Sunday, November 9, 2014

அட்டன்பரோ: வரலாற்றின் கலைஞன்

கலையின் பல வடிவங்கள் நம் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, கலைஞர்களின் இழப்பு ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகம். அதிலும் திரைக்கலைஞர்களின் மரணங்கள் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இறந்தார். தற்போது, ரிச்சர்டு அட்டன்பரோ. ராபின் வில்லியம்ஸைப் போலவே இவரும் இந்திய ரசிகர்களுக்கு நெருக்கமானவர். ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் டைனோசர்களின் உலகை மீண்டும் படைக்கும் தொழிலதிபராக வெண் தாடி, கைத்தடி என்று நட்புணர்வு கொண்ட தாத்தாவாக அவர் நடித்த பாத்திரம் சராசரி இந்திய ரசிகரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தியர்களுக்கும் அட்டன்பரோவுக்கும் இடையே அதையும் தாண்டி ஒரு வலுவான பிணைப்பு உண்டு. அவர் இயக்கிய ‘காந்தி’ திரைப்படம்தான் அது.

20 ஆண்டுகள் தவம்

“1960-களில் என்னிடம் ஒருவர் மகாத்மா காந்தியின் சுயசரிதையைக் கொடுத்து, ‘இவரைப் பற்றித் திரைப் படம் எடுப்பீர்களா?’ என்று கேட்டார். ‘இல்லை… எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையே’என்றேன். ‘நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல்கொடுப்பவர் அல்லவா? உங்களால் கண்டிப்பாக முடியும். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்’என்று அவர் வற்புறுத்தினார். அதன் பிறகுதான் அந்த மனிதரின் கதையைப் படித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அட்டன்பரோ. அந்தப் புத்தகம், அமெரிக்க எழுத்தாளரான லூயிஸ் பிஷர் எழுதிய ‘மகாத்மா காந்தியின் வாழ்க்கை’. ‘காந்தி’ படத்தை எடுக்க அட்டன்பரோவைத் தூண்டியவர், மோதிலால் கோத்தாரி என்ற இந்தியர்.
ஒரு வரலாற்று நாயகரின் வாழ்க்கையை எப்படி திரைப்படமாக்குவது என்பதற்கு உதாரணம் அந்தப் படம். காந்தியின் கதையை இந்திய சுதந்திரம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, அதன் தொடர்ச்சியாக நடந்த வன்முறையின் வலி என்று கலைபூர்வமாக ஆவணப் படுத்தியிருந்தார் அட்டன்பரோ. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் உழைத்ததன் பலன் அது.

படத்தை இயக்க வேண்டும் என்று முடிவுசெய்தவுடன், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனின் உதவியுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவையும், இந்திராவையும் சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார் அட்டன்பரோ. “நேருவின் தாக்கம், ஆலோசனை, நம்பிக்கை ஆகியவற்றின் துணை இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது” என்று படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அட்டன்பரோ. அத்துடன் மோதிலால் கோத்தாரி, மவுண்ட்பேட்டன், நேரு ஆகிய மூவருக்கும் இந்தப் படத்தை அவர் சமர்ப் பித்திருக்கிறார்.

‘காந்தி’ படத்துக்காக அட்டன்பரோ பட்ட சிரமங்கள் கணக்கற்றவை. அந்தப் படத்தைத் தயாரிக்க ஹாலிவுட்டில் யாரும் முன்வரவில்லை. “இடுப்பில் துண்டுத் துணியுடன் தடியை ஊன்றிச் செல்லும் அந்த மனிதரின் கதையைப் படமாக எடுத்தால் யார் பார்ப்பார்கள்?” என்று ஒரு தயாரிப்பாளர் கேட்டாராம். ஒருகட்டத்தில் தனது சேகரிப்பில் இருந்த கலைப் பொருட்களை விற்று நிதி திரட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டாராம் அட்டன்பரோ. சமையல் எரிவாயு சிலிண்டருக்குப் பணம் கட்ட முடியாத அளவுக்குக் கடும் நிதி நெருக்கடியை அவர் சந்தித்தார்.

அர்ப்பணிப்பின் கலை

“ஒருவரது வாழ்க்கையை ஒரே கதையில் முற்றிலுமாகச் சொல்லிவிட முடியாது. ஒரு ஆவணத்தின் ஆன்மாவுக்கு உண்மையாக இருப்பதும், சம்பந்தப்பட்ட அந்த மனிதரின் இதயத்தை நோக்கிச் செல்வதற்கான பாதையைக் கண்டுபிடிப்பதும்தான் நமக்கு இருக்கும் சாத்தியங்கள்” என்றும் படத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் அட்டன்பரோ. தனது வார்த்தைகளுக்கு ஏற்ப காந்தி எதிர்கொண்ட முக்கியமான தருணங்களை முடிந்தவரை ஆவணப்படுத்தியிருந்தார் அந்தப் படத்தில். கோட்சேயால் சுடப்பட்டு காந்தி இறப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து தூக்கியெறியப்படும் காந்தி, அந்த நிகழ்வின் தாக்கத்தை உணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட உத்வேகம் பெறும் காட்சிதான் கதையின் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது. லூயிஸ் பிஷர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களை இயன்றவரை, நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்துவதிலும் அட்டன்பரோ வெற்றி பெற்றிருக்கிறார் என்று திரைப்பட ஆர்வலர்கள் குறிப்பிடு கின்றனர். காந்தியின் இறுதி ஊர்வலம் குறித்து பிஷர் எழுதிய வாசகங்களைத் திரையில் செறிவுடன் சித்தரித்திருந்தார் அட்டன்பரோ. ஜாலியன் வாலாபாக் படுகொலைக் காட்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைப் பதிவுசெய்திருந்தது. ஜெனரல் டயரின் தலைமையில் வீதிகளைக் கடந்து சென்ற காவலர்களின் அணிவகுப்பை பிரம்மாண்டமாகவும் அதிர்வுடனும் அவர் பதிவுசெய்திருந்தார்.

பத்து வரலாற்று நூல்கள் ஏற்படுத்தாத விழிப்புணர் வையும் தாக்கத்தையும் ஒரு திரைப்படம் தந்துவிட முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தப் படம் அமைந்தது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை இந்தப் படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுடன், வணிகரீதியான வெற்றியையும் பெற்றது. காந்தியின் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வையும், இந்த உலகுக்கு அவர் விட்டுச் சென்ற மகத்தான செய்தி யையும் பரப்பும் வகையில் மேற்கத்திய நாடுகளில் பல அறக்கட்டளைகளும் நிறுவனங்களும் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாகவும் இந்தப் படம் அமைந்தது. 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகர் (பென் கிங்ஸ்லி), சிறந்த இயக்குநர் உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. ஒரு இயக்குநராக ஒருவர் பெறும் அதிகபட்ச வெற்றிகளை அந்த ஒரு படத்திலேயே பெற்றார் அட்டன்பரோ.

“நம் தேசத் தந்தையைப் பற்றிய திரைப்படம் எடுக்க, நம்மை ஆண்ட பிரிட்டனிலிருந்துதான் ஒருவர் வரவேண்டியிருந்தது” என்ற ஆற்றாமையுடன் கூடிய சுயவிமர்சனத்தை இந்தியர்களிடையே ஏற்படுத்திய படமாக ‘காந்தி’ அமைந்தது. “காந்தியை ஹாலிவுட் பார்வையில் பதிவுசெய்த படம் என்றுதான் முதலில் எனக்குத் தோன்றியது. என்றாலும், ஆப்பிரிக்காவின் பல போராளிக் குழுக்கள், இந்தப் படம் தங்களுக்கு மிகுந்த தாக்கத்தையும் போராட்ட வழிமுறையையும் தந்ததாகக் குறிப்பிட்டது முக்கியமான விஷயம்” என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குறிப்பிட்டார். அட்டன் பரோவின் மற்றொரு இந்தியத் தொடர்பு சத்யஜித் ராய் இயக்கிய ‘சத்ரஞ்ச் கே கிலாடி’ படம். 1857-ல் நடந்த சிப்பாய்க் கலகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் ஆங்கிலேய ராணுவ அதிகாரியான ஜெனரல் அவுட்ரம் பாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

ஒடுக்கப்பட்டோருக்காக ஒலித்த குரல்

காந்தியின் வாழ்க்கையைப் படமாக்கியது போலவே, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஸ்டீவ் பீக்கோ என்ற கருப்பினப் போராளியின் வாழ்க்கை வரலாற்றை ‘க்ரை ஃப்ரீடம்’ (1987) என்ற படத்தில் ஆவணப்படுத்தியிருந்தார் அட்டன்பரோ. ஸ்டீவ் பீக்கோ பாத்திரத்தில் நடிகர் டென்சல் வாஷிங்டன் நடித்திருந்தார். அந்தப் படமும் வணிகரீதியான வெற்றியையும் விமர்சனரீதியான வரவேற்பையும் பெற்றது. நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக ஒலித்த குரல்களில் அட்டன்பரோவின் குரலும் ஒன்று.

