Sunday, November 9, 2014

அட்டன்பரோ: வரலாற்றின் கலைஞன்

கலையின் பல வடிவங்கள் நம் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, கலைஞர்களின் இழப்பு ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகம். அதிலும் திரைக்கலைஞர்களின் மரணங்கள் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இறந்தார். தற்போது, ரிச்சர்டு அட்டன்பரோ. ராபின் வில்லியம்ஸைப் போலவே இவரும் இந்திய ரசிகர்களுக்கு நெருக்கமானவர். ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் டைனோசர்களின் உலகை மீண்டும் படைக்கும் தொழிலதிபராக வெண் தாடி, கைத்தடி என்று நட்புணர்வு கொண்ட தாத்தாவாக அவர் நடித்த பாத்திரம் சராசரி இந்திய ரசிகரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தியர்களுக்கும் அட்டன்பரோவுக்கும் இடையே அதையும் தாண்டி ஒரு வலுவான பிணைப்பு உண்டு. அவர் இயக்கிய ‘காந்தி’ திரைப்படம்தான் அது.

20 ஆண்டுகள் தவம்

“1960-களில் என்னிடம் ஒருவர் மகாத்மா காந்தியின் சுயசரிதையைக் கொடுத்து, ‘இவரைப் பற்றித் திரைப் படம் எடுப்பீர்களா?’ என்று கேட்டார். ‘இல்லை… எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையே’என்றேன். ‘நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல்கொடுப்பவர் அல்லவா? உங்களால் கண்டிப்பாக முடியும். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்’என்று அவர் வற்புறுத்தினார். அதன் பிறகுதான் அந்த மனிதரின் கதையைப் படித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அட்டன்பரோ. அந்தப் புத்தகம், அமெரிக்க எழுத்தாளரான லூயிஸ் பிஷர் எழுதிய ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை’. ‘காந்தி’ படத்தை எடுக்க அட்டன்பரோவைத் தூண்டியவர், மோதிலால் கோத்தாரி என்ற இந்தியர்.
ஒரு வரலாற்று நாயகரின் வாழ்க்கையை எப்படி திரைப்படமாக்குவது என்பதற்கு உதாரணம் அந்தப் படம். காந்தியின் கதையை இந்திய சுதந்திரம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையின் வலி என்று கலைபூர்வமாக ஆவணப் படுத்தியிருந்தார் அட்டன்பரோ. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் உழைத்ததன் பலன் அது.

படத்தை இயக்க வேண்டும் என்று முடிவுசெய்தவுடன், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனின் உதவியுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவையும், இந்திராவையும் சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார் அட்டன்பரோ. “நேருவின் தாக்கம், ஆலோசனை, நம்பிக்கை ஆகியவற்றின் துணை இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது” என்று படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அட்டன்பரோ. அத்துடன் மோதிலால் கோத்தாரி, மவுண்ட்பேட்டன், நேரு ஆகிய மூவருக்கும் இந்தப் படத்தை அவர் சமர்ப் பித்திருக்கிறார்.

‘காந்தி’ படத்துக்காக அட்டன்பரோ பட்ட சிரமங்கள் கணக்கற்றவை. அந்தப் படத்தைத் தயாரிக்க ஹாலிவுட்டில் யாரும் முன்வரவில்லை. “இடுப்பில் துண்டுத் துணியுடன் தடியை ஊன்றிச் செல்லும் அந்த மனிதரின் கதையைப் படமாக எடுத்தால் யார் பார்ப்பார்கள்?” என்று ஒரு தயாரிப்பாளர் கேட்டாராம். ஒருகட்டத்தில் தனது சேகரிப்பில் இருந்த கலைப் பொருட்களை விற்று நிதி திரட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டாராம் அட்டன்பரோ. சமையல் எரிவாயு சிலிண்டருக்குப் பணம் கட்ட முடியாத அளவுக்குக் கடும் நிதி நெருக்கடியை அவர் சந்தித்தார்.

