Monday, January 31, 2011

தனிமையின் துணை



தனிமைத்துயர், இறந்தகால கசப்புகளின் நிழல் படிந்து கறையான நினைவுகள் தரும் அழுத்தம் என்று அழலும் மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களிலும் சினிமாவிலும் பதிவாவதுண்டு. அவற்றை காண , படிக்க நேர்கையில் மனம் அழுந்தப்பட்டு உணர்வின் வெளியீடு கண்ணீராகி விடும். அப்படி என்னை சமீபத்தில் கண்ணீர் விட வைத்த படம் ' Into Temptation'. சிறந்த இயல்பான நடிப்பு, ஒரு வலை போல் இழைக்கப்பட்ட திரைக்கதை, சாகசங்களற்ற எளிய கதை சொல்லும் விதம் என்று நம் சினிமாக்களின் தொடும் தூரத்தை விட வெகு தொலைவில் உள்ள இப்படத்தை எனக்கு அறிமுகம் செய்த நண்பன் ஓவியன் விஜயராகவனுக்கு நன்றி. (நம்மூரில் கோழிச்சண்டை பிரதான களம் என்று விட்டு லும்பன்களின் தகராறுகளை வரலாறாக்கி சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நமக்கு அதுவே பெரிய சாதனையாக தோன்றுகிறது. யதார்த்தம். இந்த வார்த்தையை கண்டுபிடித்த மகானை தேடிக்கொண்டிருக்கிறேன். )



பாவமன்னிப்பு கோரி வரும் மனிதர்களின் குறைகளை கேட்டு ஆறுதல் வார்த்தைகளை தரும் இளம்பாதிரியாரிடம் ஒரு இளம் விலைமாது கேட்கும் பாவ மன்னிப்பு அவரை உலுக்குகிறது. தன பிறந்த நாளன்று தற்கொலை செய்யப்போவதாக சொல்லும் அவள் தனது முதல் பாவமாக சொல்லும் வார்த்தைகள் இதயத்தை கனக்க செய்கின்றன. அவளின் பனிரெண்டாவது வயதிலிருந்து அவளிடம் வல்லுறவு கொண்டிருக்கிறான் அவளது வளர்ப்புதந்தை . தனது பதிமூன்றாவது வயதிலிருந்து அதை விரும்ப துவங்குகிறாள் அவள். அவ்வளவு தான். அந்த பெண் எழுந்து சென்று விடுகிறாள். குறை கேட்கும் அறையின் சிறிய ஓட்டை வழியாக தெரியும் அவளது மார்புகளும் தொங்கும் சிலவையும் மட்டும் பாதிரியாரின் கண்ணில் படுகின்றன. விதிமுறைகளையும் மீறி அந்த பெண் யாரென்று தேடி அலைகிறார் அவர் அவளை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் . அவள் ஒரு விலைமாது என்பதால் பக்கத்தில் இருக்கும் சிவப்பு விளக்கு பகுதிகளில் அந்த பெண் பற்றிய தகவல் கிடைக்குமா என்று தேடி திரியும் அவரை அந்த சர்ச்சுக்கு வரும் 'பக்தர்கள்' சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள். கடைசியில் அவள் என்னவானாள் என்று நம்மையே யூகிக்கும்படி விட்டிருப்பது தான் இயக்குனரின் பலம்.


