Monday, November 30, 2009

அய்யா சாருவின் அருமை பெருமைகள்

'தேவதைகள் கால் வைக்க தயங்கும் பிரதேசத்தில் முட்டாள்கள் குதித்தாடியபடி செல்வார்கள்' என்றார் எம்.ஜி. சுரேஷ், அருமை அண்ணன் சாருவின் ஒரு நேர்காணல் குறித்து எழுதியபோது.
எவ்வளவு அறியாமையில் இருக்கிறார், எம்.ஜி.எஸ்.
அண்ணன் சாரு எப்பேர்பட்ட ஆள். உலகெங்கும்
உள்ள மலையாளிகள் அனைவரும் காலையில் பாத்ரூம் செல்வதற்கு முன் அய்யாவின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு சென்றால் தான், எல்லாம் நல்லபடியாய் போகும் என்று அவர் , படத்தை கையிலேயே வைத்துக்கொண்டு தான் தூங்க செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள்.
உலகெங்கும் உள்ள(குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த) இயக்குனர்கள் தங்கள்
படங்களின் முதல் காப்பியை அய்யாவுக்கு அர்ப்பணம் செய்த பிறகே உலகெங்கும் திரையிட செல்கிறார்கள். அகிரா குரோசோவா உயிரோடிருந்திருந்தால் அய்யா அவர்களின் நாவல்களில் ஒன்றை படமாக எடுத்து அன்றே தன் வாழ்நாளை முடித்துக்கொண்டிருப்பார்.

இவ்வளவு அருமை வாய்ந்த நம் அய்யாவை அவமதித்துப் பேசிய எம்.ஜி.எஸ்ஸை நினைத்து
சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அய்யா சாரு பற்றி ஒரு எழவும் தெரியாத தற்குறி தமிழர்களுக்கு அவரின் மேன்மைகளை எடுத்து சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். (அய்யாவை கேரளாவில் அறியாத தெரு நாய் ஒன்று கூட இல்லையாக்கும்!)
என்னமோ சாரு சாரு என்கிறீர்களே , சாரு யாரு? என்று கேட்கும் தமிழர்களே கேளுங்கள் எங்கள் அய்யாவின் அருமை மற்றும் பெருமைகளை..

அய்யா சரியாக எழுத
துவங்கும் முன்பே சு.ரா. போன்ற சுறாக்களை விமர்சன வேட்டையாடிய பெருமை கொண்டவராக்கும். (விமர்சனத்தின் பெரும்பகுதி பிரமிள் எழுதிய கட்டுரையின் காப்பி என்று சொல்பவர்கள் நரகத்துக்கு போக. )
அய்யா நாளிதழ் ஒன்றின் sponsorship இல் காலம் கழிப்பதாய் சொல்பவர்கள் நாசமாய்ப்போக.
அய்யாவின் விமர்சனம் படித்த தமிழ் இளம் இயக்குனர்கள் அவரை ஒரு படத்திலாவது தாதா வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சோறு தண்ணியில்லாமல் வெறும் சிக்கன் பிரியாணி , பீர் பிராந்தி என்று மட்டும் உண்டு தவம் கிடக்கிறார்கள். தாதாவா தாத்தாவா என்பது இயக்குனர்களும் இவரும் மட்டுமே அறிந்த ரகசியமாக்கும்.

அய்யா அவர்கள் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளரும் கூட.
அய்யாவின் கண்டுபிடிப்புகளில் சில:
கண்டுபிடிப்பு நம்பர் 1:

பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்களில் மருந்துக்குக்கூட கற்பழிப்புகள் நடப்பதில்லை.
(ஆதாரம் அய்யா அவர்கள் கழிப்பறைக்கு செல்லும் முன் பிரான்ஸ், ரஷ்யா, பிரேசில் போன்ற அனைத்துலக நாடுகளின் e-paper களை படிக்கிறார். அவற்றில் ஒரு கற்பழிப்பு செய்தி கூட வராததைக்கண்டு ஆச்சரியமடைந்தவாறே கழிப்பறையை நோக்கி ஒரு பெருமிதத்துடன் நடக்கிறார்!)

கண்டுபிடிப்பு நம்பர் 2 :


ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் ஒரு பின் நவீனத்துவ படமாக்கும். என்னய்யா அப்படி பார்க்கிறீர்? சொன்னது யாரு ?
அருமை அண்ணன் சாரு!

கண்டுபிடிப்பு நம்பர் 3 :


செல்வராகவனின் 'புதுப்பேட்டை
' தான் தமிழின் முதல் ஸ்பார்ல்டன் சினிமா. செல்வராகவன் தமிழின் அகிரா குரோசோவா.
கண்டுபிடிப்புகளுக்கு கணக்கேயில்லை.

அய்யா ஒரு அதிரடி நாயகனாக்கும். கலைஞர் முதல் கமல்
வரைக்கும் ஒரு பிடி பிடித்து விடுவார் தெரியுமா ? (சொந்த ஊர் குற்றாலமா எனக்கேட்கும் கஸ்மாலம் யார்?)

தமிழின் ஒரே எழுத்தாளரான அய்யா அவர்கள் , சமூக பொறுப்பாளியும் கூட.
விஜய் டிவி யின் 'நீயா நானா ?' நிகழ்ச்சியில் தம்பிடி பைசா கூட பெற்றுக்கொள்ளாமல் , சினிமாவில் தலைகாட்ட டிவி ஒரு முதல் படி என்றெல்லாம் நினைக்காமல் , தமிழ் மக்களின் நலன் ஒன்றே தன்னலம் என்ற அரிய பெருந்தன்மையுடன் , பங்கேற்றவர்.
(பின்பு ஏனய்யா பேசிய பைசா கைக்கு வரவில்லை என்று ஆனந்த விகடனில் அழுது ஒப்பாரி வைத்தீர் என்று கேட்பவன் யாரடா?)
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோரையும் சிரிக்க வைக்கும் பணியில் தன்னை வெகு நாட்களாக அர்ப்பணித்துக்கொண்டு தனக்கு தெரிந்த தெரியாத புரிந்த புரியாத மொழி திரைப்படங்களையும் , கோடி வீட்டு குப்பனும் சுப்பனும் அறியும் படி செய்யும் விமரசனப்பணியில் ஈடுபட்டு இன்னல்பட்டு வருகிறார்.

