Wednesday, October 10, 2012

ஒ மை காட் - ஒரு பார்வை -1

கோவில்களை விட கழிப்பறைகளே முக்கியம் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பேசியிருக்கும் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது சமீபத்திய செய்தி.

'கோயில்கள் கூடாது என்று சொல்லவில்லை. அவை கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது' என்று திராவிட இயக்கத்தின் வழி வந்த கருணாநிதி பராசக்தி திரைப்படத்தில் வசனம் எழுதினார். கடவுளே இல்லை என்று சொல்கிறீர்களே ஒரு வேளை கடவுள் உங்களுக்கு காட்சி கொடுத்தால் அப்போது என்ன சொல்வீர்கள் என்று பெரியாரிடம் கேட்கப்பட்டபோது  'அப்போ இனி கடவுள் இருக்கார்னு சொல்வேன்..பாத்தா ஒத்துக்க வேண்டியது தானே' என்று பெரியார் பதிலளித்ததாக சொல்வார்கள்.

தமிழர்கள் கடவுளின் இருப்பு பற்றி கடும் கேள்வி எழுப்பி பழக்கமுள்ளவர்கள். கடவுளே இல்லை என்று சொன்ன இயக்கத்தின் வழி வந்த அரசியல் கட்சிகளின் ஆட்சியில் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலிச் சாமியார்களின் குட்டு உடைந்த பின்னரும் அவர்கள் சுதந்திரமாகவும் முன்னை விட குதூகலத்துடனும் உலா வருவது ஒரு நகை முரண். வட இந்தியாவில் கடவுள் பற்றிய கருதுகோள் வேறானது.  இங்கு கடவுள் இருப்பு பற்றிய பிரச்சனையை விட எந்தக் கடவுள் உயர்ந்தவர் என்ற சர்ச்சை தான் வழக்கமான புழக்கத்தில் உள்ளது. தவிர கோவில்கள் எக்கச்சக்கம். பெரும்பாலானவர்கள் மிகுந்த பக்தி கொண்டவர்கள் இங்கே. மதப்பற்றும் அதன் அடிநாதமாக சாதிப்பற்றும் கொண்ட வட இந்தியாவில் கடவுளை கேள்வி  செய்து படம் எல்லாம் வந்ததில்லை. வரவும் முடியாது. ஆனால் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஹிந்தி படம் 'ஓ மை காட்' (OMG). என்றாலும் படத்துக்கு பல இடங்களில்ருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பஞ்சாபில் இந்தப் படம் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அங்கு படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. மத அமைப்புகள் தங்கள் மத நம்பிக்கைகளை இந்தப் படம் கேலி செய்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. வழக்கமான இந்திய சினிமா மரபுப் படி இந்தப் படத்தின் கருவும் கடன் வாங்கப்பட்டது தான். திருடப்பட்டது போல் தெரியவில்லை. The man who sued God என்ற ஆஸ்திரேலியப் படத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட படம். முதலில் மராத்தியில் '' என்ற பெயரிலும் பின்னர் 'Krishan Vs Kanhaihya' என்ற பெயரிலும் மேடை நாடகமாக இந்தக் கதை வட இந்தியர்களுக்கு அறிமுகமானது தான். என்றாலும் அப்போதெல்லாம் இல்லாத எதிர்ப்பு இப்போது ஏன் என்கிறார் படத்தில் காஞ்சியாக நாத்திகர் வேடத்தில் நடித்திருக்கும் பரேஷ் ராவல். அவர் தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. நாடகத்திலும் அதே வேடத்தில் அவர் நடித்திருக்கிறார். மிகச் சிறந்த மேடை நாடக நடிகரான அவர் படு அனாயாசமாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். எதிர்ப்பையும் மீறி படம் ஓடுவதற்கு அவர் நடிப்பு ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

