Saturday, May 28, 2011

Friday, May 27, 2011

வார்த்தைகளில் மிளிரும் வண்ணங்கள்: ஜீவானந்தன்


தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நாள். செறந்த நடிகர் விருதை மிகப்பெரும் நடிகர் திலகமான தனுஷுக்கு வழங்கி பேரதிர்ச்சி கொடுத்தது தேசிய விருது தேர்வுக்குழு . என்ன நிர்பந்தமோ முந்தைய ஒப்பந்தமோ தெரியவில்லை!!! திரைக்கதை என்றே பார்த்தாலும் மிக சுமாரான படமான ஆடுகளத்துக்கு ஆறு விருதுகள் என்று அபத்த தேர்வுகள் ஆத்திரத்தை விட ஆச்சர்யத்தை தான் தந்து கொண்டிருந்தன. திடீரென்று முகநூல் நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி கிடைத்தது. ஓவியரும் எழுத்தாளருமான ஜீவானந்தம் எழுதிய 'திரை சீலை' என்ற புத்தகத்துக்கு சினிமா பற்றிய சிறந்த புத்தகத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிழ்ச்சிக்கு காரணம் எப்போதாவது மலரும் அரிய தருணம் போல் உண்மையில் தகுதியானவருக்கு அந்த விருது கிடைத்திருப்பது. 'ரசனை' இதழ்களில் சினிமா பற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அந்த புத்தகம்.

ஜீவானந்தம் என் ஓவிய, எழுத்துலக வளர்ச்சியில் மிக பெரிய ஆதர்சமாக இருப்பவர். என்னை போன்ற ஓவியம், இலக்கியம் ஆர்வம் கொண்ட எத்தனையோ பேருக்கு பெரும் வழிகாட்டியாக இருப்பவர். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரான மணிகண்டன் இவரது சகோதரர். ஜீவாவின் மகனான ஆனந்தும் ஒரு ஒளிப்பதிவாளர் தான். மிக சிறந்த ஓவியரான ஜீவாவின் சினிமா அறிவு வெறும் ரசனை சார்ந்தது மட்டும் அல்ல. அது சுவாசம் போல் அவருக்கு இயல்பிலேயே இருப்பது. கோவை நகரின் பிரசித்தி பெற்ற ஓவியரான ஜீவாவின் தனித்தன்மை மிக்க சினிமா பேனர்கள் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதையல். வெறுமே நாயகன் நாயகிகளை பிரதானபடுத்தாமல் படத்தின் முக்கிய காட்சிகளை இயக்குனர்களை தன் கற்பனை கலந்து பிரமிக்கத்தக்க ஓவியமாய் படைப்பவர். கோவை நகரின் பல ஓவியர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர்.

அவருடனான என் நட்புக்கு காரணம் இளையராஜாவின் இசை தான். சில வருடங்களுக்கு முன் ஒரு இணையத்தில் நான் தத்துபித்தென்று ராஜா பற்றி எழுதிய பதிவுக்கு பிறகு அவரது அறிமுகம் கிடைத்தது.ராஜா மட்டும் அல்ல பல சிறந்த இசைக்கலைஞர்களை ஆராதிப்பவர். முக்கிய ஓவியர் (பல இலக்கிய படைப்புகளுக்கு தன் ஓவியங்கள் மூலம் உயிரூட்டியவர்) எண்பதுகளிலேயே பத்திரிக்கைகளில் சினிமா விமர்சனம் எழுதியவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாய் பழகுபவர். திறமைசாலிகள் பலரிடம் இல்லாத குணம் அது. ஒரு சுவாரசியமான விஷயம். அவர் பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழை பாடமாக படிக்காதவர். அவரது கட்டுரைகளை வாசித்தவர்களுக்கு இது நிச்சயம் ஆச்சர்யமாய் தான் இருக்கும். சரளமான, நேரடியான சந்திப்புகளில் பகிரப்படும் தொனியில் அதே சமயத்தில் உள்ளார்ந்ததாகவும் அமையும் ஜீவாவின் எழுத்து.

முகநூலில் அவரது பல பதிவுகள் கருத்துகள் ஆராதிக்கப்படுபவையாயும் விவாதத்துக்கு உரியவையாயும் இருப்பவை. எனினும் எந்த காலத்திலும் எதிராளி மனம் நோகும்படி பேசியதே இல்லை அவர். நானெல்லாம் 'கருத்து மோதல்' செய்கிறேன் பேர்வழி என்று என் ஆதர்சங்கள் பலரிடம் சற்று அதிகப்படியாய் பேசி புண்படுத்தி இருக்கிறேன். ஜீவாவிடமே அப்படி சில விவாதங்களில் 'கருத்து சுதந்திரத்தோடு' பேசி இருக்கிறேன். அவர் சிறு புன்னகையுடன் " கருத்து மோதல் என்ற பெயரில் நண்பர்களை நான் காயப்படுத்துவதில்லை " என்பார். மேன்மக்கள் மேன்மக்கள் தானே!

ஜீவாவுக்கு கிடைத்த விருது பற்றி ஆங்கில தினசரிகளில், பத்திரிக்கைகளில், எழுத்தாளர்களின் இணைய தளங்களில் கட்டுரைகள் வெளியாகின்றன. சந்தோஷம் என்பது சாதாரண வார்த்தை. அதற்கு மேல் ஒரு வார்த்தை இருக்கும் எனில் அது என் எண்ணத்தின் பிரதிபலிப்பாக தான் இருக்கும்.
அவரது ஓவியங்களில் சில:



ஜீவாவின் வலைப்பூ
http://jeevartistjeeva.blogspot.com/

Saturday, May 14, 2011

தேர்தல் தரும் பாடம்..



