி. அருவெறுப்பின் உச்சம்.

சினிமாவுக்காக என்று வைத்துக்கொண்டாலும் காவல்துறையை இத்தனை காமெடி துறையாக காட்டுவது எந்த வகை கண்ணோட்டம் என்று தெரியவில்லை. பல இடங்களில் எரிச்சல் தான் வருகிறது. போலீஸ் அதிகாரி குற்றவாளிகளிடம் கெஞ்சுவதும் குற்றவாளிகளோ உலகில் எந்த விஷயத்துக்கும் பயப்படாதவகள் போல் அவர்களை நக்கல் செய்து வெறுப்பேற்றுவதுமான காட்சிகளை நந்தா படத்திலிருந்து இந்த படம் வரை ஒரு கொள்கையாக கடைப்பிடித்தே வைக்கிறார் என்று நினைக்கிறேன். அதே போல் ஒரு பிராமண ஜட்ஜ். அவரை ஏமாற்றி தங்களுக்குள் அதை நகைச்சுவையாய் பேசிக்கொள்ளும் குற்றவாளிகள் என்று க்ளிஷேக்களின் தொகுப்பு. ஒரு காட்சியில் 'தேவையான' இடத்தில சதை குறைவான கதாநாயகி 'தான் அடித்துபிடித்து கோட்டாவில் இந்த வேலைக்கு சேர்ந்ததாக சொல்கிறார்'. என்ன தான் சொல் வருகிறீர்கள் பாலா? சத்தியமாக சாதிப்படி நிலைகளை கிண்டல் செய்யும் நோக்கு தங்களிடம் இருக்கவே முடியாது என்பது தெளிவு. அப்படி இருக்க இது போன்ற காட்சிகள், வசனங்கள் படத்தின் திரைக்கதைக்கு எந்த விதத்தில் தான் துணை புரிகின்றன?

அதே போல் பெண்களை மிரட்டி அவர்களிடம் பணம் நகையை பிடுங்கி அந்த பெண்ணை குட்டிக்கரணம் வேறு போட செய்கிறார் ஆர்யா. அந்த பெண்ணின் தலையில் பலமுறை ஓங்கி அடிக்கிறார். இருபது வருடங்களுக்கு முன் இப்படியெல்லாம் ஒருவன் பெண்களிடம் நடந்துகொண்டால் தமிழ் சினிமாவில் அவன் கொடூர வில்லன். இப்போது இப்படி நடந்துகொண்டால் தான் அவன் ஹீரோ. என்ன ஒரு பரிணாம வளர்ச்சி பாருங்கள். அதற்கும் திரையரங்கில் கைதட்டல், சிரிப்பு. தான் சொல்வதையெல்லாம் பயந்து கேட்டு அதன்படி நடந்து கொண்டால் நாயகனுக்கு நாயகி மேல் காதல் வேறு பிறக்கிறது.அதாவது 'பாறையிலும் நீர்க் கசிகிறதாம்'! அந்த பெண்ணும் இவரது 'குறும்புகளை' ரசித்து அவர் மீது மையல் கொள்கிறாராம். பெண்களை இவ்வளவு இழிவாக சித்தரிக்க பாலாவால் மட்டுமே முடியும். அந்த பெண் படிக்கும் டுட்டோரியல் காலேஜுக்கு சென்றும் அங்கும் பல பெண்களின் தலையில் தட்டி விளையாடுகிறார் ஆர்யா. நாம் இதை நகைச்சுவையாய் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஏனெனில் என்ன தான் முரடன் என்றாலும் நல்ல மனசுக்காரன் அல்லவா நாயகன்? பிதாமகனில் தன்னை சிறையில் சந்திக்கவரும் லைலாவிடம் 'பாவாடையை கழட்டி விடுவேன்' என்று சூர்யா மிரட்டியதும் அவருக்கு சூர்யா மீது வெட்கம் கலந்த காதல் பிறக்கிறது. இந்த படத்திலும் அந்த 'கோட்டா பெண் போலீசிடம்' அவர் அணிந்திருக்கும் பேண்டின் ஜிப் பற்றி அடிக்கடி விஷால் கேட்க வெட்கம் தாளாமல் அந்த பெண் இந்த மாண்புமிகு திருடரை காதலிக்க தொடங்குகிறார். எப்பேர்பட்ட புரட்சி பாருங்கள்.

அதே போல் எந்த வாழ்வியல் ஒழுக்கங்களிலும் தேறாத விஷால் , ஒரு கிறிஸ்துவ பெண்ணிடம் நகையை திருடிக்கொண்டு வர, அவரிடம் 'விசாரணை' செய்யும் அந்த பெண் போலீஸ் அந்த கிறிஸ்துவ பெண் ஒழுக்கம் தவறியவள் என்று சொல்லி 'அந்த நாத்தம் புடிச்சவளோட நகை நமக்கெதுக்கு' என்று கேட்கிறாள். தன் அம்மாக்களின் ஒழுக்கம் பற்றி நன்கு தெரிந்த விஷால் 'ஆமாமா அவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாலேயே நிறைய பேரை கரெக்ட் பண்ணியவள்' என்கிறார். இந்த காட்சிக்கும் வசனத்துக்கும் என்ன அர்த்தம் திருவாளர்கள் பாலா-எஸ்.ரா அவர்களே? வேற்று மதத்தை சேர்ந்தவள் செய்யும் செயல்கள் அசிங்கம். குடித்துவிட்டு கெட்ட வார்த்தை பேசி மகனுடனே ஆபாச நடனம் ஆடும் இந்து (அவர்கள் தலித் என்ற போர்வையில் காட்டப்பட்டிருந்தாலும்) பெண்கள் உத்தமமானவர்கள் என்று சொல்கிறீர்களா நீங்கள் இருவரும்?