மிக சாதாரண ஒரு துப்பறியும் கதை போன்ற கதையோட்டதிலேயே செல்லும், படம் அதன் வீர்யமான காட்சிகள் மற்றும் தத்ரூபமான நடிப்பால் மிக சிறந்த அந்தஸ்தை பெற்று விடுகிறது. தன்னை அறியா வயதில் சீரழித்த தன் வளர்ப்பு தந்தையை , தான் தற்கொலை செய்து கொள்வதற்குமுன் சென்று சந்திக்கும் காட்சி, உலக சினிமாவின் உன்னத காட்சிகளில் ஒன்று. மரணப்படுக்கையில் இருக்கும் அவன் தன் வளர்ப்பு மகள் தன்னை எதுவும் செய்து விடுவாளோ என்று பதறி ' உனக்கு என்ன வேண்டும் ?' என்று திரும்பத்திரும்ப கேட்டுகொண்டே இருக்கிறான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். 'என்னை நீ முதன் முதலில் தொட்ட போது எனக்கு வயது பனிரெண்டு ..' என்று அவள் சொல்லும்போது வரும் பதற்றம் ..நம் மாகனுபாவர்கள் தலைகீழாய் நின்றாலும் கொண்டுவரமுடியாத பதற்றம். "இத்தனை வருடங்களுக்கு பிறகு உன்னிடம் நான் சொல்ல விரும்புவது இது தான் டொனால்ட் ..நான் உன்னை மன்னித்து விட்டேன். You are forgiven" என்று சொல்லி விட்டு வெளியேறும் அவளை பார்த்துக்கொண்டே இருக்கிறான், அந்த வளர்ப்பு தந்தை. படத்தின் முழுவதும் உயிரோட்டமான ஒளிப்பதிவும் மெல்லிய சோகத்துடன் தொடரும் இசையும் அருமை. ஒரு புறம் பாதிரியார் தனக்கு நம்பிக்கை உள்ள ஆளை துணைக்கு வைத்துக்கொண்டு சிவப்பு விளக்கு பகுதிகளில் லிண்டாவை தேடிக்கொண்டிருக்கிறார். மறுபுறம் அவள் ஒரு பாலத்தில் நின்று கொண்டு கீழே குதிக்க தயாராகும் போது முன்பு ஒரு Homeless அங்கு வருகிறார். அவளிடம் ஏதும் பணம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே முன்னே வரும் அவரிடம் லிண்டா தன் கைப்பையை திறந்து தன்னிடம் எதுவும் இல்லை என்று காட்டுகிறாள். அருகில் வரும் அந்த மனிதன் ஒரு ஜெபமாலையை அவளுக்கு தருகிறான். நெகிழும் அவள் இன்று தனக்கு பிறந்த நாள் என்று சொல்ல அவர் அவளை அன்புடன் அணைத்துக்கொள்கிறார். தனிமையின் துணையும் தனிமை தானே. அந்த காட்சியை கண்ணில் திரளும் நீர் மறைக்காமல் யாராலும் பார்த்துவிட முடியாது. அந்த ஜெபமாலை கூட முன்பு ஒரு முறை பாதிரியார் அந்த பக்கம் வரும்போது அந்த பிச்சைக்காரருக்கு பரிசாக தந்தது. பிறகு வரும் காட்சியில் அவள் குதிக்க இருந்த பாலம் கீழிருந்து காட்டப்படுகிறது. சரியான விலாசத்தை அந்த கணத்தில் அடையும் பாதிரியாருக்கு அவள் விட்டு சென்ற அவள் புகைப்படம் மட்டும் கிடைக்கிறது. அவள் பத்து வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. கண்ணீருடன் அவளுக்கு பாவ மன்னிப்பு தருகிறார். உண்மையில் அவள் வீடு திரும்பவில்லை என்றாலும் அவள் இறந்திருக்கக்கூடாது என்று மட்டும் நம் மனம் பதை பதைக்கிறது. அது தான் இந்த படத்தை பற்றி நினைக்கையில் என்னை எப்போதும் பதற்றம் கொள்ள வைக்கிறது. கலையின் வெற்றி இது தானே.

அவளை பற்றி அவளது வாடிக்கையாளர் சொல்லும் செய்தி அவள் தன் வேலையில் மிக சிறந்தவள். அவளிடம் உச்சகட்ட சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். அது தான் அவளது ஸ்பெஷல். ஆனால் அவளால் தன் பால்யத்தில் தன் வளர்ப்பு தந்தையாலே கற்பிழந்ததை மட்டும் தாள முடியவில்லை. அது அவளின் வாழ்நாள் முழுதும் வதைதுக்கொண்டே இருக்கிறது. மனதை கனக்க செய்யும் முடிவுடன் நிறைவடையும் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கிறேன். மனிதர்களின் உணர்வுகளை , வாழ்க்கையை படமாக்க கற்றுக்கொண்ட மேதைகளின் படைப்புகளை நம்மூரில் இந்த ஜென்மத்தில் எதிர்பார்க்க முடியாது. நண்பர்களுக்கு இந்த படத்தை பரிந்துரை செய்கிறேன்.

