Tuesday, January 21, 2014

மண் மணக்கும் புன்னகை மொழி

- வெ.சந்திரமோகன்




’என்னை புதுக்கோட்ட பார்ட்டியில கூப்புட்டாக..காரக்குடி பார்ட்டியில கூப்புட்டாக.. எல்லாத்தையும் விட்டுட்டு என் கெரகம் இந்தக் கரகாட்டக் கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேய்ங்’ என்று கன்னத்தில் கைவத்து கேட்டுக்கொண்டிருக்கும் கவுண்டமணியிடம் கோவை சரளா சலித்துக்கொள்ளும் காட்சியை ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது.  மண் வாசம் வீசும் மொழியுடன் அசல் நாட்டுப்புறக் கலைஞரைக் கண்முன் கொண்டு வந்த அந்தப்பாத்திரம் வெற்றி பெற மிக முக்கியக் காரணம் வட்டார மொழிதான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, பொதுவான பேச்சுமொழியில் நாயகனும் நாயகியும் பேசுவது வழக்கமாகிவிட்ட நிலையில், வட்டார வழக்கு என்ற விஷயத்தை அதிக அளவில் இன்றும் கையாள்வது நகைச்சுவை நடிகர்கள் தான். பொதுவான கிராமம் அல்லது நகரம் என்றே கதை நடக்கும் பகுதியை சித்தரிக்கும் தமிழ் சினிமாவில், நகைச்சுவைக் கலைஞர்களின் தனித்திறனால் தான்   வெவ்வேறுப் பகுதிகளில் பேசப்படும் வட்டார மொழிகள் ஓரளவு உயிர்ப்புடன் இருக்கின்றன என்றும் சொல்லலாம்.

தொடக்கத்தில் தமிழ்சினிமாவில் ஒரே படத்தில் பல மொழிகள் பேசப்பட்ட வழக்கம் இருந்தது. நாயகனும் நாயகியும் தெலுங்கில் பேச, துணை நடிகர்கள் ஹிந்தியில் பேச நகைச்சுவை நடிகர்கள் மட்டும் தமிழில் பேசிய படங்கள் உண்டு. தமிழ் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவான்களான என்.எஸ்.கிருஷ்ணன் முதல் நாகேஷ் வரை பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மொழிக்குரல் என்ற தனித்துவம் பெரிதாகக் கையாளப்படவில்லை என்றே சொல்லலாம். அப்போது மன்னர் காலத்துக் கதை அல்லது சமூகக்கதை என்ற பாகுபாடு இருந்ததே தவிர, மதுரையில் நடக்கும் கதை அல்லது திருநெல்வேலியில் நடக்கும் கதை என்றெல்லாம் பிரத்யேகமான இடங்களை மையப்படுத்தும் படங்கள் அவ்வளவாக வரவில்லை. ’பட்டணம்’ என்றால் அது சென்னை. கிராமம் என்றால் அது பூஞ்சோலை தான். எனினும், நகைச்சுவை நடிகர்களோ துணை நடிகர்களோ சென்னையின் பிரத்யேக மொழியான ‘மெட்றாஸ் பாஷை’ பேசுவதை அவ்வப்போது பார்க்க முடியும். விளிம்புநிலை மனிதர்கள் பிராமணர்கள் பேசும் பாணியில் பேசியதும் தமிழ் சினிமாவின் தொடக்கத்தில் நடந்தது.

60-களின் இறுதிகளில் வெளியான படங்களில் தேங்காய் சீனிவாசன், சுருளி போன்ற நடிகர்கள் சென்னைத் தமிழை சற்று சிரமப்பட்டுப் பேசி நடித்தனர். ஜெய்சங்கர் நடித்த ‘சி.ஐ.டி. சங்கர்’ படத்தில் அலுவலகத்தில் பொதுமொழியில் பேசும் தேங்காய் சீனிவாசன், நகைச்சுவை நாயகி நடத்தும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடப் போகும்போது சென்னைத் தமிழில் பேசுவார். ’காசேதான் கடவுளடா’ படத்தில் சென்னை குப்பம் பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான அவர் முத்துராமன், ஸ்ரீகாந்த் போடும் திட்டப்படி  சாமியார் போல வேடமிட்டு மனோரமா வீட்டில் தங்குவார். பக்தர்களுக்கு அட்டகாசமாக அருள்மொழி வழங்கினாலும் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ‘மெட்றாஸ் பாஷை’ ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும். பிறமொழி பேசுபவர்களாக துணை நகைச்சுவை நடிகர்கள் நடித்த  படங்கள் இன்று வரை வெளியாகின்றன. மலையாள சாயலுடன் தமிழ் பேசும் டீக்கடை நாயர்கள், தலையில் குல்லா, தங்க ஜரிகை, ஜிப்பா சகிதம் ‘நம்பள்கி பணத்த எப்போ திருப்பித் தரப்போறான்?’ என்று கேட்கும் ஈட்டிக்கார சேட்டுகள் போன்ற பாத்திரங்கள் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளிலேயே பயன்படுத்தப்பட்டனர்.

