Wednesday, September 12, 2012

பரவசமூட்டிய படம்

தில்லியில் பக்தகோடிகள் பரவசமாக தரிசிக்கும் இடங்களில் முக்கியமானது அக்ஷர்தாம் கோவில். கோடிக்கணக்கில் செலவு செய்து பண்டைய இந்தியாவையே தரிசிக்க வைக்கும் அனுபவம் தரும் இந்தக் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் பற்றி சர்ச்சைகள் கூட உண்டு. கடும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்படும் இந்தக் கோயிலில் பக்தி கிடைக்கிறதோ இல்லையோ ஒரு தீம் பார்க் சென்று வந்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும். சமீபத்தில் டெல்லி வந்திருந்த என் பெற்றோருடன் அங்கு சென்று வந்தோம். நான் இதற்கு முன்னரே இங்கு வந்திருக்கிறேன்.இதில் சுவாமி நாராயண் என்ற ஒரு யோகியைப் பற்றியும் பண்டைய இந்தியாவின் சிறப்புகள் பற்றியும் விளக்க ரோபோட்டிக்ஸ் முறையில் தத்ரூபமான மனித உருவங்களுக்கு அசைவும் பின்னணிக் குரலும் (ஆங்கிலம் - ஹிந்தி இரண்டிலும்) தந்து பிரமிப்பூட்டுகிறார்கள்.

ஒரு சினிமா ரசிகனாக என்னை மிகவும் கவர்ந்த அம்சம். அங்கு இருக்கும் ஐ-மேக்ஸ் திரையரங்கம் ஒன்றில் திரையிடப்படும் சுவாமி நாராயன் பற்றிய ஆவணப்படம் தான். அது ஆவணப்படமோ விளம்பரப்படமோ, அதில் சொல்லப்பட்டவை உண்மையோ பொய்யோ தெரியாது. படம் எடுக்கப்பட்ட முறை நான் இது வரை எங்குமே பார்த்திராத திரையனுபவத்தை வழங்கியது என்பது மட்டும் நிச்சயம். இதற்காகவே இரண்டாம் முறையும் சென்றேன். முதல் முறை பார்த்த போது ஏற்பட்ட அந்த சிலிர்ப்பு இப்போதும் ஏற்பட்டது.

85 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட பிரமாண்டமான திரை. ஐ.மேக்ஸில் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.அது முற்றிலும் புதிய அனுபவம். திரை என்னும் பிரமாண்டமான மாய உலகுக்குள் சிறுதுரும்பாக நம்மை  மிதக்கும்படி செய்து நம் கர்வத்தைப் போக்கி விடும்  அதியற்புத அனுபவம் அது. அதுவும் ஏதாவது நல்ல படங்கள் வந்தால் மட்டுமே தியேட்டர் பக்கம் தலைவைக்கும் பேர்வழியான எனக்கு இந்த மெகா திரையனுபவம் பரவசம் தந்தது. அது வரை எல்லா காட்சிக்கூடங்களிலும் பத்து இருபது என்ற எண்ணிக்கையில் அமர்ந்து பார்க்கும் பார்வையாளர்கள் மொத்தமும் சேர்ந்து பார்க்கும்படி வசதியான திரையரங்கம். மிகச் சிறப்பான ஒலியமைப்பு.

படம் சுவாமி நாராயன் என்ற ஆன்மீக ஒளிசிந்தும் பத்து பதினொன்று  வயதுள்ள சிறுவன் தன் குடும்பத்தையும் வீட்டையும் ஊரையும் விட்டு நள்ளிரவில் தொடங்கும் ஆன்மீகத் தேடல் கொண்ட பயணம். முதல் காட்சியே இது வழக்கமான, பின்னணியில் சிதாரோ வீணையோ ஒலிக்க சூர்ய உதயம்-அஸ்தமனம் கிளிஷேக்களுடன் தொடங்கி கோவில் சிற்பங்கள் பக்தகோடிகளின் பரவச முகங்களுடன் வரும் ஆன்மீக ஆவணப்படம் இல்லை என்பதை உணர்த்தியது. சுவாமி நாராயனாக நடித்த அந்த சிறுவன் நல்ல தேர்வு. மழை பெய்த இரவின் பின்னணியில்  பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தை அவ்வளவு பெரிய திரையில் பார்க்கும்போது நம்முள் பின்னோக்கிய ஒரு காலப்பயணம் தொடங்குவது உண்மை. அந்தக் காட்சியில் அந்த சிறு வீட்டின் செட், ஒளியமைப்பு எல்லாமே இது வேறு வகை என்று உணர்த்தியது. வெளியில் வரும் சிறுவன் பார்வையில் அந்த பின்னிரவில் யாருக்காகவோ ரொட்டி செய்ய மாவரைக்கும் ஒரு மூதாட்டி படுகிறாள். அன்புக்குரிய அவளையும் பிரிந்து ஆன்மீக சஞ்சாரத்தில் நீந்த முடிவெடுக்கும் சிறுவன் இதழோரம் தெய்வீகப் புன்னைகையுடன் அங்கிருந்து நகர்கிறான். காட்சியில் அந்த மூதாட்டியின் வீட்டில் மட்டும் வெளிச்சம். சில  நூற்றாண்டுகள் பின்னே உள்ள அந்த நீண்ட தெருவில் உள்ள வீடுகள் சற்று முன் பெய்த மழையால் நனைந்து வெளிறிய பழுப்பு நிறத்தில் உறைந்திருக்க, சிறுவன் தேங்கியிருக்கும் மழை நீர் துளிகள் தெறிக்க அதில் காலடி எடுத்து வைத்து தன் பயணத்தைத் துவங்கும் அந்தக் காட்சி அதியற்புதமானது.