அய்யாவுக்கு பிடித்த இசை அமைப்பாளர் ரஹ்.... ஏய் நிறுத்து நிறுத்து! பிடித்த இசை அமைப்பாளர் எதற்கு? பிடிக்காத ஒரே இசை அமைப்பாளர் இளையராஜா என்ற இசை தெரியாத
ஒருவர்.
இததகைய முடிவுக்கு அய்யா
வர காரணம்?

நீண்ட நாட்களாகவே மாபெரும் இசை மற்றும் கலை விமர்சகரான அய்யா சாரு நிவேதிதா அவர்கள் தனக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் செய்து , தமிழ் சமூகத்தின் தீராத அவலமான கொடூரமான இசை தந்து வரும் ,இசை பற்றி எதுவுமே தெரியாத இளையராஜாவை புறக்கணிக்க சொல்லி தனது மேலான விமர்சனப்பணியை எவ்வித உள் மற்றும் வெளிநோக்கம் இல்லாமல் செய்துவருகிறார். எனினும் அறிவே இல்லாத ஜென்மங்களான தமிழ் மக்கள் அவர் போல் இலத்தீன் மற்றும் கிசிக்ககோ(?) இசை கேட்காமல்
இளையராஜாவின் அபசுரங்களை கேட்டு அல்லல்படுகின்றனர். அவருக்கு பிற்பாடு உலக இசை மற்றும் செவ்வாய் கிரகம் மற்றும் சனி கிரக இசை மற்றும் வாயில் நுழைய முடியாத இசை வகைகளை அறிந்தவரான இசையின் எந்திர வடிவமான ஆஸ்கார் புகழ் ரஹ்மானின்
இசையை கேட்க சொல்லியும் எந்தவித லாப நட்ட நோக்கமின்றி சேவை செய்து
வருகிறார்.
அன்னாரின் அருமையான கருத்துக்களை கேட்க விரும்பாத Existentialism என்றால்
என்ன சமாசாரம் என்று கேட்கும் பாவிகள் நிறைந்த தமிழ் மக்கள் இனிமேலாவது திருந்த வேண்டும் என்று அய்யாவின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

(கிசிக்ககோ இசை பற்றி கேள்விப்படாதவர்கள் காதை அறுத்துக்கொள்ள வேண்டும். இது டிக்சிகோ நாட்டை சேர்ந்த இசை அறிஞரும் அங்கு கஞ்சா மற்றும் அபின் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவருமான டின்ச்கி இவருப்புடுங்கி என்ற பெயர் கொண்ட அக்கக்கோ ஆராரிராரோ என்ற மயன் இனத்தை சேர்ந்த ஒருவரின் கண்டுபிடிப்பான இசையாகும். )

அய்யா அவர்கள் இரவு பகல் எந்நேரம் ஆனாலும் நகாரா இசையைக்கேட்டுக்கொண்டே வேலை பார்ப்பவராக்கும்.

அய்யா அவர்களின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
இளையராஜா இசை அமைத்த 'பா' ஹிந்தி படத்தின் இசை ஒரு மாபெரும் நகைச்சுவை என்று பம்பாய் சினிமாக்காரர்கள் பல் தெரிய சிரிக்கிறார்களாம். பம்பாயின் பெரிய பெரிய தலைகள் எல்லாம் போன் போட்டு இவரிடம் சிரியோ சிரியென்று விலா நோக சிரிக்கிறார்களாம். எப்பேர்பட்ட கண்டு பிடிப்பு பார்த்தீர்களா? இது போன்ற ஒன்றை உங்களால் கற்பனை செய்தாவது பார்க்கமுடியுமா மக்களே? இங்கு டெல்லியில் எனது பக்கத்துக்கு வீட்டுக்கார பஞ்சாபி 'பா' இசையைக்கேட்டு வயிறு வலிக்க வலிக்க சிரித்து Safdarjung hospital இல் அட்மிட் ஆகிவிட்டார் என்று அய்யாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ ? எல்லாம் ஞான திருஷ்டி தான் போங்கள்.

ஆனால் அய்யா தனது தத்துவத்தின் இறுதியில் ஒரு குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார்.
மேற்கண்ட தகவலை இல்லை என்று நிரூபித்தால் தான் எழுதுவதையே நிறுத்தி கொள்ளப்போவதாக அய்யா எழுதி இருந்ததை படித்தவுடன் என் இதயமே நின்று விட்டது. அய்யா எழுதவதை நிறுத்தி விட்டால் தமிழகத்துக்கு எப்பேர்பட்ட இழப்பு? தமிழகம் கிடக்குது தமிழகம் , அவருக்கு கட்-அவுட் எல்லாம் வைத்து தலையில் வைத்துக்கொண்டாடும் மலையாள இலக்கிய உலகம் மரித்துப்போய் விடாதா?
இலத்தீன் அமெரிக்கா, பிரான்ஸ் ரஷ்யா போன்ற நாடுகள் மற்றும் செவ்வாய் கிரகத்தின் இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களை யாரிடம் சென்று காட்டி கருத்துப்பெறுவார்கள்?
ஐயோ.. நினைக்கவே மனம் பதறுகிறதே.
எனவே மக்களே, என்னருமை மக்களே அவர் சொல்வது போல் 'பா' இசை இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவை என்று கூறி (அடேய் அறிவு கெட்ட பயலே ! வட இந்தியாவில் பா படத்தின் பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு
இருக்கிறதடா மடையா! என்றெல்லாம் எடுத்தெறிந்து பேசாமல் !) அய்யாவின் எழுதுலகப்பணி என்றென்றும் தொடர வழிவகுக்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் கைப்புள்ளை காமெடியை விட சிறந்த காமெடியை வழங்க அய்யாவை விட்டால் நமக்குதான் ஒரு நாதியுண்டா?