பிரிட்டிஷ் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ‘தி கிரேட் எஸ்கேப்’ மூலம் ஹாலிவுட்டிலும் புகழ்பெற்ற அட்டன்பரோவுக்கு ஒருகட்டத்தில், ‘பிறரது கற்பனைகளுக்கு ஏற்ப நடிப்பதில்’ ஒரு வெறுமை ஏற்பட்டது. அதுதான் அவரை ஒரு இயக்குநராக்கியது. பல படங்களை இயக்கியும் தயாரித்துமிருக்கும் அட்டன் பரோ பிரிட்டனின் உயரிய விருதுகளைப் பெற்றவர். உயர் பதவிகள் பலவற்றிலும் இருந்தவர். எனினும், அதிகார மட்டத்தில் இருந்துகொண்டே அதன் அத்துமீறல்கள் குறித்து கேள்வி எழுப்பியவர். தனது சாதனைகள் மற்றும் வாழ்வு மூலம், திரைக் கலைஞர் என்ற வார்த்தையை மரியாதைக்குரியதாக மாற்றியவர் என்ற அடையாளம் அட்டன்பரோவுக்கு என்றும் நிலைத்திருக்கும்.

தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.

முத்தமிடுவதால் செத்துவிடுமா கலாச்சாரம்?


பிரான்ஸில் நடந்த சம்பவம் இது. தமிழ் எழுத்தாளர் ஒருவர் பிரெஞ்சு தெரிந்த தனது நண்பருடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். எதிர் இருக்கையில் ஒரு ஜோடி, சூழலையும் மறந்து மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் (முத்தம் உட்பட). இதைப் பார்த்த எழுத்தாளர் தன் நண்பரிடம், “இதெல்லாம் நம் நாட்டில் சாத்தியமா?” என்று கேட்டாராம். “ஏன், உங்களுக்கு அத்தனை ஆசையா?” என்றாராம் நண்பர் சிரித்துக்கொண்டே. “இல்லை. அந்த ஜோடியின் அருகில் இருப்பவரைப் பாருங்கள். எதுவுமே நடக்காததுபோல் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் நம் நாட்டில் சாத்தியமாகுமா என்று வியந்துகொண்டிருக்கிறேன்” என்றாராம் அந்த எழுத்தாளர்.

இந்தியாவில் இதுபோன்ற காட்சிகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில் பல்வேறு சமூகச் சிக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் சராசரிக் குடும்ப அமைப்பின் பின்னணியிலிருந்து வரும் யாரும் இந்தக் காட்சியைச் சாதாரணமாகக் கடந்துவர மாட்டார்கள் தான். ஆனால், பொதுவெளியில் காதலர்கள், தம்பதியர் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வதைத் தடுக்கும் வகையில் ‘கலாச்சாரக் காவலர்கள்’ நடந்துகொள்வதுதான் இன்று பெரும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது. கேரளத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்த முத்தப் போராட்டம் இதற்குச் சரியான உதாரணம்.

கோழிக்கோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. ‘இந்தி யாவில் பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும்தான் வாயைப் பயன்படுத்துவோம். முத்தம் என்ற ஒன்று நம் நாட்டிலேயே கிடையாதே’ என்ற ‘தார்மிக’ கோபத்தில் கொதித்தெழுந்த ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட யுவ மோர்ச்சா என்ற அமைப்பு, அந்த உணவகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தியது. இந்த அராஜகத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்று ஃபேஸ்புக் மூலம் ‘சுதந்திரச் சிந்தனையாளர்கள்’ என்ற அமைப்பினர் ஒன்றுதிரண்டனர். ‘கிஸ் ஆஃப் லவ்’ என்ற பெயரில் முத்தப் போராட்டம் செய்ய அந்த அமைப்பு முடிவுசெய்தது.

கொச்சியில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆயிரக் கணக் கான ஆண்களும் பெண்களும் திரண்டனர். நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் இதில் அடக்கம். யுவ மோர்ச்சா, ஏபிவிபி, பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளும் முஸ்லிம் அமைப்பு ஒன்றும் இந்தப் போராட்டத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கின. எனினும் ஏற்பாடு செய்யப்பட்டதுபோல், முத்தப் போராட்டம் நடைபெறாமல் காவல்துறை ‘கடமை’யாற்றியது. போராட் டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
எனினும், போலீஸ் வேனுக்குள்ளும், காவல் நிலையத் திலும் முத்தமிட்டுக்கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. இதற்கிடையே, கலாச்சாரக் காவலர்களின் கடும் எதிர்ப்பால் ‘கிஸ் ஆஃப் லவ்’ ஃபேஸ்புக் பக்கமும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. தங்கள் தரப்பின் நியாயத்தை, அந்த அமைப்பினர் ஃபேஸ்புக்குக்குப் புரியவைத்த பின்னர், மீண்டும் அந்தப் பக்கம் திறக்கப்பட்டது.

அடிப்படைவாதம் என்ற ஆபத்து

போராட்டத்தில் கலந்துகொண்ட பலர், “கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறலைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒரே காரணத்துக்காகத்தான் இந்த முத்தப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்தோம்” என்று குறிப்பிடு கின்றனர். இப்படியான அதிரடியான முடிவுதான் தங்கள் போராட்டம் குறித்த விரிவான கவனத்தை ஈர்த்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். “வாழ்வதற்கான அடிப்படை உரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அடிப்படை யான இந்திய அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதிரான வைதான் காதலர்கள் மீதான தாக்குதல்கள்” என்று இந்த அமைப்பினர் கொந்தளிக்கிறார்கள்.

காரணம் கலாச்சாரமா?

காதலர் தினக் கொண்டாட்டங்கள், பப் கலாச்சாரம் போன்றவற்றையும் அடிப்படைவாத அமைப்புகள் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றன. காதலர் தினத்தின்போது பொது இடங்களில் சந்தித்துக்கொள்ளும் காதலர்களிடம் தாலியைக் கொடுத்துக் கட்டிக்கொள்ளச் சொல்வது அல்லது காதலனின் கையில் ‘ராக்கி’கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது என்று இவர்கள் செய்யும் அராஜகம் கொஞ்சநஞ்சம் அல்ல.

‘காதலுக்குத் தண்டனை’ என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை பஞ்சாயத்துத் தலைவர்கள் உட்பட, அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கலாச்சாரக் காவலின் தீவிரம் எந்த எல்லையையும் எட்டும் என்பதற்கு உதாரணம் இது. கலாச்சாரத்தைவிடவும் மேன்மையானது மனிதநேயமே என்பதை நாம் இன்னும் உணரவில்லை என்பதுதான் உண்மை. இதுபோன்ற தருணங்
களில் மதத்தின் அடிப்படையில் வேறுவேறு துருவங்களில் செயல்படும் இந்து அடிப்படைவாத அமைப்புகளும், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் ஒரே நேர்க் கோட்டில் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அடிப்படையில், சமூக ஒழுக்கம், பண்பாடு என்று பல்வேறு பெயர்களைச் சொன்னாலும் தங்கள் சமூகத் துக்குள் ‘கலப்பு’ நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பதற்றம்தான் அடிப்படைவாத அமைப்புகளை இயக்குகிறது. காதல், கலப்புத் திருமணம் போன்றவற்றுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை அந்த அமைப்புகள் எடுப்பதற்கும் காரணம் இதுதான். இயல்பாகவே இவற்றுக்கு எதிரான மனப்பான்மையில் இருக்கும் பெற்றோர்களுக்குத் தார்மிக ஆதரவை இதுபோன்ற அமைப்புகளும், குறிப்பிட்ட சில கட்சிகளும் தாராளமாகத் தருகின்றன. அதன் மூலம் அரசியல் ஆதாயத்தையும் அந்த அமைப்புகள் பெறு கின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தெருக்களில், பேருந்துகளில் ஏன் வீடுகளிலேயே பாலியல்ரீதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தியாவில் 53.22 % குழந்தைகள் ஆண்டுதோறும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று சொல்கிறது ஐ.நா-வின் புள்ளிவிவரம்.

இவை பற்றியெல்லாம் எந்தக் கலாச்சாரக் காவலர்களும் கவலைப்படுவதில்லை. காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தால்தான் உங்கள் கலாச்சாரம் பறிபோகிறதென்றால் கலாச்சாரத்தின் உண்மையான அர்த்தம்தான் என்ன?

- தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.

சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்


ஸ்ரீதர் இயக்கிய ‘சிவந்த மண்' திரைப்படத்தின் இந்திப் பதிப்பான ‘தர்த்தி' 1970-ல் வெளியானது. ராஜேந்திர குமார், வஹீதா ரஹ்மான் நடித்த அந்தப் படத்தில் புரட்சி வீரனாக, கவுரவ வேடத்தில் சிவாஜி தோன்றினார். இந்தப் படம்குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. படம் வெளியான அன்று பம்பாயில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாம். அதைக் குறிப்பிட்டு சிவாஜியிடம் ராஜேந்திர குமார் சொன்னாராம், “உங்கள் நடிப்பைப் பார்த்து பம்பாயே நடுங்கிவிட்டது!”
சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) அத்தனை கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள்.
சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி. தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.