பிறகு அடர்ந்த காடுகள், புரண்டோடும் காட்டாறுகள், சிலிர்க்கவைக்கும் உயரம் கொண்ட பணி படர்ந்த மலைகளில் வெறும் காலுடன் பயணிக்கும் அந்த சிறுவனின் பயணத்தில் நாமும் பங்கேற்கிறோம். ஆற்றில் கால் வைக்கும் அவனை ஆற்றின் நீரோட்டம்  அப்படியே இழுத்து செல்ல, பின்னணியில் திகிலூட்டும் இசை ஒலிக்க சிறுவன் ஆற்றுடன் பயணித்து அதைக் கடக்கிறான். நமக்கு மனம் பதைக்கிறது. அத்தனை தத்ரூபம். தொடர்ந்து மலைகளின் மீது அடர்ந்து செழித்திருக்கும் கரும்பச்சை இலைகள் கொண்ட மரங்களும் ஈர மண்ணும் செடி கொடிகளும் அவன் பயணத்துக்கான பாதையாகின்றன. வெள்ளை வெளேரென்ற இமையமலைப் பனிச் சூழலில் அத்தனை உயரமாக பரந்து படர்ந்திருக்கும் அந்த பிரமாண்டத்தில் ஒரு சிறு எறும்பு போல் அவன் நடக்க நீலவானத்தின் பேரமைதியும் சூரியக் கதிரில் வெளிரும் மேகங்களும் அந்த மெகா திரையில் விரிய ..அந்த அனுபவம் ஆஹா!

சிறுவன் ஒரு கிராமத்துக்கு வெளியே கிராமத்து அரண்சுவர் இருக்கும் இடத்தில அமர்ந்திருக்க அங்குள்ள மடத்தின் தலைமை பூசாரி அவன் அங்கு அமர்ந்திருப்பது ஆபத்து என்று சொல்லி உள்ளே அழைக்கிறார். இரவில் அங்கு ஒரு சிங்கம் வருமென்றும் அது அவனைக் கொன்று விடும் என்று கூறி அவனை கிராமத்துக்குள் அழைத்தாலும் சிறுவன் தெய்வீகப் புன்னகையுடன் மறுத்து விடுகிறான். தனக்கு அந்த ஜீவனைக் கண்டு பயமேதுமில்லை என்று அவன் சொல்ல வேறு வழியின்றி சங்கடத்துடன் அந்தப் பெரியவர் சென்று விடுகிறார். மெல்லப் பரவும் இருள் அந்த கிராமத்தை சூழத் தொடங்க கிராமத்து மக்கள் பதட்டத்துடன் தங்கள் குழந்தைகள் கால்நடைகளுடன் தங்கள் வீடுகள் நோக்கி விரைகிறார்கள். இரவில் சிறுவன் அமர்ந்திருக்கும் மரத்தடிக்கு எதிரே இருக்கும் அடர்ந்த புதர்களின் உள்ளே இருந்து ஒரு சிங்கம் வருகிறது. சிங்கம் என்றால் பல்பிடுங்கப்பட்டு கட்டிப் போட்டிருப்பதால் தைரியமாக அதை புரட்டி எடுக்கும் எம்.ஜியார் காட்சி பாணி கிழச் சிங்கம் அல்ல. அத்தனை உயரத்துடன், அலையாகத் திமிரும் அடர்ந்த சிகையும் பெரிய உடலும் கொண்ட அசல் சிங்கம். அது எழுப்பிய சத்தத்தில் இங்கே அரங்கில் குழந்தைகள் அலறின. பெரியவர்களுக்கே கொஞ்சம் பீதி ஏற்பட்டிருக்கும். உள்ளே இருந்து பதைப்புடன் அந்தப் பெரியவர் பார்த்துக்கொண்டிருக்க ஆன்மீகப் பேரொளி சிந்தும் புன்னகையுடன் அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் முன் மண்டியிடுகிறது அந்த கம்பீர விலங்கு. சற்று நேரத்தில் அவன் காலடியிலேயே சுகமாக உறங்கவும் செய்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும் பெரியவருக்குள் ஏற்படும் சிலிர்ப்பு நமக்கும் தொற்றுகிறது. இது போன்ற 'கதைகளில்' எத்தனை உண்மை இருக்கிறது என்பது இங்கு பெரிதல்ல. அந்தக் கதைகள் தரும் ஒரு mysterious உணர்வை நம் உள்மனது எப்போதும் ரசிக்கும். அதைக் காட்சிப்படுத்திய விதம். அந்த சூழல் அந்த சத்தம் அமைதி எல்லாமே இந்த படம் எடுத்தவர்கள் அனுபவசாலிகள். அதுவும் நம்மூர் ஆட்கள் அல்ல என்று உணர்த்தின . இது போல் பல காட்சிகள் உள்ளன இந்த படத்தில்.