கிடைக்கும் இரண்டரை மணி நேரத்தில் முக்கால் பகுதியை இப்படி வீணாகவும் விஷமாகவும் கழித்து விட்டு படம் முடிய அரை மணிநேரம் இருக்குபோது தான் 'கதைக்கே' வருகிறார் பாலா. அடிமாட்டு விற்பனை செய்யும் ஆர்.கே தான் வில்லன். பாருங்கள் கார்ப்பரேட் கனவான்கள், நீதி துறை கறுப்பாடுகள் செய்யும் அத்துமீறல்கள் எல்லாம் கணக்கில்லை.வாழ்வின் அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் வில்லன். வில்லன்களை வித்தியாசமாக கட்ட வேண்டும் என்ற பெரும் முனைப்பு தான் இந்த கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருக்க வேண்டும். இத்தனைக்கும் அவர் இந்த உத்தம கூட்டாளிகளிடமோ ஊர்க்காரர்கள் யாரிடமோ எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருப்பவர். ஆனால் அடிமாடுகளை மாட்டுக்கறி பிரதான உணவாக விற்கப்படும் கேரளாவுக்கு 'கடத்தும்' கொடூர வில்லன்.(சட்ட விரோதமாக என்று பல முறை அழுத்தி சொல்லி (அ)நியாயம் வேறு கற்பிக்கிறார்கள்). நம் ஜமீன் தன் சமஸ்தானத்தில் இப்படி ஒரு கெட்ட காரியமா என்று கொதித்து ஜனநாயத்தின் தற்போதைய ஒரே தூணான டி.வி. மீடியாக்கள், ப்ளூ க்ராஸ் சேவகர்கள் போன்றோரை அந்த அடிமாட்டு பண்ணைக்கு கூட்டி வந்து சமூகத்துக்கு இந்த கொடூர செயலை எக்ஸ்போஸ் செய்கிறாராம். அந்த காட்சியின் பின்னணி இசையின் சோகம் நிச்சயம் வில்லன் என்று இவர்கள் காட்டும் ஆர்.கேவுக்கானது என்றே தோன்றியது. சொல்ல வார்த்தைகள் ஏதுமின்றி வெறித்து பார்க்கும் அவரை காட்டிக்கொடுத்த சந்தோஷத்தில் இவர்கள் வெற்றியுடன் வெளியேறுகிறார்கள்.

பரம்பரை பரம்பரையாய் ஆண்டானாக இருந்த ஜமீன் இப்படி செய்வதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் குற்ற பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஆர்யா-விஷால் சகோதரர்கள் ஊழலுடன் படுத்து ஒழுங்கீனத்தில் திளைத்து வளர்ந்த கும்பல் அன்னா ஹசாரே கும்பலுடன் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் உத்தமத்துடன் - தம்மை விட உத்தமமான செயல் செய்யும் வில்லனை காட்டிக்கொடுக்க துடிப்புடன் துள்ளி வருகிறார்கள். ஒரு முறை தன் வெளி நாட்டு நண்பர்கள் முன்னிலையில் வெற்று ஜம்பம் அடிக்க காட்டிலாகா அதிகாரி ஒருவரிடம் காட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று அதிகாரத்துடன் சொல்ல அவர் ஹைனசின் அருமை தெரியாமல் - சட்டத்துக்கு புறம்பாக யாரையும் காட்டுக்குள்ளே அனுப்ப மாட்டேன் என்று மறுக்கிறார். உடனே உத்தம சிகரமான நம் ஜமீன் தன் அடியாட்கள் விஷால்-ஆர்யாவை ஏவி அந்த அதிகாரியை அடித்து துவைப்பதோடு கதைக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தமான மரங்களை விஷால் கடத்தியது அறிந்தும் மௌனம் காக்கிறார். (இந்த காட்சி ஒரு மகா ஓட்டை என்பதும் படத்தில் அதை பற்றி வேறு யாருமே பேசவில்லை என்பதும் வேறு விஷயம்!)