வேறென்ன செய்ய முடியும்?

உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்
பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”
சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்குரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி கணேசன் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால்தான் முடியும்.

எப்போதும் மரியாதை

மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை!
- தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை.
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்


Thursday, August 14, 2014

ராபின் வில்லியம்ஸ்: உறைந்த புன்னகை





மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராபின் வில்லியம்ஸ் இறந்துவிட்டார் என்ற தகவல், ஹாலிவுட்டை மட்டுமல்லாமல், உலகமெங்கும் உள்ள திரை ரசிகர்களைத் துக்கத்தில் ஆழ்த் தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எத்தனையோ பேரின் மனஅழுத்தத்தைத் தனது நகைச்சுவை நடிப்பால் நீக்கியவர் தற்கொலை செய்துகொண்டிருப்பாரா என்ற அதிர்ச்சியில் உலக ரசிகர்கள் உறைந்துபோயுள்ளனர்.
அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என்று பலரும் இணையத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல, இந்திய ரசிகர்களும் திரைக் கலைஞர்களும் அவரது மரணத்தால் அதிர்ச்சியடைந் திருக்கின்றனர். இணையத்தில் பாலிவுட் நட்சத்திரங்களின் ‘ஆர்.ஐ.பி.' அஞ்சலி செய்திகள் நிரம்பிவழிகின்றன.
பொதுவாக, அமெரிக்கர்களின் ரசனைக்கேற்ற வகையில் எடுக்கப்படும் படங்களிலும், உலகமெங்கும் உள்ள பொது ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங் களிலும் நடித்து, புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அந்தச் சிறிய பட்டியலில், முக்கிய இடத்தில் ராபின் வில்லியம்ஸ் இருக்கிறார். அவர் நடித்த ‘தி குட்வில் ஹண்டிங்', ‘டெட் பொயெட்ஸ் சொசைட்டி', ‘குட்மார்னிங் வியட்நாம்' போன்ற படங்கள் அமெரிக்க ரசிகர்களையும், ‘ஜுமாஞ்சி', ‘ஃப்ளப்பர்', ‘மிஸஸ். டவுட்ஃபயர்', ‘நைட் அட் தி மியூசியம்' போன்ற படங்கள் உலகெங்கும் உள்ள சாதாரண ரசிகர்களையும் கவர்ந்தவை.

ரிஷிமூலன்

அதேபோல், நகைச்சுவை மிளிரும் பாத்திரங்களிலும், அமைதியான குணம் கொண்ட சாதாரணர்களின் பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்தவர் அவர். அத்துடன், அவர் நடித்த சில படங்கள் தமிழ், இந்தி படங்களின் ரிஷிமூலமாக இருந்தன. குறிப்பாக, அவர் நடித்த ‘மிஸஸ் டவுட்ஃபயர்’ - ‘அவ்வை சண்முகி’யாகவும், ‘பாட்ச் ஆடம்ஸ்’ படம் ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.’ (தமிழில் வசூல்ராஜா) ஆகவும் நம் கண்களுக்குப் பழக்கமானவை.
1951-ல் சிகாகோவில் பிறந்த ராபின், மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்டு நகரப் பள்ளியில் படித்தவர். கிளாரமண்ட் மெக்கென்னா கல்லூரியில் படித்த பின்னர், நியூயார்க்கில் உள்ள ஜுல்லியர்ட் நிகழ்த்துகலைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். சூப்பர் மேன் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் ரீவ்ஸ், இவரது சக மாணவர். கலிஃபோர்னியாவில் உள்ள மரின் கல்லூரியில் மேடை நாடகப் பயிற்சி பெற்றார் ராபின். 1970-களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றார். வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் மோர்க் என்ற பாத்திரத்தில், அவர் நடித்த ‘ஹேப்பி டேஸ்' தொடர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதே பாத்திரத்தை இன்னும் விஸ்தரித்து, ‘மோர்க் அண்ட் மிண்டி' என்ற தொடர் வெளியானது. ‘கேன் ஐ டூ இட்' (1977) என்ற நகைச்சுவைப் படத்தின் மூலம், ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
அங்கீகாரமும் விருதுகளும்
1987-ல் ‘குட்மார்னிங் வியட்நாம்' படத்தில், வியட்நாமில் பணிபுரியும் வானொலி அறிவிப்பாளர் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்தார். ‘குட் மார்னீஈஈஈங்…வியட்நாம்' என்று அவர் பேசுவது போலவே, ‘லகே ரஹோ முன்னாபாய்’ படத்தில் வித்யாபாலன் இழுத்துப் பேசுவார். அந்த வகையில் இந்திய நடிகைகளுக்கும் ‘இன்ஸ்பிரேஷனாக' இருந்திருக்கிறார் ராபின். 'குட்மார்னிங் வியட்நாம்' படத்துக்காக, முதல் கோல்டன் குளோப் விருது பெற்றார். அதே படத்துக்காக, முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ‘டெட் பொயட்’ஸ் சொசைட்டி' படத்தில், ஆங்கில ஆசிரியர் பாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். அதில், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் ‘ஓ கேப்டன் மை கேப்டன்' என்ற கவிதை வரிகளை மாணவர்களிடம் பேசி அவர்களைக் கவரும் காட்சி வெகு பிரசித்தம். அந்தப் படத்துக்காகவும் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
நடிகர் மேட் டாமனுடன் இணைந்து நடித்த ‘குட் வில் ஹண்டிங்’(1997) படத்துக்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அந்தப் படத்தில், உளவியல் மருத்துவராக மிகச் சிறப்பாக நடித்தார். ‘ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்', ‘ஹேப்பி ஃபீட்', ‘அலாதீன்' போன்ற படங்களில் பின்னணிக் குரல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.
பிரபல கார்ட்டூன் பாத்திரமான ‘பாப்பய்’பாத்திரத்திலும் நடித்தார். அமெரிக்காவின் 26-வது அதிபர் தியடோர் ரூஸ்வெல்ட் பாத்திரத்திலும், ‘நைட் அட் தி மியூசியம்' படத்தில் ‘தி பட்லர்' படத்தில் 36-வது அதிபர் டுவைட் ஐசனோவர் பாத்திரத்திலும் நடித்தது, ராபின் வில்லியம்ஸின் தனிச்சிறப்பு. அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “நம்மைச் சிரிக்க வைத்தவர்; அழ வைத்தவர். அளவிட முடியாத தனது திறமையைத் தாராளமாக நமக்குத் தந்தவர்”.

-தி இந்து இதழில் வெளியான கட்டுரை.

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/article6311160.ece?homepage=true&theme=true

Sunday, February 9, 2014

புகச்சோவ், புஷ்கின், புரட்சி மற்றும் புன்னகை

டெல்லியில் உள்ள சாஹித்ய அகாடமி கட்டிடத்துக்கு வெளியே, சாலையோரத்தில் உயரமான பீடத்தின்மீது நின்றபடி  விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அலெக்ஸாண்டர் புஷ்கின். கைகளைப் பின்னால் கட்டியபடி முதுகை சற்று முன்னோக்கி சாய்த்தது போன்ற நிலையில் அந்த ரஷ்யக் கவிஞனின் சிலையைக் கடந்துசெல்லும் டெல்லிவாசிகளில் எத்தனைபேர் அவரை அறிந்திருப்பார்கள். ‘கேப்டன் மகளை’ அவர்கள் தரிசித்திருப்பார்களா என்று எண்ணம் அவ்வப்போது வந்துபோகும்.
கருப்பு நிறத்திலான அந்த சிலையை முதலில் பார்த்தபோது மனதுக்கு நெருக்கமான ஒரு ஆளுமையை முதன்முதலாக நேரில் பார்த்ததுபோன்ற பரவசம் ஏற்படுவது நிஜம். சாகித்ய அகாடமி அருகே அமைக்கப்பட்டுள்ள இலக்கியவாதியின் சிலை புஷ்கினுடையது மட்டும் தான்.  1988-ல் ஒன்று பட்ட இந்தியாவுக்கு வந்திருந்த சோவியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இந்த சிலையைத் திறந்துவைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வராமல் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எடுவர்ட் ஷெவர்ட்னாட்ஸே அந்த சிலையைத் திறந்துவைத்தார் என்று ஒரு குறிப்பு சொல்கிறது. யார் திறந்துவைத்தால் என்ன? ரஷ்ய இலக்கிய பிதாமகரின் உருவச்சிலை இந்திய மண்ணில் நிலைகொண்டிருப்பதே பெருமை தானே! அந்த அற்புத எழுத்தாளனின் நினைவு நாள் இன்று.