முதன்முறையாக தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த குரலாக சத்தமாக ஒலித்தது கவுண்டமணியிடமிருந்து என்றே சொல்லலாம். நாடகப் பின்புலம் கொண்ட கவுண்டமணி, திரைப்படங்களில் பிறர் போல பொதுமொழியில் பேசாமல் தான் சார்ந்த கொங்கு நாட்டுப் பகுதியில் பேசப்படும் பாணியில் பேசியதாலேயே தனித்து அறியப்பட்டார்.   கிராமப் பின்னணி கொண்ட திரைப்படங்கள் என்றாலும் பொதுவான மொழி பேசும் பாத்திரங்கள் என்பதால் அவரது கொங்கு மொழி தொடக்ககாலப் படங்களில் தனித்துவம் பெறவில்லை. அதேசமயம், வித்தியாசமான முறையில் எதிராளியை (பெரும்பாலும் செந்தில்!) கிண்டல் செய்வதன் மூலம் அவரது நகைச்சுவைக்கு ஒரு பிரத்யேக பாணி அமைந்திருந்தது. 


கோவையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைப் பின்னணியாகக் கொண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘வைதேகி காத்திருந்தாள்’ கவுண்டமணிக்கு  பெரிய வாய்ப்பாக அமைந்தது. படத்தில் வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டு வீடுகள் கொங்குப் பகுதியைக் கண்முன் கொண்டுவர,  சைக்கிள் கடை வைத்திருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாக வரும் கவுண்டமணி பேசும் வசனங்கள் கொங்கு மண்ணின் அசல் மணத்தை ரசிகர்களுக்குத் தந்தன. ”அழகுராஜா ஒரு வல்லவரு..அவர் ஒரு .....நல்லவரு..அப்பிடீன்னு ஊருக்குள்ள இருக்கிற அம்மிணி அக்காகிட்டேயெல்லாம் போய் சொல்லோணும்” என்று செந்திலுக்கு அன்புக் கட்டளையிடும் காட்சியில் கொங்குப் பகுதியின் குறும்பு அழகாக வெளிப்படும். பின்னர் நகர்ப்புற பின்னணி கொண்ட திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் கவுண்டமணி பேசும் பாணியில் பெரிய மாற்றமிருக்கவில்லை. அவரது குரலும் பேசும் முறையும் அவரது அடையாளங்களாகவே மாறின. 

90-களின் தொடக்கத்தில் கொங்குப் பகுதியை மையமாகக் கொண்ட கதைகளுடன் தமிழுக்கு அறிமுகமான கே.எஸ்.ரவிகுமாரின் படங்களில் கவுண்டமணி பேசும் கொங்குமொழி இன்னும் பொருத்தமானதாக அமைந்தது. பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை போன்ற இடங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட ’சேரன் - பாண்டியன்’ திரைப்படத்தில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதற்கு முன்னர், மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் கதை என்றபோதிலும் கவுண்டமணி கொங்கு மொழியில் தான் பேசுவார். ‘சேரன் - பாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து ரவிகுமார் இயக்கிய ‘நாட்டாமை’ படத்தில் கவுண்டமணியின் கொங்கு மொழி அற்புதமாக வெளிப்பட்டது. தனது தாய் யாரென்று தெரியாமல் சொல்லாமல் மறைத்துவைத்து இளம்பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் தனது தந்தை (செந்தில்) மீது கொலைவெறியுடன் அலையும் கவுண்டமணி கடைசியில் தனது தாயைக் கண்டுகொள்வார். அம்மா வேடத்தில் வரும் கவுண்டமணி ”யேங்கோ.. நம்ம ரெண்டுபேருக்கும் பொறந்தானே ஒரு மகென். அவென் எங்கெங்கோ?” என்று கேட்கும் காட்சியில் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘திருமதி பழனிச்சாமி’ படமும் கொங்கு பாஷையில் கவுண்டமணி பேசிய முக்கியமான படம். இதுபோன்ற பல படங்களில் அவரது நடிப்பு சிறக்க அவரது மொழி முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. 