ஜெ.க்கு கிடைத்த வெற்றி உண்மையில் எதிர்பார்த்தது தான் என்றாலும் உணர்ச்சி வேகத்தில் 'அந்த பக்கம்-இல்லேன்னா-இந்த பக்கம்' என்று மாற்றி மாற்றி குத்தும் வாக்களர்கள் இம்முறை அவர் பக்கம் சாய்ந்ததன் பலனை வெகு சீக்கிரத்தில் அனுபவிக்கவும் இருக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவராய் எந்த துரும்பையும் கிள்ளி போடாமல் 'மைனாரிட்டி தி.மு.க அரசு' என்று செயற்கை பணிவு குரலில் ஜெயா டிவியில் பேசியதோடு சரி. தமிழ் நாட்டுக்கு என்ன பிரச்சனை வந்தால் எனக்கென்ன என்று கொடநாட்டில் ஓய்வு எடுத்து கொண்டுதான் இது நாள் வரை இருந்தார், ஜெ. உண்மையில் மக்களை பற்றி கவலைப்படாத அரசை மட்டும் குறை சொல்லி பயனில்லை. அதற்கு சரியான முறையில் குரல் எழுப்பி தம் எதிர்ப்பை பதிவு செய்வதன் மூலம் ஆட்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வராத எதிர்க்கட்சி தலைவரையும் தான். ஈழப் பிரச்சனயில் காங்கிரசோடு சேர்ந்து தி.மு.க செய்த துரோகம் மன்னிக்க முடியாதது என்றால், "போர் என்றால் மக்கள் மடிய தான் செய்வார்கள்" என்று திருவாய் மலர்ந்த ஜெ. செய்ததும் துரோகம் தான்.

அதே போல் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியாமல் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது என்பது போன்ற தொனியிலேயே பேசி வருபவர்கள் அதன் உள்விவகாரங்களை கருத்தில் கொள்ளாமல் ராஜா மாட்டினாரா..அப்படி தான் வேண்டும். கனிமொழி கைதாவது எப்போது? போன்ற திண்ணை பேச்சுகளிலேயே திருப்தி அடைகின்றனர்.

மேலும் ஊழல் பெருச்சாளிகளை விரட்டுகிறோம் என்ற எண்ணத்தில் அதில் ஊறி திளைத்த மலைப்பாம்புகளை ஆதரிக்கின்றனர். சாதரணமாக பேசும் நம் மக்கள் "அவன் கொஞ்ச நாள் கொள்ளையடிச்சான் ..இப்போ இவனுங்க அடிச்சிட்டு போகட்டுமே "என்பார்கள். என்ன செய்வது நமக்கு இருக்கும் இரண்டு ஆப்ஷன்களில் எது தற்சமயம் சரியாய் இருக்கிறதோ அதற்கு போடுவோம் என்று சொல்வது தவிர்க்க முடியாததாய் ஆகி விட்டது. ஆனால் ஜெ.வின் ஆணவ போக்கை கடந்த காலங்களில் கவனித்தவர்கள் தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் இருந்தால் மட்டுமே ஜெ. தனது ஆணவ போக்கை (சற்று!) தளர்த்தி கொள்வார் என்கிறார்கள். இப்போதோ மெஜாரிட்டி. இனி என்னென்ன செய்வார் என்பதையெல்லாம் தமிழகம் பார்க்க தான் போகிறது.

அதே சமயத்தில் இது நாள் வரை ஒரு ராஜா போலவும் தனது வாரிசுகள் இளவரச-ரசிகள் போலவும் எண்ணிக்கொண்டு பல தவறுகள் செய்த கருணாநிதிக்கும் அவரது கட்சி (அதாவது குடும்பம்!) யினருக்கும் கிடைத்த சம்மட்டி அடி இது என்பதில் பேரு மகிழ்ச்சி. ஆங்கிலம் ஹிந்தி ரெண்டும் தெரியாத அழகிரியை மத்தியில் ஆட்சிக்கு கொண்டு வந்தது, ஈழ பிரச்னை உச்சகட்டத்தில் இருக்கும்போது டெல்லிக்கு வந்து வாரிசுகளுக்காக பதவி பேரம் நடத்தியது, இலவசங்கள் மூலம் புது கடன்களை ஏற்படுத்தியது, சினிமா உள்ளிட்ட எல்லா துறைகளையும் வளைத்து போட்டது ..போன்ற பட்டியலில் அடங்கா பாவங்களுக்கு கிடைத்த தண்டனையன்றி இது வேறு அல்ல. அதுவும் விஜயகாந்தின் கட்சியிடம் எதிர்க்கட்சி தலைமையை பறி கொடுத்தது அதன் உச்சகட்டம்.

மேலும் காங்கிரஸ் தமிழ் நாட்டில் தோற்றது என்றால் , என்ன என்று கூட கேட்க வேண்டியதில்லை. அது அப்படி தான். ஆனால் அறுபத்தி மூன்று சீட் கேட்க அவர்களுக்கு வந்த தைரியத்தின் பின்னணி ஜெ. டெல்லி வந்து சோனியாவை சந்திக்க்ம்போது தெரியவரும்.
நேற்று ஜெயா டி.வி.யில் ரபி பெர்னாட் சந்தோஷத்தில் குழைந்தபடி ஜெ,விடம் கேட்கிறார்.
"எப்போ டெல்லிக்கு போறீங்க?".ஜெ. சிரித்தபடி கேட்கிறார் "எதுக்கு?" கேட்டவருக்கும் கேட்க சொன்னவருக்கும் தெரியாதா எதற்கு என்று? அடுத்த அறிவிப்பு டெல்லியில் இருந்து வரும் என்று எதிர்பார்ப்போம்.