Thursday, October 1, 2009

ஈர நிழல்கள்

ஈர நிழல்கள்

வெ.சந்திரமோகன்
ஒவியங்கள்: வெ.சந்திரமோகன்

கரிய கம்பளிப் போர்வையின் ஒற்றை வட்டத்திட்டாய் உறைந்திருந்த நிலவை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் பிரமோத். குர்கான் நோக்கி செல்லும் சாலையின் ஓரத்தில் அவனது கார் நின்று கொண்டிருந்தது. அதிவேகத்துடன் செல்லும் வாகனங்களின் வெளிச்சங்கள் வேக வேகமாய்க் கடந்து சென்று கொண்டிருந்தன. டிசம்பர் மாதத்துக் குளிர் ஒரு முரட்டுப் பேயைப் போல் உடலை வதைத்துக் கொண்டிருந்தது. அவன் நின்றிருந்த கோலம் நிலவின் அழகில் தன்னை மறந்த ஒரு கவிஞன் போல இருந்திருக்கும், யார் கண்டிருந்தாலும்; அவன் கால்களுக்குக் கீழே, மண்டிய இந்தப் புதர்களில் சாய்ந்து கிடந்த ரத்தம் தோய்ந்த சாக்கு மூட்டையைப் பார்க்காத வரை. கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி நிலவைப் பார்த்தவாறு அசையாமல் நெடுநேரம் நின்றிருந்தான், பிரமோத். நெற்றியில் வேர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. குளிரின் வீர்யமா அல்லது பதற்றமா ஏதோ வொன்றினால் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தான். திரும்பவும் கீழே கிடந்த மூட்டையை ஒரு முறை பார்த்தான். பல துண்டங்களாக்கப் பட்ட தீபிகாவின் உடலிலிருந்து கசிந்த ரத்தம் அங்கங்கே தோய்ந்து போயிருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான்.

"ஏன் நான் ஷ்யாமாகாந்திடம் பேசக் கூடாது?''

"ஏன் பேசணும்னு நான் கேக்கறேன்... என்ன அவசியம்? அவன் தான் உங்க ஆஃபீஸ் விட்டு மூணு மாசம் முன்னாடியே நின்னுட்டானே? இப்ப என்ன பேச்சு.... ஆஃபீஸ் விஷயமா? என்னை என்ன முட்டாள்னு நினச்சியா...?''

"அது எனக்குத் தெரியாது. அவன் என்னோட ஃப்ரண்ட் அவ்வளவுதான். இதுக்கு மேல பேசினா... நானும் பேசுவேன்''

"என்ன உங்க அக்காளை... சொல்லுடி.... என்ன.. என்ன?''

"ப்ளீஸ் டோண்ட் டாக் ரப்பிஷ்...''

"என்ன பேசிட்டேன் நான்? எதுவுமே கேக்கக் கூடாதா...? என்னைப் பத்தி என்ன சொல்லணும்னே.... சொல்லு... சொல்லு...''

"பகவானே, ஏன் இப்படி தினமும் என்ன சித்ரவதை பண்ற பிரமோத்... நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே... டோண்ட் யூ லவ் மி? டு யூ திங்க் ஐம் நாட் லவிங் யூ... டு யூ ஸஸ்பெக்ட் மீ?''

பிரமோத் அவளை மிகவும் விரும்பினான். தீபிகா பீஹாரைச் சேர்ந்தவள். இவன் உத்திரப் பிரதேசத்துக் காரன். டெல்லிலேயே பிறந்து வளர்ந்தவன். NIIT படிக்கும்போது தீபிகாவைக் காதலித்தான். பின்பு நான்கு வருடங்களுக்கு பிறகு இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்து விமரிசையாகக் கல்யாணம் செய்து கொண்டான். தேன் நிலவுக்கு ஜெர்மனி சென்று வந்தான். தீபிகாவைத் திளைக்கத் திளைக்கக் காதலித்தான். அவளும் தான். கல்யாணம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகும் அவர்களின் அந்யோன்யம் இருவரின் நண்பர்களையும் பொறாமைப் பட வைக்கும். எல்லாம் தீபிகா ஒரு எம்என்ஸியில் சேர்ந்தது வரைக்கும் தான். அது ஒரு அமெரிக்கன் கம்பெனி. நைட் ஷிஃப்ட், ஈவ்னிங் ஷிஃப்ட் என்று தீபிகா முன்பை விடவும் பரபரப்பாகிப் போனாள். ஹார்டுவேர் நெட்வொர்கிங் கம்பெனியொன்றை சொந்தமாக நடத்தி வந்தான் பிரமோத். சனி, ஞாயிறு தவிர அவளை சந்திப்பதே அபூர்வமாகிப் போனது இவனுக்கு. சில சமயம் அலுவலக பார்ட்டி, அவுட்டிங் என்று சனி, ஞாயிறுகளிலும் வெளியே செல்ல ஆரம்பித்தாள் தீபிகா.

