Saturday, April 30, 2011

நினைத்தாலே இனிக்கும்- அனுபவம்



சிறுவயதில் அறந்தாங்கி யில் நாங்கள் இருந்தபோது வீரமாகாளியம்மன் கோவில் தெப்ப திருவிழாவில் ஒவ்வொரு சமூகமும் மண்டகப்படி நடத்தும். ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இசைக்குழுக்கள் கச்சேரி நடக்கும். திண்டுக்கல் அங்கிங்கு போன்ற புகழ்பெற்ற இசைக்குழுக்கள் எங்கள் ஊர் இரவுகளை இசையால் நிரப்பி ததும்ப ததும்ப பாடல்களை காதுகளில் ஊற்றி அனுப்புவார்கள். ஒன்பதாம் வகுப்பு வரை அம்மாப்பா கூடவே சென்று தெப்பத்திருவிழாவையும் கோயில் முன்பாக நடக்கும் இசைக்கச்சேரிகளையும் பத்திரமாய் பார்த்துவிட்டு பாய்ஸ் ஹைஸ்கூல் கிரவுண்டு வழியாக வீடு திரும்புவோம். வரும்போது என் சகோதரிகள் மற்றும் பக்கத்துக்கு வீட்டு பெண்கள் கச்சேரியில் கேட்ட பாடல்களை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டு வருவார்கள். "தொட்டால் பூ மலரும் ." .பாட்டை இவங்க பாடி கேக்கும்போது இன்னும் இனிமையா இருந்திச்சில்லக்கா" எனும்போது நான் ஆவென்று கேட்டுக்கொண்டே வருவேன். பாடகர்களின் பெர்சனாலிட்டி பற்றி பெர்சனல் கமென்ட் பறக்கும். "அந்த கிர்தா வச்சவனுக்கு என்னம்மோ மோகன்னு நினைப்பு , மைக்கை அப்படி இப்படி சுத்தி சுத்தி பாடுறான்.." என்பாள் மேல் வீட்டு சாந்தி அக்கா. "என்னக்கா.." என்று ஆர்வமாய் கேட்டால் .."வாய் பாக்கதடா" என்று தலையில் செல்லக்கொட்டு ஒன்று விழும். தொல்லைக்காட்சி அவ்வளவு புழக்கத்துக்கு வராத காலம் அது. இசை கேட்க காதுகள் திறந்திருக்கும். மனதும்.

அந்த இசைக்கலைஞர்கள் பற்றிய நினைவு வீடு வரை தொடரும். நீலக்கலர் சட்டை போட்டு ஒரு பெரிய கீபோர்டை வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் இடையில் மேடையை விட்டு கீழிறங்கி கூட்டத்துக்கு நடுவே நின்று யாரோடோ பேசிக்கொண்டிருக்கும்போது எப்படியாவது அவர் கையை தொட்டு விட வேண்டும் என்று நினைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது. "மருதமலை மாமணியே" முருகையா பாடலை பாடுவதற்கென்று ஒரு பாடகர் உண்டு. அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. அதே போல் " சங்கீத ஜாதி முல்லை " பாடலுக்கு ஒருவர். அறந்தை கோட்டை வீதிகளில் ரவுடிகள் போல் திரியும் சிலரை அப்போது பார்த்திருக்கிறேன். பாடலில் உருகி கைதட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவர்கள் பாடலை ரசிக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அவர்களுக்குள் இப்படி ஒரு ரசனையா என்று வியப்பேன். எப்படியாவது பெரிய ஆளான பிறகு ஒரு மேடைப்பாடகனாக ஆக வேண்டும் என்று மனம் துடிக்கும். பள்ளி நாட்களில் விக்ரம் படத்தின் டைட்டில் பாடலான "விக்ரோம் ..விக்ரோம் " பாடலை அதன் பின்னணி இசை , ஜானகியின் ஹம்மிங் ஒன்று விடாமல் அச்சு அசலாக (!) பாடுவேன். "துடிக்குது புஜம்..டுகுடு டுகுடு டுடு டுடு " என்று பாடும்போது எனக்கும் கூட்டம் கைதட்டும்.

பின்னாளில் புதுக்கோட்டை இசைக்குழு ஒன்றில் பாட சந்தர்ப்பம் கிடைத்தது. காரைக்குடி பக்கம் ஒரு கிராம திருவிழாவில் எனது முதல் கச்சேரி. வருங்கால முதல்வர் விஜய காந்த் நடித்த "வானத்தை போல " படத்திலிருந்து " காதல் வெண்ணிலா " பாடலை அவ்வளவு பெரிய ஜனத்திரளுக்கு முன்னால் பாடினேன். நம்ப மாட்டீர்கள் நண்பர்களே..'விஜயகாந்த்' நற்பணி குழு ஒன்று நூறு ரூபாய் அன்பளிப்பு அனுப்பி ஒன்ஸ் மோர் பாட சொன்னார்கள். இசை மீதான காதலும் பாராட்டுக்கு ஏங்கும் சிறு மனதும் சுமந்து அலைந்த நாட்கள் அவை. முக்கியமாக நான் கிராம திருவிழா கச்சேரிகளை மிஸ் பண்ணவே மாட்டேன். ஒளிரும் அலங்கார விளக்குகளில் பளீரென்று மின்னும் கிராம தெருக்களில் உற்சாக முகங்களுடன் தென்படும் முகங்கள் தரும் பரவசம். அங்கு சென்றதும் ஊர் தலைகள் எங்களுக்கு தரும் அநியாய மரியாதை ஒரு புறம். ஊர் தலைவர் வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் மண்டபத்திலோ விருந்து நடக்கும். சுடச்சுட இட்லி வைத்து அதற்கு மேல் கறிக்குழம்பு ஊற்றுவார்கள். அந்த சுவை கிராமங்களில் அல்லாமல் வேறு எங்குமே கிடைக்காதது. அந்த சுவைக்கு சுழலும் நாவுக்காக என்றே நான் அந்த கச்சேரிகளுக்கு செல்வேன். ஓரிரண்டு பாடல்களும் , அவ்வபோது மெயின் சிங்கர் பாடும் போது மற்றவர்களுடன் இணைந்து " ஆ..ஆ.." என்றோ " லாலா " என்றோ ஆலாபனை ( கோரஸ் தான் :) பாடக்கிடைக்கும். அதுவரை மற்றவர்கள் பாடும்போது மேடையில் பின் வரிசை நாற்காலிகளில் அமர்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். தமக்கு விருப்பமான பாடல் பாடப்படும்போதும் பாடல் சிறப்பாக அமைந்து விடும்போதும் கண்கள் விரிய சிரித்து கைதட்டும் கிராம பெண்களின் அழகை பாட இனி மேல் தான் ஒருவர் பிறந்து வரவேண்டும்.
டெல்லி வந்த பின், அறை நண்பர் குமரன் தந்த ஊக்கத்தில் இங்குள்ள ஆர்கெஸ்ட்ரா குழுவில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடினேன். அது பற்றி ஒரு தனிப்பதிவே எழுதலாம். நான், வரதராஜன், குமரன் என்று எங்கள் அறையின் பிரத்யேக இசைக்குழு நடத்திய கச்சேரிகளுக்கு கணக்கே இல்லை. முனிர்காவின் ஒரு பகுதியை தூங்கவிடாமல் அடித்தோம் சில காலம்.