அர்ப்பணிப்பின் கலை

“ஒருவரது வாழ்க்கையை ஒரே கதையில் முற்றிலுமாகச் சொல்லிவிட முடியாது. ஒரு ஆவணத்தின் ஆன்மாவுக்கு உண்மையாக இருப்பதும், சம்பந்தப்பட்ட அந்த மனிதரின் இதயத்தை நோக்கிச் செல்வதற்கான பாதையைக் கண்டுபிடிப்பதும்தான் நமக்கு இருக்கும் சாத்தியங்கள்” என்றும் படத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் அட்டன்பரோ. தனது வார்த்தைகளுக்கு ஏற்ப காந்தி எதிர்கொண்ட முக்கியமான தருணங்களை முடிந்தவரை ஆவணப்படுத்தியிருந்தார் அந்தப் படத்தில். கோட்சேயால் சுடப்பட்டு காந்தி இறப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து தூக்கியெறியப்படும் காந்தி, அந்த நிகழ்வின் தாக்கத்தை உணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட உத்வேகம் பெறும் காட்சிதான் கதையின் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது. லூயிஸ் பிஷர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களை இயன்றவரை, நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்துவதிலும் அட்டன்பரோ வெற்றி பெற்றிருக்கிறார் என்று திரைப்பட ஆர்வலர்கள் குறிப்பிடு கின்றனர். காந்தியின் இறுதி ஊர்வலம் குறித்து பிஷர் எழுதிய வாசகங்களைத் திரையில் செறிவுடன் சித்தரித்திருந்தார் அட்டன்பரோ. ஜாலியன் வாலாபாக் படுகொலைக் காட்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைப் பதிவுசெய்திருந்தது. ஜெனரல் டயரின் தலைமையில் வீதிகளைக் கடந்து சென்ற காவலர்களின் அணிவகுப்பை பிரம்மாண்டமாகவும் அதிர்வுடனும் அவர் பதிவுசெய்திருந்தார்.

பத்து வரலாற்று நூல்கள் ஏற்படுத்தாத விழிப்புணர் வையும் தாக்கத்தையும் ஒரு திரைப்படம் தந்துவிட முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தப் படம் அமைந்தது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை இந்தப் படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுடன், வணிகரீதியான வெற்றியையும் பெற்றது. காந்தியின் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வையும், இந்த உலகுக்கு அவர் விட்டுச் சென்ற மகத்தான செய்தி யையும் பரப்பும் வகையில் மேற்கத்திய நாடுகளில் பல அறக்கட்டளைகளும் நிறுவனங்களும் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகவும் இந்தப் படம் அமைந்தது. 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகர் (பென் கிங்ஸ்லி), சிறந்த இயக்குநர் உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. ஒரு இயக்குநராக ஒருவர் பெறும் அதிகபட்ச வெற்றிகளை அந்த ஒரு படத்திலேயே பெற்றார் அட்டன்பரோ.

“நம் தேசத் தந்தையைப் பற்றிய திரைப்படம் எடுக்க, நம்மை ஆண்ட பிரிட்டனிலிருந்துதான் ஒருவர் வரவேண்டியிருந்தது” என்ற ஆற்றாமையுடன் கூடிய சுயவிமர்சனத்தை இந்தியர்களிடையே ஏற்படுத்திய படமாக ‘காந்தி’ அமைந்தது. “காந்தியை ஹாலிவுட் பார்வையில் பதிவுசெய்த படம் என்றுதான் முதலில் எனக்குத் தோன்றியது. என்றாலும், ஆப்பிரிக்காவின் பல போராளிக் குழுக்கள், இந்தப் படம் தங்களுக்கு மிகுந்த தாக்கத்தையும் போராட்ட வழிமுறையையும் தந்ததாகக் குறிப்பிட்டது முக்கியமான விஷயம்” என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குறிப்பிட்டார். அட்டன் பரோவின் மற்றொரு இந்தியத் தொடர்பு சத்யஜித் ராய் இயக்கிய ‘சத்ரஞ்ச் கே கிலாடி’ படம். 1857-ல் நடந்த சிப்பாய்க் கலகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஆங்கிலேய ராணுவ அதிகாரியான ஜெனரல் அவுட்ரம் பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

ஒடுக்கப்பட்டோருக்காக ஒலித்த குரல்

காந்தியின் வாழ்க்கையைப் படமாக்கியது போலவே, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஸ்டீவ் பீக்கோ என்ற கருப்பினப் போராளியின் வாழ்க்கை வரலாற்றை ‘க்ரை ஃப்ரீடம்’ (1987) என்ற படத்தில் ஆவணப்படுத்தியிருந்தார் அட்டன்பரோ. ஸ்டீவ் பீக்கோ பாத்திரத்தில் நடிகர் டென்சல் வாஷிங்டன் நடித்திருந்தார். அந்தப் படமும் வணிகரீதியான வெற்றியையும் விமர்சனரீதியான வரவேற்பையும் பெற்றது. நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக ஒலித்த குரல்களில் அட்டன்பரோவின் குரலும் ஒன்று.