அதேபோல கோவை சரளாவின் கொங்கு பாஷை பிரசித்திப் பெற்றது. கோவையில் பிறந்திருந்தாலும்  மலையாளம் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். எனினும் கவுண்டமணிக்கு இணையான கொங்குக் குரல் அவருடையது. இளம்வயதிலேயே வயதான வேடங்களில் நடித்துவந்த சரளாவுக்கும் ‘வைதேகி காத்திருந்தாள்’ ஒரு பெரிய திறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கவுண்டமணி சொல்லும் யோசனையை சென் தவறாகப் புரிந்துகொண்டு அவரது மனைவி கோவை சரளாவிடம் மல்லிகைபூ வாங்கித் தரும் காட்சி உச்சகட்ட நகைச்சுவை. செந்திலை துடைப்பத்தால் வெளுத்துக்கொண்டே கவுண்டமணியிடம் சரளா சொல்வார் “இவெங் கூட சகவாசம் வச்சதுக்கு ஒங்களத்தான் மொதல்ல நாலு சாத்து சாத்தோணும்”. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் கமல் நடித்த ‘சதிலீலாவதி’ படத்தில் அவரது மனைவியாக நடித்தது கோவை சரளாவின் வாழ்நாள் சாதனை. அதற்கு அவரது கொங்கு மொழி தான் காரணமாக அமைந்தது. அந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தினார் சரளா. தனது கணவனின் தவறான உறவு குறித்து கமல்-சரளா தம்பதியிடம் புகார் சொல்லும் கல்பனாவைக் கமல் சமாதானப்படுத்தும் காட்சி ஒன்றைச் சொல்லலாம். “ஒரு ஆம்புளைக்கி இதுவா அதுவான்னு சாய்ஸ் கொடுக்கக் கூடாது. ரெண்டையும் பொறுக்கிப்புடுவானுங்க” என்று கமல் சொல்லும்போது ”கண்டிசனா செஞ்சிப்போடுவானுங்கோ..கெரகம் புடிச்சவனுங்கோ” என்று ஒரு அறச்சீற்றக் குரல் கொடுப்பார் சரளா. கமலுக்கு சப்தநாடியும் அடங்கிவிடும். 

நகைச்சுவை உலகில் கவுண்டமணிக்குப் பின்னர் கவனம் ஈர்த்த முக்கியக் குரல் மதுரையிலிருந்து ஒலித்தது. வைகைப் புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு மதுரை மண்ணின் மணத்தை திரை ரசிகர்களுக்கு அசலாகத் தந்தார். “யேப்பா..எங்க ஏரியா பக்கம் வம்பு சொல்றது?” “ஆத்தீ..விட்டாக் கொல பண்ணிடுவாய்ங்க போலருக்கே!” என்று மதுரை கிராமப் பகுதிகளில் சலம்பித் திரியும் இளைஞர்களின் பிரதிநிதியாக தமிழ்சினிமாவுக்குள் வடிவேலு நுழைந்தார். உள்ளுக்குள் உதறெடுத்தாலும் எதிராளியை வம்புக்கிழுக்கும் குறும்பு நிறைந்த பாத்திரங்கள் அவரது அடையாளமாக மாறின. ராஜ்கிரணின் கண்டுபிடிப்பு என்றாலும் அவரது முதல் வெற்றி பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ தான். அதில், சைக்கிளில் தன்னை இடித்துவிட்டு செல்லும் உள்ளூர் ரவுடி சற்று தொலைவுக்கு சென்று விட்ட தைரியத்தில் வடிவேலு தனது மிரட்டலைத் தொடங்குவார். “ஏண்ணே..பாத்துப் போனா என்னண்ணே?”. ரவுடி இன்னும் தொலைவு சென்ற பின்னர் ”பெல்லடிச்சி பிரேக் புடிச்சி போனா கொறஞ்சா போய்டுவ?” என்று குரல் கொடுப்பார். பின்னர் தைரியம் உச்சமடைந்த நிலையில், “ஜெயில் பறவை டா நாங்க!” என்று குரலை உயர்த்தி எச்சரிப்பார். ரவுடி சைக்கிளை நிறுத்தி திரும்பி ‘ஆயுதத்தை’ எடுத்த பின்னர் உடலெங்கும் உதறிப்பதற நடுங்கிக்கொண்டே வடிவேலு சொல்வார்” இந்த மம்பட்டியக் கூட நீங்களே வச்சிக்குங்க. நா எப்புடி ஓடுறேங்கிறத மட்டும் பாருங்க”. அந்த காட்சி அவரைப் பெரிய அளவில் அடையாளப்படுத்தியது . அதுவரை அத்தனை அசலான மதுரை வட்டார மொழியைத் திரையுலகம் கண்டதில்லை. 
கவுண்டமணி எல்லா படங்களிலும் கொங்கு பாஷை பேசியது போலவே, வடிவேலுவும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளைக் கதைக் களமாகக் கொண்ட படங்களிலும் மதுரை பாஷை தான் பேசினார். பொதுவாகவே கிராமங்களில் பேசும் மொழி கொச்சையானதாக இருக்கும் என்ற பொதுக்கருத்து கொண்ட ரசிகர்கள்,   வட்டார வழக்குகள் குறித்து அதீத கவனம் செலுத்தத் தேவையில்லை என்று பெருந்தன்மையாக விட்டுவிடுவதால் இது சாத்தியமாயிற்று என்று சொல்லலாம். வடிவேலுவின் உடல்மொழி பற்றிப் பேசுவதென்றால் அதற்கு இக்கட்டுரையில் இடமிருக்காது. தமிழுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியக் கலைஞர் அவர். அவருக்குப் பின்னர் கஞ்சா கருப்பு, ’பரோட்டா’ சூரி போன்ற நடிகர்களிடம் மதுரை வட்டார வழக்கு காணப்படுகிறது.  எனினும், வடிவேலு அளவுக்கு அவர்கள் மொழியில் பெரிய ஈர்ப்பு இல்லை.