தமிழ் சினிமாவில் இசைக்குழுக்கள் பற்றி சரியான படம் இன்னும் வரவில்லை. முழுக்குழுவும் மேடையேறி ஒரே ஒரு பாடல் பாடிவிட்டு புறப்படுவதாக தான் எல்லா படங்களும் அமைகின்றன.இதற்காகவா அவ்வளவு கூட்டம் காத்திருக்கும். இடையில் கதாநாயகனோ- கியோ பாடலை மறந்து திணறினால் அவரது ஜோடி மீதிப்பாடலை கூட்டத்துக்கு நடுவில் இருந்து பாடிக்கொண்டே மேடை நோக்கி நடந்து வரும். இருக்கும் படங்களில் இது போன்ற அபத்தங்கள் ஏதுமில்லாமல் மிகுந்த முதிர்ச்சியான நகைச்சுவையுடன் அருமையான காதல் பயண அனுபவமாக இன்றும் நினைத்தால் இனிக்கும் படம் ஒன்றே ஒன்று தான். கமல், ரஜினி, ஜெயப்ரதா பின்னியெடுத்த படம். உண்மையில் இந்த பதிவு எழுதும்போது கே.பிக்கு பால்கே விருது அறிவிக்கப்படிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பாலச்சந்தர் படங்கள் மீது வெவ்வேறு கோணங்களில் விமர்சனம் வைக்க முடியும் என்றாலும், கதாபாத்திரங்களை அவர்களுக்குண்டான பிரத்யேக பிரச்னைகள், அவற்றை எதிர்கொள்ளும் தீவிரம் என திரையில் காட்டி தமிழ் திரையுலகில் தனித்த அடையாளங்களை அழுந்த பதித்தவர். எனக்கு அவரது நகைச்சுவை உணர்வு தான் மிகவும் பிடித்தது. நினைத்தாலே இனிக்கும் ஒரு உதாரணம்.

இளையராஜா ஒரு வேகம் கொண்ட தென்றலாய் தமிழ் திரை இசையுலகில் நுழைந்து ரசிகர்களை ஈர்த்துகொண்டிருந்தபோது தன் இருப்பை அழுத்தமாய் பதிவு செய்ய மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இந்த படம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. தன் நீண்டகால நண்பரின் இசையாற்றலை ரசிகர்களுக்கு காட்டவென்றே இந்த படத்தை எடுத்தார் போலும் கே.பி. டைட்டிலிலேயே எம்.எஸ்.வி மியூசிகல் என்று எழுதி இருப்பார். என்ன அருமையான இசை. என்ன ஒரு modernity! எனக்கு பாடல்களை கேட்கும்போது ராஜா-ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது' பாடல்களுக்கு மெல்லிசை மன்னரின் பதிலோ என்று தோன்றும். "ஒரே நாள் உனை நான்" - "பாரதி கண்ணம்மா", " நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா "- "ஆனந்த தாண்டவமோ" , "என்னடி மீனாட்சி" - "எங்கேயும் எப்போதும்". நண்பர்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். என்னளவில் நான் நினைத்தது அப்படி தான்.
படத்தின் இசை ராஜாவுக்கும் மக்களுக்கும் மன்னர் தந்த பதில் என்றே நினைக்க தோன்றுகிறது. அதே போல் ரஹ்மானுக்கு பதில் சொல்ல இன்னும் ராஜா மனதளவில் தயாராகவில்லை என்பது தான் என் எண்ணம்.

படத்துக்கு கதை-வசனம் சுஜாதா என்று ஞாபகம். ஒவ்வொரு பிரேமிலும் இளமை தெறிக்கும். கமல் தன் குழுவை அறிமுகப்படுத்தும்போது தொடங்கும் சிரிப்பு சூட்கேஸ் மேல் நின்று கமலாகர் ராவ் தன் உயர்ந்த மனைவியிடம் 'உத்தரவு' வாங்கும் காட்சி, ரஜினி இங்கிலீசு பேசி டபாய்க்கும் காட்சி என்று அமர்க்களமாய் இருக்கும். இப்போது பார்த்தாலும் அர்த்த்ம் உணர்ந்து சிரிக்க வைக்கும் காட்சிகள். இந்த படத்தின் மிக முக்கிய அம்சம், வெளிநாடு செல்லும் தமிழ் மனதின் வெளிப்பாடு. அந்த ஊர் ஆச்சர்யங்களை அனுபவித்தபடி சொந்த அறியாமைகளை நகைச்சுவையாக்கி ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்வதை அதன் இயல்பிலேயே படமாக்கி இருப்பார் கே.பி. கழிவறை வாசலில் ஆண்-பெண் படங்களின் வேறுபாடு புரியாமல் விழித்து தவித்து , ஒருவர் ஆண்களுக்கான கழிவறையில் நுழைவதை பார்த்து அவர் பின்னாலே ஓடும் காட்சி ஒரு உதாரணம்.

இலக்கிலாமல் பயணித்தாலும் ஜெயப்ரதாவின் மரணம் பற்றிய எண்ணத்தை சிம்பாலிக்காக காட்டும் காட்சிகளும் , அவரது நடிப்பும் படத்தின் நாடியை கைவிடாமல் கொண்டுசெல்லும் . மாற்றி மாற்றி அவர் செய்யும் குழப்படிகளை பொறுக்காமல் கமல் வெறுப்பில் பொருமுவதும் அருமை. ஒரு காட்சியில் கோபத்தில் முதலை குட்டையில் ஜெய்ப்ரதாவை தள்ளிவிடுவது போல் பயமுறுத்தும் காட்சியில் கமல் முகபாவனை அவ்வளவு நிஜமாய் இருக்கும். "நான் சொன்னால் ஹெலிகாப்டரில் இருந்து அப்படியே குதித்து நடிப்பார் " என்று ஜேம்ஸ் கேமரோன் ஆர்னால்டை பற்றி சொன்னதாய் படித்திருக்கிறேன். அது போல் ரஜினியும் பாலசந்தர் சொன்னார் என்பதற்காக "டேப்- சுந்தரியை" தேடும் காமெடி பாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருப்பார். துரு துருவென பேசி சிரிக்கும் ஜெயசுதா (தானே?) பாத்திரம் அருமை. அவரது கணவனாய் வந்து காரோட்டும் நபரின் முகத்தில் என்னவொரு முரண்நகை சிரிப்பு.