மும்பையில் தெய்வச் சிலைகள் மற்றும் பக்தி சமாசாரங்களை விற்கும் பரேஷ் ராவல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். பக்தர்களின் பலவீனத்தை காசாக்கும் ஆன்மீக நிறுவனங்களை கிண்டல் செய்பவராகவும் அதே சமயம் தன்னிடம் வந்து மாட்டும் பக்திமான்களிடம் அதே முறையைப் பயன்படுத்தி ஏமாற்றி பணம் செர்ப்பவராகவும் அதன் மூலம் இந்த பக்திப் பாமரர்களை கிண்டல் செய்பவராகவும் வருகிறார்  பரேஷ்.  ஒரு பணக்கார என்.ஆர்.ஐ மறைந்த தன் அம்மாவின் நினைவாக புனித யாத்திரைக்கு பக்தர்களை அழைக்கும் போது தானும் போக வேண்டும் என்று விரும்பும் தன் கடை ஊழியரும் உறவினனுமான மகாதேவை கடுமையாக கிண்டல் செய்கிறார் பரேஷ். 'அந்தம்மா ஆஸ்பிடலில் கிடக்கும்போது அந்தப் பக்கம் தலைக்காட்டாத மகன் அவன்..அவன் புனிதப் பயணத்துக்கு அழைப்பது தன் அம்மாவின் நினைவுக்காக அல்ல. சுய விளம்பரத்துக்காக' என்று சொல்கிறார். அவர் மனைவியோ நம் திராவிட இயக்கத் தலைவர்களின் மனைவிமார்கள் போலவே தீவிர பக்தை. பரேஷ் ராவல் கடவுளை கிண்டல் செய்யும்போதெல்லாம் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் அப்பாவி பக்தை. தன் குழந்தைகள் ஆன்மீக நடவடிக்கையில் இறங்கும்போது அவர்களை ஊக்கவிக்கும் அம்மா அவர்.

மனைவியின்  வற்புறுத்தலின் பேரில் ஹரித்துவார் செல்லும் அந்தக் குழுவுடன் இணைந்து பரேஷ் ராவலும் செல்கிறார். பயணம் முழுதும் அவர் அடிக்கும் கமெண்டுகளால் பக்தர் குழு பதறுகிறது. நமக்கு தெரியும். இது போன்ற பயணங்கள் முற்றிலும் வியாபார நோக்கம் கொண்டவர்களால் ஏற்பாடு செய்யப்படுவது என்று. வாகன ஏற்பாட்டளர்களுக்கும் வழியில் உள்ள உணவகங்கள், கடைகள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையில் ஒரு மறைமுக ஒப்பந்தம் இருக்கும்.  நம் விருப்பமில்லாமேலேயே அங்கு அழைத்து சென்று விடுவார்கள் ஏஜென்ட்டுகள். ஒரு முறை தாஜ் மகால் செல்ல ஆக்ரா இறங்கி அங்கு ஒரு பேட்டரி காரில் சென்றுகொண்டிருந்தபோது அதன் டிரைவர் வழியில் ஒரு கலைப் பொருட்கள் அங்காடிக்கு எங்களை அழைத்து செல்ல முயற்சித்தான். அதெல்லாம் முடியாது நேரே தாஜ்மகாலுக்கு போ என்ற போது அவன் எங்களிடம்  'பத்திலிருந்து பனிரெண்டு மணிவரைக்கும் தாஜ் மகால் மூடியிருக்கும். அந்த நேரத்தை இங்கு செலவிடுங்கள்' என்று சிரிக்காமல் சொன்னான். பிறகு அவனிடம் தமிழில் கெட்டவார்த்தைகளும் ஹிந்தியில் நல்ல வார்த்தைகளும் சொல்லி அவனை நல்வழிப் படுத்தி மேற்கொண்டு பயணம் செய்ய  வேண்டி வந்தது. நம் காஞ்சி(பரேஷ் ராவல்) தெய்வச் சிலை வியாபாரி என்பதால் அவர் அங்கு சென்று சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கும் காட்சி நல்ல நகைச்சுவை. 'அந்த பாடி பில்டர் அனுமார் சிலை ஒரு பத்து, அந்தப் புலி மேல உக்காந்திருக்கிற காளி சிலை ஒரு பத்து' என்று அவர் ஆர்டர் செய்ய, கடைக்காரன் திகைத்து நிற்கிறான். கடைசியில் பரேஷ் கேட்கிறார் ' ஏம்பா இவ்ளோ வாங்குறேன் ஒரு சாய்பாபா சிலை ப்ரீ யா ' தரமாட்டியா?'.
திரும்பி வரும் வழியிலும் அவரது கலாட்டா தொடர்கிறது. புனித கங்கை  நீர் ஊற்றும்  சொம்பில் சரக்கை கலந்து அடித்து விட்டு அதை மகாதேவுக்கு கொடுக்க அவன் குடித்து விட்டு அதை மற்ற ஆண்களிடம் தர சொம்பு ஒரு ரவுண்டு வருகிறது பஸ்சுக்குள். கடைசியில் புனிதப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தவனின் மனைவி அதை குடித்து விட்டு 'என்ன ஒரே காரமாக இருக்கிறது' என்று கேட்க பரேஷ் சொல்கிறார் ' கங்கையில அழுக்கு ஜாஸ்தியாகி  விட்டது அல்லவா?'