அடிப்படையில் கவிஞரான புஷ்கின் ரஷ்ய நவீன இலக்கியத்தின் முன்னோடியாகக் கொண்டாடப்படுபவர். ரொமான்டிசிஸ காலத்திய இலக்கியப் படைப்பாளி. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த ‘கேப்டன் மகள்’ நாவல் புஷ்கினின் மகத்தானப் படைப்புகளில் ஒன்று. அவர் எழுதிய இறுதி நாவலும் அது தான். வெள்ளையான வழவழப்பான தடித்த அட்டையில் பதிப்பிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தில் 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் வெடித்த விவசாயப் புரட்சியின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதை ஒளிந்திருந்தது. பிறப்பதற்கு முன்னரே தனது தந்தையால் ராணுவத்துக்கு கிட்டத்தட்ட ‘நேர்ந்துவிடப்பட்ட’ இளைஞன் பியோத்தர் ஆந்திரேயிச் தான் கதையின் நாயகன். செல்வச்செழிப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளரும் அவன் தன் தந்தையின் கண்டிப்பான உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஓரென்பெர்க்குக்கு அருகில் உள்ள பெலகோர்ஸ்க்  கோட்டையின்  படைப்பிரிவில் சேர்வதற்காக, விசுவாசமிக்க முதிய வேலைக்காரனுடன் தனது பயணத்தைத் தொடங்குவான். செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ராணுவ உயரதிகாரியாக உல்லாசமான வாழ்க்கை வாழலாம் என்று கற்பனையில் மிதந்தவனை, ஒரு அரதப்பழசான கோட்டைக்கு அவனது தந்தை அனுப்பிவிடுவார். அந்தக் கோட்டையில் அவனுக்கு அழகான காதலி கிடைப்பாள். கேப்டனின் மகள்!

பனிபடர்ந்த நிலத்தில் பியோத்தர் தொடங்கும் பயணத்தில் விவசாயப் புரட்சியின் தலைவன் புகச்சோவ், கேப்டனின் மகளும் நாயகியுமான மாஷா, வஞ்சக மனம் படைத்த ஷ்வாப்ரின், கேப்டனின் மனைவி என்ற பெருமையுடன் படைப்பிரிவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்மணி என்று பலரும் நம்முடன் பயணிப்பார்கள். பனிப்புயலில் சிக்கிக்கொள்ளும் பியோத்தரின் ஸ்லெட்ஜ் வண்டியை வழிநடத்தி ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லும் நாடோடி தான் பின்னாட்களில் விவசாயப் புரட்சிக்குத் தலைமையேற்று ரஷ்யாவின் பல இடங்களைக் கைப்பற்றி ஜார் மன்னனுக்கு பெரும் சவாலாக இருந்த புகச்சோவ். பத்திரமான இடத்தைக் காட்டிய அந்த நாடோடி யாரென்று தெரியாமல் விலையுயர்ந்த ஒரு மேலங்கியை அவனுக்குப் பரிசளிப்பான பியோத்தர். அந்த நன்றிக்கடனை மறக்காத புகச்சோவ், தான் கைப்பற்றும் பெலகோர் ஸ்க்  கோட்டை படைப்பிரிவில் இருக்கும் பியோத்தரை அடையாளம் கண்டு அவனைக் கொல்லாமல் விடுவிப்பதுடன், சதிகார ஷ்வாப்ரினிடமிருந்து பியோத்தரின் காதலி மாஷாவையும் மீட்டுக் கொடுப்பான். ஒரு பெரும் புரட்சிக்கே தலைவனான புகச்சோவ், பியோத்தரிடம் இத்தனை கருணை காட்ட அந்த மேலங்கி தான் காரணம். எதற்கும் அஞ்சாத ஒரு வீரனுக்குள் கருணையும் நன்றியும் கலந்திருப்பதை புஷ்கின் அற்புதமாக விவரித்திருப்பார். 

கேப்டன் மகள் மாஷா மீது காதல் கொள்ளும் பியோத்தர் அவளை வர்ணித்து எழுதிய கவிதையை ஷ்வாப்ரின் கிண்டல் செய்வதுடன் அவளது நடத்தை பற்றி இழிவாகப் பேசுவதைக் கேட்டு வெகுண்டெழும் பியோத்தர் ஷ்வாப்ரினுடன் வாட்சண்டைக்குப் போவான். அந்தக் காலத்தில் தங்கள் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ள எதிரிகள் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சண்டை Dual எனப்பட்டது. இருவரும் சண்டைக்குத் தயராகும்போதே, படைப்பிரிவின் மற்ற அதிகாரிகள் வந்து தடுத்துவிடுவார்கள். இருவரின் வாட்களும் பறிமுதல் செய்யப்படும். இதுவரையான சம்பவங்களை யாராலும் எழுதிவிட முடியும். அதற்குப் பிறகு பியோத்தரும் ஷ்வாப்ரினும் நடந்துகொள்வதை எழுத புஷ்கினால் தான் முடியும். தாங்கள் இருவரும் எப்படியாவது சண்டையிட்டுக் கொள்ள வேண்டும் என்று இருவரும் ரகசியமாகத் திட்டமிடுவார்கள். ஒருவரையொருவர் கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் பகைமை கொண்ட  இருவரும் மீண்டும் சண்டையிட்டுக் கொள்வதற்காக சந்தித்து ரகசியமாகத் திட்டமிடுவார்கள்.  பகைவர்கள் தங்கள் பகையைத் தீர்த்துக்கொள்ள தாங்களே திட்டமிடுவது வழக்கத்தை விட எத்தனை முரணானது.அது தான் புஷ்கினின் தனித்தன்மை. அதனால் தான் “புஷ்கின் எழுத்துக்கு முன்னால் யதார்த்தம் கூட செயற்கையாகத் தான் தெரியும்” என்று நிக்கலாய் கோகல்  குறிப்பிடுகிறார். நாவலில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் மொழிபெயர்ப்பாளர் தர்மராஜன். அந்நிய நிலத்தின் வாசனை என்றாலும் அதை உறுத்தலில்லாமல் முகரச்செய்யும் மொழி அவருடையது. இதனால், நேரடி தமிழ் நாவலைப் படிக்கும் உணர்வு தான் வாசகர்களுக்கு ஏற்படும்.

கதையில் வருவதுபோலவே, புஷ்கினும் அடிக்கடி வாட்சண்டையில் ஈடுபட்டவர்தான். 20-க்கும் மேற்பட்ட வாட்சண்டையில் அவர் ஈடுபட்டதாக ஒரு குறிப்பு சொல்கிறது.  இறுதியாக தனது மனைவியின் மீது மையல் கொண்ட பிரபுவுடன் வாட்சண்டையில் ஈடுபட்ட புஷ்கின் அந்த சண்டையிலேயே மரணமடைந்தார். ஒரு எழுத்தாளர் உடல்வலிவுடன் சண்டைத்திறனும் கொண்டிருந்தார் என்பது முற்றிலும் நம்பமுடியாத விஷயம் அல்ல. தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியும் உடற்பயிற்சிகளில் ஆர்வம் காட்டியவர் தான். எனினும் யாருடனும் சண்டைக்கெல்லாம் சென்றதில்லை. புஷ்கின் எழுதிய பல கவிதைகள் ரஷ்ய இலக்கியத்தில் கொண்டாடப்படுகின்றன. 

புஷ்கினின் முன்னோர்கள் பற்றிய தகவல்கள் ஆச்சரியம் தருபவை. அவரது தாயின் தாத்தா ஆப்ராம் பெத்ரோவிச் கேனிபல், கருப்பின அடிமையாக இருந்தவர். அவரை 17-ம் நூற்றாண்டின் புகழ்மிக்க பேரரசரான முதலாம் பீட்டர் அடிமை வாழ்விலிருந்து மீட்டெடுத்து வளர்த்தார். பின்னாட்களில் ரஷ்ய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தார் ஆப்ராம் பெத்ரோவிச். அவரது வழிவந்த புஷ்கினுக்கு அடிமைகள், விவசாயிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்கள் மீது கரிசனம் இருப்பதில் ஆச்சரியமில்லை. விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்படுபவர்கள் பற்றிய அவரது பரிவான குரல் ‘கேப்டன் மகள்’ நாவலில் ஒலிக்கிறது. “குற்றம்சாட்டப்பட்ட ஒருவன் தான் நிரபராதி என்று எத்தனை முறை சொன்னாலும் அது ஏற்கப்படுவதில்லை. ஆனால் பல சித்திரவதைகளுக்குப் பின்னர், தான் குற்றவாளி என்று அவன் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மட்டும் அது ஏற்கப்பட்டு அவனுக்கு தண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்?” என்று புஷ்கினின் கேள்வி இன்றைய சூழலிலும் பொருத்தமானதாக இருப்பது  துரதிருஷ்டமானது.
அதேபோல், ரஷ்ய அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடும் புகச்சோவ் தன்னைக் கொல்லாமல் விட்டாலும் அவனைப் பாசாங்குக்காரன் என்றே கடைசிவரை சொல்கிறான் பியோத்தர். எனினும் ஒரு கட்டத்தில் புகச்சோவை அனைத்து அபாயங்களில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று அவன் மனம் துடிக்கிறது. பியோத்தர் எழுதிய குறிப்புகளை அடிப்படையாக வைத்து எழுதியது தான் என்றாலும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த பியோத்தரின் மன ஓட்டத்தை அதே குணங்கள் கொண்ட புஷ்கினால் தான் புரிந்துகொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