சென்னையில் பரவலாகப் பேசப்படும் ’மெட்றாஸ் பாஷை’ தமிழ் சினிமாவில் பலமாக ஒலிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் லூஸ் மோகன். ‘இன்னாம்மா.. எத்க்கு என்னாண்ட ராங்கு காட்டுற. அப்பால பேஜாரா பூடும் பாத்துக்க..” என்று கண்ணைச் சுருக்கிக் கொண்டு நின்ற இடத்திலிருந்தே உடலை உயர்த்தி விஸ்வரூபம் காட்டும் குடிகாரப் போக்கிரி பாத்திரங்கள் என்றால் நம் கண்முன் வருவது அவர் தான். அதேசமயம், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் போன்ற ’அரசுப்பணிகளும்’ தமிழ் சினிமாவில் அவருக்குக் கிடைத்தன. பிரதான நகைச்சுவை நடிகர்களின் துணை நடிகராகவே வாய்ப்புகள் அமைந்தாலும் தனது பிரத்யேக மொழி பலத்தின் மூலம் அவருக்கு தனி இடம் கிடைத்தது. ’சட்டம் என் கையில்’ படத்தில் சென்னை குப்பத்து இளைஞர் வேடத்தில் நடித்த கமல்ஹாஸன் லூஸ்மோகனிடம் சென்னை தமிழ் கற்றார் என்ற செய்தி இன்றும் சினிமாவுலகில் நிலவுகிறது. ’படிக்காதவன்’ படத்தில் ஜனகராஜ் பேசும் ”தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..” என்ற புகழ்பெற்ற வசனமும் சென்னைத் தமிழ் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணம். 
நெல்லைத் தமிழைப் பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்கும் இறுதியில் ‘லே’ போட்டால் போதும் எனும் அளவுக்குத் தான் தமிழ் படங்கள் வெளிவந்துள்ளன. மணி ரத்னம் இயக்கும் படங்களில் நெல்லைத் தமிழ் ஸ்பஷ்டமாக ஒலிக்கும். சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ படம் நெல்லைத் தமிழை மிக மோசமான முறையில் கையாண்ட படம் எனலாம். நெல்லை வட்டார வழக்கு பேசும் நகைச்சுவை நடிகர்களில் நெல்லை சிவா முக்கியமானவர். ”எ.. கட்டபொம்மன் தினெவேலிக்காரன் தானே. அவென் நம்ம மாதிரி தானே பேசியிருப்பான்” என்றபடி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனங்களை நெல்லைத் தமிழில் பேசிக்காட்டும் காட்சி, தமிழ்சினிமாவில் பொதுமொழியை மட்டும் பயன்படுத்தும் படைப்பாளிகளை யோசிக்க வைத்திருக்கும்.

