Thursday, August 11, 2011

கார்லிடோஸ் வே: நிழலில் கரையும் நியாயங்கள்


வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் தரையில் படுத்துக்கொண்டு டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும் சுகத்தின் மேன்மையை என்னை போன்ற சோம்பேறிகள் அறிவார்கள். அதிலும் எதிர்பாராதவிதமாக ஏதாவது நல்ல படங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ காணக்கிடைத்தால் ஒரு இன்ச் கூட நகராது உடல். திரையில் நானா படேகரோ, டென்சல் வாஷிங்க்டனோ , ஜான் ட்றவால்டோவோ தோன்றினால் அடுத்த சேனல் பட்டனுக்கு விரலும் நகராது. படம் சாதாரணமாய் இருந்தாலும் தங்களது தனித்த நடிப்பால் படத்தை தாங்கி நிற்பார்கள். அலட்சியமான அதே சமயத்தில் தீவிரத்தன்மை குறையாத நடிப்பு திறன் கொண்ட இந்த நடிகர்களின் வரிசையில் எனக்கு மிகவும் படித்தவர் அல் பசினோ. அவர் படங்களில் எனக்கு காட்பாதர் வரிசை படங்கள் மிக விருப்பமானவை. பேசும் கண்களும் உயர்ந்து தாழும் புருவங்களும் போதும் ; எந்த வசனமும் தேவைப்படாது காட்சியின் சூழலை புரிந்து கொள்ள. அற்புத நடிகர்.நமக்கெல்லாம் நன்கு பரிச்சயப்பட்ட நடிப்பு, உடல்மொழி , முகபாவனை என்று நம்மிடம் இருந்து அதிகம் அந்நியப்படாத ஒருவராக அல் பசினோ காட்சி தர கமல்ஹாசனே காரணம். நகல் நாயகனுக்கு நன்றி.

என்ன தான் ஒலக சினிமா ரசிகர் என்றாலும் ஹாலிவுட் படங்களில் "இட் சீம்ஸ் டு பீ டெட்" என்ற எளிய (!) வாக்கியம் கூட காதில் விழும்போது புரிபடாது. "இட் சிம் டு பீடேட்" என்று அமெரிக்க தோரணையில் உச்சரிப்பு மிரட்டும் . என்னை போன்ற 'ஆங்கிலப்புலமை' கொண்ட பாமரர்களுக்கு என்றே நல்லுள்ளம் கொண்ட ஆங்கில திரைப்பட சேனல்காரர்கள் ஆங்கிலத்திலேயே சப் டைட்டில் போடுகிறார்கள். (மணிரத்னம் , கௌதம் மேனன் போன்ற மேதைகளின் படங்களில் தமிழிலேயே சப் டைட்டில் தேவைப்படுவது வேறு விஷயம்!). எனவே படத்தின் கதையையும் வசனங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

போன வாரம் ஹோம் பாக்ஸ் ஆபீசில் Carlito's way என்ற படம் வந்தது. அல் பசினோவும், தற்போது லஜ்ஜையின்றி நகல் எடுக்கப்பட்டு தலை தெறிக்க ஓடி தமிழகத்தின் தரைகளை கண்ணீரால் கழுவிக்கொண்டிருக்கும் "தெ. தி. மகள்" படத்தின் மூலப்பட நடிகர் சீன் பென்னும் நடித்தது. சீன் பென்னின் "Dead man walking" திரைப்படம் என்னை உறைய வைத்த படங்களில் ஒன்று. பின்னணி இசையில் நம் பக்கத்துக்கு வீட்டு வித்வான் மறைந்த நுஸ்ரத் பதே அலிகானின் ஆலாபனைகள் நம்மை உலுக்கி எடுக்கும். மரண தண்டனை கைதிக்கும் அவரை தண்டனையில் இருந்து காப்பாற்ற போராடும் கிருஸ்துவ பாதிரிப் பெண் ஒருவருக்கும் நடக்கும் பாசப்போராட்ட கதை. கூடிய சீக்கிரத்தில் இதை நம் தமிழ் சினிமா மேதைகளான விஜய், கௌதம் மேனன் அல்லது கமல்ஹாசனே கூட தமிழ் மொழி கொண்டு தழுவி தன் சொந்தப்படம் என்று தம்பட்டம் அடிக்கலாம்.(இந்த தழுவல் விஷயங்கள் பற்றி சில இணைய மேதைகள் குத்தங்கொறை சொல்லி அக்கப்போர் செய்து வருவதாக இன்னொரு இணைய மேதை ஒருவர் ஆர்ப்பரிதுக்கொண்டிருப்பது வேறு விஷயம்..!)