முன்பே சொன்னது போல் இது எம்.எஸ்.வி.யின் படம். எனவே சண்டைக்காட்சியில் கூட "டிஷ்யூம் டிஷ்யூம் " என்று ஒரு பாட்டு. ஆஹா. எஸ்.பி.பி தான் என்னமாய் பாடி இருப்பார் ஒவ்வொரு பாடலையும். என்ன ஒரு பாவம் குரலில். "நிழல் கண்டவன்" என்று கமலுக்கு பாடும்போதும் "ராஜாவை பார்க்காமல் ரோ......ஜா" (இடையில் ஒரு பிர்கா!) என்று ரஜினிக்கு பாடும்போதும் தான் என்னவொரு வெரைட்டி. இப்போதெல்லாம் ஒரே பாடலை போர்ஷன் போர்ஷனாக பத்து பேர் பாடுகிறார்கள். ரஹ்மான் செய்த புண்ணியங்களில் புதிய பாடகர்கள் அறிமுகம் ஒரு திறப்பு என்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தராமல் "பரிசோதனைகளை" மேற்கொண்டே இருப்பதால், எவரும் இங்கே நிலைக்கவில்லை. தொண்ணூறுகளின் இறுதி வரை நிறைய படங்கள் இசை அமைத்த தேவா தான் ரஹ்மான் அறிமுகப்படுத்தும் பாடகர்களை கப்பென்று பிடித்து வாய்ப்பு தருவார். ரஹ்மான் ஒரு பாடல் தந்தால் தேவா பத்து பாடல்களுக்கு வாய்ப்பு தருவார். இப்போது அதுவும் இல்லை. சமீபத்தில் விகடனில் மதன் பதில்களில் இந்த தலைமுறை பாடகர்கள் பற்றிய ஒரு பதில் நூற்றுக்கு நூறு உண்மை.

நினைத்தாலே இனிக்கும் நன்றாக ஓடவில்லை என்று சிலரும் இரண்டாவது ரிலீசில் படம் சக்கை போடு போட்டது என்று சிலரும் சொல்கிறார்கள். ஆனால் இன்றும் நான் சோர்வாக இருக்கும் சமயங்களில் பார்த்தால் இழந்த உற்சாகத்தை மீட்டுக்கொடுக்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்ற வகையில் எப்போது நினைத்தாலும் இனிக்கும் படம், of course ! இசை அனுபவம். "யாதும் ஊரே" பாடலின் கம்பீர முகப்பு இசைக்கு சிங்கப்பூரின் கடற்கரையும் இயற்கை அழகும் காட்டப்படும் போது மனம் சிலிர்க்கும். அதே போல் ஜெயப்ரதாவின் மரணம் உறுதியாகி விட்ட பின்பு அவரும் கமலும் தாங்கமுடியாத துயரம் தோய்ந்த முகங்களோடு தாம் முன்பு சுற்றி பார்த்த இடங்களை பார்த்தபடி உறைந்து நிற்க பின்னணியில் எம்.எஸ்.வி. விரலசைவில் எஸ்.பி.பி.- ஜானகியம்மா பாடும் 'நினைத்தாலே இனிக்கும்' பாடலுக்கு ஒரு மாற்று உண்டா?

கே.பிக்கு வாழ்த்துகள்..

சொல்வனம்-வடக்குவாசல் ஓவியங்கள்..









Thursday, April 28, 2011

ஓவியங்கள்..!







ஓவியங்களின் மீது கிளிக் செய்யவும்..

Friday, April 22, 2011

அவன் இவன் யுவன்..


அரவிந்தன் இசை வெளியான நாட்கள். ரஹ்மானின் ராஜ்ஜியம் பிரதேச எல்லைகளை பிளந்துகொண்டுவியாபித்திருந்த நேரம் .குறுநில மன்னனாக தேவா கோலோச்சிய காலகட்டம்(ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!) . ராஜாவின் பாடல்கள் அவ்வளவாக ஒலிக்காத நேரத்தில், கார்த்திக் ராஜா வாரிசாக வந்து உல்லாசம் தந்தார். மாணிக்கம் எல்லாம் அப்படியொன்றும் நன்றாக அமையவில்லை. வெறும் டெம்ப்ளேட் இசை போல் அடுத்து வந்த படங்களில் பாடல்கள் இருந்ததால் கார்த்திக்கால் முன்னுக்கு வர முடியவில்லை. ஆனால் பின்னணி இசையில் கார்த்திக் கெட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். அரவிந்தனில் 'ஆல் தெ பெஸ்ட்' பாடல் மூலம் ஒரு நம்பிக்கையை யுவன் தந்தார். 'ஈர நிலா' எனக்கு இன்று வரை பிடித்த பாடல்களில் ஒன்று. பெருந்தன்மையுடன் யுவன் நன்றாக வருவார் என்று முன்பே ஒருமுறை ரஹ்மான் சொன்னார். யுவனும் ரஹ்மான் தனது விருப்பத்துக்குரியவர் என்று சொன்னார். (இது ராஜாவின் தீவிர ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது!)
'வேலை' படம் வரைக்கும் யுவனுக்கு பெரிய ப்ரேக் இல்லை. செல்வராகவனின் 'துள்ளுவதோ இளமை' தான் யுவனின் முதல் முத்திரை. (செல்வராகவனுக்கும் யுவனுக்கும் என்ன தான் பிரச்சனை என்று யுவனை திடீரென்று சேர்ப்பதும் நீக்குவதுமாக செல்வா குழப்புகிறார்!). அதற்குப்பிறகு நிறைய ஹிட் கொடுத்து முக்கிய இசையமைப்பாளராக இருப்பது மகிழ்ச்சி தந்தாலும், திரும்ப திரும்ப ஒரே மாதிரி இசை தருவது ஒரு குறையாக தான் தெரிகிறது. அவ்வப்போது வியாபார வெற்றிகளையும் தாண்டி சில அற்புதங்களை யுவன் தருவார். குறிப்பாக நந்தாவில் ' முன் பனியா ' என உருக வைத்தார். பாலாவின் புதிய படமான ' அவன் இவன்' பாடல்கள் கேட்ட போது யுவனுக்கு இசையில் ஒரு முதிர்ச்சி வந்திருப்பதை உணர முடிந்தது. பாலாவின் morbid மனதை பிரதிபலிக்கும் பாடல்கள். 'ராசாத்தி போல' பாடல் கதாநாயகன் ரெண்டு கையையும் தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு அவ்வப்போது நெஞ்சில் குத்திக்கொண்டு ஆடும் பாடல் வகையை சேர்ந்தது என்றாலும், பின்னணி இசையில் யுவனின் முத்திரை இருக்கிறது. 'ஒரு மலையோரம்' பாடல் மென்மையாய் வருடுகிறது. எல்லாப் பாடல்களிலும் தாள வாத்தியங்கள் தாண்டவமாடுகின்றன. 'டியா டோலே' பாடல் தாள இசையின் உச்சம். இது தீம் மியூசிக் என்று நினைக்கிறேன். கேட்டுப்பாருங்கள். உட்கார்ந்திருப்பவர்களை எழுந்து கொள்ளவும், நின்று கொண்டிருப்பவரை ஆடசொல்லும் தாளக்கட்டு. அருமை.
எனக்கு பிடித்தது 'முதல் முறை என் வாழ்வில் மரணம் பார்க்கிறேன்' என்ற பாலாவின் பிரத்யேக சோகப்பாடல். விஜய் பிரகாஷ் உருகி இருக்கிறார். நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் துயரம் வழிகிறது.ஆர்யாவோ - விஷாலோ யாரை பாலா கொன்றார் என்பதை வெண் திரையில் தான் பார்க்க வேண்டும்.

