Saturday, January 5, 2013

கும்கி: அன்பைக் கொல்லும் காதல்


பிரமாண்டங்களின் மீது மனிதனுக்கு பிரமிப்பும் அச்சமும் எப்போதும் உண்டு. அதை தொலைவில் இருந்து ரசிக்கவும் அதன் ஆபத்திடம் இருந்து விலகி ஓடவும் மனிதன் என்றோ கற்றுக்கொண்டு விட்டான். என்றாலும் அந்த பிரமாண்டங்களை தன் கட்டுக்குள் கொண்டு வரவும் சிலருக்கு முடிந்திருக்கிறது. நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய மிருகமான யானையை மையமாக வைத்து தேவர் பிலிம்ஸ் காலத்தில் இருந்தே திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பாடலுக்கு ட்ரம்ஸ் வாசிக்கவும் காதலுக்கு தூது செல்லவும் திரைப்படங்களில் பயன்பட்ட அந்த பெரும் விலங்கு  தொடர்பான உருப்படியான படங்கள் தமிழில் மிகக் குறைவு. ஆகட்டும்டா தம்பி ராஜா என்று ஆரஞ்ச் கலர் கோட்டணிந்த எம்.ஜி.ஆர் குட்டிக்கரணமடிக்கும் யானைகளை வழிநடத்திச் செல்லும் படங்களை பார்த்து வந்த தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு காட்டு யானைகளை பழக்கவும் அவற்றிடம் இருந்து மனிதர்களை காக்கவும் பழக்கப்பட்ட கும்கி யானையை வைத்து குறிப்பிடும்படியான படத்தை தந்திருக்கிறார் பிரபு சாலமன். தலைப்பு தான் கும்கியே தவிர இந்த யானை கும்கிக்கு மாற்றாக கூட்டி செல்லப்பட்ட குழந்தை யானை என்பது தான் கதையின் சுவாரஸ்யம்.  யானைக்கும் சிவாஜி குடும்பத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது போலும். சிவாஜியின் அண்ணனான வி.சி.கணேசனின் மகன் தரன் மன்றாயர் இயக்கிய எலி மை ஃப்ரெண்ட் (1992) என்ற ஆங்கிலப்படம் யானையை மையமாகக் கொண்டது  என்பது கூடுதல் சுவாரஸ்யம். படம் பெரிதாகப் பேசப்படவில்லை.கும்கி மூலம் அறிமுகமாயிருக்கும் சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுக்கு திரையுலகில் உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது. பிரபு சாலமன் கலந்து கொள்ளும் படம் தொடர்பான நிகழ்சிகளில் நாயகனின் தந்தை பிரபுவும் கலந்துகொள்கிறார். தொலைபேசியில் வாழ்த்து சொல்கிறார். குரலில் ஏக மகிழ்ச்சி அவருக்கு.

படத்தின் தொடக்கத்திலேயே யானைக்கும் நாயகனுக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை காட்டும் வகையிலான காட்சி ஒன்றை வைக்கிறார் இயக்குனர். பாகனான நாயகனின் தாய்மாமன் பழக்கப்படுத்திய படி கடைகளில் இருந்து சிப்ஸ் பாக்கேட்டுகளை யானை திருடுவதை கண்டுபிடிக்கும் நாயகன் யானையிடம் கடும்கோபம் கொண்டு இனி ஒரு வாரத்துக்கு தாய்மாமனே யானையைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று கோபத்துடன் அதை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்று விடுகிறான். பாசம் உள்ள அந்த பிராணி அவனை பின்தொடர்ந்து  சாலையில் நடந்து வருகிறது. பாகன் இல்லாமல் தனியே வரும் யானையைக் கண்டு பொதுமக்கள் பதறி ஓடுகிறார்கள் (யானை தாக்குதல்களுக்கு புகழ்பெற்ற கேரளாவில் இந்த காட்சி நடைபெறுகிறது).கடைசியில் கோபத்தோடு பேருந்தில் அமர்ந்திருக்கும் நாயகனிடம் யானை மன்னிப்பு கேட்கும் விதமாக துதிக்கையால் அவனை வருடுகிறது. ஒரு வகையில் இந்தக் காட்சி விலங்குகள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் இத்தனை 'பொறுப்புடன்' ஒரு பாகன் நடந்துகொள்வானா என்ற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது. இந்த காட்சியிலேயே இந்த உறுத்தல் ஆரம்பித்து விடுகிறது. பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிகாரிகளுடன் யானை மாட்டிக் கொண்ட போது உதவிய யானை ஏஜெண்ட், கொம்பன் யானையால் பாதிப்புக்கு உள்ளாகும் கிராமத்துக்கு கும்கி யானை ஒன்றை ஏற்பாடு செய்து  அது குறித்த நேரத்துக்கு வரமுடியாமல் போக அவருக்கு உதவும் விதமாக நாயகன் தன்  யானையை அந்த மலைகிராமத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளிக்கிறான்.தற்காலிகமாகத் தான். இரண்டு நாளில் உண்மையான கும்கி யானை வந்ததும் நாங்கள் (யானையோட சேர்த்து நாங்க நாலு பேருங்க) அங்கிருந்து வெளியேறிவிடுவோம் என்று ஏஜென்டிடம் சொல்கிறான். அங்கு சென்றதும் கதை மாற காதல் காரணமாக அமைவது தான் படத்தின் முடிச்சு.