இத்தனை உத்தமமான கும்பல் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் ஒரு தொழிலை செய்யும் ஒருவனை சிறைக்கு அனுப்புகிறது. பிறகு பழிவாங்குவானா மாட்டானா? ஆனால் அதிலும் தனது கொடூர எண்ணங்களை பதிவு செய்கிறார், பாலா. ஹைனசை வீட்டில் இருந்து கடத்திக்கொண்டு வந்து நிர்வாணமாக்கி சவுக்கால் அடித்து கொல்கிறார் ஆர்.கே. பின்பு அத்தனை பெரிய உருவமுள்ள அந்த உடலை வேலையற்று உயர்ந்த மரத்தில் தொங்கவிட்டு வேறு போகிறார்களாம். கோபத்தில் ஒருவன் கொலை செய்வான் என்றே காட்டினாலும் இப்படி ஒரு செயலை அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் செய்வானா? அதன் தேவை தான் என்ன அவனுக்கு? சத்தம்போடாமல் காரியத்தை முடித்து உடலை மறைத்திருக்க மாட்டனா என்ன? காட்சிகளை விதவிதமாக சிந்தித்து வைக்கலாம் என்ற எண்ணம் இன்றி இது போன்ற அதிர்ச்சி தரும் கொடூரங்களை மட்டும் ரூம் போட்டு யோசித்து வைப்பார் போலும் பாலா. நான் கடவுளில் நாயகனின் பராக்கிரமத்தை சொல்லும் 'ஓம் சிவோகம்' பாடலில் ஒருவனை அடித்து கீழே தள்ளி அவன் மேல் குதித்து சம்மணமிட்டு அமரும் ஆர்யா, கழிவறையில் ஒருவனின் ஆண் குறியை அறுத்து கொலை செய்யும் சூர்யா(நந்தா),தன்னால் கடுமையாக தாக்கப்பட்டும் சிறிது உயிர் மிச்சமிருக்கும் வில்லனின் குரல்வளையை கடித்து குதறும் விக்ரம்(பிதாமகன்) என்று பாலா காட்டும் உக்கிர காட்சிகள் உண்மையில் வக்கிரமானவை. வெறும் அதிர்ச்சி மதிப்பு தருபவை ; கதைக்கு எந்த விதத்திலும் அவசியமில்லாதவை. பிறகு எப்படி நாம் மற்ற இயக்குனர்கள் மத்தியில் தனித்து அறியப்பட முடியும் என்ற தாகம் ஒரு வேளை காரணமாய் இருக்கலாம்.

அதே போல் விஷாலின் முரட்டு தாக்குதலுக்கு ஆளாகி வலி தாளாமல் தன்னை கொன்று விட சொல்லி கதறும் ஆர்.கேயை இந்த சகோதரர்கள் வித்தியாசமாய் கொன்று பழி தீர்க்கிறார்களாம். இந்த கொடூரங்களுக்கு பின் அழுதுகொண்டே சில்-அவுட் ஷாட்டில் நாயகர்கள் நடந்து போனால் நாம் எழுந்து நின்று கைதட்டுவோம் என்று நினைத்து விட்டார் போலும் பாலா. இதில் விஷாலுக்கு பெண்போன்ற நளினம், மாறு கண் போன்ற அவசியமற்ற அலட்டல்கள் வேறு. விஷாலுக்கு விருது நிச்சயம் என்று பத்திரிக்கைகள் புகழாரம் வேறு செய்யும். தனுஷ் போன்ற மகா நடிகர்களே தேசிய விருது வாங்கும்போது விஷாலுக்கு என்ன குறைச்சல்? பல இடங்களில் ஆபாசமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கும் வசனங்களை எழுத 'நெடுங்குருதி' போன்ற நாவல்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் தேவையா? அவரும் சினிமாவுக்கு வந்து எந்த சாதனையும் இது வரை செய்யவில்லை. சண்டைக்கோழி, உன்னாலே உன்னாலே போன்ற கமர்ஷியல் படங்களே தேவலாம் என்றிருக்கிறது.

இது போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தவோ நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவோ கிஞ்சித்தேனும் உதவப்போவதில்லை. மாறாக மேலும் மேலும் வன்முறையை,ஆதிக்க வெறி,சாதிவெறியை மட்டுமல்லாமல் கொலைவெறியையும் தூண்டும் இந்த படங்கள் ஒரு வேளை வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ் சினிமா இனி என்ன ஆகும் என்ற கவலை மட்டும் மிஞ்சுகிறது.

Saturday, May 28, 2011

Friday, May 27, 2011

வார்த்தைகளில் மிளிரும் வண்ணங்கள்: ஜீவானந்தன்


தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நாள். செறந்த நடிகர் விருதை மிகப்பெரும் நடிகர் திலகமான தனுஷுக்கு வழங்கி பேரதிர்ச்சி கொடுத்தது தேசிய விருது தேர்வுக்குழு . என்ன நிர்பந்தமோ முந்தைய ஒப்பந்தமோ தெரியவில்லை!!! திரைக்கதை என்றே பார்த்தாலும் மிக சுமாரான படமான ஆடுகளத்துக்கு ஆறு விருதுகள் என்று அபத்த தேர்வுகள் ஆத்திரத்தை விட ஆச்சர்யத்தை தான் தந்து கொண்டிருந்தன. திடீரென்று முகநூல் நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி கிடைத்தது. ஓவியரும் எழுத்தாளருமான ஜீவானந்தம் எழுதிய 'திரை சீலை' என்ற புத்தகத்துக்கு சினிமா பற்றிய சிறந்த புத்தகத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிழ்ச்சிக்கு காரணம் எப்போதாவது மலரும் அரிய தருணம் போல் உண்மையில் தகுதியானவருக்கு அந்த விருது கிடைத்திருப்பது. 'ரசனை' இதழ்களில் சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அந்த புத்தகம்.