பாடல்களை நன்றாக கேட்டு வாங்கி விட்டு உபயோகப்படுத்தாமல் விட்டு விடுவதில் பாலாவுக்கு நிகர் அவரே. எனக்கு பிடித்த ' ஒரு காற்றில் அலையும் சிறகு' பாடலை 'நான் கடவுளில்' காணாமல் அடித்தது ஒரு பெரும் குறையாக இன்றும் எனக்குப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் சரியாய் படத்தில் உபயோகிப்பட்டால் நிச்சயம் பெரிய அளவில் சென்று சேரும்.

பி.கு: தலைப்பு என்னுடையதில்லை முகநூல் நண்பர் ஒருவர் அடித்த கமென்ட்.

Tuesday, April 19, 2011

அது.. - சிறுகதை


இருளை ஒரு பெரும்போர்வை ஆக்கி அதை குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து வானம் முழுதும் பரப்பி விட்டது போல் இருந்தது. மணி எப்படியும் பதினொன்றை தாண்டி இருக்கும். பைக்கின் வேகத்தில் கிழிந்த குளிர் உடலெங்கும் அப்பியது.. உடல் தோல் ஜாக்கெட்டுக்குள் நடுங்கியது. விபுல் ஏன் தான் இந்த மாதிரியெல்லாம் செய்கிறான் என்று கோபமாய் வந்தது. அவனால் தான் இந்த பேய் குளிரில் உறைந்தபடி பறக்க வேண்டியிருக்கிறது. ஆபீசிலும் அப்படி தான் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் பாதியை நானே செய்ய வேண்டி வரும். திடீரென்று ஆபீசுக்கு மட்டம் போட்டு விடுவான். புதிதாய் கல்யாணமானவன். வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி போன்ற இடங்களில்கூட பையன்களுக்கு இருபதுகளின் ஆரம்பத்திலேயே கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள். விபுலுக்கு 24 வயது தான் ஆகிறது. பார்ப்பதற்கோ பதினெட்டு வயது பையன் போல் தோற்றம். பீகாரில் தன்னுடைய கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தான் இவன் மணந்திருந்தான். அவள் இவனுக்கு சித்தி மாதிரி இருப்பாள். ஆனாலும் மற்ற எந்த பெண்ணையும் விட ஒரு அதீத கவர்ச்சி. பையனோ ஆபீஸ் என்று ஒரு சமாசாரம் இருக்கிறது என்பதை எல்லாம் மறந்து விட்டு புது பொண்டாட்டி கூடவே சுற்றிக்கொண்டிருந்தான்.

ஐந்தாறு மாதம் கழித்து எனக்கு அடுத்து தங்கியிருந்த வீட்டை காலி செய்து விட்டு..ஷாத்ரா வை தாண்டி எங்கோ வீடு பார்த்து போய்விட்டான். போன ஒன்றிரண்டு வாரத்திலேயே அவனுக்கும் அவளுக்கும் சண்டை வர ஆரம்பித்து விட்டது. தினமும் ஏதாவது பிரச்சனை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சண்டை போடுகிறாள் என்பான். சில சமயம் அடிக்கவும் செய்திருக்கிறாள். ஒரு சண்டையில் அவன் கன்னத்தை வலுவாகஅறைந்திருக்கிறாள் . முகம் வீங்கியிருந்ததை பார்த்து எங்கள் பாஸே ஒரு மாதிரியாகிவிட்டார். உண்மையில் அவள் திருமணத்திற்கு முன்போ எங்கள் வீட்டருகில் இருக்கும்போதோ அதிர்ந்து கூட பேச தெரியாதவளாய் இருந்தாள். அங்கு போனவுடன் எப்படி இப்படியானாள் என்று புரிபடவில்லை. ரெண்டு நாட்கள் முன்பு அவள் வீட்டார் வந்து இவனை சமாதானப் படுத்தி அவளை கொஞ்ச நாட்கள் கிராமத்தில் இருக்கட்டும் என்று கூட்டி சென்று விட்டார்கள். விபுல் தனியாக தங்க ஒரு மாதிரியாய் இருக்கிறது என்று சில நாட்கள் மட்டும் கூட தங்குமாறு தொந்தரவு செய்து விட்டான்.

அலுவலகத்தில் வேலை முடிந்து கிளம்புவதற்குள் க்ளையண்ட் சொன்னான் என்று இன்னும் சில வேலைகளை முடித்து விட்டு போ என்று விட்டார் எங்கள் பாஸ். இவன் முன்கூட்டியே வீட்டுக்கு சென்று விட்டான். எல்லாம் முடிந்து கிளம்பவே பத்தரைக்கு மேலாகி விட்டது. அங்கு போய் சேர எத்தனை நேரமாகுமோ தெரியவில்லை.

இடமும் பயங்கரமாக தான் இருந்தது. டிசம்பர் குளிரில் டெல்லியே பெரும் ரஜாய்க்குள் சுருண்டு கிடந்தது. பாவி இப்படி என்னை போட்டு வதைக்கிறானே என்று தோன்றியது.அவன் வீட்டை கண்டு பிடிப்பதற்குள் உடல் உண்மையிலேயே மரத்து போய்விட்டது. நல்லவேளை பையன் வோட்கா சிக்கன் என்று தடபுடலாய் வரவேற்றான். வீடு தான் பூகம்பத்தில் தப்பிய கட்டிடம் போல் இருந்தது. வீட்டின் வெளிச்சுவர்களில் ஏதோ பச்சையம் பரவி இருந்தது போல் இருந்தது. இவன் வீட்டின் மேல் தலத்தில் இருந்தான். கீழ் வீட்டில் வீட்டு ஓனர் இருந்தார். அவரே பாதி நாட்கள் அங்கு இருப்பதில்லை என்றான். அவருக்கு ஏகப்பட்ட வீடுகளாம். அதனால் பெரும்பாலும் கீழ் வீடு பூட்டியே தான் இருக்கும் என்றான்.

