Showing posts with label ஷாஜி. Show all posts
Showing posts with label ஷாஜி. Show all posts

Tuesday, September 21, 2010

ஷாஜி பற்றிய கட்டுரையும் ,ஜெயமோகனின் எதிர்வினையும்



இசை கலைஞர்கள் பற்றி எழுதுபவர் என்ற வகையில் தமிழில் வெளிவந்த கட்டுரைகளில் வெகு ஜன பரப்பை தாண்டி, அறிவுஜீவிகளையும் அடைந்து கட்டுரையின் தன்மையை சற்று மாற்றியவர் என்ற முறையிலும் அவரை நான் கடுமையாக தாக்கி எழுதிய கட்டுரைக்கு பின்னும் என்னுடன் அன்புடன் தொடர்பில் இருக்கும் மனதுக்கு நெருக்கமான மனிதர் என்ற வகையிலும் எனக்கு ஷாஜி மீது மதிப்பு உண்டு. அதே போல் எனது இலக்கிய, ஆன்மீக அறியாமையையும் பலவீனங்களையும் பெரிதுபடுத்தாமல் விவாதங்களில் கலந்துகொள்ள அனுமதித்த நான் மதிக்கும் எழுத்தாளர் என்பதாலும் ஜெயமோகன் மீது மிகுந்த மதிப்பு உண்டு. எனினும் அவர் எழுதும் சில விஷயங்களில் என்னால் உடன்பட முடிந்ததில்லை. அப்படியான விஷயங்களில் ஒன்றாக தான் சேதுபதி அருணாசலம் ஷாஜி பற்றி எழுதிய கட்டுரைக்கு அவர் செய்த எதிர்வினையும்.

இட்லிவடை வலைப்பூவில் நண்பர் சேதுபதி அருணாசலம் எழுதிய கட்டுரை மிக முக்கியமானது. இசை இலக்கிய உலகில் ஒரு அலையை ஏற்படுத்திய கட்டுரை அது. ஷாஜி எழுதும் கட்டுரைகளில் உள்ள அடிப்படை பிழைகள், இசை ரீதியான தவறுகளை இசை தெரிந்தவர் என்ற முறையில் சேதுபதி பாய்ண்ட் பை பாய்ண்ட் என்று சொல்வார்களே அப்படி பிரித்து கோர்த்து சில முக்கியமான கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார். குறிப்பாக பாடகர்கள் பாடும் முறையை பற்றி ஷாஜி எழுதும் வாக்கியங்களின் தவறுகளை சரியான குரலில் சொல்கிறார் சேது. தவிர ஒரு இசைகலைஞரின் சிறப்புகளை சொல்ல இன்னொருவரை கீழிறக்குவது ஒருவரின் தோல்விக்கு காரணமாக மற்றவர்களின் அபார வெற்றியை குறை சொல்வது என்ற தொனியில் ஷாஜி நிறைய கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அவற்றை கடுமையாக சாடுகிறார் சேதுபதி. இசை கற்றறியாத என் போன்றவர்களுக்கு இது ஒரு செய்தி என்றாலும் ஷாஜி செய்யும் தவறுகளை நுட்பமாக எடுத்து சொல்ல ஒருவர் இருப்பதே நல்ல விஷயம் தானே. விமர்சகனுக்கு ஒரு விமர்சகன் இருப்பதும் விமர்சனத்தை அதன் தரத்தில் இருந்து சற்று மேலே எடுத்து செல்ல உதவும் தானே. ஷாஜி இந்த கட்டுரையை படித்துவிட்டு எப்படி அதற்கு ரியாக்ட் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஷாஜியின் கட்டுரைகளை தன் எழுத்தின் மூலம் தமிழ்படுத்தி வாசகர்களை அவர் சென்றடைய மிக பெரும் ஊக்கியாக இருந்த ஜெயமோகன் இதற்கு ஒரு பதிவில் சற்று கடுமையாகவும் வேறொரு தொடர்பில்லாத பதிவில் சேதுபதியின் கட்டுரையை பற்றி சற்று கிண்டலாகவும் பேசுகிறார்.

ஷாஜியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தன் பேச்சினை தனது இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஜெ. இந்த பதிவில் முக்கியமாக சேது வைத்த எந்த கேள்விக்கும் சரியான பதிலை ஜெ சொல்லவில்லை. மாறாக பொதுப்படையாக இசை பற்றிய கட்டுரைகள் தமிழில் மிக அரிது என்பதால் ஷாஜியின் எழுத்துகளை இங்கு கொண்டுவந்ததாக சொல்கிறார். நம் இசைகலைஞர்கள் முதல் வெளிநாட்டு இசைகலைஞர்கள் வரை இது வரை எழுதப்படாதவர்கள் பற்றி முதலில் எழுதியவர் என்பதால் ஷாஜியின் கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது ஜெ.யின் கருத்து. எனக்கும் ஜெயமோகன் போலவே இசை தெரியாது. அவரைப்போல இசை மீது உணர்வுபூர்வமான காதல் கொண்ட சாதாரண ரசிகன் தான். ஆனால் இசை கலைஞர்கள் பற்றிய பார்வை ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமானது, விவரிக்க முடியாதது.

ஷாஜி எழுதிய சில கட்டுரைகள் இசை விமர்சனம் என்ற வகையை தாண்டி சில தனிப்பட்ட தாக்குதல்களை மையமாக கொண்டவை. இளையராஜா முதல் நௌஷத் வரை சாதனை புரிந்த கலைஞர்களின் சிறப்பியல்புகளை கூட விமர்சனம் என்ற பெயரில் ஷாஜி தாக்கி எழுதியது. சாதனைகள் செய்த ஹிந்தி மற்றும் மலையாள இசை அமைப்பாளர்களுள் அடங்கும் சலில் சௌத்திரியை தனது ஆதர்சம் என்பதால் மற்ற அனைவரையும் விட அதீதமாய் முன்னிறுத்தி மற்றவர்களின் சாதனைகளை வெறும் பிரம்மையோ என்று நாம் நினைக்க தூண்டும் வகையில் எழுதியது.. என்று தவறுகள் பல செய்தார். ராஜா பற்றி உயிர்மையில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு நான் கடுமையாக எதிர்வினை செய்தேன். அதை அடுத்து ஜெ. ராஜா பக்கம் இருக்கும் நியாயங்களையும் சில சொந்த காரணங்களுக்காக ராஜாவை ஷாஜி வெறுக்கிறார் அதனால் தான் இப்படி எழுதிகிறார் என்றும் தனது தளத்தில் விரிவாக பதிவும் செய்தார். அதன் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஷாஜி பற்றி சேது எழுதிய கட்டுரைக்கு நடுநிலைமையான stand எடுப்பார் ஜெ . என்று நான் எதிர்பார்த்த போது, நினைத்ததற்கு மாறாக் மொத்த தவறையும் சேதுபதி மற்றும் 'இந்த தளத்தில் இருந்து எழுதுபவர்கள்' மீது வைக்கிறார் ஜெ. காரணம் இந்த கட்டுரை வெறும் இளையராஜா சம்பத்தப்பட்ட ஒன்று என்ற மேம்போக்கான முடிவுக்கு ஜெ. வந்துவிட்டார்.
//
ஷாஜிக்கு வந்த எதிர்வினைகள் அதிகமும் அவர் ஒரு இசைகலைஞரை விமர்சிக்கும்போது அவரது ஆதரவாளர்களால் உருவாக்கப்படும் எதிர்ப்புகளாகவே இருந்தன, இருக்கின்றன. தர்க்கபூர்வமாக பதில்களைச் சொல்லி அவரை மறுத்திருந்தார்கள் என்றால் அது இந்த விவாதம் மேலும் விரிய வழிவகுத்து நம் இசையாராய்ச்சி சூழலை மேம்படுத்தியிருக்கும்
//
என்று ஜெ சொல்வதில் என்ன நியாயம் இருக்கும் என்று புரியவில்லை. அபத்தமாக எழுதினால் எதிர்வினைகள் வருவது சகஜம் தானே. தவிர பெரும் சாதனை புரிந்த தங்கள் ஆதர்சங்களை வெற்று கேள்விகள் மூலம் விமர்சனம் செய்யும் யாரையும் யாரும் விடுவத்ல்லை என்பதும் உண்மை தானே. தவிர அதற்கான பதிலை ஆணித்தரமாக நுடபமாக எழுதும் கட்டுரைகளை புறந்தள்ளி விட்டு இப்படி ஷாஜியை காப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. இசை கலைஞர்கள் பற்றி படித்து தெரிந்துகொள்ள ஏராளமான புத்தகங்களும் இணையமும் விரிந்து கிடக்கும்போது ஷாஜியின் வருகை ஏன் இப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்பதும் புரியாத புதிர். இதை விளக்க ஜெ. பரப்பிசை என்ற வார்த்தை மூலம் இசைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத விஷயங்களால் விஷயத்தை வேறு 'தளத்துக்கு' கொண்டு செல்ல முயல்கிறார், நடுவில் சிறு விமர்சனங்களை ஷாஜி மீது வைத்தபடி. இது ஒரு முக்கியமான பதிவு என்றால், சம்பந்தம் இல்லாத பதிவு ஒன்றில் சேது எழுதிய கட்டுரைக்கு கிண்டலான பதில் ஒன்றை தந்த போது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.
//
பீர் அருந்திக்கொண்டே மேலே பேசலாமே என்ற கருத்து ஷாஜியால் முன்வைக்கப்பட்டது. சொந்த செலவில் சூனியம் என நான் நினைத்துக்கொண்டு கவலையுடன் கணினியை பார்த்தேன். இன்னமும் பராமரிப்பு வேலை நிகழ்ந்துகொண்டே இருந்தது. தனசேகர் குடிமறுத்தார். ஷாஜியின் கட்டுரையில் சுதிசேரவில்லை என்று சேதுபதி அருணாச்சலம் சொல்வதைக்கேட்டுத்தான் ஷாஜி முற்படுகிறரா என்ற ஐயமும் எழுந்தது.//