யானையும் அது சார்ந்த மலைவனப் பகுதியும்  பின்னணி என்பதால் படத்தின் நம்பகத்தன்மை கூடிவிடுகிறது. கடுமையாக உழைத்திருக்கும் தனது படக்குழுவினரின் துணையுடன் அதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார். வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் பெண்களை  கொம்பன் யானை  தாக்கும் காட்சி மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. படம் தொடக்கத்திலேயே யானை சண்டை காட்சிகள் விஷூவல் எஃபெக்ட்ஸ் துணையுடன் உருவாக்கப்பட்டவை என்று டைட்டலில் சொல்லிவிடுகிறார்கள். தொழில்நுட்பத் தவறுகளை தவிர்க்கும் விதமாக காட்சிகளை இரவு நேரத்தில் நடைபெறுவதாகக் காட்டி யிருப்பது  பிரபு சாலமனுக்கு இருக்கும் புத்திசாலித்தனத்தைக்காட்டுகிறது. மலைகிராமத்தை சேர்ந்த ஆதிகுடிகள் கொம்பனால் தாக்கப்பட்டு இறந்துபோன பெண்களை வேதனையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யும்போது  அங்கு வரும் வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் யானை அபாயம் இருப்பதால் இங்கிருந்து காலி செய்யவேண்டியது தானே என்று கேட்கும்போது ஆதிகுடிகளின் தலைவர் கேட்கும் கேள்வி நிதர்சனமானது." நீங்கள் வனப்பகுதியில் கட்டிடங்களை கட்டி வைத்திருப்பதால் தான் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதுவரை வன எல்லைக்கு வெளியில் வராத யானைகள் ஊருக்குள் வருகின்றன  என்றால் என்ன அர்த்தம்?" என்று அவர் கேட்கும் கேள்வி திரைக்கும் வெளியே ஒலிக்க வேண்டிய முக்கியமானக் கேள்வி. அதிகாரவர்க்கத்தின் செவிட்டு காதுகளுக்கு விழும்படி அறைந்து கேட்கப்படவேண்டிய கேள்வி அது. ச. பாலமுருகனின் சோளகர் தொட்டி நினைவு தான் வந்தது. நாவலில் தற்காப்புக்காக கரடி ஒன்றை கொன்று விட்டு பின்னர் வனக்காவலர்கள் வலையில் சிக்காமல் இருக்க என்று கடன் வாங்கி அதற்காக வாழ்ந்த இடத்தையே இழக்க நேரும் பரிதாபத்துக்கு உரிய வனக்குடியினர் போல் அல்லாது இந்த ஊர் ஆதிகுடிகள் அரசு அதிகாரிகளை கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டியிருப்பது உண்மையோ இல்லையோ ஒரு வகையில் ஆசுவாசமாக இருக்கிறது. வனப்பகுதிகளில் வெறுமே சுற்றிக்கொண்டு இருக்கும் வனத்துறையினர் கொம்பன் யானையை வைத்து ஆதிகுடிகளை மிரட்டுவது அதிகாரவர்க்கம் ஒன்றுமறியாத பழங்குடியினரை ஏமாற்ற முயல்வதை தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும் அதிகாரவர்க்கத்துக்கும் அப்பாவிகளுக்கும் இடையிலான போராட்டம் இல்லை இந்தக் கதை. முன்பே சொன்னது போல் காதல் தான் மையம் படத்தில்.