ஜீவானந்தம் என் ஓவிய, எழுத்துலக வளர்ச்சியில் மிக பெரிய ஆதர்சமாக இருப்பவர். என்னை போன்ற ஓவியம், இலக்கியம் ஆர்வம் கொண்ட எத்தனையோ பேருக்கு பெரும் வழிகாட்டியாக இருப்பவர். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான மணிகண்டன் இவரது சகோதரர். ஜீவாவின் மகனான ஆனந்தும் ஒரு ஒளிப்பதிவாளர் தான். மிக சிறந்த ஓவியரான ஜீவாவின் சினிமா அறிவு வெறும் ரசனை சார்ந்தது மட்டும் அல்ல. அது சுவாசம் போல் அவருக்கு இயல்பிலேயே இருப்பது. கோவை நகரின் பிரசித்தி பெற்ற ஓவியரான ஜீவாவின் தனித்தன்மை மிக்க சினிமா பேனர்கள் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதையல். வெறுமே நாயகன் நாயகிகளை பிரதானபடுத்தாமல் படத்தின் முக்கிய காட்சிகளை இயக்குனர்களை தன் கற்பனை கலந்து பிரமிக்கத்தக்க ஓவியமாய் படைப்பவர். கோவை நகரின் பல ஓவியர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர்.

அவருடனான என் நட்புக்கு காரணம் இளையராஜாவின் இசை தான். சில வருடங்களுக்கு முன் ஒரு இணையத்தில் நான் தத்துபித்தென்று ராஜா பற்றி எழுதிய பதிவுக்கு பிறகு அவரது அறிமுகம் கிடைத்தது.ராஜா மட்டும் அல்ல பல சிறந்த இசைக்கலைஞர்களை ஆராதிப்பவர். முக்கிய ஓவியர் (பல இலக்கிய படைப்புகளுக்கு தன் ஓவியங்கள் மூலம் உயிரூட்டியவர்) எண்பதுகளிலேயே பத்திரிக்கைகளில் சினிமா விமர்சனம் எழுதியவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாய் பழகுபவர். திறமைசாலிகள் பலரிடம் இல்லாத குணம் அது. ஒரு சுவாரசியமான விஷயம். அவர் பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழை பாடமாக படிக்காதவர். அவரது கட்டுரைகளை வாசித்தவர்களுக்கு இது நிச்சயம் ஆச்சர்யமாய் தான் இருக்கும். சரளமான, நேரடியான சந்திப்புகளில் பகிரப்படும் தொனியில் அதே சமயத்தில் உள்ளார்ந்ததாகவும் அமையும் ஜீவாவின் எழுத்து.

முகநூலில் அவரது பல பதிவுகள் கருத்துகள் ஆராதிக்கப்படுபவையாயும் விவாதத்துக்கு உரியவையாயும் இருப்பவை. எனினும் எந்த காலத்திலும் எதிராளி மனம் நோகும்படி பேசியதே இல்லை அவர். நானெல்லாம் 'கருத்து மோதல்' செய்கிறேன் பேர்வழி என்று என் ஆதர்சங்கள் பலரிடம் சற்று அதிகப்படியாய் பேசி புண்படுத்தி இருக்கிறேன். ஜீவாவிடமே அப்படி சில விவாதங்களில் 'கருத்து சுதந்திரத்தோடு' பேசி இருக்கிறேன். அவர் சிறு புன்னகையுடன் " கருத்து மோதல் என்ற பெயரில் நண்பர்களை நான் காயப்படுத்துவதில்லை " என்பார். மேன்மக்கள் மேன்மக்கள் தானே!

ஜீவாவுக்கு கிடைத்த விருது பற்றி ஆங்கில தினசரிகளில், பத்திரிக்கைகளில், எழுத்தாளர்களின் இணைய தளங்களில் கட்டுரைகள் வெளியாகின்றன. சந்தோஷம் என்பது சாதாரண வார்த்தை. அதற்கு மேல் ஒரு வார்த்தை இருக்கும் எனில் அது என் எண்ணத்தின் பிரதிபலிப்பாக தான் இருக்கும்.
அவரது ஓவியங்களில் சில:



ஜீவாவின் வலைப்பூ
http://jeevartistjeeva.blogspot.com/

Saturday, May 14, 2011

தேர்தல் தரும் பாடம்..



ஜெ.க்கு கிடைத்த வெற்றி உண்மையில் எதிர்பார்த்தது தான் என்றாலும் உணர்ச்சி வேகத்தில் 'அந்த பக்கம்-இல்லேன்னா-இந்த பக்கம்' என்று மாற்றி மாற்றி குத்தும் வாக்களர்கள் இம்முறை அவர் பக்கம் சாய்ந்ததன் பலனை வெகு சீக்கிரத்தில் அனுபவிக்கவும் இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவராய் எந்த துரும்பையும் கிள்ளி போடாமல் 'மைனாரிட்டி தி.மு.க அரசு' என்று செயற்கை பணிவு குரலில் ஜெயா டிவியில் பேசியதோடு சரி. தமிழ் நாட்டுக்கு என்ன பிரச்சனை வந்தால் எனக்கென்ன என்று கொடநாட்டில் ஓய்வு எடுத்து கொண்டுதான் இது நாள் வரை இருந்தார், ஜெ. உண்மையில் மக்களை பற்றி கவலைப்படாத அரசை மட்டும் குறை சொல்லி பயனில்லை. அதற்கு சரியான முறையில் குரல் எழுப்பி தம் எதிர்ப்பை பதிவு செய்வதன் மூலம் ஆட்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வராத எதிர்க்கட்சி தலைவரையும் தான். ஈழப் பிரச்சனயில் காங்கிரசோடு சேர்ந்து தி.மு.க செய்த துரோகம் மன்னிக்க முடியாதது என்றால், "போர் என்றால் மக்கள் மடிய தான் செய்வார்கள்" என்று திருவாய் மலர்ந்த ஜெ. செய்ததும் துரோகம் தான்.