Monday, January 24, 2011

ஓவியங்கள்...


Wild Wings..

Birth in Fire..

Deadly dried..

Thursday, January 20, 2011

பொன்னியின் செல்வன் திரையாக்கம் உண்மையெனில்..


வரலாற்றுப்படம் என்று தமிழில் வந்த படம் என்று பார்த்தால் பெரியார் திரைப்படம் கடைசி என்றாகிறது. அதிலும் அரசர் கால திரைப்படங்கள் தமிழில் வந்து வெகுகாலமாகிறது.செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் சோழர்-பாண்டியர் வரலாற்றை சொல்ல முயன்றது. சமீப காலமாக இணையத்தில் பரவலாக வெளிவரும் சந்தோஷமூட்டும் தகவல் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படமாக தயாராகிறது என்பது. மணிரத்னம் என் ஆதர்சமான ஜெயமோகனுடன் இணைந்து திரையாக்க முயற்சிகள் செய்து வருகிறார் என்ற தகவல் ஒரு புறம்; நீண்ட நாட்களுக்கு பிறகு மணியுடன் இணைந்து இளையராஜா இந்த திரைப்படத்துக்கு இசை அமைக்கவிருக்கிறார் என்ற தகவல் ஒருபுறம் என்று தமிழ் சினிமா ரசிகனின் தாகத்தை தீர்க்கும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. எத்தனை உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் இந்த தகவல்கள் நம் மனதில் ஏற்படுத்தும் கற்பனை என்னவோ அலாதி தான். இலக்கிய வாசகர் யாருமே பொன்னியின் செல்வனை படிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. சில காட்சிகள் திரும்ப திரும்ப வருகின்றன என்றாலும் பொன்னியின் செல்வன் திரைக்கான படைப்பே என்று தோன்றுகிறது. படம் எடுக்க்கப்படுவது உண்மை எனில் ஒரு கடைக்கோடி ரசிகனாக எனது எளிய ஆசைகள்:

பெரும் பொருட்செலவு தேவைப்படும் படம் என்பதால் காசு பற்றி கவலை இல்லாத தயாரிப்பாளர் தான் தேவை. இன்றைய காலகட்டத்தில் MGM ஏ கடனில் ஓடினாலும் பெரிய அளவில் முதலீடு செய்ய தகுதி உள்ள ஒரே நிறுவனம் 'சன்' என்பதால் அது மிக பொருத்தமான விஷயம் தான். எனினும் ஒரு பாடலுக்காக வெளிநாடு , ஒரு டான்ஸ் ஸ்டெப்புக்காக பல்வேறு கோணங்களில் படப்பிடிப்பு என்று பம்மாத்து செய்யாமல் கதைக்கு தேவைப்படும் செலவை எந்த தடங்கலும் இல்லாமல் செய்ய தயாரிப்பு நிறுவனம் தயாராக இருக்கவேண்டும். அப்போது தான் செட், ஆடை அலங்காரம், துணை நடிகர்கள், தொழில்நுட்ப துணை என்று ஒரு சிறந்த அஸ்திவாரத்தை தயார் செய்யமுடியும்.