கொம்பன் யானையிடம் இருந்து கிராமத்தைக் காக்க வந்த கும்கி யானைக் குழுவினருக்கு அதிகபட்ச மரியாதை காட்டுகிறார்கள்  ஆதிகுடி மக்கள். அவர்கள் காலில் சந்தனம் குங்குமம் வைத்து வணங்குகிறார்கள். தாங்கள் போலி கும்கிக் குழு என்பதால் உள்ளுக்குள் சற்று கலங்கியபடியே இருக்கும் பாகன்களின் தலைவனான நாயகன் தமிழ் சினிமா வழக்கப்படி ஒரு பெண்ணைப் பார்த்த முதல் நொடியே காதலில் விழுவதாகக் காட்டியிருப்பது தான் படத்தின் மிகப்பெரிய உறுத்தல். அந்தப் பெண்ணை அடைவதற்காக தான் வளர்த்த யானை, தன் தாய்மாமன், உதவியாளன் ஆகியோரின் உயிரை பணயம் வைக்க அந்த நொடியே முடிவெடுத்து விடுகிறான். ஆனால் அந்த உறுத்தல் மீது தான் திரைக்கதையே கட்டமைக்கப் படுவதால் நாம் மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கில்லை.

கொம்பன் யானையின் தாக்குதலை நேரில் கண்டதால் யானையைக் கண்டாலே பயந்து அலறும் நாயகி 'கும்கி' யானையைக் கண்டதும் பயந்து குளத்துக்குள் விழ அவளைக் காப்பாற்ற நாயகனும் நீரில் விழ, தமிழ் சினிமாத்தனம் தன் தலையை விரித்துக் காட்டுகிறது. "ய்யேஏஏ  ...." என்று அடிவயிற்றில் இருந்து கத்துவதை பின்னணி இசையாக மாற்றிய புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. காதல் வந்தால் எப்போதும் இந்த "ய்யேஏஏ  ...." தான். உடனே அரங்கில் காதல் உணர்வு திரையரங்கில் பரவத் தொடங்குகிறது. துயரம் தான், வேறென்ன சொல்ல! உடுமலைப்பேட்டையில் ஒரு சாதாரணத் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தேன். காலைகாட்சிக்கு திரையரங்கம் நிரம்பி வழிந்தது. தொண்ணூறு சதவீதம் கல்லூரி மாணவர்கள். ஒரு வரிசையில் ஐந்து ஜோடிகள் வேறு. எல்லோரும் மடியில் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருந்தார்கள். காதல் உணர்வுக்குக் கேட்கவும் வேண்டுமா? நாயகன் உண்மையான கும்கி யானையே வந்தாலும் இங்கிருந்து போகப்போவதில்லை என்று சொல்லும்போது உடன் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தாய்மாமனான தம்பி ராமையா கொம்பன் யானை வந்தால் இந்த கோவில் யானையை வைத்து எப்படி சமாளிப்பது என்று கேட்கும்போது காதல் பித்தம் ஏறிய நாயகன் சொல்கிறான் "அந்தப் பொண்ண பாத்தவுடன் நூறு யான வந்தாலும் அதை கையாலப் புடிச்சி இந்தப்பக்கம் ரெண்டு அந்தப் பக்கம் ரெண்டுன்னு வீசிடலாம் போல இருக்கு"(எண்ணிக்கை கூட குறைய இருக்கலாம்!) . உடனே அரங்கத்துக்குள் குதூகலக் கூச்சல். கொம்பன் யானை வந்தால் பெரிய ஆபத்தாகி விடும் என்று சொல்லும் யாரிடமும் அந்தப் பெண்ணை தான் தீவிரமாகக் காதலிப்பதாகவும் அவளுக்காக இங்கேயே இருக்கப்போவதாகவும் சொல்கிறான் நாயகன். குறைந்தபட்சம் கும்கியா குமரியா என்று மனதுக்குள் ஒரு சிறு போராட்டம் கூட நடப்பதில்லை அவனுள். பாலாவின் சேது திரைப்படம் வந்த பின்னர் நாயகியை மிரட்டியாவது தங்கள் காதலை வெளிப்படுத்தும் நாயகர்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து விட்டார்கள். அதன் பாதிப்பு சமீப காலமாக நடைபெறும் காதல் கொலைகளில் தெரிகிறது. தன்னை விரும்பாத காதலியைக் கொன்றே விடுவது அல்லது ஆசிட் வீசி அவள் அழகை சிதைத்து விடுவது என்று தன் 'உள்ளுலகம்' சார்ந்து வெறிப்பிடித்து அலையும் இளைஞர்களை உருவாக்கியதில் இதுபோன்ற படங்களுக்கு பங்கில்லாமல் இல்லை. முன்பெல்லாம் நாயகர்கள் காதலியிடம் காதலை சொல்லி அவள் மறுத்து விட்டால் கலங்குவார்கள். காத்திருப்பார்கள். இப்போது டாஸ்மாக்கில் குடி. நடனக் குழுவினரிடம் சேர்ந்து வெறி பிடித்த ஆட்டம். ஆறுதல் சொல்பவனை அடித்து விரட்டுவது என்று 'கொல வெறியுடன்' அலைகிறார்கள். திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இது தான் நடப்பு. இங்கே நாயகன் தன்னை நம்பி வாழ்பவர்களின் உயிருடன் விளையாடுகிறான்.