அதே போல் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியாமல் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்பது போன்ற தொனியிலேயே பேசி வருபவர்கள் அதன் உள்விவகாரங்களை கருத்தில் கொள்ளாமல் ராஜா மாட்டினாரா..அப்படி தான் வேண்டும். கனிமொழி கைதாவது எப்போது? போன்ற திண்ணை பேச்சுகளிலேயே திருப்தி அடைகின்றனர்.

மேலும் ஊழல் பெருச்சாளிகளை விரட்டுகிறோம் என்ற எண்ணத்தில் அதில் ஊறி திளைத்த மலைப்பாம்புகளை ஆதரிக்கின்றனர். சாதரணமாக பேசும் நம் மக்கள் "அவன் கொஞ்ச நாள் கொள்ளையடிச்சான் ..இப்போ இவனுங்க அடிச்சிட்டு போகட்டுமே "என்பார்கள். என்ன செய்வது நமக்கு இருக்கும் இரண்டு ஆப்ஷன்களில் எது தற்சமயம் சரியாய் இருக்கிறதோ அதற்கு போடுவோம் என்று சொல்வது தவிர்க்க முடியாததாய் ஆகி விட்டது. ஆனால் ஜெ.வின் ஆணவ போக்கை கடந்த காலங்களில் கவனித்தவர்கள் தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் இருந்தால் மட்டுமே ஜெ. தனது ஆணவ போக்கை (சற்று!) தளர்த்தி கொள்வார் என்கிறார்கள். இப்போதோ மெஜாரிட்டி. இனி என்னென்ன செய்வார் என்பதையெல்லாம் தமிழகம் பார்க்க தான் போகிறது.

அதே சமயத்தில் இது நாள் வரை ஒரு ராஜா போலவும் தனது வாரிசுகள் இளவரச-ரசிகள் போலவும் எண்ணிக்கொண்டு பல தவறுகள் செய்த கருணாநிதிக்கும் அவரது கட்சி (அதாவது குடும்பம்!) யினருக்கும் கிடைத்த சம்மட்டி அடி இது என்பதில் பேரு மகிழ்ச்சி. ஆங்கிலம் ஹிந்தி ரெண்டும் தெரியாத அழகிரியை மத்தியில் ஆட்சிக்கு கொண்டு வந்தது, ஈழ பிரச்னை உச்சகட்டத்தில் இருக்கும்போது டெல்லிக்கு வந்து வாரிசுகளுக்காக பதவி பேரம் நடத்தியது, இலவசங்கள் மூலம் புது கடன்களை ஏற்படுத்தியது, சினிமா உள்ளிட்ட எல்லா துறைகளையும் வளைத்து போட்டது ..போன்ற பட்டியலில் அடங்கா பாவங்களுக்கு கிடைத்த தண்டனையன்றி இது வேறு அல்ல. அதுவும் விஜயகாந்தின் கட்சியிடம் எதிர்க்கட்சி தலைமையை பறி கொடுத்தது அதன் உச்சகட்டம்.

மேலும் காங்கிரஸ் தமிழ் நாட்டில் தோற்றது என்றால் , என்ன என்று கூட கேட்க வேண்டியதில்லை. அது அப்படி தான். ஆனால் அறுபத்தி மூன்று சீட் கேட்க அவர்களுக்கு வந்த தைரியத்தின் பின்னணி ஜெ. டெல்லி வந்து சோனியாவை சந்திக்க்ம்போது தெரியவரும்.
நேற்று ஜெயா டி.வி.யில் ரபி பெர்னாட் சந்தோஷத்தில் குழைந்தபடி ஜெ,விடம் கேட்கிறார்.
"எப்போ டெல்லிக்கு போறீங்க?".ஜெ. சிரித்தபடி கேட்கிறார் "எதுக்கு?" கேட்டவருக்கும் கேட்க சொன்னவருக்கும் தெரியாதா எதற்கு என்று? அடுத்த அறிவிப்பு டெல்லியில் இருந்து வரும் என்று எதிர்பார்ப்போம்.