இப்படியாப்பட்ட பரேஷ் ராவலின் பையன் கணேஷ் ஒரு லோக்கல் ஆன்மீகவாதி தலைமையில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு உறியடிக்கும் விளையாட்டில் ஈடுபடுவதை டி.வியில் பார்த்து விட்டு அங்கு வருகிறார் பரேஷ். கூட்டத்தை கலைக்க ஒரு தந்திரம் செய்கிறார். இசை நிகழ்ச்சி நடக்கும் மேடையில் ஏறி மைக்கை பிடித்து 'இது சுவாமிகளின்(விழா நடத்தும் சாமியார்) ஆணை. இன்னும்  பத்தே நிமிடங்களில் எல்லா கிருஷ்ணன் சிலைகளும் வெண்ணையும் ரொட்டியும் தின்னவிருக்கின்றன. எல்லோரும் ஓடிப் போய் கிருஷ்ணன் சிலைகளுக்கு வெண்ணெய் ஊட்டுங்கள்' என்று சொல்ல கிருஷ்ணன் கோவில்கள் இருக்கும் திசை நோக்கி கூட்டம் பஞ்சாய்ப் பறக்கிறது. கீழே இறங்கும் மகனை ஒரு சாத்து சாத்தி கிளம்பும் போது சாமியார் காஞ்சிக்கு சாபம் விடுகிறார். 'நீ கடவுளை அவமதித்து விட்டாய்..உனக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்'. சொன்ன வினாடி மழை பெய்கிறது. லேசான நிலநடுக்கம் வேறு. வீட்டுக்கு திரும்பினால் மும்பையில் வேறெங்கும் சேதமில்லை காஞ்சியின் கடை இருக்கும் சோர் பஜாரில் ஒரு கடை மட்டும் இடிந்து விட்டது என்று செய்தி வருகிறது. பழுதடைந்துள்ள கடையின் மராமத்து வேலைக்கு செலவு செய்யாமல் ஹஜ்ஜுக்கு போகிறேன் என்று சொன்ன முஸ்லிம் நண்பர் ஒருவரின் கடை தான் இடிந்திருக்க வேண்டும் என்று காஞ்சி நினைக்க, செய்தி சேனல் நிலநடுக்கத்தில் இடிந்த கடையைக் காட்டுகிறது. அது காஞ்சியின் கடை. 

