Wednesday, December 15, 2010

கவிதைகள்..



அகதி

அறைக்கு வெளியே
இரவின் தடம் பதிந்திருக்கிறது.
என் வெளிச்ச அறைக்கு வெளியே
காத்திருந்து திரும்பியிருக்கிறது
இரவு
தேடிய இரை கிட்டாமல்.
பகல் முடிந்த தருணம் முதல்
பதுங்கியபடி இருந்தேன் அறைக்குள்.
விடியும் வரை இரவின்
வெறி கொண்ட அமைதி
அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது.
கோபம் கொண்ட இரவு
என் வெளிச்சத்தைப் பிடித்திழுத்து
மென்று உமிழ்ந்தது.
ஒருவரை ஒருவர் அணைத்தபடி
நடுங்கிக்கொண்டிருந்தோம்
நானும்
என் நிழலும்.
என்னுடலின் ஒருபாகமும்
சிக்கவில்லை
கதவிடுக்கின் வழி துழாவிய
இரவின் நாவுகளுக்கு.
இன்றும் வருவதாய் சொல்லிச்சென்ற
இரவுக்கு பயந்து
வெளியில் செல்லாமல் கிடக்கிறது
என்னுலகம்.

-வடக்கு வாசல்
பிப்ரவரி 2008


புதிய வாடிக்கையாளன்

வனாந்திர இரவொன்றில்
தனித்து விடப்பட்டேன்.
இருளின் முடிச்சுகளை
தடவி முன்னேறுகிறேன்.
தலைவிரிகோலமாய் பறந்து
காட்டு மரங்கள் ஒன்றையொன்று
புணரும் காட்சியில்
ஒட்டமெடுத்தன பயங்கொண்ட
பேய்கள்.
நான் கொன்றவர்களின் பேய்கள்
என்னை பார்த்தபடியே
கடந்து போயின,
கையசைத்து
குட்டிப்பேயொன்று.
பயந்து வியர்த்ததில்
உடலெங்கும் பூத்தன
உதிரத்துளிகள்.
செத்த யானையொன்றை
இழுத்துச்சென்ற எலி
மரப்பொந்திற்குள் இட்டு
மறைத்தது.
இரவின் நீள் கரங்கள்
நடுங்கும் என் கரங்களைப்
பற்றின.
உதறி ஓட முனைகையில்
பிணங்கள் எழுந்து வந்தன
பிணக்கு தீர்க்க.
பேயின் ஒப்பாரி போல்
கேட்டுக்கொண்டே இருந்தது
அவள் குரல்,
வீடு நோக்கி செல்லும் என்
நேர்பாதை முழுதும்.

-வடக்கு வாசல்
ஜூலை 2006.




என் உலகின் மீச்சிறு கூட்டில்
புழுவொன்று நெளிந்திட
வேறொரு பறவையின் கூர் அலகு
பசியின் நெடி வீச
கொத்த முயல்கிறது
தன் சிறகு
என் வானம் கிழிபடும் வேகம் அதிர.
முன்னெப்போதோ நான் இட்ட எச்சங்களை
என் விந்தாய் உருவகித்து
தன் யோனிக்குள் சொட்டி
மூடிக்கொள்கிறது தன்
விரக ரெக்கைகளை.
நானில்லாத என் அறைக்குள்
அங்குமிங்கும் அலையும்
பறவை
என் நிழல் படிந்து கறையான
தரையில் சிறகதிரப் புரள்கிறது.
என் படுக்கையில்
எச்சமிடுகிறது.
நான் விட்டுச்சென்ற
தனிமையை
கேலி செய்கிறது.
என்னுலகக் கதவு திறக்கும்வரை
காத்திருக்கும் அது
திறந்தவுடன் பறந்துசெல்கிறது
என்
பழைய காதலியாகி.

-உயிரோசை

Tuesday, December 14, 2010

தமிழ் 2010 - டெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒரு பார்வை -பகுதி 1

ஜாக்கெட்டுகள், சால்வைகள், ஸ்வெட்டர்களுக்குள் பதுங்கியபடி டிசம்பர் குளிரை சமாளித்து சற்று கணிசமான எண்ணிக்கையிலான கூட்டம் டெல்லி தமிழ் சங்க விழா ஒன்றிற்கு வந்திருந்தது. சமீபத்திய 'தமிழ் காவியங்களின்' திரையிடலோ அல்லது தமிழகத்திலிருந்து வந்திருந்த 'தலை சிறந்த' நாடக விழாவோ இல்லை தான் என்றாலும். நான் முன்பே சொல்லியபடி தமிழ் சங்கம் தன் நிலைப்பாட்டில் ஒரு இனிய, வரவேற்கத்தக்க மாறுதலை செய்துகொள்ள முன்வந்திருப்பதை பாராட்டவேண்டும். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், கள ஆய்வாளர்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த இலக்கிய கருத்தரங்கு இங்குள்ள பலருக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்பது நிச்சயமான உண்மை.