Carlito's way யின் பல காட்சிகளை ஏற்கனவே நம் திரைப்பெருமக்கள் உருவி எடுத்து உண்டு வாழ்கிறார்கள் என்ற தகவலை எனது நண்பர் ஒருவர் தெரிவித்தார். உண்மை. எளிய கதை. ஏற்கனவே நாவலாய் வந்த கதை என்று நண்பன் விக்கி சொன்னான். நாவலின் இரண்டாவது பாகத்தை சார்ந்து எடுக்கப்பட்ட படம் என்கிறான் அவன்.

படம் குண்டு காயங்களுடன் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படும் கார்லிடோ வின் (அல் பசினோ) க்ளோஸ் அப்புடன் ஆரம்பிக்கிறது. அவனது பார்வையில் படும் ஓவியம் ஒன்றில் ஒரு பெண் கடற்கரையில் நடனமாடுகிறாள்.அவனது நினைவலைகள் காட்சிகளாய் விரிகின்றன. ஒரு காலத்தில் போதை மருந்து போன்ற தொழில்களில் தேர்ந்த தாதாவான கார்லிடோ அவனது வழக்கறிஞரும் நண்பனுமாகிய க்லீன்பெல்டின் (சீன் பென்) சாதுர்யத்தால் நீண்ட தண்டனைக்காலத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.தன்னை காப்பாற்றிய நண்பன் என்பதால் அவன் மேல் அளவற்ற நன்றி கொண்டிருக்கிறான். விடுதலைக்கு பிறகு தன் சிறைக்காலத்தில் நிழல் உலகத்தில் பெரிய மாற்றம் வந்திருப்பதை பார்க்கிறான். அவனது சொந்தக்கார பையன் ஒருவன் கூட இப்போது தொழிலில் இருக்கிறான். போதை மருந்து கடத்தும் குமபல் ஒன்றுக்காக வேலை பார்க்கும் அந்த இளைஞன் கார்லிடோவையும் பேச்சு துணைக்கு அழைக்கிறான்.அவன் கையிலோ முப்பதாயிரம் டாலர்கள்.சம்பளப்பணம். " ஒரு காலத்தில் நீங்க எவ்ளோ பெரிய ஆள்.. நீங்க என்கூட வந்தா ஒரு கெத்தா இருக்கும்" என்று அவன் சொல்ல விருப்பம் இல்லாமல் அவனுடன் செல்கிறான் கார்லிடோ. எதிர்பாராத விதமாய் அங்கு அந்த இளைஞனை அந்த கும்பல் கொலை செய்ய, கூட சென்ற கார்லிடோ கும்பலையே கொன்று குவிக்கிறான். முப்பதாயிரம் டாலர் கார்லிடோ கையில். அதை வைத்து செட்டில் ஆகி விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அவனுக்கு வேறு விதமான பிரச்சனை வருகிறது.

வழக்கறிஞரான க்லீன்பெல்டின் க்ளையன்ட் ஒருவன் சிறையில் இருக்கிறான். அவன் க்லீன்பெல்ட் தன் பணமான ஒரு மில்லியன் டாலரை திருடி வைத்திருக்கிறான் என்று குற்றம் சாட்டுகிறான்.அதோடு தன்னை சிறையில் இருந்து தப்ப வைக்குமாறு கேட்கிறான். க்லீன்பெல்ட் செய்ய வேண்டியது..அந்த கைதி தப்பிக்கும்போது சிறைக்கு அருகில் இருக்கும் ஆற்றுக்கு படகுடன் வந்து இவனை கொண்டு செல்ல வேண்டும். பதறிப்போகும் க்லீன்பெல்ட் தன் ஒரே நம்பிக்கைக்கு உரியனான கார்லிடோவிடம் விஷயத்தை சொல்ல. அவன் உதவி செய்ய முன்வருகிறான்.தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றியவன் என்பதால் பணம் வாங்கக்கூட மறுக்கிறான் கார்லிடோ.