நாத்திகரான அவர் கடவுளை நிந்தித்து பேசியதால் தான் அவர் கடை மட்டும் இடிந்தது என்று அவருக்கு சாபம் விட்ட சாமியார் முதல்  மனைவி மற்றும் உறவினர்கள் வரை பேசத் தொடங்குகின்றனர். அவற்றை பொருட்படுத்தாத காஞ்சி கடைக்குள் புத்திசாலித்தனமாக பாதுகாப்பாக வைத்திருந்த இன்ஷூரன்ஸ் ஆவணங்களை எடுத்துக்கொண்டு இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்கு போகிறார். ஸ்லோமோஷனில் தாத்தா நடப்பது, பாட்டி சிரிப்பது போன்ற பல காட்சிகளை மெதுவாக காட்டிவிட்டு கடைசியாக Terms & Condition ஐ படபடவென்று வாசிக்கும் குரல் கொண்ட இன்ஷூரன்ஸ்,பங்குச் சந்தை பற்றிய விளம்பரங்கள் நமக்கு தெரியும். விண்ணப்பங்களிலும் கண் வலிக்கும் வகையில் சிறிய எழுத்துகளில் தான் அவை எழுதப்பட்டிருக்கும். ஏஜென்ட் சொன்னதை நம்பி நம் காஞ்சி அவற்றைப் படிக்காமல் கையெழுத்திட்டுருக்கிறார். . விளைவு, அவரது கடைக்கு மனிதர்களால் ஏற்படும் அழிவுகளுக்கு மட்டும் தான் காப்பீடு கிடைக்கும். இந்த பூகம்பம் அந்த category யில் வராது என்கிறார் இன்ஷூரன்ஸ் கம்பெனி அதிகாரி. ஏனென்றால் இந்த பூகம்பம் கடவுளின் செயல். Act of God! வெகுண்டெழும் காஞ்சி அந்த அலுவலகத்தில் கலாட்டா செய்து அதிகாரியின் கன்னம் பழுக்க அறை ஒன்று விடுகிறார். இதற்கு என்ன வழி என்று யோசிக்கும்போது எல்லாவற்றுக்கும் காரணமான கடவுளை இழுத்தால் என்ன என்று தோன்றுகிறது. மிக முக்கியமாக அவருக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லை என்றாலும் தனக்கு நேர்ந்த இழப்புக்கு காரணம் கடவுள் என்று சொல்லப்படுவதால் அந்த கடவுள் மீதே கேஸ் போட முடிவெடுக்கிறார்.  ஆனால் இந்த விபரீத வழக்கை எடுத்துக்கொள்ள வக்கீல்கள் மறுத்து அவரைக் கண்டாலே தலைதெறிக்க ஓடுகின்றனர். கடைசியில் ஒரு ஏழை முஸ்லிம் வக்கீலை(ஓம் புரி) அணுகுகிறார். அவர் தன்னால் இந்த கேசை நடத்த முடியாது என்று சொல்கிறார். காரணம் இந்துக்களின் கேஸ் ஒன்றை எடுத்து நடத்தியதால் சில மதவாதிகள் அவரைத் தாக்கி நடக்க முடியாத நிலையில் இருப்பதால் தன்னால் வழக்குக்கு உதவ முடியும். ஆனால் அதை எடுத்து நடத்த முடியாது என்று சொல்லி விடுகிறார். ஆனால் காஞ்சியே தனக்காக கோர்ட்டில் வாதாட முடியும் என்று சொல்கிறார். கருப்பு கோட்டுடன் காஞ்சி கோர்ட்டுக்குப் போகிறார். தான் சம்மன் அனுப்பிய சாமியார்களை கோர்ட்டில் சந்திக்கிறார். கதை சூடுபிடிக்கிறது.

நாட்டில் உள்ள பக்தர்கள் மத்தியில் காஞ்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. கோர்ட்டை விட்டு வெளியில் வந்தால் அகோரிகளும் இன்னபிற சாமியார்களும் வழி மேல் வேல் வைத்துக் காத்திருக்கிறார்கள். எப்படி வெளியில் போகிறாய் பார்க்கிறோம் என்று அவரை மிரட்டுகிறார் முக்கிய சாமியார் (மிதுன் சக்கரவர்த்தி). அவரது வீட்டை மதவாதிகள் தாக்க மனைவி பயந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார். கடவுளுக்கு எதிரான வழக்கை நடத்தும் அவரை செல்லும் இடமெல்லாம் மத வெறியர்கள் துரத்த அவரைக் காப்பாற்ற பைக்கில் வந்து சேருகிறார் - கடவுள்.

2 comments:

  1. ஸ்லோமோஷனில் தாத்தா நடப்பது, பாட்டி சிரிப்பது போன்ற பல காட்சிகளை மெதுவாக காட்டிவிட்டு கடைசியாக Terms & Condition ஐ படபடவென்று வாசிக்கும் குரல் கொண்ட இன்ஷூரன்ஸ்,பங்குச் சந்தை பற்றிய விளம்பரங்கள் நமக்கு தெரியும். ___ True

    ReplyDelete