Saturday, April 30, 2011

நினைத்தாலே இனிக்கும்- அனுபவம்



சிறுவயதில் அறந்தாங்கி யில் நாங்கள் இருந்தபோது வீரமாகாளியம்மன் கோவில் தெப்ப திருவிழாவில் ஒவ்வொரு சமூகமும் மண்டகப்படி நடத்தும். ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இசைக்குழுக்கள் கச்சேரி நடக்கும். திண்டுக்கல் அங்கிங்கு போன்ற புகழ்பெற்ற இசைக்குழுக்கள் எங்கள் ஊர் இரவுகளை இசையால் நிரப்பி ததும்ப ததும்ப பாடல்களை காதுகளில் ஊற்றி அனுப்புவார்கள். ஒன்பதாம் வகுப்பு வரை அம்மாப்பா கூடவே சென்று தெப்பத்திருவிழாவையும் கோயில் முன்பாக நடக்கும் இசைக்கச்சேரிகளையும் பத்திரமாய் பார்த்துவிட்டு பாய்ஸ் ஹைஸ்கூல் கிரவுண்டு வழியாக வீடு திரும்புவோம். வரும்போது என் சகோதரிகள் மற்றும் பக்கத்துக்கு வீட்டு பெண்கள் கச்சேரியில் கேட்ட பாடல்களை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டு வருவார்கள். "தொட்டால் பூ மலரும் ." .பாட்டை இவங்க பாடி கேக்கும்போது இன்னும் இனிமையா இருந்திச்சில்லக்கா" எனும்போது நான் ஆவென்று கேட்டுக்கொண்டே வருவேன். பாடகர்களின் பெர்சனாலிட்டி பற்றி பெர்சனல் கமென்ட் பறக்கும். "அந்த கிர்தா வச்சவனுக்கு என்னம்மோ மோகன்னு நினைப்பு , மைக்கை அப்படி இப்படி சுத்தி சுத்தி பாடுறான்.." என்பாள் மேல் வீட்டு சாந்தி அக்கா. "என்னக்கா.." என்று ஆர்வமாய் கேட்டால் .."வாய் பாக்கதடா" என்று தலையில் செல்லக்கொட்டு ஒன்று விழும். தொல்லைக்காட்சி அவ்வளவு புழக்கத்துக்கு வராத காலம் அது. இசை கேட்க காதுகள் திறந்திருக்கும். மனதும்.

அந்த இசைக்கலைஞர்கள் பற்றிய நினைவு வீடு வரை தொடரும். நீலக்கலர் சட்டை போட்டு ஒரு பெரிய கீபோர்டை வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் இடையில் மேடையை விட்டு கீழிறங்கி கூட்டத்துக்கு நடுவே நின்று யாரோடோ பேசிக்கொண்டிருக்கும்போது எப்படியாவது அவர் கையை தொட்டு விட வேண்டும் என்று நினைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது. "மருதமலை மாமணியே" முருகையா பாடலை பாடுவதற்கென்று ஒரு பாடகர் உண்டு. அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. அதே போல் " சங்கீத ஜாதி முல்லை " பாடலுக்கு ஒருவர். அறந்தை கோட்டை வீதிகளில் ரவுடிகள் போல் திரியும் சிலரை அப்போது பார்த்திருக்கிறேன். பாடலில் உருகி கைதட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவர்கள் பாடலை ரசிக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அவர்களுக்குள் இப்படி ஒரு ரசனையா என்று வியப்பேன். எப்படியாவது பெரிய ஆளான பிறகு ஒரு மேடைப்பாடகனாக ஆக வேண்டும் என்று மனம் துடிக்கும். பள்ளி நாட்களில் விக்ரம் படத்தின் டைட்டில் பாடலான "விக்ரோம் ..விக்ரோம் " பாடலை அதன் பின்னணி இசை , ஜானகியின் ஹம்மிங் ஒன்று விடாமல் அச்சு அசலாக (!) பாடுவேன். "துடிக்குது புஜம்..டுகுடு டுகுடு டுடு டுடு " என்று பாடும்போது எனக்கும் கூட்டம் கைதட்டும்.

பின்னாளில் புதுக்கோட்டை இசைக்குழு ஒன்றில் பாட சந்தர்ப்பம் கிடைத்தது. காரைக்குடி பக்கம் ஒரு கிராம திருவிழாவில் எனது முதல் கச்சேரி. வருங்கால முதல்வர் விஜய காந்த் நடித்த "வானத்தை போல " படத்திலிருந்து " காதல் வெண்ணிலா " பாடலை அவ்வளவு பெரிய ஜனத்திரளுக்கு முன்னால் பாடினேன். நம்ப மாட்டீர்கள் நண்பர்களே..'விஜயகாந்த்' நற்பணி குழு ஒன்று நூறு ரூபாய் அன்பளிப்பு அனுப்பி ஒன்ஸ் மோர் பாட சொன்னார்கள். இசை மீதான காதலும் பாராட்டுக்கு ஏங்கும் சிறு மனதும் சுமந்து அலைந்த நாட்கள் அவை. முக்கியமாக நான் கிராம திருவிழா கச்சேரிகளை மிஸ் பண்ணவே மாட்டேன். ஒளிரும் அலங்கார விளக்குகளில் பளீரென்று மின்னும் கிராம தெருக்களில் உற்சாக முகங்களுடன் தென்படும் முகங்கள் தரும் பரவசம். அங்கு சென்றதும் ஊர் தலைகள் எங்களுக்கு தரும் அநியாய மரியாதை ஒரு புறம். ஊர் தலைவர் வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் மண்டபத்திலோ விருந்து நடக்கும். சுடச்சுட இட்லி வைத்து அதற்கு மேல் கறிக்குழம்பு ஊற்றுவார்கள். அந்த சுவை கிராமங்களில் அல்லாமல் வேறு எங்குமே கிடைக்காதது. அந்த சுவைக்கு சுழலும் நாவுக்காக என்றே நான் அந்த கச்சேரிகளுக்கு செல்வேன். ஓரிரண்டு பாடல்களும் , அவ்வபோது மெயின் சிங்கர் பாடும் போது மற்றவர்களுடன் இணைந்து " ஆ..ஆ.." என்றோ " லாலா " என்றோ ஆலாபனை ( கோரஸ் தான் :) பாடக்கிடைக்கும். அதுவரை மற்றவர்கள் பாடும்போது மேடையில் பின் வரிசை நாற்காலிகளில் அமர்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். தமக்கு விருப்பமான பாடல் பாடப்படும்போதும் பாடல் சிறப்பாக அமைந்து விடும்போதும் கண்கள் விரிய சிரித்து கைதட்டும் கிராம பெண்களின் அழகை பாட இனி மேல் தான் ஒருவர் பிறந்து வரவேண்டும்.
டெல்லி வந்த பின், அறை நண்பர் குமரன் தந்த ஊக்கத்தில் இங்குள்ள ஆர்கெஸ்ட்ரா குழுவில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடினேன். அது பற்றி ஒரு தனிப்பதிவே எழுதலாம். நான், வரதராஜன், குமரன் என்று எங்கள் அறையின் பிரத்யேக இசைக்குழு நடத்திய கச்சேரிகளுக்கு கணக்கே இல்லை. முனிர்காவின் ஒரு பகுதியை தூங்கவிடாமல் அடித்தோம் சில காலம்.