சரி தான் இது நன்றாய் தான் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் இங்கு தங்கலாம் என்று முடிவு செய்தேன். பையன் குடிக்கவே தெரியாதவன். பெருங்குடி மகன் போல் வீட்டில் நான்கு பாட்டில்கள் வைத்திருந்தான். சந்தோசம் என்று தங்கிவிட்டேன். இரவு குடி சாப்பாடு பேச்செல்லாம் முடிந்து அதிகாலையில் தான் தூங்கவே ஆரம்பித்தோம். எத்தனை நேரம் தூங்கினேன் தெரியவில்லை. என்னவோ ஒரு கனவு. கனவை தொடர்ந்து தொந்தரவு. உடலெல்லாம் மரத்து விடுவது போல் இருந்தது. குழிக்குள் இருந்து மேலே தாவுபவன் போல் கட்டிலில் இருந்து எழுந்து விட்டேன். நைட் லாம்பின் வெளிச்சத்தில் யாரோ உட்கார்ந்திருந்தது போல் இருந்தது. திடுக்கிட்டு பார்த்தால் விபுல். ரஜாயை தலைக்கு மேல் போர்த்திக்கொண்டு தன கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தான். உண்மையிலேயே பயந்து விட்டேன். என்னை மௌனமாக பார்த்துக்கொண்டே எனக்கு பின்னால் இருந்த ஜன்னலை கை காட்டினான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பயத்தில் 'என்னடா' என்றேன் தமிழில்.

"இந்த வீட்டில் பேய் இருக்கு .." என்றான் அவன் தெளிவான ஹிந்தியில்.கை நீட்டியபடியே இருந்தது.

"இப்ப தான் ஜன்னலை தட்டியது " என்றான் நடுங்கும் குரலில்.

திரும்பி பின்னால் பார்த்தேன். அந்த ஜன்னலுக்கு அருகில் தான் நான் படுத்திருந்தேன். மெதுவாக எழுந்து அவன் கட்டில் பக்கம் நகர்ந்தேன். அவனே பேய் மாதிரி தான் இருந்தான். அவன் பக்கத்தில் போகவும் பயம். மெல்ல அவன் கட்டிலின் மறு முனையில் அமர்ந்து கொண்டு அவனை பார்த்தேன். எனக்கு உண்மையில் நடப்பது நிஜமா கனவா என்று புரிபடவில்லை. சற்று நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தோம். குளிரா பயமா தெரியவில்லை உடல் கட கட வென்று நடுங்கியது. இத்தனை நாளாக இவன் பயந்தது இவன் மனைவிக்கா இல்லை இவன் சொல்லும் பேய்க்கா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

இவனுக்கு மட்டும் ஜன்னலை தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. அதனருகிலே படுத்திருந்த எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு வேளை அந்த சத்தத்தில் தான் நானும் எழுந்து விட்டேனோ என்று யோசித்தேன்.
"எப்பவும் இப்படி தான் நடக்குமா?" என்றேன்.
"வந்த ரெண்டாவது நாளில் இருந்தே இந்த சத்தம் கேட்கிறது.." என்றான். போனவாரம் ஒரு பக்கம் ஜன்னலையும் ஒரு பக்கம் கதவையும் மாறி மாறி தட்டியதாம். பயத்தில் மனைவியை கட்டிப்பிடித்தபடியே தான் கிடந்தானாம்.

நான் வீட்டின் ஜன்னலை மாடிப்படியில் ஏறும்போது பார்த்ததை நினைத்து பார்த்தேன். மடிப்படியிலோ அல்லது அதன் கைப்பிடி சுவற்றிலோ நின்று கொண்டு கை நீட்டினாலும் தொட முடியாத உயரத்தில் தான் இருந்தது ஜன்னல். பிறகு எப்படி இந்த மாதிரி சத்தம் வரும் என்று நினைத்தேன். என்ன தான் பேய் பிசாசை நம்பாதவன் என்றாலும் பக்கத்தில் படுத்திருந்தவன் இருட்டில் இப்படி எழுந்து உட்கார்ந்து நடுங்கி கொண்டிருந்தான் என்றால் யார்க்கு தான் பயம் வராது. அவன் பயத்தை நானும் பங்கு போட்டுக்கொண்டேன்.



விடியும் வரை அப்படியே அமர்ந்த படி தூங்கி போய் இருந்தோம். காலையில் கிளம்பும்போது கேட்டேன்." ஸாலா ..இவ்வளவு பிரச்னை இருக்கும்போது இந்த வீட்டை ஏன்டா காலி பண்ணாமல் இருக்கே?"
"இல்லை மோகன்ஜி என் மனைவி தான் வேண்டாம்..இந்த வீடு நல்லா தான் இருக்கு என்று சொல்லிவிட்டாள் " என்றான். சரிதான் அவளுக்கு பேய் தான் பிடித்திருக்கிறது. அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தான் பையன் அல்லாடிக்கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டேன்.

அதை தொடர்ந்து வந்த ஆறு நாட்களுக்கு நான் அங்கு தான் தங்கியிருந்தேன். இரவில் சரியாக பனிரெண்டு ஒரு மணிக்கெல்லாம் விழிப்பு தட்டிவிடும். ஆனாலும் எந்த சததத்தையும் நான் கேட்கவில்லை. அவனோ முதல் நாள் பார்த்த மாதிரியே தான் பயந்து போய் உட்கார்ந்திருந்தான் ஒவ்வொரு முறையும். நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று அவனை தேற்றி தூங்க வைத்து கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக ஊரில் இருந்து அவள் மனைவியும் வந்து விட்டாள். அவள் வந்தவுடன் எனக்கு முன்பாகவே அவளை தழுவிக்கொண்டான். அவளும் அவன் மேல் உயிரே வைத்திருந்தை போல் கண்ணீர் விட்டாள்.
அப்புறம் ரெண்டு மூன்று நாட்களில் வேறு வீடும் பார்த்து போய் விட்டார்கள் இருவரும். அதற்கு பிறகு அவள் சண்டை எல்லாம் போடுவதில்லை ரொம்ப அன்பாக இருக்கிறாள் என்று சொல்வான் விபுல். நான் தான் அவன் பயந்து போய் உட்கார்ந்திருந்ததை நடித்துக்காட்டி அலுவலகத்தில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தேன். விபுல் ஆபிஸ் வேலையாக இரண்டு நாள் வெளியில் சென்றிருந்த போது நான் அவன் வீட்டுக்கு சென்று வந்ததை மட்டும் யாரிடமும் சொல்லவில்லை. அழுத்தக்காரி. சுலபத்தில் உடன்படவில்லை. பிறகு தான் அவள் கட்டாயப்படுத்தி அவனை ஷாதிராவில் வீடு பார்க்க சொன்னாள் எனபதும் நான் மட்டுமே அறிந்தது.

ஒரு மாதம் கழித்து எனக்கு குர்கானில் வேறு வேலை கிடைத்து அங்கு வீடெடுத்து தங்கிவிட்டேன். நல்ல வீடு. .
மேல் தளத்தில் இருந்தது . சுற்றிலும் அழகான மரங்கள் வேறு. வேலை முடிந்து வீடு திரும்ப நேரமானாலும் பயமே இருக்காது. ரம்யமான இடம். இடையில் ஒரு முறை விபுல் தன் மனைவியுடன் இங்கு வந்து பார்த்து விட்டு " வீடு அருமையாய் இருக்கிறது மோகன். குர்கானில் ஒரு வேலை கிடைத்தால் நான் உங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே வந்து விடுவேன்.." என்றான். அவள் எதுவும் பேசவில்லை. ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த என் சட்டையை பார்த்துக்கொண்டே இருந்தாள். அன்று அணிந்திருந்தது.