ஆனால் அவனை காதலிக்கும் டான்சரான கெய்ல் உள்ளுணர்வு உறுத்த க்லீன்பெல்டுடன் படகில் செல்ல வேண்டாம் என்று மன்றாடுகிறாள். கார்லிடோவுக்கோ இது ஒரு கடமை.அவள் வேண்டுகோள்களை புறக்கணித்து க்லீன்பெல்டுடன் செல்ல , அங்கு அவனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தான் படத்தின் திருப்பு முனை. அந்த காட்சி படமாக்கப்பட்ட விதம், இசை இரண்டும் அற்புதம். பிறகு இந்த விஷயங்களில் இருந்து விடுபட்டு தன் காதலியுடனும் அவள் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தையுடனும் மியாமிக்கு தப்பிக்க திட்டமிடும் கார்லிடோ திரும்பவும் வஞ்சகத்தால் வீழ்கிறான். தனக்குப்பிறகு கெய்ல் தன் குழந்தையுடன் புது வாழ்க்கைக்கு தயாராவாள் என்ற நம்பிக்கையுடன் இறக்கும் கார்லிடோவின் குரல் கரைய அவன் கண்ணில் படும் ஓவியம் உயிர்பெறுகிறது. அலைபாயும் கடலோரத்தில் கெய்ல் நடனமாடிக்கொண்டு இருக்கிறாள்.

படத்தில் நிழலுகத்தில் நட்பு என்ற ஒன்று கிடையாது என்ற செய்தி பல முறை முன்வைக்கப்படுகிறது. கார்லிடோவின் உறவினனான அந்த இளைஞன் தான் சரக்கு கொண்டு போய் கொடுக்கும் இடத்தில இருப்பவர்கள் எல்லாம் என் நண்பர்கள் என்கிறான். பின்னர் அவன் கழுத்தறுபட்டு கிடக்கும்போது "இந்த தொழிலில் நண்பர்களே இல்லை..பார் உன் நிலைமையை " என்று வருந்துகிறான் கார்லிடோ. அதே போல் தனக்கு துரோகம் செய்த க்லீன்பெல்ட்டின் துப்பாக்கியை எடுத்து அவன் கைக்கெட்டும் வகையில் வைத்து விட்டு "எதிரி வரும்போது எடுத்து சுட வசதியாக இருக்கும்" என்று சொல்லி வெளியேற, க்லீன்பெல்டை பழி தீர்க்க வருகிறான் அவனால் கொல்லப்பட்ட கைதியின் மகன். பதறி துப்பாக்கியை இயக்கும் க்லீன்பெல்டின் துப்பாக்கி வெடிப்பதில்லை.. வெளியில் சென்றுகொண்டிருக்கும் கார்லிடோ துப்பாக்கி ரவைகளை குப்பையில் வீசும் காட்சி இடையில் வந்து மறைய ..எதிரியின் துப்பாக்கி குண்டு க்லீன்பெல்ட் மேல் பாய்கிறது. தன் காதலி தடுத்தும் உதவிக்காக போன தனக்கு துரோகம் செய்த க்லீன்பெல்டை கார்லிடோ மன்னிக்கவில்லை. அதே சமயம் அவனது மன்னிப்புக்கும் அர்த்தம் இல்லாமல் போகிறது. நைட் க்ளப்பில் தகராறு செய்யும் ஒருவனை அடித்து துவைத்தாலும் அவனை கொல்லாமல் விட்டு விடுகிறான் கார்லிடோ.கடைசியில் அவனும் கார்லிடோவின் நம்பிக்கைக்கு உரிய நண்பனும் இவன் இறப்புக்கு காரணமாகிறார்கள். அதே போல் கார்லிடோ ஒளித்து வைத்திருக்கும் பணத்தை க்ளப்பின் இன்னொரு உரிமையாளனான சாசோ திருடிக்கொள்கிறான்..இப்படி படம் முழுக்க நிழல் உலகின் துரோகங்கள், வஞ்சகங்கள் விரவிக்கிடக்கின்றன. பலர் முன்னிலையில் ஸ்ட்ரிப்டீஸ் ஆடும் கெய்ல் தன் குழந்தையின் தந்தையான காதலன் எந்த பிரச்னையிலும் மாட்டிக்கொள்ளாமல், போலீஸ் கையால் சுடப்பட்டு சாகாமல் இருக்க வேண்டும் என்று பதறுகிறாள். ஒரு ஒப்புமை தான் இது. இன்ஸ்பிரேஷன் (!) ஆதரவாளர்கள் கொதிக்க வேண்டாம். விருமாண்டியில் தனக்கு தெரியாமல் நடக்கும் சதியை அறியாமல் நெப்போலியன் ஆட்கள் இருக்கும் இடத்துக்கு மன்னிப்பு கேட்க கமல் செல்வதற்கு முன், கிணற்றுக்குள் அமர்ந்து விருமாண்டியிடம் அவனது காதலி பேசும் காட்சி நினைவுக்கு வருகிறது.