Thursday, October 1, 2009

ஈர நிழல்கள்

ஈர நிழல்கள்

வெ.சந்திரமோகன்
ஒவியங்கள்: வெ.சந்திரமோகன்

கரிய கம்பளிப் போர்வையின் ஒற்றை வட்டத்திட்டாய் உறைந்திருந்த நிலவை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் பிரமோத். குர்கான் நோக்கி செல்லும் சாலையின் ஓரத்தில் அவனது கார் நின்று கொண்டிருந்தது. அதிவேகத்துடன் செல்லும் வாகனங்களின் வெளிச்சங்கள் வேக வேகமாய்க் கடந்து சென்று கொண்டிருந்தன. டிசம்பர் மாதத்துக் குளிர் ஒரு முரட்டுப் பேயைப் போல் உடலை வதைத்துக் கொண்டிருந்தது. அவன் நின்றிருந்த கோலம் நிலவின் அழகில் தன்னை மறந்த ஒரு கவிஞன் போல இருந்திருக்கும், யார் கண்டிருந்தாலும்; அவன் கால்களுக்குக் கீழே, மண்டிய இந்தப் புதர்களில் சாய்ந்து கிடந்த ரத்தம் தோய்ந்த சாக்கு மூட்டையைப் பார்க்காத வரை. கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி நிலவைப் பார்த்தவாறு அசையாமல் நெடுநேரம் நின்றிருந்தான், பிரமோத். நெற்றியில் வேர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. குளிரின் வீர்யமா அல்லது பதற்றமா ஏதோ வொன்றினால் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தான். திரும்பவும் கீழே கிடந்த மூட்டையை ஒரு முறை பார்த்தான். பல துண்டங்களாக்கப் பட்ட தீபிகாவின் உடலிலிருந்து கசிந்த ரத்தம் அங்கங்கே தோய்ந்து போயிருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான்.

"ஏன் நான் ஷ்யாமாகாந்திடம் பேசக் கூடாது?''

"ஏன் பேசணும்னு நான் கேக்கறேன்... என்ன அவசியம்? அவன் தான் உங்க ஆஃபீஸ் விட்டு மூணு மாசம் முன்னாடியே நின்னுட்டானே? இப்ப என்ன பேச்சு.... ஆஃபீஸ் விஷயமா? என்னை என்ன முட்டாள்னு நினச்சியா...?''

"அது எனக்குத் தெரியாது. அவன் என்னோட ஃப்ரண்ட் அவ்வளவுதான். இதுக்கு மேல பேசினா... நானும் பேசுவேன்''

"என்ன உங்க அக்காளை... சொல்லுடி.... என்ன.. என்ன?''

"ப்ளீஸ் டோண்ட் டாக் ரப்பிஷ்...''

"என்ன பேசிட்டேன் நான்? எதுவுமே கேக்கக் கூடாதா...? என்னைப் பத்தி என்ன சொல்லணும்னே.... சொல்லு... சொல்லு...''

"பகவானே, ஏன் இப்படி தினமும் என்ன சித்ரவதை பண்ற பிரமோத்... நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே... டோண்ட் யூ லவ் மி? டு யூ திங்க் ஐம் நாட் லவிங் யூ... டு யூ ஸஸ்பெக்ட் மீ?''

பிரமோத் அவளை மிகவும் விரும்பினான். தீபிகா பீஹாரைச் சேர்ந்தவள். இவன் உத்திரப் பிரதேசத்துக் காரன். டெல்லிலேயே பிறந்து வளர்ந்தவன். NIIT படிக்கும்போது தீபிகாவைக் காதலித்தான். பின்பு நான்கு வருடங்களுக்கு பிறகு இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்து விமரிசையாகக் கல்யாணம் செய்து கொண்டான். தேன் நிலவுக்கு ஜெர்மனி சென்று வந்தான். தீபிகாவைத் திளைக்கத் திளைக்கக் காதலித்தான். அவளும் தான். கல்யாணம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகும் அவர்களின் அந்யோன்யம் இருவரின் நண்பர்களையும் பொறாமைப் பட வைக்கும். எல்லாம் தீபிகா ஒரு எம்என்ஸியில் சேர்ந்தது வரைக்கும் தான். அது ஒரு அமெரிக்கன் கம்பெனி. நைட் ஷிஃப்ட், ஈவ்னிங் ஷிஃப்ட் என்று தீபிகா முன்பை விடவும் பரபரப்பாகிப் போனாள். ஹார்டுவேர் நெட்வொர்கிங் கம்பெனியொன்றை சொந்தமாக நடத்தி வந்தான் பிரமோத். சனி, ஞாயிறு தவிர அவளை சந்திப்பதே அபூர்வமாகிப் போனது இவனுக்கு. சில சமயம் அலுவலக பார்ட்டி, அவுட்டிங் என்று சனி, ஞாயிறுகளிலும் வெளியே செல்ல ஆரம்பித்தாள் தீபிகா.

கல்யாணம் ஆவதற்கு முன்பு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவள் தான். எனினும், தன் வருமானம் இருவருக்கும் தாராளமாய் இருக்கும் என்பதனால், இவளை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டான். அப்போதெல்லாம் இருவரும் சுற்றாத இடங்களே கிடையாது, டெல்லியில். அதெல்லாம் திரும்ப வராத கணங்கள். தொழிலில் கொஞ்சம் அடிவாங்கியிருந்த சமயத்தில் அவள் அப்ளை செய்திருந்த வேலை கிடைத்து விட வேறு வழியின்றி அவனும் சம்மதித்தான். நான்கைந்து மாதங்களில் அவளின் கனத்த சம்பளம் அங்கங்கு வாங்கியிருந்த கடன்களை அடைக்கப் போதுமானதாக இருந்தது. பிரமோத் சற்று ஆசுவாசமாய் உணர ஆரம்பித்தான்.