மதுரை வட்டார வழக்கைப் பயன்படுத்தி வடிவேலு பேசிய வசனங்கள் பிற்பாடு தமிழ் வாழ்வியலின் ஒரு அங்கமாகவே மாறின. ‘வந்துட்டா(ன்)யா...வந்துட்டான்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மட்டம்(!) கொஞ்சம் வீக்கு’ போன்ற சொல்லாடல்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் தாக்கம் தந்தவை. ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்ற கவுண்டமணியின் பொன்மொழி இந்திய அரசியல் குறித்த நுட்பமான கிண்டல். பொதுவாக நாயக நடிகர்கள் பேசும் ’பஞ்ச்’ வசனங்களை அந்தந்த படங்களுடன் ரசிகர்கள் மறந்துவிடுகின்றனர். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவதற்கான முக்கியக் காரணம் அவர்கள் மக்களின் மொழியில் பேசுவது தானன்றி வேறென்ன!
-'தி இந்து' பொங்கல் மலரில் வெளியான கட்டுரை.

7 comments:

  1. அருமையான அலசல்...
    மண மணத்தோடு பேசும்போது அதன் மீது நமக்கு ஒரு காதல் வந்துவிடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்

      Delete
  2. //வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஓட்டு வீடுகள் கொங்குப் பகுதியைக் கண்முன் கொண்டுவர// கொங்கு என்றாலே இதுதான் முதலில் எனக்கு நினைவிற்கு வரும். அதைக் குறிப்பிட்டுச் சொன்னதும் ரொம்ப சுறுசுறுப்பாகி தொடர்ந்தேன்.

    //”கண்டிசனா செஞ்சிப்போடுவானுங்கோ..கெரகம் புடிச்சவனுங்கோ”// கரகாட்டக்காரன் வசனத்தை படிச்சப்பவோ சதிலீலாவதி நினைவு வந்தது. அதிலும் மிகச் சரியாய் அந்த 'கண்டிஷனா செய்வாங்கோ'வை ஹைலைட் பண்ணியதும் அட கலக்குறாருப்பான்னு தோனணுச்சு.

    நெல்லை சிவாவை பற்றி சொல்லியதும் ஒஸ்தி குறித்த கருத்தும் நச்.

    கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒண்ணு, ஆனாலும் இதைப் படிச்சப்போ தோணியதால் ஷேர் பண்ணிக்கனும்னு தோணுச்சு கவுண்டருக்கு எப்படி கொங்கு ஸ்லாங்கை மாத்த இயலாதோ அந்த மாதிரி கதாநாயகனா நடிச்சாலும் நடிகர் விமலுக்கு திண்டுக்கல் ஸ்லாங். :-)

    மொத்தத்தில் அட்டகாசமான கட்டுரை, குறிப்பா வைதேகி காத்திருந்தாள் படத்தின் அந்த ஸ்டில் உட்பட ரசித்த நிறைய விஷயங்களை உங்க எழுத்தில் படிச்சப்போ ரொம்ப ஹாப்பி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நாடோடி இலக்கியன். பேஸ்புக்கில் நம் நட்பு உருவானதே நகைச்சுவை நடிகர்கள் பற்றிய நம் ஒத்த ரசனையால் தான். இன்னும் நிறைய கலைஞர்கள் விடுபட்டுவிட்டனர். தொடர்ந்து எழுத எண்ணம்.

      Delete
  3. சிறப்பான கட்டுரை மோகன்.... பாராட்டுகள்.

    வடிவேலுக்கென்றே ஒரு தனி பாணி... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.... என்ற அவரது மொழி அவருக்கு பயன்படாது போய்விட்டது - அவர் அரசியலில் இறங்கியபோது.....

    ReplyDelete
  4. தமிழ் சினிமாவில் வட்டார மொழி வந்தது குறித்த அருமையான கட்டுரை. ஒரு சிறிய திருத்தம். தமிழில் முதல் முதலில் வட்டார மொழி பேசிய படம் மக்களைப் பெற்ற மகாராசி. வந்த வருடம் 1957. அதில் வந்தது கொங்கு தமிழ். நடிப்பு - சொல்லவே வேண்டியதில்லை சிவாஜி. இந்தத் தகவலையும் நீங்கள் எழுதியிருக்கலாம்.

    ReplyDelete