படத்தில் யானைக்கும் நாயகனுக்குமான உறவு அருமையானதாக இருந்தாலும் சிறுவயது முதல் இருவரும் சகோதரர்கள்  போல் பழகி வந்தாலும் ஒரு பெண்ணுக்காக அன்பான தன் யானையின் உயிரை பணயம் வைப்பது ஏன் என்ற கேள்விக்கு எந்த விடையும் இல்லை. அதேபோல் வறுமை காரணமாக சற்று இழிவான குணம் கொண்ட தன் தாய்மாமன் தலையில் யானை மீதிருந்து செருப்பை வேண்டுமென்றே தவற விடுவது
என்ன மனநிலை என்று புரியவில்லை. தொடர்ந்து நாயகர்கள் இதுபோல் சித்தரிக்கப்படுவது ஏன் என்பது புரியாத புதிர். இதெல்லாம் நகைச்சுவையா என்ன? படத்தில் நாயகனை விடவும் அதிகம் பேசுவதும் இயக்குனரை விட அதிகம் சிந்திப்பதும் தாய்மாமனாக வரும் தம்பி ராமையா தான். கிட்டத்தட்ட அறுபது சதவீத காட்சிகளில் அவரது 'மைண்ட் வாய்ஸ்' ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதே போல ஆதிகுடிகளைக் காணும்போது என்னவோ நரமாமிசப் பட்சிணிகளைக் கண்டது போல் அவர் பதறுவது எரிச்சல். இத்தனைக்கும் அந்த மக்கள் போலியான இந்தக் குழுவினர் மீது மிகுந்த மரியாதை காட்டுகிறார்கள். நம் சினிமாவில் திரைக்கதை என்பது செழித்து வளராமல் போனதற்கு இது போன்ற அர்த்தமற்ற காட்சிகள் தான் காரணம். நாயகனின் காதலை கேலிசெய்யும் வசனங்கள், நாயகியை நாயகன் பார்த்துக்கொண்டே நடப்பது, பிறகு ஒரு கட்டத்தில் நாயகியும் இவனைப் பார்த்துக்கொண்டே நடப்பது, கடைசியில் இருவரும் சேர்ந்தாற்போல் எங்காவது நடப்பது என்றே காட்சிகளை உருவாக்கி அறுபது சதவீத படத்தை நிறைத்து விடுகிறார்கள். கதைக்கு கால் பங்கு கூட இடம் இருப்பதில்லை. இந்தப் படத்தில் சொல்லப்படவேண்டிய பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டே விட்டன என்று சொல்லலாம். வெற்றியை குறிக்கோளாக கொண்டவர்கள் மத்தியில் இத்தனை தூரம் கதை சொன்ன கருணைக்காக நாம் பிரபு சாலமனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தார்மீக ரீதியாக நிறைய கேள்விகள் கேட்கலாம் என்றாலும் தர்க்க ரீதியாகப் படத்தில் பெரிய குறைகள் இல்லை என்பது பாராட்டுக்குரிய விஷயம். நாயகனும் நாயகியும் நெருங்கிப் பழகுவதை பெண்ணின் தந்தையான ஊர்த்தலைவரிடம்  வனக் காவலர்கள் சொல்லிவிட அதை அவர் அணுகும் விதம் அருமை. "வனக் காவலர்கள் தவறுதலாக சொல்லிவிட்டார்கள். நீங்கள் அதை பொருட்படுத்த வேண்டாம்" என்று நாயகனிடம் அவர் சொல்வது  எதிர்பாராத அருமையான காட்சி. மேலும் முன்புபோலவே நாயகனிடம் பேச வேண்டும் என்று தன் மகளிடம் அவர் சொல்வதும் உயர்வான விஷயம். எதிர்பாராத இந்த அன்புத் தாக்குதலால் நாயகன் தவித்து விடுகிறான். "என்னை தாக்க வந்திருந்தால் கூட எதிர்த்திருப்பேன். என் மீதான நம்பிக்கையை என் முன்னாலேயே வைத்து விட்டார் உன் தந்தை" என்று நாயகன் சொல்லும்போது பிரம்பித்து விடுகிறோம். இந்தப் படத்தின் மிக முக்கியக் காட்சி இது தான். மனித உணர்வுகளைத் துல்லியமாக கணிக்க தெரிந்த ஒருவரால் தான் இப்படியான காட்சியை அமைக்க முடியும். இருநூறு ஆண்டுகளாக வெளியாட்கள் யாரிடமும் திருமண உறவு கொண்டிராத அதற்கு எந்த விதத்திலும் சம்மதிக்காத அந்த ஆதி குடி தலைவன் புத்திசாலித்தனமாக அவர்கள் காதலை தவிர்க்கப் பார்க்கிறானா இல்லை இயல்பாகவே அத்தனை தூரம் நல்லவனா என்பது சிந்திக்க வைக்கும் கேள்வி.