கல்யாணம் ஆவதற்கு முன்பு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவள் தான். எனினும், தன் வருமானம் இருவருக்கும் தாராளமாய் இருக்கும் என்பதனால், இவளை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டான். அப்போதெல்லாம் இருவரும் சுற்றாத இடங்களே கிடையாது, டெல்லியில். அதெல்லாம் திரும்ப வராத கணங்கள். தொழிலில் கொஞ்சம் அடிவாங்கியிருந்த சமயத்தில் அவள் அப்ளை செய்திருந்த வேலை கிடைத்து விட வேறு வழியின்றி அவனும் சம்மதித்தான். நான்கைந்து மாதங்களில் அவளின் கனத்த சம்பளம் அங்கங்கு வாங்கியிருந்த கடன்களை அடைக்கப் போதுமானதாக இருந்தது. பிரமோத் சற்று ஆசுவாசமாய் உணர ஆரம்பித்தான்.

அவள் வேலைக்கு சேர்ந்து நான்காவது மாதத்தில் ஷ்யாமாகாந்த் வந்து சேர்ந்தான். நேர்த்தியான உடலமைப்பும், வசீகரமான கண்களுமாய் அலுவலக பெண்களின் அன்புக்குரியவனாய் ஆனான். எல்லோருக்குமே நண்பனாய் தான் நடந்து கொண்டான். பால் வித்தியாசங்கள் துடைத்தகற்றப்பட்ட ஆடஞ க்களின் சகஜமான அலுவலக தோழனாய் தான் முதலில் பிரமோத் கண்களுக்குத் தெரிந்தான். அவ்வப்போது வீட்டுக்கு வருவான், மிக அரிதான சந்தர்ப்பங்களில் இருவருக்கும் ஃபோன் செய்து பேசுவான். ஆரம்பத்தில் சகஜமானதாகக் கருதப்பட்ட அவர்களது நட்பு ஒரு கட்டத்தில் உறுத்தத் தொடங்கியது பிரமோதுக்கு. சில சமயம் ஒரு மணிக்கணக்கில் அவனுடன் பேசிக் கொண்டிருப்பாள் தீபிகா. அவனுடன் பேசும் சமயங்களில் அவள் குரலின் குழைவு, பிரமோதுக்கு மிகக் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தத் தொடங்கின.

காதலிக்கும் காலத்தில் இவனிடம் பேசிய குரலின் அதே குழைவு. நண்பர்களிடம் இத்தனை அந்நியோன்யமாக சிரித்துப் பேச என்ன விஷயமிருக்க முடியும்? பிரமோதின் யோசனைகளுக்கு மிக மோசமான பதில் கிடைக்கத் தொடங்கின. போதாக் குறைக்கு ஆஃபீஸ் டூர் சென்றிருந்த இடத்தில் அவன் தோள் மேல் இவள் கை போட்டு சிரிக்கும் புகைப்படம் ஒன்றை இவளது கம்ப்யூட்டரின் மறைக்கப்பட்ட ஃபோல்டரில் கண்டதில் இருந்து அமைதியிழக்க ஆரம்பித்தான். பிரமோத் கேட்கும் எந்த மாதிரியான கேள்விகளுக்கும் அவளிடம் தகுந்த பதில் இருந்தது. எல்லாவற்றிலும் லாஜிக் சரியாக இருந்தது. அதுதான் தீபிகாவின் பலம்; அவள் ப்ரொக்ராமிங் வேகத்தின் பின்புலம் இப்போது இவனைத் வதைக்கத் துவங்கியது. இடையில் நொய்டாவில் வேலை கிடைத்து ஷ்யாமாகாந்த் சென்று விட்டான். ஆனாலும், முன்பைப் போலவே சனி, ஞாயிறுகளில் இவன் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சகஜமாய் வந்து போவதையும், நேரங்கெட்ட நேரத்தில் செல்போனுக்கு அழைத்து "அலுவலக விஷயங்கள்' பேசுவதையும் சுலபத்தில் புறந்தள்ள முடியாது. அதை மீறிய ஏதோவொன்று அவர்களுக்கிடையில் இருக்கிறதென்று தவிக்க ஆரம்பித்தான் பிரமோத்.