என்று அவர் எழுதியது அவரது வழக்கமான உயர்தர நகைச்சுவை உணர்வுக்கு முற்றிலும் மாறானது. நானெல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது. சேது முனைப்புடன் அக்கறையுடன் எழுதிய கட்டுரையின் சாரத்தை புறக்கணிப்பதுடன் அதை மிக மோசமாக கிண்டல் செய்யும் தொனியுடன் எழுதப்பட்டது. இதை சேது படித்தாரா என்று தெரியவில்லை. இதற்கு அவரிடம் இருந்து என்ன எதிர்வினை வரும் என்று தெரியவில்லை.

ஷாஜியின் எழுத்துக்களில் சமூக அக்கறை இருக்கிறது, சில உள்ளார்ந்த விஷயங்களை அவர் சிறப்பாக தருகிறார் என்பதை தாண்டி அவரை இசை விமர்சகராக முன்வைப்பது சரியான விஷயமாக தெரியவில்லை. அவருக்கு இருக்கும் இசை அறிவின் அளவை பலர் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். சேதுபதி போல் சிலர் பல நாட்கள் பொறுமையாய் இருந்து பின் பொறுக்க முடியாமல் எதிர்வினை செய்ய தொடங்கி விட்டார்கள்.நான் எழுதியது கூட ராஜாவின் ஆளுமை , மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீது ஷாஜி வைத்த குற்றசாட்டுகளின் எதிர்வினையே தவிர , இசை ரீதியான கட்டுடைப்பு கிடையாது. ஆனால் சேது மிக சிறப்பாக, நுணுக்கமாக ஷாஜியின் இசை சார்ந்த தவறுகளை எடுத்து வைக்கிறார். ஆனால் இதையும் 'வழக்கமான இலக்கிய பூசல்' நடையில் அமைந்த துரதிருஷ்டமான கட்டுரை என்று ஜெ சொல்லி நிராகரிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. ஷாஜி முன்பு எழுதிய கட்டுரைக்கு ஜெ. எழுதிய பதிலுக்கும் இப்போதைய அவரது நிலைபாட்டிற்கும் மிக பெரிய வித்தியாசத்தை உணர்கிறேன்.

'சாதிய துவேஷங்களை நகைச்சுவை மூலம் கடப்பது' என்பது போல் இதையும் நகைச்சுவையாய் ஜெ. கடக்க முடியாது. நான் அறிந்த வரையில் அடிப்படையில் மிக நேர்மையான குணம் கொண்ட ஷாஜியும் , இதை 'புறக்கணித்து' வேறு தளத்துக்கு செல்ல முடியாது என்று நம்புகிறேன்.