நம்மவர்கள் எந்த காலத்திலும் கவனம் செலுத்தாத துறையான casting இல் முழு கவனம் செலுத்த வேண்டும். தென்னிந்திய நடிகர்களில் சிறந்தவர்களையும் தொலைக்காட்சி தொடர்களில் மின்னும் நல்ல நடிகர்களையும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். வந்தியத்தேவனாக சந்தேகமில்லாமல் விக்ரம், மிக சரியான தேர்வு. கமல், சரத்குமார், மம்மூட்டி, மோகன்லால், நாகர்ஜுன் , சத்யராஜ் போன்ற நடிகர்கள் வரலாற்று படங்களுக்கு தகுதியானவர்கள். தவிர கூத்துப்பட்டறை போன்ற தியேட்டர் நவீன நாடகங்களில் தேர்ந்த நடிகர்கள் பெரும் பலமாய் இருப்பார்கள். முக்கிய பாத்திரமான நந்தினிக்கு தயவு செய்து ரம்யா கிருஷ்ணனை தேர்வு செய்து விட வேண்டாம். (இந்த கதாபாத்திர 'இன்ஸ்பிரேஷனில்' தான் படையப்பா நீலாம்பரி உருவானார் என்று கேள்விப்பட்டதுண்டு. ) நம்பியார் போன்ற மூத்த கலைஞர்கள் சிலரை இழந்தும் விட்டோம்.
கமல் தன மூக்கை நுழைக்காமல் இயக்குனர் சொல்வதை (மட்டும்) கேட்டு நடித்தால் சந்தோஷம். அவர் தான் பொ. செல்வனை தொலைகாட்சி தொடராக தயாரிக்க திட்டமிட்டார் என்று தொன்னூறுகளில் படித்த நினைவு. அதே போல் எம்.ஜி.ஆர். இயக்குனர் மகேந்திரனை இதற்கான திரைக்கதையை எழுத பணித்திருந்தார் என்றும் கேள்விப்பட்டதுண்டு. பலரால் முடியாத பெருங்கனவு இது என்பதால் மிக சிறப்பான முயற்சி அவசியம்.

தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் நம்மவர்கள் கரைகண்டவர்கள் என்பதால் கவலை வேண்டியதில்லை. பி.சி. ஸ்ரீராம் தலைமையில் ஒரு பெரும்பட்டாளமே இருக்கிறது ஒளிப்பதிவுக்கு. குறைந்தது மூன்று சிறந்த ஒளிப்பதிவாளர்கள் தேவை.
சமீபத்தில் இளையராஜா நடித்த (!) விளம்பரத்துக்கான ஸ்ரீராமின் ஒளிப்பதிவு அபாரம். அது போன்ற ஒளியமைப்பு படத்துக்கு மிக சிறப்பாக பொருந்தும் என்று தோன்றுகிறது. கலை இயக்குனர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதால் அந்த துறையிலும் சிறந்த கலை இயக்குனர்கள் குறைந்தது மூன்று பேராவது தேவை. அதே போல் கதை நடக்கும் காலகட்டத்தை திரையில் கொண்டு வர CG மிகவும் முக்கியம். 300 படம் ஒரு சிறந்த உதாரணம். பல சவாலான காட்சிகளை வெற்றிகரமாய் கடந்து செல்ல பெரும் துணை எல்லாம் வல்ல CGயே!

ராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பது மிகவும் பொருந்தும் என்று ரசிகர்கள் பலரும் கருதுகிறார்கள். அவரால் நம் முன்னோர் வாழ்வை இசையால் சிறப்பாக முன்னிறுத்த முடியும். என்றாலும் ராஜா இந்த படத்தை மிக முக்கியத்துவத்துடன் அணுகவேண்டும். பெரிய இசை ஆராய்ச்சியே தேவையாய் இருக்கும். பண்டைய தமிழக இசைக்கருவிகள் சிறந்த குரல்கள் தவிர புராதனத்தை நினைவுபடுத்தும் பாடல் வரிகள் என்று தேவை இருப்பதால் வைரமுத்து இணைந்தால் பெரும்பலமாய் இருக்கும். ராஜா மனசு வைக்க வேண்டும்.