அதே போல் தனக்காக தன் காதலியை ரயில்வே ஸ்டேஷன் வரை கூட்டி வரும் நண்பனே கடைசி தருணத்தில் துரோகம் செய்வது போன்ற காட்சிகளை தமிழ் சினிமாவில் அரைத்து மாவாக்கி பலமுறை (புளித்த!) ஆப்பம் சுட்டிருக்கிறார்கள். படத்தில் வழக்கறிஞர் க்லீன்பெல்டாக வரும் சீயான்.. ஸாரி சீன் பென்னின் நடிப்பும் அபாரம். அப்பாவி போல் இருந்து கொண்டு பின்பு தனது கொடூர குணத்தை காட்டும் கதாபாத்திரத்தில் மின்னுகிறார். படம் எடுக்கப்பட்டது 1993 இல்.ஆனால் கதை நடப்பது '75 இல். அந்த காலகட்டத்தை சேர்ந்த உடை, சிகை அலங்காரம் எல்லாம் அவ்வளவு நேர்த்தியாக இருப்பதால் சீன் பென்னின் வயதை நினைத்து குழம்பி விட்டேன். படம் ப்ளாஷ்பேக்கில் தொடங்கினாலும் ஒரே நேர்கோட்டில் செல்கிறது. எளிய உறுதியான திரைக்கதை. நம்பகத்தன்மை இருக்கும் பட்சத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை நாமும் சுமக்கிறோம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்கள் எப்படி கையால்வார்களோ என்று பதறுகிறோம். உண்மையான கலையின் வெளிப்பாடே இது தான். கலையே போல செய்தல் என்றாலும் அதிலும் ஒரு நம்பக தன்மை அவசியம்..ஒன்றுக்கொன்று உறுதியாக பிணைக்கப்பட்ட கதை சம்பவங்கள் ஒரு நல்ல திரைக்கதைக்கு முக்கியம். அந்த வகையில் ஒரு சில குறைபாடுகளுடன் இருந்தாலும் தேர்ந்த திரைக்கதை மற்றும் நடிப்பு மூலம் படம் பலம் பெறுகிறது.

படத்தை மிஷன் இம்பாசிபிள், அன்டச்சப்ல்ஸ் படங்களின் இயக்குனர் ப்ரையன் டி பால்மா எடுத்திருக்கிறார். எந்த சண்டைக்கும் போகாமல் இருக்க முடிவு செய்த பின் , தன் சொல்லுக்கு அடங்காமல் துள்ளும் பென்னி ப்ளாங்கோவை புரட்டி எடுத்து விஸ்வரூபம் எடுக்கும் காட்சி, தன்னை வசமாக ஏமாற்றிய சீன் பென்னை அடையாளம் காணும் காட்சி என்று அல் பசினோ நடிப்பில் மிளிர்கிறார். தமிழில் இது போன்ற படங்கள் அவ்வப்போது வருகின்றன. தெளிவான திரைக்கதை இல்லாமல் காணாமல் போகின்றன. சமீபத்தில் நான் பார்த்த ஆரண்ய காண்டம் இந்த வரிசையில் தமிழின் சிறந்த படம் என்பேன்.