அவள் வேலைக்கு சேர்ந்து நான்காவது மாதத்தில் ஷ்யாமாகாந்த் வந்து சேர்ந்தான். நேர்த்தியான உடலமைப்பும், வசீகரமான கண்களுமாய் அலுவலக பெண்களின் அன்புக்குரியவனாய் ஆனான். எல்லோருக்குமே நண்பனாய் தான் நடந்து கொண்டான். பால் வித்தியாசங்கள் துடைத்தகற்றப்பட்ட ஆடஞ க்களின் சகஜமான அலுவலக தோழனாய் தான் முதலில் பிரமோத் கண்களுக்குத் தெரிந்தான். அவ்வப்போது வீட்டுக்கு வருவான், மிக அரிதான சந்தர்ப்பங்களில் இருவருக்கும் ஃபோன் செய்து பேசுவான். ஆரம்பத்தில் சகஜமானதாகக் கருதப்பட்ட அவர்களது நட்பு ஒரு கட்டத்தில் உறுத்தத் தொடங்கியது பிரமோதுக்கு. சில சமயம் ஒரு மணிக்கணக்கில் அவனுடன் பேசிக் கொண்டிருப்பாள் தீபிகா. அவனுடன் பேசும் சமயங்களில் அவள் குரலின் குழைவு, பிரமோதுக்கு மிகக் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தத் தொடங்கின.

காதலிக்கும் காலத்தில் இவனிடம் பேசிய குரலின் அதே குழைவு. நண்பர்களிடம் இத்தனை அந்நியோன்யமாக சிரித்துப் பேச என்ன விஷயமிருக்க முடியும்? பிரமோதின் யோசனைகளுக்கு மிக மோசமான பதில் கிடைக்கத் தொடங்கின. போதாக் குறைக்கு ஆஃபீஸ் டூர் சென்றிருந்த இடத்தில் அவன் தோள் மேல் இவள் கை போட்டு சிரிக்கும் புகைப்படம் ஒன்றை இவளது கம்ப்யூட்டரின் மறைக்கப்பட்ட ஃபோல்டரில் கண்டதில் இருந்து அமைதியிழக்க ஆரம்பித்தான். பிரமோத் கேட்கும் எந்த மாதிரியான கேள்விகளுக்கும் அவளிடம் தகுந்த பதில் இருந்தது. எல்லாவற்றிலும் லாஜிக் சரியாக இருந்தது. அதுதான் தீபிகாவின் பலம்; அவள் ப்ரொக்ராமிங் வேகத்தின் பின்புலம் இப்போது இவனைத் வதைக்கத் துவங்கியது. இடையில் நொய்டாவில் வேலை கிடைத்து ஷ்யாமாகாந்த் சென்று விட்டான். ஆனாலும், முன்பைப் போலவே சனி, ஞாயிறுகளில் இவன் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சகஜமாய் வந்து போவதையும், நேரங்கெட்ட நேரத்தில் செல்போனுக்கு அழைத்து "அலுவலக விஷயங்கள்' பேசுவதையும் சுலபத்தில் புறந்தள்ள முடியாது. அதை மீறிய ஏதோவொன்று அவர்களுக்கிடையில் இருக்கிறதென்று தவிக்க ஆரம்பித்தான் பிரமோத்.

அன்று இரவு 11 மணிக்குபோன் செய்திருந்தான் ஷ்யாமாகாந்த். இடையிடையே அட்டகாசமான சிரிப்பும், உரிமை கலந்த அந்நியோன்யமுமாய் தீபிகா நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். டிவியை பார்த்தவாறே இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரமோத். மறுமுனையில் ஏதோ அவன் கேட்டதற்கு பதிலாய் என்ன சொல்வ தென்றே யோசனையில் சற்று சங்கோஜமாய் சிரித்தவாறு "அப்புறம் பேசறேன்.... கண்டிப்பா அப்புறம் சொல்றேன்... பை'' என்று மொபைலை ஆஃப் செய்தாள். சிரிப்பின் மிச்சம் உதட்டில் இருக்க, இவனையும் ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்தபடி, எழுந்து பாத்ரூமுக்கு சென்றாள். பிறகு தான் பார்த்தான், அவள் மொபைல் ஃபோன் அங்கு இல்லை. அப்படியெனில், பாத்ரூமுக்கு எடுத்து சென்று ரகசியம் பேசுகிறாளா? தேவடியாள்... என்ன கொழுப்பு இருக்கும். வெளியில் வரட்டும் என்று காத்திருந்தான்.

"தீபிகா... பாத்ரூமுக்குள்ளே போய் யார்கிட்ட போன்ல பேசிக்கிட்டிருந்த...?'' இவன் சிரித்தபடிதான் கேட்டான். அவளின் சற்றே வெளிறிய முகத்தில் திடீர்ப்புன்னகை மலர்ந்தது.

"ஏதோ யோசனையில மொபைலையும் எடுத்துக்கிட்டு போய்ட்டேன். பாரு பிரமோத்... என்ன ஒரு யந்திர வாழ்க்கை..?''

"போதும் நிறுத்து... நீ அவன் கிட்ட தானே பேசப் போனே... உண்மையைச் சொல்லு தேவடியாள் மகளே....?''

அவளின் லாஜிக் அன்று எடுபடவில்லை.

"ஐ டோன்ட் லவ் யூ... பிட்ச்...'' என்று நெஞ்சில் ஒரு உதை உதைத்தான். அப்படியே கட்டிலில் சாய்ந்தாள், மேல் ஏறி கழுத்தை அவள் தலை தொங்கும் வரை நெரித்தான். பிறகு கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து பலங்கொண்ட மட்டும் பாகம் பாகமாய் வெட்டினான்.

இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத் தான் பிரமோத். அதிகாலை மூன்றரை மணி ஆகி இருந்தது. யாரும் பார்த்து விடுவார்களோ என்று திரும்பிப் பார்த்துக் கொண்டான். வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது. மூட்டையை இங்கே விட்டு விட்டு செல்வதா... வேறெங்கும் கொண்டு போவதா... என்ற யோசனை வந்தது. விடிவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஒரு முறை குனிந்து அந்த மூட்டையைத் தொட்டான். தீபிகாவின் ரத்தம் பிசுபிசுத்துக் கையில் ஒட்டியது. திடீரென்று ஏதோ பேச்சுக்குரல் கேட்பது போல தோன்றியது. அருகில் இருந்த புதரின் மறைவில் சாக்கு மூட்டையை உருட்டித் தள்ளி தானும் அதன்பின் மறைந்து கொண்டான். குரல்கள் நெடுங்கி வருவது போல தோன்றியது. பரிச்சயமான குரல்கள். மெள்ள எழுந்து குரலின் திசையில் பார்த்தான்.