டிசம்பர் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள்: பிரேம், நாஞ்சில் நாடன், கலாப்ரியா, முத்துலிங்கம், சிற்பி பாலசுப்ரமணியம், பத்ரி சேஷாத்ரி, பேராசிரியர் சந்திரபோஸ், பேராசிரியர் சிவப்ரகாஷ், மொழிபெயர்ப்பாளர் அமரந்தா, இமையம், அம்பை, லிவிங் ஸ்மைல் வித்யா, மறவன் புலவு க. சச்சிதானந்தன், வெளி ரெங்கராஜன், தியோடர் பாஸ்கரன், ரவி சுப்பிரமணியன். எஸ். ராமகிருஷ்ணன் தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலவில்லை என்று சொன்னார்கள். இந்நிகழ்ச்சிக்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வந்திருந்தார். என்னால் முதல் இரண்டு நாட்களுக்கு செல்ல முடியவில்லை. கருத்தரங்கத்தின் கடைசி நாள் மட்டும் சென்றேன். முதல் இரண்டு நாள் நிகழ்சிகளை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தை போக்கும்வண்ணம் கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை தொகுத்து ஒரு தரமான புத்தகமாக வெளியிட்டும் இருக்கிறார்கள். பல கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. நிச்சயம் மாற்றத்துக்கும், விவாதத்துக்கும், வரவேற்புக்கும் உரிய கட்டுரைகள் அவை. குறிப்பாக பிரேமின் உரை அற்புதமாக இருந்தது என்று பலர் சொன்னார்கள்.நான் அதை தவற விட்டாலும் புத்தகத்தில் படிக்க கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. பொதுவாக கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு இறுதி நாளில் கிடைத்துவிடும் என்றாலும் அவ்வளவு தரமாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான்.ஆனால் புத்தகம் நல்ல தரத்துடனும் பொலிவுடனும் தயாராகி இருக்கிறது. விலை ரூபாய் நூற்றைம்பது. நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று சலுகை விலையில் (நூறு ரூபாய்) கிடைத்தது.

நானும் நண்பர் வரதராஜனும் செல்லும்போது மூன்றாம் நாளின் இரண்டாம் அமர்வு நடந்துகொண்டிருந்தது. இமையமும், அம்பையும் பேசிஇருந்தார்கள். டெல்லி பல்கலை கழகத்தின் பேராசிரியர் ராஜகோபால் நெறியாளுகை செய்த அந்த அமர்வில் அடுத்து பேசவிருந்த லிவிங் ஸ்மைல் வித்யா சற்று சங்கடப்படும்படியான வார்த்தைகளை ராஜகோபால் உபயோகித்தார் என்று நினைத்தேன். எனக்கு பேராசிரியர் ராஜகோபாலை ஓரளவு தெரியும். தான் சொல்வது தவறென்று கூட தெரியாத அளவுக்கு வெளிப்படையான மனதுள்ளவர். இந்த மாதிரியான விழாவில் வித்யா போன்றவர்கள் கூட பங்கெடுக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி என்ற தொனியில் அவர் பேச எனக்கு அது சற்று அதீதம் என்றே பட்டது. . தமிழகத்தை சேர்ந்த திருநங்கைகள் பிற மாநிலங்களில் பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதற்காக வேதனைப்படுவதாக அவர் சொன்னதும் , அது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும், பேச்சின் தொனி சற்று காயப்படுத்துவதாய் அமைந்தது சற்றே உறுத்தலாய் இருந்தது. பேச வந்த வித்யா மிக சரியாக அதற்காக நீங்கள் இவ்வளவு வேதனைப்பட வேண்டாம், நாங்களும் உங்களைப்போல் சக மனிதர்களே என்று சொன்னார்.. ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் பற்றிய அந்த அமர்வில் பேசிய இமையம், அம்பை, வித்யா ஆகிய மூவரின் கருத்தும் கிட்டத்தட்ட ஒன்றே என்று தோன்றுகிறது. தலித், பெண்கள், திருநங்கைகள் - பற்றிய இலக்கியமாகட்டும் இலக்கியத்தை வகைப்படுத்தும் முறையாகட்டும் , அவர்களை பற்றிய பொதுவான பார்வையாகட்டும்- சற்றே மேம்போக்காக அல்லது 'பெருந்தன்மையுடன் அணுகும்' பாவனையுடன் அதே சமயத்தில் அவர்களை ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வைத்திருப்பதன் மூலம் தங்கள் தளத்தை வசதியாக உயர்த்திக்கொள்ளும் சமூகத்தையும் எழுத்தாளர்களையும் சாடும் வகையிலேயே அமைந்திருந்தது. இந்த குரல் நிச்சயம் தேவை என்றே படுகிறது. (என்றாலும் தலித் இலக்கியம் பற்றிய இமையத்தின் 'தற்போதைய' பார்வை நிச்சயம் விவாதத்துக்குரியது என்றே தோன்றுகிறது. அது பற்றி வேறு பதிவில் எழுதுவேன்)

சங்ககால இலக்கியத்திலும் தற்கால இலக்கியத்திலும் மிக சிறிய அளவே திருநங்கைகளை பற்றிய பதிவுகள் இருப்பதாக சொன்ன வித்யா அந்த சிறிய அளவு பதிவும் பெருமளவு திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதத்திலேயே இருப்பதாக சொன்னபோது மனம் கனத்தது. பெண்ணாக பிறந்து ஆண் மனதுடன் வளரும் திருநம்பிகளை பற்றி குறிப்புகளே தமிழ் இலக்கியத்தில் இல்லை என்றும் அவர் சொல்கிறார்.

மேலும்..