பிரிட்டிஷ் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ‘தி கிரேட் எஸ்கேப்’ மூலம் ஹாலிவுட்டிலும் புகழ்பெற்ற அட்டன்பரோவுக்கு ஒருகட்டத்தில், ‘பிறரது கற்பனைகளுக்கு ஏற்ப நடிப்பதில்’ ஒரு வெறுமை ஏற்பட்டது. அதுதான் அவரை ஒரு இயக்குநராக்கியது. பல படங்களை இயக்கியும் தயாரித்துமிருக்கும் அட்டன் பரோ பிரிட்டனின் உயரிய விருதுகளைப் பெற்றவர். உயர் பதவிகள் பலவற்றிலும் இருந்தவர். எனினும், அதிகார மட்டத்தில் இருந்துகொண்டே அதன் அத்துமீறல்கள் குறித்து கேள்வி எழுப்பியவர். தனது சாதனைகள் மற்றும் வாழ்வு மூலம், திரைக் கலைஞர் என்ற வார்த்தையை மரியாதைக்குரியதாக மாற்றியவர் என்ற அடையாளம் அட்டன்பரோவுக்கு என்றும் நிலைத்திருக்கும்.

தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.

முத்தமிடுவதால் செத்துவிடுமா கலாச்சாரம்?


பிரான்ஸில் நடந்த சம்பவம் இது. தமிழ் எழுத்தாளர் ஒருவர் பிரெஞ்சு தெரிந்த தனது நண்பருடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். எதிர் இருக்கையில் ஒரு ஜோடி, சூழலையும் மறந்து மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் (முத்தம் உட்பட). இதைப் பார்த்த எழுத்தாளர் தன் நண்பரிடம், “இதெல்லாம் நம் நாட்டில் சாத்தியமா?” என்று கேட்டாராம். “ஏன், உங்களுக்கு அத்தனை ஆசையா?” என்றாராம் நண்பர் சிரித்துக்கொண்டே. “இல்லை. அந்த ஜோடியின் அருகில் இருப்பவரைப் பாருங்கள். எதுவுமே நடக்காததுபோல் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் நம் நாட்டில் சாத்தியமாகுமா என்று வியந்துகொண்டிருக்கிறேன்” என்றாராம் அந்த எழுத்தாளர்.

இந்தியாவில் இதுபோன்ற காட்சிகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில் பல்வேறு சமூகச் சிக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் சராசரிக் குடும்ப அமைப்பின் பின்னணியிலிருந்து வரும் யாரும் இந்தக் காட்சியைச் சாதாரணமாகக் கடந்துவர மாட்டார்கள் தான். ஆனால், பொதுவெளியில் காதலர்கள், தம்பதியர் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வதைத் தடுக்கும் வகையில் ‘கலாச்சாரக் காவலர்கள்’ நடந்துகொள்வதுதான் இன்று பெரும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது. கேரளத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்த முத்தப் போராட்டம் இதற்குச் சரியான உதாரணம்.

கோழிக்கோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. ‘இந்தி யாவில் பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும்தான் வாயைப் பயன்படுத்துவோம். முத்தம் என்ற ஒன்று நம் நாட்டிலேயே கிடையாதே’ என்ற ‘தார்மிக’ கோபத்தில் கொதித்தெழுந்த ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட யுவ மோர்ச்சா என்ற அமைப்பு, அந்த உணவகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தியது. இந்த அராஜகத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்று ஃபேஸ்புக் மூலம் ‘சுதந்திரச் சிந்தனையாளர்கள்’ என்ற அமைப்பினர் ஒன்றுதிரண்டனர். ‘கிஸ் ஆஃப் லவ்’ என்ற பெயரில் முத்தப் போராட்டம் செய்ய அந்த அமைப்பு முடிவுசெய்தது.

கொச்சியில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆயிரக் கணக் கான ஆண்களும் பெண்களும் திரண்டனர். நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் இதில் அடக்கம். யுவ மோர்ச்சா, ஏபிவிபி, பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளும் முஸ்லிம் அமைப்பு ஒன்றும் இந்தப் போராட்டத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கின. எனினும் ஏற்பாடு செய்யப்பட்டதுபோல், முத்தப் போராட்டம் நடைபெறாமல் காவல்துறை ‘கடமை’யாற்றியது. போராட் டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
எனினும், போலீஸ் வேனுக்குள்ளும், காவல் நிலையத் திலும் முத்தமிட்டுக்கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. இதற்கிடையே, கலாச்சாரக் காவலர்களின் கடும் எதிர்ப்பால் ‘கிஸ் ஆஃப் லவ்’ ஃபேஸ்புக் பக்கமும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. தங்கள் தரப்பின் நியாயத்தை, அந்த அமைப்பினர் ஃபேஸ்புக்குக்குப் புரியவைத்த பின்னர், மீண்டும் அந்தப் பக்கம் திறக்கப்பட்டது.