போன மூன்றாவது வாரத்தில் ஓர் இரவில் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன். நல்ல வெயில் காலம். காற்றே இரவில் கூட கடும் வெப்பமாய் இருக்கும். எல்லா ஜன்னலையும் திறந்து வைத்திருந்தேன். யாரோ என்னை பெயர் சொல்லி அழைத்தார்கள். மெல்ல எழுந்து ஜன்னலை பார்த்தேன். ஜன்னலின் கம்பியை பிடித்துக்கொண்டு தலை முடி காற்றில் அசைய ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். " இருக்கீங்களா மோகன் பையா " என்றாள்.சற்று ஊடுருவிய பார்வையில் தெரிந்தது விபுலின் மனைவி. அவள் குரலோடு இன்னொரு ஆணும் சேர்ந்து பேசுவது போல் இருந்தது. இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாள் என்று ஒன்றுமே புரியவில்லை. அவள் தான் என்றாலும் தலைமுடியெல்லாம் கலைந்து பார்க்கவே பயங்கரமாய் இருந்தாள். என்னவோ ஆர்வமும் மித மிஞ்சிய காமமும் உந்தித்தள்ள கதவை திறந்தேன். நீண்ட நாள் திறக்கப்படாமல் இருந்த சவக்கிடங்கு திறந்தது போல் நாசிஎங்கும் ஒரு வித நாற்றம் நிறைந்தது. கதவு திறந்த வேகத்தில் ஒரு மின்னலைப்போல் பாய்ந்தவள் என்னை அணைத்துக்கொண்டு அப்படியே தரையில் சாய்த்தாள். புடைவையின் தலைப்பு சரிய, பளீரென தெரிந்த மார்புகள் மேலும் கீழும் மூச்சுக்கு ஏறி இறங்கின. " நான் வேணும்னு தானே பையா விபுலை அன்னிக்கு வெளியூருக்கு அனுப்புனீங்க ..?" என்றாள். ஆண் குரலும் கலந்திருந்தது.
அவள் என் மேல் இயங்க தொடங்கும்போது தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் திடீரென்று ஜன்னலுக்கு கீழே வெளிப்புறத்தில் நிற்பதற்கு இடமே இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

ஓவியங்கள்..


எரியும் தேகம்..


தலைமுறை..

சொல்வனம்- ஓவியங்கள்

சொல்வனம் இந்த இதழில் திருமலை ராஜன் எழுதிய வெங்கட் சாமிநாதன் பற்றிய கட்டுரைக்கு வரைந்த ஓவியங்கள்..





solvanam.com/?p=14096

Thursday, April 14, 2011

ஜே. எஸ். அனார்கலி எழுதிய கவிதை-ஒரு கடிதம்


ஜே. எஸ். அனார்கலி எழுதிய காலம் கவிதை குறித்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் இருந்து வந்த கடிதம்..

காலம்

கதை கேட்டுகொடிருக்கிறது.
விதவிதமான மனிதர்களுடையதும்
விலங்குகளுடையதும்கவியின் பருக்கையில் பசியாறிய பறவையினத்தினுடையதுமான கதைகள்
வளர்மரங்களினுடையதும்
அவற்றிலிருந்து கைவிடப்பட்ட
இலைகளினுடையதும் நகர சந்துகளில்
குத்த வைத்திருக்கும் குல தெய்வங்களினதும்
கதைசொல்லிகளின் கதைகளையும்
கூட
காலம் கேட்டுகொண்டிருக்கிறது.
பார்க்கையில்
காலம்
கதைகளால்
நிரம்பியிருக்கிறது.

அண்மையில் வாசித்த என் மனசில் வேர்பதித்த கவிதைகளை அனார்க்கலி எழுதியிருக்கிறர்.பிரபஞ்சமளாவிய ஆடுகளத்தில் செளிக்கிறது அனார்க்கலியின் கவி மனசு. ஆர்வம் மிக பாராட்டுகிறேன் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Tuesday, April 12, 2011

கிரிக்கெட்: ஒரு கடிதம்


கிரிக்கெட் பற்றிய என் கட்டுரைக்கு நண்பர் அகஸ்டஸ் எழுதிய கடிதம்:

பால்யகால கிரிக்கெட்: இன்றும் கூட இந்தியா வென்றுவிட்டது என்று சொன்னால் நான் அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்று சற்று சிரிப்பேன். மற்றபடி எனக்கு லியண்டர் பீஸ், மஹேஷ் பூபதி, சானியா மிர்ஸா, அபினவ் பிண்ட்ரா, சமீப குத்துச்சண்டை வீரர்கள் வென்றால் கிடைக்கும் மகிழ்ச்சி/புல்லரிப்பு கிரிக்கெட் வீரர்கள் பெயரில் கிடைப்பதில்லை.ஏனென்று யோசித்தபோது கிடைத்ததிந்த நதிமூலம். நான் அப்போது St. Xaviers High School, Tuticorin ல் படித்துக் கொண்டிருந்தேன். 1979-80. அங்கு football team, volleyball team, strong basket ball team எல்லாம் இருந்தது எனக்குத் தெரியும். Even Navy, NCC, NSS, etc. க்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அந்த அந்த வாத்தியார்கள் அலைவதைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்து மாணவர்களை தேர்வு செய்வார்கள். Cricket Team பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். சூசை மாணிக்கம், என் தமிழ் வாத்தியார், முதல் வகுப்பு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். 1 மணிநேரம் சென்றிருக்கும். வகுப்பறை வாசலில் நின்று உட்புறமும் வெளிப்புறமும் பார்த்தபடி பாடம் எடுத்துக்கொண்டிருந்தவர், அய்யா, எல்லாரும் சத்தமின்றி எட்டிபாருங்கள் என்றார். பார்த்தோம். எங்களது சரித்திர வாத்தியார், பெயர் சொன்னால் உங்களுக்கு விஷயம் புரிந்துவிடும், ஒரு கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்தபடி தலை குனிந்தபடி ஸ்கூல் சுவரையொட்டி நடந்தபடி உள்ளேவர, அவர் பின்னே சுமார் 10 மாணவர்கள் தலை குனிந்தபடி வந்துகொண்டிருந்தனர். அத்தனை மாணவர்களூம் சின்னவர்களாக, நன்றாக டெரிகாட்டன் சட்டை டவுசர் போட்டவர்களாக இருந்தனர் (அப்போது தான் டெரிகாட்டன் துணிகள் தூத்துக்குடிக்கு வந்திருந்தன. பாலியெஸ்டர் வரவில்லை) மட்டை, பந்து, பேட் என்று ஒவ்வொருவரும் ஏதேதோ தூக்கியபடி, ஒரு போலித்தனமான துக்கத்துடன் சுவர் ஓரமாக நடந்து ஸ்கூலுக்குள் நுழைந்தனர். ’நேற்றைக்கே தோத்திட்டாங்கடா. காலைலே வந்திருக்கலாம். என்னமோ விளையாண்டு களைச்சமாதிரி இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்கான்வ. வாங்கிட்டுப்போன துட்டை கொஞ்சமாவது செலவு பண்ணனும்னு உடிப்பி ஹொட்டல்லெ காலைலே சாப்பிட்டு வந்திருக்கான்வ (உடுப்பி ஹோட்டல் ஸ்கூல் வாசல்லெ இருந்தது)என்றவர் சட்டென்று கோபத்துடன் நேராக அந்த சரித்திர வாத்தியாரை சுட்டியபடி (எங்களுக்கு மட்டுமே கேட்கும் குரலில்) ஐயா, உன்னைத்தான் கேட்கேன், ஜேம்ஸ், விக்டர், ஜெரொம், கிரியெல்லாம் பாத்தா உனக்கு எப்படித் தோணுது? (இவர்களெல்லாம் என் சக மாணவர்கள். அப்போதே 5 அடிக்கு மேலிருப்பார்கள்) விளையாடமாட்டங்கனான்னா. போய்யா, போ. பேட் உயரம்கூட இல்லை இந்த சிறுசுகள் தான் கிடைச்சதா என்று புலம்பியபடி பாடம் நடத்த ஆரம்பித்தார். சுமார் 3 வருடமாக அந்த சரித்திர வாத்தியார் எங்களுக்கு பாடம் எடுத்திருக்கின்றார். ஒருமுறை கூட cricket என்ற வார்த்தை அவரது வாயிலிருந்து வந்ததில்லை. உயரமான மாணவனை வேறு யாரும் கொத்துமுன் கொத்திக்கொள்ளும் Basketball Master மாதிரியோ, கிட்டத்தட்ட 50 மாணவர்களை மாறி மாறி விளையாடவிட்டு 5 மாணவர்களை வாலிபாலுக்குத் தேர்ந்தெடுக்கும் PT Master Xavier மாதிரியோ இல்லை. மற்ற எல்லா விளையாட்டும் PT Masters கையிலிருக்க, இவர் எப்படி இந்த விளையாட்டை மட்டும் கையிலெடுத்துக்கொண்டார் என்பது எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று. அதுவும் சர்வ வல்லமையுடன், கிரிஸ்தவ பாதிரிகள் ஆட்சி செய்யும், சேவியர்ஸ் ஸ்கூலில்.