’கேப்டன் மகள்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 4 திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய மொழியிலேயே வெளியான அந்தத் திரைப்படங்களில் ஒன்றான Kapitanskaya Dochka என்ற ரஷ்ய மொழித் திரைப்படம்  யூடியூபில் காணக்கிடைக்கிறது. நாவலை முழுமையாக உள்வாங்கி எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் நடிகர்கள் தேர்வு பிரமிக்க வைக்கிறது. பொதுவாக நாவல்கள் திரைப்படமாக்கப்படும்போது அதுவரை ஒவ்வொரு வாசகனின் பிரத்யேகக் கற்பனையுலகில்   உலாவந்த பாத்திரங்க்ளைத் திரையில் சித்தரிப்பது என்பது திரைக்கலைஞர்களுக்கு சவாலான விஷயம். ஹாலிவுட் முதல் தமிழ் சினிமா வரை இதற்கு உதாரணங்கள் உண்டு. ஒரே நேரத்தில் பலர் காணும் கனவான சினிமாவில் அது சிரமமான காரியம் தான். வாசகன் ரசிகனாகும்போது திருப்தியடையாமல் போவதும் உண்டு. சில சமயம், தங்கள் படைப்புகள் திரையில் சரியாக சித்தரிக்கப்படவில்லை என்று அங்கலாய்க்கும் எழுத்தாளர்களும் உண்டு.

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக், அமானுஷ்யமான கதைகளுக்குப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்டீஃபன் கிங்கின் ‘தி ஷைனிங்’ நாவலை அதே பெயரில் திரைப்படமாகத் தந்தபோது அப் படத்தை ஸ்டீஃபன் கிங் முற்றிலுமாகப் புறக்கணித்தார். ஆனால் அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதுபோல் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், புஷ்கினின் கேப்டன் மகளின் திரைவடிவம் நேர்த்தியான இயக்கம், அற்புதமான நடிகர்கள், உயிர்ப்பான பின்னணி இசை போன்ற அம்சங்களால் நாவலுக்கு முடிந்த அளவுக்கு நேர்மை செய்திருக்கிறது. 1959-ல் வெளியான இந்த கறுப்பு வெள்ளைப் படத்தில் நாவலில் வரும் பல காட்சிகள் வாசகனின் கற்பனைக்கு உயிர்கொடுத்திருக்கின்றன. குறிப்பாக ஓடன்பெர்க் கோட்டையைக் கைப்பற்றும் புகச்சோவ்  கேப்டன் உள்ளிட்டவர்களைத் தூக்கிலிட்ட பின்னர் அந்த உடல்கள் கயிற்றில் ஊசலாடும் காட்சி, ஜார் படையினரால் கைதுசெய்யப்படும் புகச்சோவ் கம்பிகளாலான கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டு வண்டி ஒன்றில் வைத்து எடுத்துச்செல்லப்படும் காட்சி போன்றவை நாவலின் ஜீவனைக் கண்முன் நிறுத்துகின்றன. அதேபோல், சிரச்சேதம் செய்வதற்காகக் கொண்டு செல்லப்படும் புகச்சோவ், பலிபீடத்தின் அருகே நிற்கும் பியோத்தரைக் கண்டு தலையை உயர்த்திப் புன்முறுவல் செய்யும் காட்சியும் அற்புதம். புஷ்கின் இருந்திருந்தால்  படத்தின் இயக்குநர் விளாதிமிர் கப்லுநோவ்ஸ்கியைப்  பார்த்து, உடலில் செருகப்பட்ட வாளுடன் அதேபோன்றதொரு ஸ்னேகப் புன்னகையை சிந்தியிருப்பார். 

(இன்று ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடியான அலெக்ஸாண்டர் புஷ்கினின் நினைவுநாள். அதை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை.)

Thursday, January 23, 2014

யங் அண்ட் பியூட்டிஃபுல் - இச்சை உலகில் இயங்கும் மனம்



இளம் வயதினரின் மனதுக்குள் ஆயிரம் கனவுகள் உண்டு. ஆனாலும் சமூகம், கலாச்சாரம் போன்ற கனமான விழுமியங்களின் போர்வைக்குள் இயங்கும் உலகம் அவர்களுக்கான சுதந்திரத்தை அத்தனை எளிதாக அளித்துவிடுவதில்லை. குறிப்பாக பெண்களுக்கு அது கடுமையாக மறுக்கப்படுகிறது. எனினும் துணிச்சலுடன் அந்த போர்வையை விலக்கிவிட்டு தன்னிஷ்டம் போல் சுதந்திரமாக நடக்க முயலும் பெண்கள் உண்டு. ஆனால் அந்த சுதந்திரத்தைத் தவறாகக் கையாள முடிவு செய்தால் விளைவும் விபரீதமானதாகவே அமைகிறது.
பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்ஸூவா ஓஸோன் இயக்கியுள்ள ‘யங் அண்ட்பியூட்டிஃபுல்’ திரைப்படம் இது குறித்து பிரச்சார மொழியின்றிப் பேசுகிறது.
குடும்ப அமைப்பில் இருந்துகொண்டே சட்டம் மற்றும் சமூகத்தின் பார்வையில் குற்றம் என கருதப்படும் பாலியல் தொழிலில் இறங்குகிறாள் ஒரு இளம்பெண். பதின்ம வயதைப் பூர்த்தி செய்யாத அந்தப் பெண்ணின் இந்த செயலும், பொருளாதாரத் தேவைக்காகவோ, கட்டாயத்துக்காகவோ அன்றி சுய விருப்பத்தைச் சார்ந்தது என்பது தான் பார்வையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியூட்டும் விதமாக அமைகிறது. வீட்டுக்கும், கல்லூரிக்கும் தெரியாமல் இணையம் மூலம் வாடிக்கையாளர்களின் தொடர்பைப் பெற்று பாலியல் தொழிலைத் தொடர்கிறாள் அப்பெண். தனது பெயரை மாற்றி லியா என்ற புனைப்பெயருடன் (அது அவளது பாட்டியின் பெயர்) அவள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறாள். எதிர்பாராத விதமாக அவளது முதிய வாடிக்கையாளர் ஒருவர் உடலுறவின்போது மாரடைப்பால் மரணமடைகிறார். அங்கிருந்து பதட்டத்துடன் வெளியேறி விடுகிறாள் லியா. கசியும் புகையை கூடை போட்டு மூட முயல்வதுபோல் அந்த ரகசியம் அவளைத் துரத்துகிறது. அந்த பயங்கரத்தின் நிழல் அவளது வீடுவரை தொடர்கிறது.
போலீஸ் நடந்த உண்மைகளை அவளது தாயிடம் சொல்கிறது. மொத்தக் குடும்பமும் அதிர்வுக்குள்ளாகிறது. இளம் பெண் என்பதால் கவுன்சிலிங் தந்து அவளை அந்தப்பாதையிலிருந்து திசைதிருப்ப முயல்கின்றனர். இளம் வயது ஆணுடன் பழகவும் அவள் அனுமதிக்கப்படுகிறாள். எனினும், பாலியல் துணையில் மாற்றம் தேவைப்படும் அப்பெண் மீண்டும் பாலியல் தொழிலைத் தொடர முடிவு செய்கிறாள். மறைத்து வைத்திருந்த தனது சிம் கார்டை எடுத்து போனில் பொருத்தியவுடன் வாடிக்கையாளர்களின் குறுஞ்செய்திகள் வரிசையாக வந்து விழுகின்றன. ஒரு வாடிக்கையாளரை முடிவு செய்து ஒரு ஆடம்பர ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருக்கிறாள். அவளது முதிய வாடிக்கையாளர் இறந்தது அந்த ஹோட்டலின் ஒரு அறையில்தான்.
அங்கு வந்துசேரும் வாடிக்கையாளர் ஒரு பெண். வயதானவள். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அமைதியாக இருக்கிறாள் லியா. தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் அந்த முதிய பெண். இறந்த மனிதரின் மனைவி அவள். தனது கணவர் கடைசியாக உடலுறவு கொண்ட பெண்ணை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறாள். இத்தனை வருட தாம்பத்தியத்தில் தனது கணவன் தன்னைத் தவிர வேறு பெண்களை நாடிவந்த விஷயம் தெரிந்தும் ஒரு கட்டத்தில் அதை ஜீரணித்துகொண்ட பெண் அவள். இருவரின் சந்திப்பு லியாவின் மனதில் என்னவோ ஒரு வலியைத் தருகிறது. படம் நிறைவடைகிறது.
குழந்தைகளுக்குத் தனி அறை, ஆண் - பெண் நண்பர்களுடன் தங்கள் பிள்ளைகளை இரவு நேரங்களிலும் வெளியில் அனுப்பும் இயல்பு என்று வாழும் மேற்கத்தியப் பெற்றோரும் தங்கள் குழந்தை பெரிய தவறுகள் செய்து பிரச்சினையில் உழலும்போது அதிர்ச்சியடைகின்றனர். தனது இளமைக் காலத்தில் பல காதல்கள் என்று கட்டற்ற சுதந்திரத்துடன் வளர்ந்த லியாவின் தாய் தனது மகளின் விபரீதமான இரட்டை வாழ்வு குறித்து அதிர்ச்சியடைந்தாலும், அவளை மாற்ற ஆக்கப்பூர்வமாக முயல்கிறாள். படம் அதீதமான பாலியல் இச்சை, தவறான குடும்ப உறவுகள், பெற்றோர்களின் போதிய கவனிப்பின்மையால் வழிதவறும் குழந்தைகள் என்று பல விஷயங்களைப் பேசினாலும் இது தவறு இது சரியென்று நியாயவாதம் பேசவில்லை.
எத்தனை பிரயத்தனங்களுக்குப் பிறகும் தனது மனம் விரும்பும் பாலியல் உறவை லியா நாடிச்செல்வது, அவளது மனநிலையில் பதிவாகிவிட்ட இச்சையால்தான் என்றாலும் தன் வயதையொத்த இளைஞர்களைவிட அதிக வயது கொண்ட முதியவர்களிடம் தான் அவள் தன்னை இழக்க ஒப்புக்கொள்கிறாள். இறந்துபோன ஜார்ஜஸ் பற்றி பெண் போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில்சொல்லும் லியா ஒன்றைக் குறிப்பிடுகிறாள். “ஜார்ஜஸ் இனிமையான மனிதர். என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வார்”. குடும்ப உறவின் சிக்கல்கள் இளம் மனதில் ஏற்படுத்தும் வடு, வேறொரு தவறைத் தூண்டும் காரணியாக அமைகிறது என்ற விஷயம் பூடகமாகச் சொல்லப்படுகிறது.
கான் திரைப்பட விழாவில், பால்மே டி’ஓர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம், உலகமெங்கும் விமர்சகர்களின் ஏகோபித்தப் பாராட்டைப் பெற்றுள்ளது.