"ரொம்ப பயமாருக்கு... சீக்கிரம் மூட்டையை இறக்கு...''

"இரு.. இரு... இதோ முடிஞ்சாச்சு...''

அந்த இருளில் கரிய நிழல்கள் போல் ஒரு மூட்டையை ஆளுக்கொரு பக்கமாய் சுமந்து வந்த இருவரும், சற்று சிரமப்பட்டு அதை இறக்கினர்.

பிரமோத் பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்தான். அந்த இருளிலும் அவர்கள் யாரென அடையாளம் கண்டு கொண்டு விட்டான். தீபிகாவும், ஷ்யாமாகாந்த்தும்.

"ஆனாலும்... பிரமோதை நீ கொன்னிருக்க வேண்டாம் ஷ்யாமா... என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டான்... பாவம்...'' தீபிகாவின் குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது.

பிரமோத் குனிந்து மூட்டையைப் பார்த்தான். சரியாகக் கட்டப்படாத அதன் ஒரு முனையில் ரத்தம் தோய்ந்த தலை தெரிந்தது.

மணி இரவு பனிரெண்டை தொட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பிரமோத் புரண்டு படுத்தான். ஈவ்னிங் ஷிஃப்ட் முடிந்து திரும்பும் கேபில் அமர்ந்திருந்த தீபிகா ஒரு சிக்னலில் நின்றதும் விழித்துக் கொண்டாள்.