அவர் நினைத்திருக்கலாம். என்னுடைய கிரிக்கெட் டீம் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டின் புனிதத்தைக் காப்பற்றுவது அதைவிட முக்கியமானது என்று.

இருக்கலாம். ஆனால் என்னால் அந்த நினைப்பைக் கழற்றிவுட்டு அந்த ஒரு விளையாட்டை மட்டும் பார்க்க முடியவில்லை.

---செல்வக்குமார்(அகஸ்டஸ்)

Friday, April 8, 2011

கிரிக்கெட்: நினைவில் பறக்கும் பந்துகள்


உலகக்கோப்பையை இந்தியா வென்ற நாளின் கொண்டாட்டத்தை என்னால் மறக்கவே முடியாது. அன்று எனது அறைநண்பர் டாக்டர். மணிகண்டனுக்கு பிறந்த நாள். எங்கள் குல வழக்கப்படி ஒவ்வொரு சனிக்கிழமையின் இரவை கொண்டாட்டமாய் அனுபவிப்பது ஒரு சடங்கு போல் மாறிவிட்டது. மணிகண்டனுக்கு புதன்கிழமை தான் பிறந்த நாள். எனினும் எங்கள் சட்ட நிபுணர்கள் கலந்தாலோசித்து அதை சனிக்கிழமை இரவு நாள்மாற்றம் செய்து விட்டார்கள். முநிர்காவில் தமிழர்கள் அதிகம். அதிலும் நான் தங்கியிருக்கும் கட்டிடத்தில் மட்டும் பதினைந்து தமிழ் நண்பர்கள். வெளியிலிருந்து வந்து செல்லும் நண்பர்களை கணக்கிட்டால் தொகை முப்பதை தொடும். அனைவரும் ஒரு சேர ஒரே அறையிலிருந்து சத்தம்போட்டபடி கீழ்வீட்டு காரர்கள் கூரை அவர்கள் தலை மீது விழுந்துவிடும் போல் 'தொம் தொம்மென்று' குதித்துக்கொண்டு மேட்சை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவின் ஒரே அமைதிப்புறாவான ராம் அடிக்கடி 'தடப் தப்பென்று' அமர்ந்திருப்பவர்களின் தலை கால் என்று எல்ல பாகங்களின் மீதும் கால்வைத்து தாவியபடி முன்னேறி டி.வி முன் நின்று இலங்கை வீரர்கள் (குறிப்பாக மலிங்கா!) ஐ பார்த்து 'யார்ரா நீ ..யார்ரா நீ ..' என்று சாத்வீக முறைப்படி கேட்டு சலம்பிக்கொண்டிருந்தான். வெற்றி நிச்சயம் என்ற போதே வெடி சத்தம் வெளியில் கிளம்பி விட்டது. தோனி பந்தை எல்லைக்கு அப்பால் அடித்து மட்டையை சுழற்றியதும் இந்தியா..இந்தியா என்று திடீர் தேசப்பற்று தொற்றிக்கொள்ள உற்சாகம் கரைபுரண்டு ஓடத்துவங்கியது. எத்தனை சந்தோஷம் அன்று இந்தியர்கள் முகங்களில்!

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பிறந்த பெரும்பாலோருக்கு இந்த விளையாட்டு பால்ய நாட்களின் பிரிதகற்ற முடியாத நினைவுகளை தந்து தானிருக்கிறது. பள்ளி நாட்களில் எங்கள் அறந்தாங்கி ஹவுசிங் போர்ட் கிரிக்கெட் போர்டு என்ற நாமம் கொண்டு Atonomous Body அளவுக்கு தனி சுதந்திரம் பெற்று திகழ்ந்த கிரிக்கெட் அணி உள்ளூர் பிரசித்தம். விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில் நாங்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்டம்பை ஊன்றி விளையாட தொடங்குவோம். பந்து ஜன்னல் வழியாக வந்து விழாத வீடுகள் எனக்கு தெரிந்தவரை இல்லை என்றே சொல்வேன். அரசு ஊழியர் குடியிருப்பு என்பதால் மூடாத சாக்கடைகள் அதிகம். அங்கு விழும் பந்துகளை எந்த கூச்சமும் இல்லாமல் வலது கையாலேயே எடுத்து குடிநீர்க்குழாயில் கழுவி டவுசரில் அழுந்த துடைத்துவிட்டு நாங்கள் விளையாடுவதை கொலைவெறியுடன் பெற்றோர் பெருமக்கள் 'கவனிதுக்கொண்டிருப்பர்கள்'. இது தவிர சாலை வழியாக செல்லும் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் பயந்து பயந்து எங்கள் 'பிட்சை' கடப்பார்கள். "சீக்கிரம் போங்க அண்ணே" என்று சிரித்தபடி சொல்லும் எங்கள் நன்னப்பா கடப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டால் " போடா டேய் சட்டிதலையா " என்று பொறுமை இழந்துவிடுவான். ரோட்டின் நடுவில் ஒரு முனையில் செங்கல்லை ஸ்டெம்ப் போல் அடுக்கி எதிர்முனையில் இருந்து எறியப்படும் பந்துகள் அவர்கள் முதுகிலோ மண்டையிலோ பட்டால் சங்கம் பொறுப்பேற்காது என்று அவர்களுக்கு தெரியும். பந்து எங்கெங்கோ மாயமாய் மறைந்தாலும் எங்கள் மீட்புக்குழு அதை எப்படியேனும் எடுத்துவந்து விளையாடும். எடுக்கவே முடியாத இடங்களில் பந்து சென்று விழும் வரை எங்கள் அப்பழுக்கற்ற கிரிக்கெட் தொடரும்.