அடிப்படைவாதம் என்ற ஆபத்து

போராட்டத்தில் கலந்துகொண்ட பலர், “கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறலைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒரே காரணத்துக்காகத்தான் இந்த முத்தப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்தோம்” என்று குறிப்பிடு கின்றனர். இப்படியான அதிரடியான முடிவுதான் தங்கள் போராட்டம் குறித்த விரிவான கவனத்தை ஈர்த்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். “வாழ்வதற்கான அடிப்படை உரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அடிப்படை யான இந்திய அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதிரான வைதான் காதலர்கள் மீதான தாக்குதல்கள்” என்று இந்த அமைப்பினர் கொந்தளிக்கிறார்கள்.

காரணம் கலாச்சாரமா?

காதலர் தினக் கொண்டாட்டங்கள், பப் கலாச்சாரம் போன்றவற்றையும் அடிப்படைவாத அமைப்புகள் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றன. காதலர் தினத்தின்போது பொது இடங்களில் சந்தித்துக்கொள்ளும் காதலர்களிடம் தாலியைக் கொடுத்துக் கட்டிக்கொள்ளச் சொல்வது அல்லது காதலனின் கையில் ‘ராக்கி’கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது என்று இவர்கள் செய்யும் அராஜகம் கொஞ்சநஞ்சம் அல்ல.

‘காதலுக்குத் தண்டனை’ என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை பஞ்சாயத்துத் தலைவர்கள் உட்பட, அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கலாச்சாரக் காவலின் தீவிரம் எந்த எல்லையையும் எட்டும் என்பதற்கு உதாரணம் இது. கலாச்சாரத்தைவிடவும் மேன்மையானது மனிதநேயமே என்பதை நாம் இன்னும் உணரவில்லை என்பதுதான் உண்மை. இதுபோன்ற தருணங்
களில் மதத்தின் அடிப்படையில் வேறுவேறு துருவங்களில் செயல்படும் இந்து அடிப்படைவாத அமைப்புகளும், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் ஒரே நேர்க் கோட்டில் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அடிப்படையில், சமூக ஒழுக்கம், பண்பாடு என்று பல்வேறு பெயர்களைச் சொன்னாலும் தங்கள் சமூகத் துக்குள் ‘கலப்பு’ நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பதற்றம்தான் அடிப்படைவாத அமைப்புகளை இயக்குகிறது. காதல், கலப்புத் திருமணம் போன்றவற்றுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை அந்த அமைப்புகள் எடுப்பதற்கும் காரணம் இதுதான். இயல்பாகவே இவற்றுக்கு எதிரான மனப்பான்மையில் இருக்கும் பெற்றோர்களுக்குத் தார்மிக ஆதரவை இதுபோன்ற அமைப்புகளும், குறிப்பிட்ட சில கட்சிகளும் தாராளமாகத் தருகின்றன. அதன் மூலம் அரசியல் ஆதாயத்தையும் அந்த அமைப்புகள் பெறு கின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தெருக்களில், பேருந்துகளில் ஏன் வீடுகளிலேயே பாலியல்ரீதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தியாவில் 53.22 % குழந்தைகள் ஆண்டுதோறும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று சொல்கிறது ஐ.நா-வின் புள்ளிவிவரம்.

இவை பற்றியெல்லாம் எந்தக் கலாச்சாரக் காவலர்களும் கவலைப்படுவதில்லை. காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தால்தான் உங்கள் கலாச்சாரம் பறிபோகிறதென்றால் கலாச்சாரத்தின் உண்மையான அர்த்தம்தான் என்ன?

- தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.

சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்


ஸ்ரீதர் இயக்கிய ‘சிவந்த மண்' திரைப்படத்தின் இந்திப் பதிப்பான ‘தர்த்தி' 1970-ல் வெளியானது. ராஜேந்திர குமார், வஹீதா ரஹ்மான் நடித்த அந்தப் படத்தில் புரட்சி வீரனாக, கவுரவ வேடத்தில் சிவாஜி தோன்றினார். இந்தப் படம்குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. படம் வெளியான அன்று பம்பாயில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாம். அதைக் குறிப்பிட்டு சிவாஜியிடம் ராஜேந்திர குமார் சொன்னாராம், “உங்கள் நடிப்பைப் பார்த்து பம்பாயே நடுங்கிவிட்டது!”
சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) அத்தனை கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள்.
சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி. தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.

வேறென்ன செய்ய முடியும்?

உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்
பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”
சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்குரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி கணேசன் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால்தான் முடியும்.

எப்போதும் மரியாதை

மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை!
- தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்