மிக முக்கியமாக மணிரத்னம் தனது வெற்று க்ளிஷேக்களை தூர எறிந்துவிட வேண்டும். ரெண்டு கதாபாத்திரங்கள் தொடர்பின்றி பேசிக்கொண்டிருக்க அவர்களை காமெரா சுற்றி சுற்றி நமக்கு மயக்கம் வரவைக்கும் அபத்த காட்சியமைப்பை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் துள்ளி துள்ளி ஆடிக்கொண்டே கதாநாயகனை தொடர்ந்து ஓடும் காமெடிகள் வேண்டாம். தயவு செய்து ஹஸ்கி வாய்சில் கதாபாத்திரங்கள் முனகுவது வேண்டவே வேண்டாம். ஜெயமோகன் சார்.. நீங்கள் தான் நல்ல வசனங்களை எழுத முடியும். 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ' என்ற நெடும் (!) வசனத்தை மணி 'எப்.. இப்' என்று சுருக்கி விடுவார். விடாதீர்கள்.

மொத்தத்தில் இந்த கற்பனைகள் உண்மையாகி ஒரு சிறந்த தமிழ் படம் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நடக்குமா?

Sunday, January 9, 2011

மௌனக்கடவுளின் முதல் வார்த்தை..


கவிதைகளை அவற்றின் திசையின் காற்றில் பறந்து நெய்யும் கவிஞர்கள் அபூர்வம். வார்த்தைகளை வெறுமே மடித்தும் கோர்த்தும் பாவனை செய்யாமல் எழுதப்படுபவை அகஸ்டசின் கவிதைகள். அவரது கவிதைப்படிகளில் ஏறும்போது தென்படும் படிமங்களை உள்வாங்கிக்கொண்டு இறுதியில் கவிதையின் உச்சவரிகளின் மேல் ஏறி நின்று பார்க்கும் போது கிடைக்கும் சப்தமற்ற பிரமாண்டம் பிரமிக்கவைக்கும். தாமாக சென்று கவிதையை துரத்தும் கவிஞர்களில் இருந்து விலகி ஒரு தவம் போல் கவிதை நிகழும் தருணத்துக்காக காத்திருந்து எழுதுவதோடு மீள்வாசிப்பு மீள்திருத்தம் என்று தன் கவிதைகளை ஒரு சிற்பியை போல் செதுக்குவது அவரது வழக்கம். 'தினமும் அவற்றின் மீது ஏறியமர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தேன். இந்த பழக்கத்தை நிறுத்திவிட வேண்டுமானால் இக்கவிதைகளை என்னிடமிருந்து தொலைத்துவிடுவது தான் சரியானது என்று தோன்றியது' என்கிறார் அகஸ்டஸ். கணையாழி காலத்திலிருந்து கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும் தன முதல் தொகுப்பை இப்போது தான் வெளியிட்டிருக்கிறார். வடக்கு வாசல் பென்னேஸ்வரனின் உதவியோடு தன் சொந்த பதிப்பாக வெளியிட்டிருக்கும் இத்தொகுப்பு ஆரவாரங்கள் ஏதுமின்றி அவருக்கே உரிய அமைதியுடன் வெளியாகி இருக்கிறது.

வெங்கட்சாமிநாதனின் முன்னுரையோடு வெளியாகி இருக்கும் இந்த தொகுப்பு அவரது வார்த்தைகளில் சொன்னால் " தமிழுக்கு வேண்டிய சேர்க்கை". டெல்லியில் நீண்டகாலமாக வசித்து வரும் அகஸ்டஸ் எனது நண்பர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது ஈடுபாடு எனக்கு பெரிய உந்துதலை தருவது. சந்திப்புகளில் யாரிடமும் தான் கவிஞர் என்று சொல்லிக்கொள்ளாத தன்மை உடையவர் அகஸ்டஸ். வாழ்க்கையின் தருணங்களை வலிகளை மர்மங்களை படிமங்களாக செதுக்கி கவிதையாக்கி தரும் அகஸ்டசின் கவிதை வரிகள் ஒப்பீடற்றவை.