Monday, September 28, 2009

ஐந்து பாட்டில் பீரும் அழுக்கடைந்த பாரும்

நாங்கள் ஆறுபேர், எம்.ஸி.ஏவின் கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட்டுக்காக கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தோம் அப்போது. ஐந்தாவது செமஸ்டருக்கான மினி புராஜக்ட்டை சீனியர் மாணவன் ஒருவனின் பழைய ப்ராஜெக்ட்டை வைத்து தலைப்பு சம்பந்தப்பட்ட இடங்களை find and replace செய்து அவரவர் பெயர்களில் தனித்தனி ப்ராஜெக்ட்டாக சமர்ப்பித்து தப்பித்திருந்தோம். கடைசி செமஸ்டரில் அப்படி முடியாதாகையால் வேறு வழியின்றி சென்னையில் செய்வதென்று முடிவெடுத்து அவரவர் அப்பாக்கள் வட்டிக்கு வாங்கிய காசுடன் ட்ரஸ்ட்புரம் வந்து சேர்ந்தோம். அந்த இடத்தில் அது புதிய வீடு. கீழ் போர்ஷனில் வீட்டுக்காரரும் அவரது அழகான மனைவியும் சுமாரான அவர்களது மகளும் வசித்தனர். அவள் கல்லூரி மாணவி. ஆனால் இந்தக்கதை அந்த வீட்டைப் பற்றியதோ அவளைப் பற்றியதோ அல்ல.தலைப்பில் குறிப்பிட்டதுபோல் நாங்கள் அவ்வப்போது தாகசாந்தி செய்து கொண்ட பாரைப் பற்றியது தான். தங்கியிருந்த மூன்று மாதத்தில் நாங்கள் ப்ராஜெக்ட் செய்த தி.நகர் அலுவலகம் சென்றதை விட இந்த பாருக்கு சென்றது தான் அதிகம். ஆளுக்குத் தகுந்தாற்போல் குவார்ட்டர் அல்லது கட்டிங்குடன் அண்டை பிரேமா காண்டீனில் முட்டை பிரியாணி அல்லது சிக்கன் பிரியாணி அல்லது குஸ்கா சாப்பிடுவோம். லிபர்ட்டி தியேட்டர் செல்லும் வழியில் சாலையின் வலது புறத்தில் உள்ளடங்கினாற் போல் இருந்த ஒயின் ஷாப் அது. அதன் பார் ஒரு மர்மக் குகை. நுழைந்தவுடன் கவுண்டரில் காசு கொடுத்து ஓ.ஸி.யை வாங்க வேண்டியது. எதிர்படும் குடியானவர்களை இடித்துவிடாமல் இடது புறத்திலிருந்து இருட்டான வராந்தாவைக் கடந்து மங்கிய வெளிச்சத்துடன் மிதக்கும் விளக்கொளிப் பகுதிக்குள் நுழைந்தால் அது தான் பார். இடது வலது புறங்களில் கருங்கல் மற்றும் இன்ன பிறவஸ்துகளால் கட்டப்பட்ட பெஞ்சு. பானங்களை வைத்து சாப்பிட அதே கல் மற்றும் இன்ன பிறவற்றால் கட்டப்பட்ட நீளமான மேஜை. எப்போதும் ஒருவிதமான வாசனை மிதந்து கொண்டிருக்கும். பீர், பிராந்தி, ஜின் என்று பலவகை பானங்களுடன் அசைவ வகை உணவுகளின் நெடி நாசியை அடைக்கும். அழுக்கான, ஜன்னல்களே இல்லாத செவ்வக அறைஅது. டேபிளில் கிடக்கும் காலி பாட்டில்களையும் தண்ணீர் பாக்கெட்டுகளையும் அப்புறப்படுத்தி சுத்தமாகத் துடைத்துக் கொடுப்பான் பீட்டர். சின்ன பையன். பதினைந்து தாண்டியிருக்க மாட்டான். எங்களைத் தனியே ஸ்பெஷலாக கவனிப்பவன். எப்போதும் ஒரே பார்வை, ஒரே நடை வேகம். மதுரைப் பக்கம் ஏதோவொரு கிராமத்திலிருந்து வந்தவன் என்றும் வயதான தாயும் ஒரு தங்கையும் உண்டென்றும் ஒரு முறைசொன்னான். அவ்வப்போது ஐந்து பத்து என்று டிப்ஸ் தருவோம்.எங்களுக்கு ரொம்பவும் பிடித்தமான பையன் அவன். அவன் அம்மா ஒரு ஆஸ்த்மா நோயாளி யென்றும் மதுரையில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார் என்றும் சொல்லிருந்தான். கொஞ்சம் திக்குவாய். சரியாகக் காதும் கேட்காது சில சமயங்களில் என்ன சொன்னாலும் என்ன வென்று திரும்பக் கேட்பான். ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் போகப் போக அவனுக்கு இந்த மாதிரி பிரச்னை இருப்பது தெரிந்ததும் நாங்கள் அவனிடம் ஒட்டுதலாய் இருந்தோம். கார்த்தி அவனுக்கு தெரிந்த டாக்டர் ஒருவரிடம் கூட்டிச் செல்வதாக வந்த நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருந்தான். பீட்டருக்கு ஓய்வு நேரம் கிடைப்பதே பெரும்பாடாய் இருந்தது. எனவே, இது சாத்தியமில்லாமல் போயிற்று. ஹோட்டல், பார்களில் இவனைப் போன்று பல பையன்களைப் பார்த்திருந்தாலும் இவனின் வேகம், ஒழுங்கு இவற்றை வேறெவனிடமும் கண்டதில்லை. எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாலும் கண்களைச் சுற்றி ஒருவித சோகம் பசையைப் போல் அப்பியிருக்கும். அவனது கிழிந்த உடைகளில் அவனது வாழ்க்கை பரிதாபமாய் படர்ந்திருக்கும்.நாங்கள் சென்ற பொழுதுகளில் கூட்டம் அதிகம் இருந்ததில்லை. எனவே, குடித்த பின்பு கார்த்தி பொழியும் தத்துவங்கள் ஜனங்களுக்கு பயன்படாமல் காற்றிலேயே கரைந்து விட்டன. ஒரு பீரு விழுங்கியவுடன் அவன் சமீபத்தில் கேள்வியுற்ற ஏதாவது பிரபலமாக அவதாரமெடுத்து விடுவான். ஓரிரண்டு ரவுண்டுகளுக்கு அப்புறம் அவன் தனக்குத் தானே பேச தொடங்கி விடுவதால் தொந்தர வில்லாமல் பிறகு நாங்கள் ஆரம்பிப்போம்.அந்த சமயத்தில் எல்லோரும் ஏதேனும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்தோம். ஆகையால் தண்ணியடித்தால் எங்கள் பேச்சு தத்தமது காதலியைப் பற்றியதாய் தொடங்கும் அல்லது வேறெதிலோ தொடங்கி இதில் முடியும்.ரமணன் ஒருவன் தான் எங்களில் பதிலுக்கு பதில் காதலித்துக் கொண்டிருந்தான். அதாவது இருதலைக் காதல். எஞ்சிய எங்களின் காதலிகள் உள் மனசுக்குத் தெரிந்தவரை தோழிகள் தான். ஆர்வமிகுதியாலும் தன்னம்பிக்கைக் குறைவாலும் அவர்களை காதலிகளாக சித்தரிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாங்கள் இருந்தோம்.எங்களில் சேகர் நல்ல அழகன். ரமணன் அவனுக்கு நேரெதிர். மிகச் சாதாரணமான தோற்றம் கொண்டவன். ஒல்லியாக அறுபதுகளின் இளைஞர்களைப் போன்றஉடலமைப்பு தலைமுடியுடன் இருப்பான். அவனுக்கு ஒரு காதலியும் காதலும் இருப்பது இயற்கையின் விநோதம் என்று தான் நினைத்தோம். அவன் பி.எஸ்.ஸி. ஃபிஸிக்ஸ் படிக்கும் போதிலிருந்தே சின்ன அளவிலான கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றைஅவன் வீட்டு மாடியில் நடத்தி வந்தான். கணிப்பொறி அறிவியலில் எங்களை விட அறிவும் அனுபவமும் கொண்டவன் அவன். ஒருமுறைஎங்கள் வகுப்புத் தோழி நிஷா வீட்டிற்கு சிஸ்டம் ஃபார்மேட் செய்ய என்று போயிருந்தானாம். நிஷாவின் தம்பி தொடங்கி மொத்தக் குடும்பத்தையும் ஒரே நாளில் கவர்ந்து விட்டானாம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு நிஷாவும் அவனும் காதலிக்கிறார்கள் என்றசெய்தி கேட்டு எங்களுக்கு மயக்கம் வராத குறைதான். எனினும், தோழனாகையால் அவனுக்கு அவன் காதல் விஷயத்தில் நாங்கள் ஆதரவாயிருந்தோம். அவ்வப்போது அவன் அவன் தோற்றத்தைப் பற்றி நாங்கள் கிண்டல் செய்யாமலில்லை. ரமணன் இவற்றை அதிகமாக பொருட் படுத்தமாட்டான்.