தமிழ் சினிமாவில் இசைக்குழுக்கள் பற்றி சரியான படம் இன்னும் வரவில்லை. முழுக்குழுவும் மேடையேறி ஒரே ஒரு பாடல் பாடிவிட்டு புறப்படுவதாக தான் எல்லா படங்களும் அமைகின்றன.இதற்காகவா அவ்வளவு கூட்டம் காத்திருக்கும். இடையில் கதாநாயகனோ- கியோ பாடலை மறந்து திணறினால் அவரது ஜோடி மீதிப்பாடலை கூட்டத்துக்கு நடுவில் இருந்து பாடிக்கொண்டே மேடை நோக்கி நடந்து வரும். இருக்கும் படங்களில் இது போன்ற அபத்தங்கள் ஏதுமில்லாமல் மிகுந்த முதிர்ச்சியான நகைச்சுவையுடன் அருமையான காதல் பயண அனுபவமாக இன்றும் நினைத்தால் இனிக்கும் படம் ஒன்றே ஒன்று தான். கமல், ரஜினி, ஜெயப்ரதா பின்னியெடுத்த படம். உண்மையில் இந்த பதிவு எழுதும்போது கே.பிக்கு பால்கே விருது அறிவிக்கப்படிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பாலச்சந்தர் படங்கள் மீது வெவ்வேறு கோணங்களில் விமர்சனம் வைக்க முடியும் என்றாலும், கதாபாத்திரங்களை அவர்களுக்குண்டான பிரத்யேக பிரச்னைகள், அவற்றை எதிர்கொள்ளும் தீவிரம் என திரையில் காட்டி தமிழ் திரையுலகில் தனித்த அடையாளங்களை அழுந்த பதித்தவர். எனக்கு அவரது நகைச்சுவை உணர்வு தான் மிகவும் பிடித்தது. நினைத்தாலே இனிக்கும் ஒரு உதாரணம்.

இளையராஜா ஒரு வேகம் கொண்ட தென்றலாய் தமிழ் திரை இசையுலகில் நுழைந்து ரசிகர்களை ஈர்த்துகொண்டிருந்தபோது தன் இருப்பை அழுத்தமாய் பதிவு செய்ய மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இந்த படம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. தன் நீண்டகால நண்பரின் இசையாற்றலை ரசிகர்களுக்கு காட்டவென்றே இந்த படத்தை எடுத்தார் போலும் கே.பி. டைட்டிலிலேயே எம்.எஸ்.வி மியூசிகல் என்று எழுதி இருப்பார். என்ன அருமையான இசை. என்ன ஒரு modernity! எனக்கு பாடல்களை கேட்கும்போது ராஜா-ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது' பாடல்களுக்கு மெல்லிசை மன்னரின் பதிலோ என்று தோன்றும். "ஒரே நாள் உனை நான்" - "பாரதி கண்ணம்மா", " நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா "- "ஆனந்த தாண்டவமோ" , "என்னடி மீனாட்சி" - "எங்கேயும் எப்போதும்". நண்பர்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். என்னளவில் நான் நினைத்தது அப்படி தான்.
படத்தின் இசை ராஜாவுக்கும் மக்களுக்கும் மன்னர் தந்த பதில் என்றே நினைக்க தோன்றுகிறது. அதே போல் ரஹ்மானுக்கு பதில் சொல்ல இன்னும் ராஜா மனதளவில் தயாராகவில்லை என்பது தான் என் எண்ணம்.

படத்துக்கு கதை-வசனம் சுஜாதா என்று ஞாபகம். ஒவ்வொரு பிரேமிலும் இளமை தெறிக்கும். கமல் தன் குழுவை அறிமுகப்படுத்தும்போது தொடங்கும் சிரிப்பு சூட்கேஸ் மேல் நின்று கமலாகர் ராவ் தன் உயர்ந்த மனைவியிடம் 'உத்தரவு' வாங்கும் காட்சி, ரஜினி இங்கிலீசு பேசி டபாய்க்கும் காட்சி என்று அமர்க்களமாய் இருக்கும். இப்போது பார்த்தாலும் அர்த்த்ம் உணர்ந்து சிரிக்க வைக்கும் காட்சிகள். இந்த படத்தின் மிக முக்கிய அம்சம், வெளிநாடு செல்லும் தமிழ் மனதின் வெளிப்பாடு. அந்த ஊர் ஆச்சர்யங்களை அனுபவித்தபடி சொந்த அறியாமைகளை நகைச்சுவையாக்கி ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்வதை அதன் இயல்பிலேயே படமாக்கி இருப்பார் கே.பி. கழிவறை வாசலில் ஆண்-பெண் படங்களின் வேறுபாடு புரியாமல் விழித்து தவித்து , ஒருவர் ஆண்களுக்கான கழிவறையில் நுழைவதை பார்த்து அவர் பின்னாலே ஓடும் காட்சி ஒரு உதாரணம்.