அன்று இரவு 11 மணிக்குபோன் செய்திருந்தான் ஷ்யாமாகாந்த். இடையிடையே அட்டகாசமான சிரிப்பும், உரிமை கலந்த அந்நியோன்யமுமாய் தீபிகா நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். டிவியை பார்த்தவாறே இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரமோத். மறுமுனையில் ஏதோ அவன் கேட்டதற்கு பதிலாய் என்ன சொல்வ தென்றே யோசனையில் சற்று சங்கோஜமாய் சிரித்தவாறு "அப்புறம் பேசறேன்.... கண்டிப்பா அப்புறம் சொல்றேன்... பை'' என்று மொபைலை ஆஃப் செய்தாள். சிரிப்பின் மிச்சம் உதட்டில் இருக்க, இவனையும் ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்தபடி, எழுந்து பாத்ரூமுக்கு சென்றாள். பிறகு தான் பார்த்தான், அவள் மொபைல் ஃபோன் அங்கு இல்லை. அப்படியெனில், பாத்ரூமுக்கு எடுத்து சென்று ரகசியம் பேசுகிறாளா? தேவடியாள்... என்ன கொழுப்பு இருக்கும். வெளியில் வரட்டும் என்று காத்திருந்தான்.

"தீபிகா... பாத்ரூமுக்குள்ளே போய் யார்கிட்ட போன்ல பேசிக்கிட்டிருந்த...?'' இவன் சிரித்தபடிதான் கேட்டான். அவளின் சற்றே வெளிறிய முகத்தில் திடீர்ப்புன்னகை மலர்ந்தது.

"ஏதோ யோசனையில மொபைலையும் எடுத்துக்கிட்டு போய்ட்டேன். பாரு பிரமோத்... என்ன ஒரு யந்திர வாழ்க்கை..?''

"போதும் நிறுத்து... நீ அவன் கிட்ட தானே பேசப் போனே... உண்மையைச் சொல்லு தேவடியாள் மகளே....?''

அவளின் லாஜிக் அன்று எடுபடவில்லை.

"ஐ டோன்ட் லவ் யூ... பிட்ச்...'' என்று நெஞ்சில் ஒரு உதை உதைத்தான். அப்படியே கட்டிலில் சாய்ந்தாள், மேல் ஏறி கழுத்தை அவள் தலை தொங்கும் வரை நெரித்தான். பிறகு கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து பலங்கொண்ட மட்டும் பாகம் பாகமாய் வெட்டினான்.

இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத் தான் பிரமோத். அதிகாலை மூன்றரை மணி ஆகி இருந்தது. யாரும் பார்த்து விடுவார்களோ என்று திரும்பிப் பார்த்துக் கொண்டான். வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது. மூட்டையை இங்கே விட்டு விட்டு செல்வதா... வேறெங்கும் கொண்டு போவதா... என்ற யோசனை வந்தது. விடிவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. ஒரு முறை குனிந்து அந்த மூட்டையைத் தொட்டான். தீபிகாவின் ரத்தம் பிசுபிசுத்துக் கையில் ஒட்டியது. திடீரென்று ஏதோ பேச்சுக்குரல் கேட்பது போல தோன்றியது. அருகில் இருந்த புதரின் மறைவில் சாக்கு மூட்டையை உருட்டித் தள்ளி தானும் அதன்பின் மறைந்து கொண்டான். குரல்கள் நெடுங்கி வருவது போல தோன்றியது. பரிச்சயமான குரல்கள். மெள்ள எழுந்து குரலின் திசையில் பார்த்தான்.

"ரொம்ப பயமாருக்கு... சீக்கிரம் மூட்டையை இறக்கு...''

"இரு.. இரு... இதோ முடிஞ்சாச்சு...''

அந்த இருளில் கரிய நிழல்கள் போல் ஒரு மூட்டையை ஆளுக்கொரு பக்கமாய் சுமந்து வந்த இருவரும், சற்று சிரமப்பட்டு அதை இறக்கினர்.

பிரமோத் பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்தான். அந்த இருளிலும் அவர்கள் யாரென அடையாளம் கண்டு கொண்டு விட்டான். தீபிகாவும், ஷ்யாமாகாந்த்தும்.

"ஆனாலும்... பிரமோதை நீ கொன்னிருக்க வேண்டாம் ஷ்யாமா... என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டான்... பாவம்...'' தீபிகாவின் குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது.

பிரமோத் குனிந்து மூட்டையைப் பார்த்தான். சரியாகக் கட்டப்படாத அதன் ஒரு முனையில் ரத்தம் தோய்ந்த தலை தெரிந்தது.

மணி இரவு பனிரெண்டை தொட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பிரமோத் புரண்டு படுத்தான். ஈவ்னிங் ஷிஃப்ட் முடிந்து திரும்பும் கேபில் அமர்ந்திருந்த தீபிகா ஒரு சிக்னலில் நின்றதும் விழித்துக் கொண்டாள்.

No comments:

Post a Comment