பேச்சு ஒரு வழியாக நிஷாவைப் பற்றி திரும்பியது. சேகர்தான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாக கிண்டல் செய்பவன். அவள் பற்றிய பேச்சு வந்தவுடன் ரமணன் அமைதியாகி விட்டான். போதையின் உச்சம் நெருங்க நெருங்க காதுகளில் சப்தம் அதிகமாவதையும் பார்வை நிலை கொள்ளாது அலைபாய்வதையும் கடந்து சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் மேஜைக்கு எதிரில் ஒரு வயசானவர் குடித்துக் கொண்டிருந்தார்.நிஷாவின் பெயரைக் குறிப்பிடாமல் ரமணனைக் குறிவைத்து தன் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்தான் சேகர். ஆதரவு வேண்டும் கண்களுடன் ரமணன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் ஏமாளிகள் என்றும் எல்லா அழகான பெண்களும் ஏன் அசிங்கமான ஆண்களையே விரும்புகிறார்கள் என்றும் எங்களைக் கேட்காமல் நேராக ரமணனையே கேட்டுக் கொண்டிருந்தான் சேகர். எக்காளச் சிரிப்பு எங்களில் யாரிடம் தோன்றியது என்று தெரியவில்லை.ரமணன் பெஞ்ச்சை விட்டு தடுமாறி எழுந்தான். வாஷ் பேசின் சென்று காறி துப்பி விட்டு முகத்தைக் கழுவிக் கொண்டு மேஜைக்குத் திரும்பினான். சேகர் இன்னும் சிரிப்பை விடவில்லை.""என்ன ரமணா... உண்மை கசக்குதா?'' என்றான்.ரமணன் முகத்தைச் சுளித்து சிரித்தான்.""நான் உண்மையைச் சொன்னா.... உனக்கு வாந்தியே வந்துடும்....''""என்ன உண்மை... சொல்லு பாப்போம்''எங்களுக்கெல்லாம் வேடிக்கைதான். சூழலை மறந்து விஷயம் எந்த எல்லைக்குப் போகும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் போல் அமைதியாயிருந்தோம்.""சொல்லட்டுமா... சொன்னா இன்னிலேருந்து நீயும் நானும் ஃப்ரெண்ட்ஸô இருக்க முடியாது தெரிஞ்சுக்க...''கார்த்தி பொறுமை இழந்தான்.""அப்படி என்ன தாண்டா ஒங்களுக்குள்ள விஷயம்...? சொல்லத் தொலைங்கடா.''ரமணன், சேகரை ஒருமுறை பார்த்து விட்டு புகார் சொல்லும் தோரணையில் எங்களைப் பார்த்து சொன்னான்.""இவன் என்ன பண்ணிருக்கான் தெரியுமா? போன மாசம் செமினார் அப்ப ஏதோ டவுட் கேட்டுருக்கா நிஷா. இவன் பக்கத்துல உக்காந்து சொல்லிக் குடுத்தவன் எந்திருக்கும் போது அவ கன்னத்தைக் கிள்ளிருக்கான். சண்டே ஃப்ரீயா இருந்தா ஏதாவது சினிமா போலாமான்னு கேட்டுருக்கான். நிஷா என்கிட்ட சொல்லி எவ்ளோ அழுதா தெரியுமா?'' கடைசி வார்த்தை முடியுமுன் அருகில் பட்டாசு வெடித்தது போல் சத்தம் கேட்டது. சேகரின் வலுவான கை ரமணனை அறைந்த வேகத்தில் பீட்டர் ஓடி வந்து விட்டான்.""அண்ணே... வேணாம்ணே.... அடிச்சுக்கா தீங்கண்ணே... சேகரண்ணே.... வுடுங்க வுடுங்க பேசிக்கலாம்.''ரமணனுக்கு கோபம் தலைக்கேறியது. எழுந்த வேகத்தில் ஒல்லியான ஆனால் உறுதியான காலால் சேகரின் விலா எலும்பில் மொத்தென்னு உதைத்தான். விஷயம் இந்த எல்லைக்கு வந்து விடுமென்று அறிந்திராத நாங்கள் இருவரையும் தனித்தனியே இழுக்க வேண்டியதாயிற்று. பீட்டர் இருவரின் நடுவில் நின்று கொண்டு என்னவோ தான் தவறு செய்தது போல் கும்பிட்டுக் கொண்டிருந்தான்.

சேகர் ரமணன் மேல் பாய்ந்தான். பீட்டர் அவன் கை பிடித்து இழுத்தான். "வுடுடா டேய்.. அவன கொல்லாம வுட மாட்டேண்டா" என்று எகிறினான் சேகர். நாங்கள் அவனை இழுப்பதற்குள் பீட்டர் அவன் முன்னால் நின்றபடி "வுடுண்ணா..சேகரன்னா சொன்னா கேளு" என்றான். சேகர் ஒரு கணம் அமைதியானவன் போல் நின்று , உடம்பை சற்று பின் தள்ளி , கையை ஓங்கி பளீரென பீட்டர் கன்னத்தில் அறைந்தான். ஒரு நொடி தான். பீட்டரின் கடைவாயில் ரத்தம் துளிர்த்தது. அவன் அசையாமல் நின்றான். சேகருக்கு ரத்தம் பார்த்தவுடன் பதற்றமாகி விட்டது. தான் என்ன செய்தோம் என்பதை தாமதமாய் உணர்ந்தவனாய் , " பீட்டர் .. ஸாரிடா தம்பி ..வேணும்னு அடிக்கலை டா .." என்றான். அவன் உடம்பு முன்னும் பின்னும் ஆடியது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பீட்டர் வாயை துடைத்தவாறு நகர ஆரம்பித்தான். சேகர் பாக்கெட்டில் கை விட்டு ஐம்பது ரூபாய் நோட்டொன்றை பீட்டர் கையில் திணித்தான்.

பீட்டர் அதை பொருட்படுத்தவேயில்லை. கீழே கிடந்த பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாய் நடந்தான். கடைசி வரை அவன் கண்ணில் கண்ணீரை பார்த்ததாக நினைவில்லை. நாங்கள் கூப்பிட கூப்பிட காதில் விழாதவன் போல் போய்க்கொண்டே இருந்தான். ரமணனும் சேகரும் ஒருமுறை பரஸ்பரம் பார்த்துகொண்டார்கள்.

அதற்கடுத்து வந்த இருபது நாட்களில் நாங்கள் கடைசி நாள் மட்டும் அந்த பாருக்குப் போயிருந்தோம். பீட்டரைக் காணவில்லை. அவனைப் பற்றிய தகவலும் யாருக்கும் தெரியவில்லை. உள்ளே மற்றபையன்களுடன் புதியவன் ஒருவன் இருந்தான். பீட்டரை விடச் சின்னவன்.""தம்பி இங்க பீட்டர்ணு ஒரு பையன் இருந்தானே...''""எனக்குத் தெரியாதுங் கண்ணா. என்னண்ணா வேணும்.... மானிட்டரா.... நெப்போலியனா?''நாங்கள் அன்று குடிக்கவில்லை. அழுக்கடைந்து இருள் கலந்த அந்த பாரில் எதுவும் குடிக்காமல் ஐம்பது ரூபாய் டிப்ஸ் தந்தவர்களை ஆச்சர்யம் தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
-vadakkuvaasal

Monday, July 13, 2009

நிழல்களின் உலகம்

கரிய நிறத்தில் உங்கள் காலடியில்
தவழ்ந்து வரும் நிழலை
கவனித்ததுண்டா நீங்கள் ?