'தி இந்து' இதழில் வெளியான கட்டுரை 

Tuesday, January 21, 2014

மண் மணக்கும் புன்னகை மொழி

- வெ.சந்திரமோகன்




’என்னை புதுக்கோட்ட பார்ட்டியில கூப்புட்டாக..காரக்குடி பார்ட்டியில கூப்புட்டாக.. எல்லாத்தையும் விட்டுட்டு என் கெரகம் இந்தக் கரகாட்டக் கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேய்ங்’ என்று கன்னத்தில் கைவத்து கேட்டுக்கொண்டிருக்கும் கவுண்டமணியிடம் கோவை சரளா சலித்துக்கொள்ளும் காட்சியை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது.  மண் வாசம் வீசும் மொழியுடன் அசல் நாட்டுப்புறக் கலைஞரைக் கண்முன் கொண்டு வந்த அந்தப்பாத்திரம் வெற்றி பெற மிக முக்கியக் காரணம் வட்டார மொழிதான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, பொதுவான பேச்சுமொழியில் நாயகனும் நாயகியும் பேசுவது வழக்கமாகிவிட்ட நிலையில், வட்டார வழக்கு என்ற விஷயத்தை அதிக அளவில் இன்றும் கையாள்வது நகைச்சுவை நடிகர்கள் தான். பொதுவான கிராமம் அல்லது நகரம் என்றே கதை நடக்கும் பகுதியை சித்தரிக்கும் தமிழ் சினிமாவில், நகைச்சுவைக் கலைஞர்களின் தனித்திறனால் தான்   வெவ்வேறுப் பகுதிகளில் பேசப்படும் வட்டார மொழிகள் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கின்றன என்றும் சொல்லலாம்.

தொடக்கத்தில் தமிழ்சினிமாவில் ஒரே படத்தில் பல மொழிகள் பேசப்பட்ட வழக்கம் இருந்தது. நாயகனும் நாயகியும் தெலுங்கில் பேச, துணை நடிகர்கள் ஹிந்தியில் பேச நகைச்சுவை நடிகர்கள் மட்டும் தமிழில் பேசிய படங்கள் உண்டு. தமிழ் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவான்களான என்.எஸ்.கிருஷ்ணன் முதல் நாகேஷ் வரை பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மொழிக்குரல் என்ற தனித்துவம் பெரிதாகக் கையாளப்படவில்லை என்றே சொல்லலாம். அப்போது மன்னர் காலத்துக் கதை அல்லது சமூகக்கதை என்ற பாகுபாடு இருந்ததே தவிர, மதுரையில் நடக்கும் கதை அல்லது திருநெல்வேலியில் நடக்கும் கதை என்றெல்லாம் பிரத்யேகமான இடங்களை மையப்படுத்தும் படங்கள் அவ்வளவாக வரவில்லை. ’பட்டணம்’ என்றால் அது சென்னை. கிராமம் என்றால் அது பூஞ்சோலை தான். எனினும், நகைச்சுவை நடிகர்களோ துணை நடிகர்களோ சென்னையின் பிரத்யேக மொழியான ‘மெட்றாஸ் பாஷை’ பேசுவதை அவ்வப்போது பார்க்க முடியும். விளிம்புநிலை மனிதர்கள் பிராமணர்கள் பேசும் பாணியில் பேசியதும் தமிழ் சினிமாவின் தொடக்கத்தில் நடந்தது.

60-களின் இறுதிகளில் வெளியான படங்களில் தேங்காய் சீனிவாசன், சுருளி போன்ற நடிகர்கள் சென்னைத் தமிழை சற்று சிரமப்பட்டுப் பேசி நடித்தனர். ஜெய்சங்கர் நடித்த ‘சி.ஐ.டி. சங்கர்’ படத்தில் அலுவலகத்தில் பொதுமொழியில் பேசும் தேங்காய் சீனிவாசன், நகைச்சுவை நாயகி நடத்தும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடப் போகும்போது சென்னைத் தமிழில் பேசுவார். ’காசேதான் கடவுளடா’ படத்தில் சென்னை குப்பம் பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான அவர் முத்துராமன், ஸ்ரீகாந்த் போடும் திட்டப்படி  சாமியார் போல வேடமிட்டு மனோரமா வீட்டில் தங்குவார். பக்தர்களுக்கு அட்டகாசமாக அருள்மொழி வழங்கினாலும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ‘மெட்றாஸ் பாஷை’ ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும். பிறமொழி பேசுபவர்களாக துணை நகைச்சுவை நடிகர்கள் நடித்த  படங்கள் இன்று வரை வெளியாகின்றன. மலையாள சாயலுடன் தமிழ் பேசும் டீக்கடை நாயர்கள், தலையில் குல்லா, தங்க ஜரிகை, ஜிப்பா சகிதம் ‘நம்பள்கி பணத்த எப்போ திருப்பித் தரப்போறான்?’ என்று கேட்கும் ஈட்டிக்கார சேட்டுகள் போன்ற பாத்திரங்கள் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளிலேயே பயன்படுத்தப்பட்டனர்.

முதன்முறையாக தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த குரலாக சத்தமாக ஒலித்தது கவுண்டமணியிடமிருந்து என்றே சொல்லலாம். நாடகப் பின்புலம் கொண்ட கவுண்டமணி, திரைப்படங்களில் பிறர் போல பொதுமொழியில் பேசாமல் தான் சார்ந்த கொங்கு நாட்டுப் பகுதியில் பேசப்படும் பாணியில் பேசியதாலேயே தனித்து அறியப்பட்டார்.   கிராமப் பின்னணி கொண்ட திரைப்படங்கள் என்றாலும் பொதுவான மொழி பேசும் பாத்திரங்கள் என்பதால் அவரது கொங்கு மொழி தொடக்ககாலப் படங்களில் தனித்துவம் பெறவில்லை. அதேசமயம், வித்தியாசமான முறையில் எதிராளியை (பெரும்பாலும் செந்தில்!) கிண்டல் செய்வதன் மூலம் அவரது நகைச்சுவைக்கு ஒரு பிரத்யேக பாணி அமைந்திருந்தது. 


கோவையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைப் பின்னணியாகக் கொண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘வைதேகி காத்திருந்தாள்’ கவுண்டமணிக்கு  பெரிய வாய்ப்பாக அமைந்தது. படத்தில் வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டு வீடுகள் கொங்குப் பகுதியைக் கண்முன் கொண்டுவர,  சைக்கிள் கடை வைத்திருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாக வரும் கவுண்டமணி பேசும் வசனங்கள் கொங்கு மண்ணின் அசல் மணத்தை ரசிகர்களுக்குத் தந்தன. ”அழகுராஜா ஒரு வல்லவரு..அவர் ஒரு .....நல்லவரு..அப்பிடீன்னு ஊருக்குள்ள இருக்கிற அம்மிணி அக்காகிட்டேயெல்லாம் போய் சொல்லோணும்” என்று செந்திலுக்கு அன்புக் கட்டளையிடும் காட்சியில் கொங்குப் பகுதியின் குறும்பு அழகாக வெளிப்படும். பின்னர் நகர்ப்புற பின்னணி கொண்ட திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் கவுண்டமணி பேசும் பாணியில் பெரிய மாற்றமிருக்கவில்லை. அவரது குரலும் பேசும் முறையும் அவரது அடையாளங்களாகவே மாறின. 

90-களின் தொடக்கத்தில் கொங்குப் பகுதியை மையமாகக் கொண்ட கதைகளுடன் தமிழுக்கு அறிமுகமான கே.எஸ்.ரவிகுமாரின் படங்களில் கவுண்டமணி பேசும் கொங்குமொழி இன்னும் பொருத்தமானதாக அமைந்தது. பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை போன்ற இடங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட ’சேரன் - பாண்டியன்’ திரைப்படத்தில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதற்கு முன்னர், மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் கதை என்றபோதிலும் கவுண்டமணி கொங்கு மொழியில் தான் பேசுவார். ‘சேரன் - பாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து ரவிகுமார் இயக்கிய ‘நாட்டாமை’ படத்தில் கவுண்டமணியின் கொங்கு மொழி அற்புதமாக வெளிப்பட்டது. தனது தாய் யாரென்று தெரியாமல் சொல்லாமல் மறைத்துவைத்து இளம்பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் தனது தந்தை (செந்தில்) மீது கொலைவெறியுடன் அலையும் கவுண்டமணி கடைசியில் தனது தாயைக் கண்டுகொள்வார். அம்மா வேடத்தில் வரும் கவுண்டமணி ”யேங்கோ.. நம்ம ரெண்டுபேருக்கும் பொறந்தானே ஒரு மகென். அவென் எங்கெங்கோ?” என்று கேட்கும் காட்சியில் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘திருமதி பழனிச்சாமி’ படமும் கொங்கு பாஷையில் கவுண்டமணி பேசிய முக்கியமான படம். இதுபோன்ற பல படங்களில் அவரது நடிப்பு சிறக்க அவரது மொழி முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. 

அதேபோல கோவை சரளாவின் கொங்கு பாஷை பிரசித்திப் பெற்றது. கோவையில் பிறந்திருந்தாலும்  மலையாளம் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். எனினும் கவுண்டமணிக்கு இணையான கொங்குக் குரல் அவருடையது. இளம்வயதிலேயே வயதான வேடங்களில் நடித்துவந்த சரளாவுக்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ ஒரு பெரிய திறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கவுண்டமணி சொல்லும் யோசனையை சென் தவறாகப் புரிந்துகொண்டு அவரது மனைவி கோவை சரளாவிடம் மல்லிகைபூ வாங்கித் தரும் காட்சி உச்சகட்ட நகைச்சுவை. செந்திலை துடைப்பத்தால் வெளுத்துக்கொண்டே கவுண்டமணியிடம் சரளா சொல்வார் “இவெங் கூட சகவாசம் வச்சதுக்கு ஒங்களத்தான் மொதல்ல நாலு சாத்து சாத்தோணும்”. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கமல் நடித்த ‘சதிலீலாவதி’ படத்தில் அவரது மனைவியாக நடித்தது கோவை சரளாவின் வாழ்நாள் சாதனை. அதற்கு அவரது கொங்கு மொழி தான் காரணமாக அமைந்தது. அந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தினார் சரளா. தனது கணவனின் தவறான உறவு குறித்து கமல்-சரளா தம்பதியிடம் புகார் சொல்லும் கல்பனாவைக் கமல் சமாதானப்படுத்தும் காட்சி ஒன்றைச் சொல்லலாம். “ஒரு ஆம்புளைக்கி இதுவா அதுவான்னு சாய்ஸ் கொடுக்கக் கூடாது. ரெண்டையும் பொறுக்கிப்புடுவானுங்க” என்று கமல் சொல்லும்போது ”கண்டிசனா செஞ்சிப்போடுவானுங்கோ..கெரகம் புடிச்சவனுங்கோ” என்று ஒரு அறச்சீற்றக் குரல் கொடுப்பார் சரளா. கமலுக்கு சப்தநாடியும் அடங்கிவிடும். 

நகைச்சுவை உலகில் கவுண்டமணிக்குப் பின்னர் கவனம் ஈர்த்த முக்கியக் குரல் மதுரையிலிருந்து ஒலித்தது. வைகைப் புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு மதுரை மண்ணின் மணத்தை திரை ரசிகர்களுக்கு அசலாகத் தந்தார். “யேப்பா..எங்க ஏரியா பக்கம் வம்பு சொல்றது?” “ஆத்தீ..விட்டாக் கொல பண்ணிடுவாய்ங்க போலருக்கே!” என்று மதுரை கிராமப் பகுதிகளில் சலம்பித் திரியும் இளைஞர்களின் பிரதிநிதியாக தமிழ்சினிமாவுக்குள் வடிவேலு நுழைந்தார். உள்ளுக்குள் உதறெடுத்தாலும் எதிராளியை வம்புக்கிழுக்கும் குறும்பு நிறைந்த பாத்திரங்கள் அவரது அடையாளமாக மாறின. ராஜ்கிரணின் கண்டுபிடிப்பு என்றாலும் அவரது முதல் வெற்றி பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ தான். அதில், சைக்கிளில் தன்னை இடித்துவிட்டு செல்லும் உள்ளூர் ரவுடி சற்று தொலைவுக்கு சென்று விட்ட தைரியத்தில் வடிவேலு தனது மிரட்டலைத் தொடங்குவார். “ஏண்ணே..பாத்துப் போனா என்னண்ணே?”. ரவுடி இன்னும் தொலைவு சென்ற பின்னர் ”பெல்லடிச்சி பிரேக் புடிச்சி போனா கொறஞ்சா போய்டுவ?” என்று குரல் கொடுப்பார். பின்னர் தைரியம் உச்சமடைந்த நிலையில், “ஜெயில் பறவை டா நாங்க!” என்று குரலை உயர்த்தி எச்சரிப்பார். ரவுடி சைக்கிளை நிறுத்தி திரும்பி ‘ஆயுதத்தை’ எடுத்த பின்னர் உடலெங்கும் உதறிப்பதற நடுங்கிக்கொண்டே வடிவேலு சொல்வார்” இந்த மம்பட்டியக் கூட நீங்களே வச்சிக்குங்க. நா எப்புடி ஓடுறேங்கிறத மட்டும் பாருங்க”. அந்த காட்சி அவரைப் பெரிய அளவில் அடையாளப்படுத்தியது . அதுவரை அத்தனை அசலான மதுரை வட்டார மொழியைத் திரையுலகம் கண்டதில்லை. 
கவுண்டமணி எல்லா படங்களிலும் கொங்கு பாஷை பேசியது போலவே, வடிவேலுவும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கதைக் களமாகக் கொண்ட படங்களிலும் மதுரை பாஷை தான் பேசினார். பொதுவாகவே கிராமங்களில் பேசும் மொழி கொச்சையானதாக இருக்கும் என்ற பொதுக்கருத்து கொண்ட ரசிகர்கள்,   வட்டார வழக்குகள் குறித்து அதீத கவனம் செலுத்தத் தேவையில்லை என்று பெருந்தன்மையாக விட்டுவிடுவதால் இது சாத்தியமாயிற்று என்று சொல்லலாம். வடிவேலுவின் உடல்மொழி பற்றிப் பேசுவதென்றால் அதற்கு இக்கட்டுரையில் இடமிருக்காது. தமிழுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியக் கலைஞர் அவர். அவருக்குப் பின்னர் கஞ்சா கருப்பு, ’பரோட்டா’ சூரி போன்ற நடிகர்களிடம் மதுரை வட்டார வழக்கு காணப்படுகிறது.  எனினும், வடிவேலு அளவுக்கு அவர்கள் மொழியில் பெரிய ஈர்ப்பு இல்லை.