இலக்கிலாமல் பயணித்தாலும் ஜெயப்ரதாவின் மரணம் பற்றிய எண்ணத்தை சிம்பாலிக்காக காட்டும் காட்சிகளும் , அவரது நடிப்பும் படத்தின் நாடியை கைவிடாமல் கொண்டுசெல்லும் . மாற்றி மாற்றி அவர் செய்யும் குழப்படிகளை பொறுக்காமல் கமல் வெறுப்பில் பொருமுவதும் அருமை. ஒரு காட்சியில் கோபத்தில் முதலை குட்டையில் ஜெய்ப்ரதாவை தள்ளிவிடுவது போல் பயமுறுத்தும் காட்சியில் கமல் முகபாவனை அவ்வளவு நிஜமாய் இருக்கும். "நான் சொன்னால் ஹெலிகாப்டரில் இருந்து அப்படியே குதித்து நடிப்பார் " என்று ஜேம்ஸ் கேமரோன் ஆர்னால்டை பற்றி சொன்னதாய் படித்திருக்கிறேன். அது போல் ரஜினியும் பாலசந்தர் சொன்னார் என்பதற்காக "டேப்- சுந்தரியை" தேடும் காமெடி பாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருப்பார். துரு துருவென பேசி சிரிக்கும் ஜெயசுதா (தானே?) பாத்திரம் அருமை. அவரது கணவனாய் வந்து காரோட்டும் நபரின் முகத்தில் என்னவொரு முரண்நகை சிரிப்பு.

முன்பே சொன்னது போல் இது எம்.எஸ்.வி.யின் படம். எனவே சண்டைக்காட்சியில் கூட "டிஷ்யூம் டிஷ்யூம் " என்று ஒரு பாட்டு. ஆஹா. எஸ்.பி.பி தான் என்னமாய் பாடி இருப்பார் ஒவ்வொரு பாடலையும். என்ன ஒரு பாவம் குரலில். "நிழல் கண்டவன்" என்று கமலுக்கு பாடும்போதும் "ராஜாவை பார்க்காமல் ரோ......ஜா" (இடையில் ஒரு பிர்கா!) என்று ரஜினிக்கு பாடும்போதும் தான் என்னவொரு வெரைட்டி. இப்போதெல்லாம் ஒரே பாடலை போர்ஷன் போர்ஷனாக பத்து பேர் பாடுகிறார்கள். ரஹ்மான் செய்த புண்ணியங்களில் புதிய பாடகர்கள் அறிமுகம் ஒரு திறப்பு என்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தராமல் "பரிசோதனைகளை" மேற்கொண்டே இருப்பதால், எவரும் இங்கே நிலைக்கவில்லை. தொண்ணூறுகளின் இறுதி வரை நிறைய படங்கள் இசை அமைத்த தேவா தான் ரஹ்மான் அறிமுகப்படுத்தும் பாடகர்களை கப்பென்று பிடித்து வாய்ப்பு தருவார். ரஹ்மான் ஒரு பாடல் தந்தால் தேவா பத்து பாடல்களுக்கு வாய்ப்பு தருவார். இப்போது அதுவும் இல்லை. சமீபத்தில் விகடனில் மதன் பதில்களில் இந்த தலைமுறை பாடகர்கள் பற்றிய ஒரு பதில் நூற்றுக்கு நூறு உண்மை.

நினைத்தாலே இனிக்கும் நன்றாக ஓடவில்லை என்று சிலரும் இரண்டாவது ரிலீசில் படம் சக்கை போடு போட்டது என்று சிலரும் சொல்கிறார்கள். ஆனால் இன்றும் நான் சோர்வாக இருக்கும் சமயங்களில் பார்த்தால் இழந்த உற்சாகத்தை மீட்டுக்கொடுக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்ற வகையில் எப்போது நினைத்தாலும் இனிக்கும் படம், of course ! இசை அனுபவம். "யாதும் ஊரே" பாடலின் கம்பீர முகப்பு இசைக்கு சிங்கப்பூரின் கடற்கரையும் இயற்கை அழகும் காட்டப்படும் போது மனம் சிலிர்க்கும். அதே போல் ஜெயப்ரதாவின் மரணம் உறுதியாகி விட்ட பின்பு அவரும் கமலும் தாங்கமுடியாத துயரம் தோய்ந்த முகங்களோடு தாம் முன்பு சுற்றி பார்த்த இடங்களை பார்த்தபடி உறைந்து நிற்க பின்னணியில் எம்.எஸ்.வி. விரலசைவில் எஸ்.பி.பி.- ஜானகியம்மா பாடும் 'நினைத்தாலே இனிக்கும்' பாடலுக்கு ஒரு மாற்று உண்டா?

கே.பிக்கு வாழ்த்துகள்..

சொல்வனம்-வடக்குவாசல் ஓவியங்கள்..









Thursday, April 28, 2011

ஓவியங்கள்..!







ஓவியங்களின் மீது கிளிக் செய்யவும்..