அதே போல் கடைசி காட்சியில் கொம்பன் யானை தாக்க வரும்போது நாயகனின் சாதுவான யானைக்கு சங்கிலியை அறுக்கும் வலிமை எப்படி வருகிறது என்ற கேள்விக்கும் முன்பே பதில் வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த யானைக்கு சில நாட்களாக மத நீர் வடியத் தொடங்கி விட்டது என்று காட்சி வைத்திருப்பது தர்க்க ரீதியாக சரியான காட்சி. கொம்பன் யானை இவர்கள் தங்கியிருக்கும் அந்த மரப் பரணை தாக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் யானை சண்டைக் காட்சியும் தமிழ் திரைப்படம் இதுவரை கண்டிராதது. புத்திசாலித்தனமாக அதையும் இரவு நேரக் காட்சியாக வைத்து வெற்றிபெற்றிருக்கிறார் பிரபு சாலமன். படத்தின் நாயகனான விக்ரம் பிரபு பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். நெடுநெடுவென்ற உயரமும் அம்பு போன்ற உடலும் பாகனுக்கு நல்ல பொருத்தமாக இருக்கிறது. என்றாலும் அளவுக்கு மீறி விடைத்த நாசி மற்ற படங்களில் உறுத்தலாகத் தெரிய வாய்ப்பு உண்டு. ஸ்ரீதேவி வழி சென்றால் ஜெயம் நிச்சயம். நாயகி வழக்கம் போல் மிரள்கிறார், காதல் புரிகிறார், கண்ணீர் வடிக்கிறார். இயல்பான அழகுடன் தமிழுக்கு கிடைத்திருக்கும்  இன்னொரு நாயகி. ஆதிகுடிகளின் தலைவர் மிக இயல்பாக நடித்திருக்கிறார். தொழில்நுட்பம் தான் படத்தின் பலம். ஒளிப்பதிவாளர் சுகுமார் வனத்தின் அழகை அருவியின் பிரமாண்டத்தை நம் கண்ணுக்கு அருகில் கொண்டு வந்திருக்கிறார். வனத்தின் கரும்பச்சை பின்னணியில் யானை மீதமர்ந்து நாயகன் வரும் காட்சியின் கோணமும் ஒளியமைப்பும் மிகச் சிறப்பு. இமானின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அழகான வரிகளுடன் நிறைவான இசை தந்திருக்கிறார். "சொய்..சொய்" பாடல் தொடங்கியவுடன் மாணவச் செல்வங்கள் திரைக்கு அருகில் மேலேறி நடனமாடத் தொடங்க அவர்களை தியேட்டர்காரர்கள் அதட்டி விரட்ட வேண்டி வந்தது.என்றாலும் பின்னணி இசை என்பதில் மவுனத்துக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை இமான் இன்னும் உணரவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மரங்கள் அடர்ந்த புள்ளினங்கள் நிறைந்த அந்த கானகத்தின் உண்மையான சத்தம் ஒருமுறை கூட கேட்கவில்லை. எதற்கெடுத்தாலும் "ய்யே" என்ற ஓலக்குரல். 