சுமார் 20 நிமிடம் ஓடும் அந்த ஆவணப் படத்தின் தரம் உணமையை சொன்னால் நான் பார்த்த எந்த மெகா பட்ஜெட் திரைப்படங்களை விடவும் பல மடங்கு அதிகம். நான் எதிர்பார்த்தது போலவே படம் Keith Melton என்ற இயக்குனர் படத்தை இயக்கியிருக்கிறார். ஆவணப்படங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு பெருங்குழு படத்தில் பணியாற்றியிருக்கிறது. Keith Melton பல 70 mm மற்றும் ஐ- மேக்ஸ் படங்கள் எடுத்த அனுபவம் உள்ளவர். இந்தப் படத்துக்காக நிச்சயம் பெருந்தொகை செலவாகி இருக்கும் என்று நினைக்கிறேன். நம்மூரில் பிரமாண்டம் என்று சொல்லி ஹோட்டல் வரவேற்பறையை நாயகனின் வீடாய் காட்டும் ஹை-டெக் இயக்குனர்களெல்லாம் இந்தப் படத்தைப் பார்த்தால் வெட்கித் தலைகுனிவார்கள். தரத்தில் அத்தனை உயரத்தில் இருக்கிறது படம்.

நான் முன்பே சொன்னபடி படத்தின் கருத்து, கதை இவை என்னை பெரிதாக பாதிக்காவிட்டாலும் அதன் தரம் என்னை பரவசப்படுத்தியது உண்மை.  இத்தனை குறைந்த கால அளவு கொண்ட ஒரு படத்தில் எவற்றைக் காட்சிப் படுத்தினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று யோசித்து, சிறுபிள்ளைத்தனம் இல்லாத காட்சியமைப்புகளால் திரைக்கதைக்கு வலுசேர்த்து பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். டெல்லியில் உள்ள அக்ஷர்தாமில் தான் இந்தப் படம் திரையிடப்படுகிறதா இல்லை மற்ற இடங்களில் உள்ள அக்ஷர்தாமிலும் இப்படம் திரையிடப் படுகிறதா என்று தெரியவில்லை. ஒரு சினிமா ரசிகனாக சக சினிமா ரசிகர்களிடம் நான் சொல்வது இது தான். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.

திரையரங்கில் அமர்ந்தவுடன் பின்னால் அமர்ந்திருந்த ஒரு வடக்கத்தி குடுமபத்தின் குழந்தை ஒன்று திரையைப்  பார்த்த பிரமிப்பில் சொன்னது. "மம்மி ...கித்னீ படீ  டி.வி. ஹே!" (எத்தனை பெரிய டிவி!)

5 comments:

  1. :)TV யா..

    தவறவிடக்கூடாத அனுபவம் அந்த சினிமா..
    ரொம்ப உண்மை ..

    ReplyDelete
  2. சிறந்த அனுபவம் தான் அது மோகன்!

    ReplyDelete
  3. நல்லதொரு அனுபவம்.

    ReplyDelete
  4. "மம்மி ...கித்னீ படீ டி.வி. ஹே!" (எத்தனை பெரிய டிவி!)...
    Yes Sir, My 4 year old little friend also said the same when I watched "Amazing Spider Man..." with him. It seems any screen(including laptop's) is another form of TV for them.

    ReplyDelete