நீங்கள் நினைத்திருப்பதைப் போல்
நிழல்கள் வெறும் நிழல்களல்ல
பலர் நினைத்திருந்ததைப் போல்
இறந்தவர்களின் உயிர்களல்ல பேய்கள்
அவை இருப்பவர்களின் நிழல்கள்

பகல் முழுவதும்
உங்கள் ரொட்டி தின்ற நாய்போல்
உங்களைத் தொடர்ந்து அலையும் நிழல்கள்
உங்கள் இளைப்பாரலுக்குப்பின்
இருளில் அலைந்து திரிகின்றன
ரத்தம் குடிக்கும் பேய்களாய்.

என்னுடைய - உங்களின்
நண்பர்களின் - காதலிகளின் நிழல்கள்
ரகசியமாய் சந்தித்துக் கொள்கின்றன
ராத்திரிகளின் மெளனக் காட்டில்

அவை சந்திக்கும் இடங்களுக்கு
ஒருபோதும் சென்று விடாதீர்கள்
சங்கடமாய் இருக்கும்

உங்கள் சகோதரியின் நிழலுக்கு
நெருங்கிய நட்பு நிழல்
முத்தமிடுவதையும்
என் மனைவியின் நிழலுக்கு
முதிய நிழல் ஒன்று
முத்தமிடுவதையும்
நேரில் கண்டதால் சொல்கிறேன்
அவை பயங்கரமானவை
உடல்களுக்குத்தான் உடைகள்
நிழல்கள் என்றும் நிர்வாணமாய்த்
திரிகின்றன
இரவில் விளக்கொளிகளைக் கொன்று
இருளைக் குடித்து அலையும் நிழல்கள்
பகலில் உங்கள் காலடியில் பயத்துடன்
அலைகின்றன
பாலைவன இரவொன்றில்
நிலவின் கீழ் நெடுநேரம் நின்றிருந்தேன்
மரணம் என் கால்களை
மெளனமாய் பற்றுவதாய்ப் பட்டது
நீண்டு நெளிந்திருந்த என்
நிழலைப் பார்த்தேன்
யாதுமறியாக் குழந்தையின் பாவனையுடன்
சொட்டுச் சொட்டாய் என் உயிரை
உறிஞ்சத் தொடங்கியிருந்தது
அது.

--வெ. சந்திரமோகன்
( வடக்கு வாசல் ஆகஸ்ட் 2007 ல் வெளியான கவிதை )

Saturday, July 11, 2009

நெளியும் நிறக்கோடுகள்

சாத்தியப் புள்ளிகள்
ஏதுமற்ற
கோலங்களை
உன் வாசலில்
வரைகிறாய்.
நிறப்பிரிகை விரலிடுக்குகளின் வழி
கோடாகி நெளியும்
கோல நிறமிகளில்
அகச்சிவப்பு கதிர்கள்.
என் கண்களை ஊடுருவி பின்
அங்கேயே தங்கிவிடுகின்றன.
உன் கோலமயில்கள்
வான்கோழிகளாய் ஓடுகின்றன
என் பாலைவனங்களில்
உன் சித்திரமுயல்கள்
நாய்களை வேட்டையாடின.
பொங்கல் பானையில்
வெந்து கொதிக்கிறது
என் மாமிசம்.
நல்வரவுப் பெண்ணின்
நகங்கள் நீள்கின்றன
பேய் போல்.
ஒரு முறை நீ வரைந்திருந்த
மானொன்று
குடல் சரிய
குத்திக் கிழித்தது
என் வனம் புகுந்து.
உன் கோலக் கோடுகளில்
நெளியும் சர்ப்பங்களின்
தீண்டல்களில் நீலம் பூத்தது
என் நிழல்.

உன் தெருவைக் கடக்கவே
பயமாயிருக்கிறது.

---வெ.சந்திரமோகன்
பிப்ரவரி 2006
வடக்கு வாசல்

கவிதை

சுதந்திரத்தின்

முதல் காற்றை நுகர்ந்தபடி

பசித்தவனுக்கு

கனிகளை கொடுத்திருந்தேன்

தூவி பழக்கப்பட்டவன்

விதைகளை விட்டுச்சென்றான்

நிறைந்த கனிகளுடன்

கல்லடிகளை

வாங்கும்

என்னிடம்

உயிர்நீர் வேண்டி நிற்கின்றன

விதைகள்...

இன்னும் நிரம்பி

வழிகிறது

ஏவாளின்

அட்சய பாத்திரம்.

--- ஜே.எஸ். அனார்கலி

Friday, July 10, 2009

காலம்

காலம்
கண்கொட்டாமல்
பார்த்து கொண்டிருக்கிறது.
பகல் விழித்திருப்பது பற்றியோ
இரவு விழித்திருப்பது பற்றியோ
கவலை இல்லை அதற்கு
யுகயுகங்களாக
கணம் கணமாக
காலம்
கண்கொட்டாமல்
கதை கேட்டுகொடிருக்கிறது.
விதவிதமான மனிதர்களுடையதும்
விலங்குகளுடையதும்கவியின் பருக்கையில் பசியாறிய பறவையினத்தினுடையதுமான கதைகள்
வளர்மரங்களினுடையதும்
அவற்றிலிருந்து கைவிடப்பட்ட
இலைகளினுடையதும் நகர சந்துகளில்
குத்த வைத்திருக்கும் குல தெய்வங்களினதும்
கதைசொல்லிகளின் கதைகளையும்
கூட
காலம் கேட்டுகொண்டிருக்கிறது.
பார்க்கையில்
காலம்
கதைகளால்
நிரம்பியிருக்கிறது.
----ஜே. எஸ். அனார்கலி


கவிதை

நிகழ்வின் பிரதிஎதுமற்ற
சந்தோஷத்தில்
குன்டியாட்டியபடி
நடக்கிறார்கள்
மனிதர்கள்.

- வெ. சந்திரமோகன்