என்றாலும் தமிழில் நிலம் சார்ந்து வந்த படங்களில் முக்கியமானப் படம் இது என்பதில் சந்தேகம் இல்லை. காதல் காதல் என்பதையும் தாண்டி கதை சொல்ல முயற்சி செய்தால் இது போன்ற படங்களை மேலும் சிறப்புறச் செய்யலாம். இறுதியில் தன்னை நேசித்த அப்பாவி உயிர்களை  இழந்து நாயகன் தவிக்கும்போது தன் சுயநலம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புலம்பும்போது அந்த செய்தியைத் தெரிந்துகொள்ள திரையரங்கில் யாரும் இல்லை. எல்லோரும் காதலைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறி விடுகிறார்கள்.

- காட்சிப்பிழை திரை இதழில் வெளியான கட்டுரை 

6 comments:

  1. படத்தைப் பார்க்கவில்லை, ஆனாலும் படத்தைப் பார்த்த திருப்தியைத் தருகிறது கட்டுரை என்று எழுதுவார்களே, அப்படி எழுத வைக்கும் கட்டுரை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. இன்று வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம்.நேரம் இருந்தால் வந்து பாருங்கள்
    http://blogintamil.blogspot.com/2013/01/2520.html

    ReplyDelete
  3. இன்று வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம்.நேரம் இருந்தால் வந்து பாருங்கள்
    http://blogintamil.blogspot.com/2013/01/2520.html

    ReplyDelete
  4. கமல் ரசிகன்February 21, 2013 at 2:13 PM

    கமல் எப்பேர்பட்ட கலைஞன்? அவரை சகட்டுமேனிக்கு விமர்சிக்க உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?ஒருவரை பற்றி தெரிந்து கொள்ளாமலேயே வார்த்தைகளை வாரி இறைப்பது சுலபம்.ரகுமான் வரவால் பின்னுக்கு சென்றிருக்க வேண்டிய இளையராஜாவுக்கு தொடர்ந்து தனது நல்ல திரைப்படங்களில் வாய்ப்பளித்தவர் கமல்.சரி அது mutually benefiting தான் .
    சாரு போன்ற அரைவேக்காட்டு விமர்சகர்களை அப்படியே பிரதி எடுப்பது(கமல் மீதான விமர்சனத்தில்) உங்களுக்கு சரியாக படுகிறதா?சிந்தித்து பாருங்கள்...உங்களை கமல் படம் பார்க்க சொல்லி யாரும் வற்புறுத்தவில்லையே?
    ரஜினியின் இஷ் விஷ் என விரலாட்டும் படங்களை பாருங்கள்..அல்லது விஜய் நடித்த காவிய படங்களான சுறா ரசிகன் மாண்புமிகு மாணவன் போன்ற படங்களை பாருங்கள்.உங்களை ரசனை அப்படிபட்டதாகத்தான் இருக்க இயலும்

    ReplyDelete
  5. ரகுமான்தாசன்April 22, 2013 at 11:12 AM

    ஓங்க எச நானியின் வண்டவாளம் குமுதம் பேட்டி மூலம் தண்டவாளம் ஏறிவிட்டது போல..சரி மனம் தளர வேண்டாம்..நல்ல இசை மூலம் எப்பேர்பட்ட மனக்காயதையும் ஆற்ற இயலும்..இதோ அப்படி ஒரு அற்புதமான இசை
    http://www.youtube.com/watch?v=8sa0l4BptSU

    ReplyDelete