கடவுளோடு செய்யும் சம்பாஷணையாகவும் சில சமயங்களில் மறுதலித்தும் ஒலிக்கும் கவியின் குரல், கடவுள் என்ற பிரமாண்டத்தை ஒரு டீக்கடையில் சந்திக்கும் கணம் தொடங்கி வாழ்வின் ஒவ்வொரு மர்மம் புரிபடும்போதும் விலகியோடும்போதும் கடவுளின் மலைகளிலிருந்து இறங்கிக்கொண்டே வருகிறது.

'அடர்ந்து இறங்கிக்கொண்டிருக்கும்
தாடியில்
கருப்பு முடி தேடி
உம்மையே
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உமது அங்கியில் ஊரும்
சிற்றெரும்புகளை
தட்டிவிடக்
கை நினைத்தது
மனம் தட்டவில்லை' என்ற தொடங்கும் 'டீக்கடை சூரியன்' கவிதையினூடே அவர் இறங்கி செல்லும் மலை கடவுள் தந்த வாழ்க்கையன்றி வேறென்ன. 'உம்முடன் பேசி நடந்ததில்லை நான் / உம் குரலை பேசி நடப்பவர்களை / உதாசீனம் செய்யும் / அமைதி பெற்றிருக்கின்றன / இடையறாது / காற்றுடன் கற்றுக்கொண்டிருக்கும் / செடி கொடி மரங்கள்' என்ற வரிகள் மூலம் இயற்கையின் அளவிலா பிரமாண்டத்தையும் ஆதியில் இருந்து கடவுளுடன் தொடர்பில் இருக்கும் அவை கடவுள் குரலில் பேசி நடப்பவர்களின் பாவனை உணர்ந்து அலட்சியம் செய்யும் தன்மையையும் சொல்லும் அகஸ்டசின் குரலில் மனிதன் இயற்கையின் இறைவனின் பிரமாண்டத்தின் முன்பு ஒன்றுமில்லாதவன் என்று ஒரு தேவ ரகசியம் போல் நம் காதில் சொல்கிறது. 'எனது குடிசையையும் தாண்டி / ஆதரவாய் பரந்து கிடக்கின்றன / உமது கைகள் ' என்று கடவுளின் கருணையை உணரும் மனிதன் கவிதையின் இறுதியில் ' ஒரு டீக்கடையின் அழுக்கு பெஞ்சில் / காலை தம்ளரில் / ஊதியூதிக் குடித்துக் கொண்டிருப்பேன் / என் சூரியனை இனி' என்று கடவுள் தனக்களித்த பிரத்யேக சூரியனான தெளிந்த வாழ்க்கையை பருகும் காட்சி கடவுள் வெளியேறிவிட்ட டீக்கடை பெஞ்சில் தனியாக அமர்ந்திருக்கும் கவிஞனின் மோன நிலையாய் நம் முன் விரிகிறது. கவிதை திரும்பவும் முதலில் இருந்து தொடங்குகிறது. ஒரு loop போல.

வாழ்வின் தருணங்களில் யாருக்காகவோ எதற்காகவோ காத்திருக்கும் மனதின் நீர்வரிகளாக இறங்கும் 'மழை' கவிதையில் பூட்டப்பட்ட அறைக்கு வெளியில் அறைவாசிக்காக காத்திருக்கும் அகாவை காட்சிப்படுத்தும் வரிகளிலும் அப்படிஒரு பிரமாண்டம். 'கார்நிறை வானம் கனத்து / பூட்டிய வாசல் முன் திரண்டு / எதோ சொல்லத் திணறுவது போல / தெரிந்தும் அதை கேட்க / பூமி கிடந்து பரப்பது போல / ரகசியம் / பறவைகளிடம் இருந்து மரங்களுக்கு / வேகம் வேகமேனப் பறப்பது போல / சொல்வரைந்து அறிய முடியாமல் / தனிவார்த்தை மென்று கொண்டு / அகா வாசலில் அமர்ந்திருந்தான் / பொத்துக்கொண்டு பெய்தது மழை' என்ற வரிகளில் தனிமையோடு மர்ம வார்த்தைகளில் உரையாடும் மொழியற்ற இயற்கையின் குரலை அதை புரிந்து தன் பிரத்யேக வார்த்தையொன்றை coin செய்துவிட்ட திருப்தியில் ' அறைவாசி வரும்போது / மழையை நீந்தி மறுகரையில் / தெளிவானில் / தூங்கிப் போயிருந்தான் அகா'. வார்த்தை பிரயோகங்களில் காட்சிகளை தெளித்து கையுதறும் ஓவியக்கவியின் கண்ணின் வழி விரியும் காட்சிகளாய் அபாரமாய் விரிகின்றன அகஸ்டசின் வரிகள். 'பூமி கிடந்து பரப்பது', 'மழையை நீந்தி' போன்ற அவரது சொல்லாடல்கள் தமிழ் கவிதையுலகின் தொடப்படாத பக்கங்களில் எழுதப்பட்டவை.