சென்னையில் பரவலாகப் பேசப்படும் ’மெட்றாஸ் பாஷை’ தமிழ் சினிமாவில் பலமாக ஒலிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் லூஸ் மோகன். ‘இன்னாம்மா.. எத்க்கு என்னாண்ட ராங்கு காட்டுற. அப்பால பேஜாரா பூடும் பாத்துக்க..” என்று கண்ணைச் சுருக்கிக் கொண்டு நின்ற இடத்திலிருந்தே உடலை உயர்த்தி விஸ்வரூபம் காட்டும் குடிகாரப் போக்கிரி பாத்திரங்கள் என்றால் நம் கண்முன் வருவது அவர் தான். அதேசமயம், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் போன்ற ’அரசுப்பணிகளும்’ தமிழ் சினிமாவில் அவருக்குக் கிடைத்தன. பிரதான நகைச்சுவை நடிகர்களின் துணை நடிகராகவே வாய்ப்புகள் அமைந்தாலும் தனது பிரத்யேக மொழி பலத்தின் மூலம் அவருக்கு தனி இடம் கிடைத்தது. ’சட்டம் என் கையில்’ படத்தில் சென்னை குப்பத்து இளைஞர் வேடத்தில் நடித்த கமல்ஹாஸன் லூஸ்மோகனிடம் சென்னை தமிழ் கற்றார் என்ற செய்தி இன்றும் சினிமாவுலகில் நிலவுகிறது. ’படிக்காதவன்’ படத்தில் ஜனகராஜ் பேசும் ”தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..” என்ற புகழ்பெற்ற வசனமும் சென்னைத் தமிழ் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணம். 
நெல்லைத் தமிழைப் பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்கும் இறுதியில் ‘லே’ போட்டால் போதும் எனும் அளவுக்குத் தான் தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. மணி ரத்னம் இயக்கும் படங்களில் நெல்லைத் தமிழ் ஸ்பஷ்டமாக ஒலிக்கும். சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ படம் நெல்லைத் தமிழை மிக மோசமான முறையில் கையாண்ட படம் எனலாம். நெல்லை வட்டார வழக்கு பேசும் நகைச்சுவை நடிகர்களில் நெல்லை சிவா முக்கியமானவர். ”எ.. கட்டபொம்மன் தினெவேலிக்காரன் தானே. அவென் நம்ம மாதிரி தானே பேசியிருப்பான்” என்றபடி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனங்களை நெல்லைத் தமிழில் பேசிக்காட்டும் காட்சி, தமிழ்சினிமாவில் பொதுமொழியை மட்டும் பயன்படுத்தும் படைப்பாளிகளை யோசிக்க வைத்திருக்கும்.

மதுரை வட்டார வழக்கைப் பயன்படுத்தி வடிவேலு பேசிய வசனங்கள் பிற்பாடு தமிழ் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாறின. ‘வந்துட்டா(ன்)யா...வந்துட்டான்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மட்டம்(!) கொஞ்சம் வீக்கு’ போன்ற சொல்லாடல்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் தாக்கம் தந்தவை. ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற கவுண்டமணியின் பொன்மொழி இந்திய அரசியல் குறித்த நுட்பமான கிண்டல். பொதுவாக நாயக நடிகர்கள் பேசும் ’பஞ்ச்’ வசனங்களை அந்தந்த படங்களுடன் ரசிகர்கள் மறந்துவிடுகின்றனர். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதற்கான முக்கியக் காரணம் அவர்கள் மக்களின் மொழியில் பேசுவது தானன்றி வேறென்ன!
-'தி இந்து' பொங்கல் மலரில் வெளியான கட்டுரை.

Friday, January 10, 2014

கலையின்மீது குவியும் மன வெளிச்சம்

இன்று மாலை மயிலாப்பூருக்கு வேறெதோ வேலைக்காக சென்றபோது கபாலீஸ்வரர் கோயில் பக்கம் போகலாமே என்று தோன்றியது. உள்ளே மஞ்சள் விளக்கொளியில் கடவுளர்களின் சந்நிதிக்கு முன்னால் சின்ன சின்ன கூட்டம். அதிக கூட்டமில்லாத கோயில்கள் தான் ஆன்மாவுக்கு மிக நெருக்கமானவை. ஒவ்வொரு பிரகாரத்திலும் கொஞ்ச நேரம் நின்று நகர்ந்தபோது கபாலீஸ்வரர் சந்நிதிக்குள் இருந்து ஒரு குரல் தமிழில் பாடிக் கொண்டிருந்தது. உள்ளே செல்லாமல் நடைபாதையிலேயே நின்றுகொண்டு அதைக் கேட்க கேட்க மனம் லேசானது.  அந்தக் குரல் தந்த அமைதியுடன் உயர்த்திய பார்வையில் ஓங்கி நின்ற கோபுரம் பட்டது. மேகங்களற்ற மெல்லிய நீல நிற வானத்தின் பின்னணியில் கோபுரத்தில் உறைந்திருந்த சிற்பங்களின் அடர்த்தி மனதை அள்ளியது. 
கோயிலுக்குள் நுழைந்த போதே வலது புற மூலையில் சின்னதாக மேடை  அமைத்து அதில் சில இளம்பெண்கள்  பரதம் ஆடிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இப்போது அதை நோக்கி சென்றோம். ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடனக் கலைஞர் தனது அடுத்த நடனத்தின் பின்னணி பற்றி ஆங்கிலத்தில் விவரித்துக் கொண்டிருந்தார். இங்கே எதற்கு  ஆங்கிலம் என்று லேசான எரிச்சல் வந்தது. அப்போது தான் கவனித்தேன். இந்திய உடைகளில் பத்து பதினைந்து வெளிநாட்டுப் பெண்கள் காலை மடக்கி கழுத்தை உயர்த்தி மேடை மீது பார்வையைப் பதித்துக் காத்திருந்தனர்.
நடனக் கலைஞரின் தலைமுடி  போலியானது என்று தெரிந்தது. பேசும் பாணியிலும்  உடல்மொழியிலும் பெண்மை மிளிர்ந்தது. பின்னர் அவர் மேடைக்கு வந்து ஆடத் தொடங்கினார். பின்னணியில் ஒருவர் ஜதி சொல்ல, அழகான குரலில் ஒரு பெண் பாடினார். வீணை, மிருதங்கத்துடன் அவ்வப்போது உடுக்கையும் ஒலித்தது. அதை வாசித்தவர் சங்கு மற்றும் மணி போன்ற ஒலிக்கருவிகளையும் இசைத்தார். நடனக் கலைஞர் நல்ல தேர்ச்சி பெற்றவர். சிவ நடனத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். இசையும், நடனமும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் தானாக உருக்கொண்டு வளர வளர அங்கே கலையின் ஆன்மா மேடையிலும் அதைச் சுற்றிலும் சூல்கொண்டது. நடனம் முடிவுபெறும் தருணம் யாரும் சொல்லாமலேயே அனைவருக்கும் விளங்கியது. நடனக் கலைஞர் தனது கடைசி முத்திரையைக் காட்டியபடி நடனத்தை முடிக்கும் தருணத்தில் கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடன் நடனக்கலைஞர் மேடையிறங்கினார்.
அடுத்து நான்கு இளம்பெண்கள் மேடைக்கு வந்தனர். கல்லூரி மாணவிகளாக இருக்க வேண்டும். அவர்களது நண்பர் குழாம் கையில் விலை உயர்ந்த கேமரா, புத்தக அளவிலான டேப்லேட்டுகளுடன் நடனத்தைப் பதிவு செய்துகொண்டும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டும் இருந்தனர். ஆர்வ மிகுதியில் நண்பர் குழாம் பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஒரு பெண்மணி செல்லக் கண்டிப்புடன் கைகளை மேலும் கீழும் ஆட்டி அமைதியாக இருக்குமாறு புன்னகையுடன் சைகை காட்டினார். தலையாட்டியபடி மவுனமாக கவனிக்க ஆரம்பித்தனர் இளைஞர்கள். ஆடிய நால்வரில் ஒரு பெண்ணிடம் மட்டும் பாவம் சிறப்பாக வெளிப்பட்டது. பச்சை நிற பட்டு ஜொலிக்க புன்முறுவலான முகத்தில் பாவனைகள் மிளிர அழகாக ஆடினார். அதன் பின்னர் அந்த ஆண் நடனக் கலைஞர் சிவ-பார்வதியின் காஸ்மிக் நடனமான தாண்டவம் ஆடத் துவங்கினார். பார்வதியாக அனுபவம் வாய்ந்த ஒரு பெண்மணியும் ஆடினார். கூடவே கல்லூரி மாணவிகளும் ஆடினர். உடுக்கை ஒலிக்க உச்சபட்ச உத்வேகத்துடன் ஆடிய இருவரும் பார்வையாளர்களுக்கு கடவுளர் தம்பதிகளாகவே பட்டிருக்க வேண்டும். அவ்வப்போது கைதட்டல் எழுந்து அடங்கியது. அதன் பின்னரும் நடன நிகழ்ச்சி தொடர்ந்தது. எனினும் நிறைந்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினோம்.  
எந்தக் கலையாக இருந்தாலும் எந்த மேடையாக இருந்தாலும் கலைஞர்கள் அர்ப்பணிப்பான கலைவெளிப்பாட்டுடன் இயங்கினால் அந்தக் கலை  எத்தகைய பார்வையாளரையும் சென்றடையும், அதன் தாத்பரியம் தானே நிலைபெறும்  என்று நினைத்துக்கொண்டேன். மனிதர்களுக்கிடையில் கலை என்ற அம்சம் தோன்றியதன் நோக்கம் அது தானே!