வார்த்தைப்பாடு கவிதையிலும் கடவுள் வருகிறார். ' ஆதியில் வார்த்தை / ஆண்டவனிடம் இருந்தது / அவன் அதை மனிதனில் விதைக்க / முளைத்தது நாக்கு ' என்று தொடங்கும் கவிதை ஐந்து பகுதிகளாக விரிகிறது. வார்த்தைகளையே முதலீடாக்கி பிழைக்கும் மனிதர்களின் பிடியில் திணறும் வார்த்தைகளின் அவஸ்தைகளை , அடுத்தவனின் வார்த்தைகளை நம்பி தன் வாழ்வில் ' தரித்திரம் பெய்யும் இக்காலத்தில் / தம் கொள்கையிருட்குகையிலிருந்து / இருளாத வார்த்தைகள் கொண்டு வந்து / அவராவது தைத்து தருவார் / எம் கிழிந்த குடைகளை என்று ' காத்திருக்கும் மனிதர்களை சொல்லிக்கொண்டே வரும் கவிதை ' இக்கூட்டிலடைத்து / சற்றும் லாபமில்லையென / உணர்ந்த போது / வீசியெறியப்படும் என் வார்த்தைகள் / அவரவர்க்குப் பேசியவை / அவரவர் காதுகளையடையும் / அது வரை / ஊமையென்று என்னையழைக்கும் எவர் மீதும் கோபமில்லை / எனக்கு ' என்று முடியும்போது கடவுளில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றியலையும் வார்த்தைகள் ஒரு தனி மனிதனின் நிலையில் ஏற்படுத்தும் பாதிப்போடு முடிகிறது.

தொகுப்பில் சிலைகள் வளரும் காலம், கல் நட்சத்திரம், கருப்புப்பூனை போன்ற கவிதைகள் ஏற்கனவே கவனிக்கப்பட்டவை. எனினும் ஒரு தொகுப்பாக அவற்றை படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அற்புதம். அகஸ்டஸ் நல்ல ஓவியரும் கூட. வடக்கு வாசல் இலக்கிய மலரில் அவரது ஓவியங்கள் பிரசுரமாயின. தேவதேவன் , ஜெயமோகன், மோகன ரங்கன் போன்ற இலக்கிய ஆளுமைகளின் கவனிப்புக்குரிய அகஸ்டசின் இந்த தொகுப்பு நிச்சயம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு நிகழ்வு. சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் தொகுப்பை பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.


டீக்கடைச்சூரியன்- கவிதைகள்

வெளியீடு: நிலா பதிப்பகம்

அச்சாக்கம் : வடக்கு வாசல்,

5A/11032, IInd Floor, Gali No :9,
Sat Nagar, Karol Bagh,
New Delhi- 110005.
augustus.tamil@gmail.com

Tuesday, January 4, 2011

ஒலக நாயகனுக்கு ஒரு கேள்வி..


சினிமாவில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேல் இருக்கும் ஒருவர் இன்னும் சினிமா என்றால் என்னவென்றே புரிந்துகொள்ளவில்லை என்ற மாபெரும் உண்மையை நான் வைஷாலியில் உள்ள மகாகுண் பி.விஆரில் மன்மதன் அம்பு பார்க்கும்போது உறுதிப்படுத்திக்கொண்டேன். கமல் என்ற ஒரு மிக சாதாரண நடிகர் தன்னை பற்றி வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கை அதே சமயத்தில் ரசிகர்களை முட்டாள்கள் என்று பெருந்தன்மையுடன் கருதும் பேராண்மை ஆகிய முதல்களை வைத்தே இன்று வரை பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதற்கு மிக சரியான உதாரணம் மேற்கூறிய படம். இந்த படத்தின் மூலங்களை பற்றி பலர் எழுதிவிட்டார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். கமலுக்கு சொந்தமாக மூளை கிடையாது; அமெரிக்க மூளைகளை 'எடுத்தாண்டு' வாழ்ந்துவருகிறார் என்பது சிறுவர்கள், சாரு நிவேதிதா முதல் நல்ல சினிமா தெரிந்த அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.

படம் முதல் பத்து நிமிடங்களுக்கு சரியான பாதையில் போவதாக போக்கு காட்டிவிட்டு அதன் பிறகு கமலுக்கு தெரிந்த ஒரே வழியான குறுக்குப்பாதையில் பயணிக்க தொடங்கும்போது வந்த எரிச்சல் இருக்கிறதே. ச்சே. இவ்வளவு மோசமாகவா ஒரு 'ஒலக நாயகன்' படம் தருவான் என்ற முணுமுணுப்பு அரங்கில் இருந்த எட்டு பேரில் ஏழு பேரின் வாயிலிருந்து தானாக வந்தது.

கமல் மற்றும் என் மனம் கவர்ந்த வடிவேலுவின் கனவுக்கன்னி 'திரிசா' மற்றும் திறந்த வாயை மூட தெரியாத சங்கீதா நடித்த இது போன்ற படங்கள் நண்பர் சுரேஷ் கண்ணன் சொன்னது போல் கழக வாரிசுகளை திரையுலகில் மேற்கொண்டு பிரகாசிக்க விடக்கூடாது என்ற உள்குத்தோடு வெளியாகி இருக்கும் படங்களில் ஒன்று என்ற வகையில் மற்றெல்லாரையும் போலவே நானும் வரவேற்கும் ஒரு படம். துப்பறியும் நிபுணன் (முன்னாள் படை வீரன் வேறு!) என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கும் கமல் தன் புற்று நோய் நண்பனை காப்பாற்ற தியாகம் ஏதும் செய்யாமல் 'தகிடுதித்தம் ஆடி' பணக்கார மாதவனை பழி வாங்குகிறாராம். அதற்காக விக்ரம் காலத்திலிருந்து காப்பாற்றிவரும் தன் விதவைக்கோலத்தை 'முகமறியா கொலையாளியான' திரிசாவிடம் சொல்லி ஆறுதல் பெற்றால் கூட பரவாயில்லை. அவரையே 'பெற்றுக்கொண்டு' உண்மையிலேயே அப்பாவியான மாதவனுக்கு சங்கீதா என்ற பெருநங்கையை சேர்த்து வைக்கிறார். இதற்கு துணை போகும் கதா பாத்திரங்களாக மேற்படி வாழ்ந்து முடிந்திருக்கும் நடிகர்கள் தங்கள் முகத்தில் பூசப்பட்டிருக்கும் கமல் கரியை திரையரங்க இருட்டில் தெரிந்துகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். நடுவில் களவாணி ஓவியா (தானே!) வேறு தலை காட்டுகிறார். இவ்வளவு கேவலமான படத்தை எப்படியெல்லாம் promote செய்து பிழைக்கிறார்கள்!

ஒலக நாயகனுக்கு ஒரே கேள்வி.. நீர் எப்போது ஒரு சினிமா (சொந்தமாக!) எடுக்க போகிறீர்?