விடுமுறை நாட்களில் வருகை புரியும் பையன்களின் எண்ணிக்கையை பொறுத்து இருப்பவர்களை இரு பிரிவாகவோ அல்லது இருப்பதிலேயே சாதுவான பையனை குனியவைத்து அவன் முதுகுக்கு மேல் விரல்களை காட்டி எந்த நம்பர் வரும்போது அவன் யாரை கை காட்டுகிறானோ அதே வரிசைக்கிரமதிலோ விளையாட துவங்க்வோம். கடைசி நம்பர் பையன் பந்து வீசுவான். முதலாமவனுக்கு மட்டை பிடிக்கும் பாக்கியம் கிடைக்கும். பத்தே பத்து கட்டிடங்கள் கொண்ட அந்த சின்ன பிரதேசத்துக்குள் மட்டும் நாங்கள் ஐந்து விளையாட்டு 'மைதானங்களை' பராமரித்து வந்தோம். பம்ப்ரூம் தேவசங்கர் வீட்டு ஜன்னலுக்கு கீழ் நிறைய இடம் இருப்பதால் அந்த சுவற்றில் மூன்று கோடுகளை கரிக்கட்டையில் வரைந்து அதற்கு பத்து தப்படிகள் எதிர்முனையில் ஒரு செங்கல்லை அடையாளத்துக்கு வைத்துவிட்டு (ரன்னர் எண்ட்!) விளையாடுவோம். எங்கள் குழுவின் ஆஸ்தான Off Spinner ஜெகதீஷ் பாபு பெருமுயற்சியுடன் வீசும் சில பந்துகள் அதீத சுழற்சிக்குட்பட்டு சமையலறை ஜன்னல் வழியாக உள்ளே சென்று அங்கு இருக்கும் தட்டில் பட்டு மறுபடியும் சுழன்று கரண்டிகள் மாட்டியிருக்கும் ஸ்டாண்டை கிளீன் போல்டாக்கி கீழே விழும்போது நாங்கள் அவரவர் வீடுகளில் சாவகாசமாய் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்து கொண்டிருப்போம். அந்த இடத்தில் ஒரு மாபெரும் கிரிக்கெட் போட்டி நிகழ்ந்ததற்கான தடயமே இருக்காது. அதே போல் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக வளர்ந்திருந்த இரு மரங்களின் இடைவெளியை பிட்சாக்கி ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்துக்கு (அதில் ஸ்டெம்ப் செதுக்கப்பட்டிருக்கும் !) எறிந்து விளையாடுவோம். மேல் நோக்கி அடிக்கபப்டும் பந்துகள் சில சமயம் மரங்களில் மாட்டிக்கொள்ள பீல்டிங் அணியினர் அந்த மரத்தின் கிளைகளைப்பிடித்து உலுக்கி அதகளம் பண்ணி பந்து கீழே விழும்போது பச்சக்கென்று பிடித்துவிடுவார்கள். அதுவரை இப்போதைய 'Review' முடிவு கேட்டு காத்திருக்கும் மட்டையாளர்கள் போல் பரிதவிப்புடன் மேல் நோக்கி பார்த்தபடி நின்றிருப்பார்கள். சில சமயம் பந்து நியூட்டனாவது ஒன்றாவது என்று அலட்சியமாக மாட்டிய திசைக்கு நேரெதிர் திசையில் வேறொரு கிளையிலிருந்து படக்கென கீழே தரையில் விழுந்து விடும். அப்போது களிப்பில் மட்டையாளன் கிரண் மோரேயை கிண்டல் செய்யும் ஜாவிட் மியாண்டட் போல் தவ்விக்குதிப்பான்.

மொகாலி போன்ற ஒரு முக்கிய 'மைதானம்' இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் இருந்தது. அதன் இடைவெளி சற்று அதிகம். எனவே பெரிய போட்டிகள் அங்கு தான் நடத்தப்பட்டன. அந்த மைதானத்தில் ரெண்டு சிக்கல்கள். ஒன்று லெக் சைடில் சற்று தள்ளி இருந்த ஹவுசிங் போர்டுக்கு தண்ணீர் சப்ளைக்கு முக்கியமான கிணறு. இன்னொன்று விக்கெட் கீப்பருக்கு பின்னால் இருந்த என் சக மாணவி கவிதா வசித்த வீட்டின் பால்கனி. பெரும்பாலும் அந்த பால்கனியில் அவள் பாட்டி அமர்ந்திருப்பாள்.எழுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும் அந்த பாட்டிக்கு. லெக் சைடில் தூக்கி அடிக்கப்படும் பந்துகள் அந்த கிணற்றில் போய் விழுந்துவிடும். எனவே அந்த கிணற்றில் விழும்படி அடித்தவன் அவுட் என்று அறிவிக்கப்படும். கிணற்றை தாண்டி தான் முருகேசன் வீடு. அவன் வீட்டு காம்பவுண்டை தொட்டால் Four! ஒருவேளை சிக்சர் அடித்தால்? பந்தே திரும்பவராது. முருகேசன் அம்மாவுக்கு இந்த 'கிரிக்கெட் எழவெல்லாம்' ஆகவே ஆகாது. எடுக்கப்போனவன் அர்ச்சனைகளுக்கு ஆளாக நேரும் என்பதால் ஆட்டம் பாதியில் முடிந்து விடும். அல்லது அடுத்த பந்து கிடைத்த பின்பு தொடரும். அந்த கிணற்றில் விழுந்த பந்தை யார் எடுப்பது? அது நல்ல பெரிய கிணறு. அதன் உட்புற சுவற்றில் பெரிய பாறைகள் சற்று இடைவெளியில் அமைக்கப்பட்டு படிகளாக கீழிறங்கும். கிணற்றில் ஒரு ஆமை ஒன்று இருக்கும். அவ்வப்போது அது படிகளில் படுத்து ஓய்வெடுக்கும். ஹவுசிங் போர்ட் பெற்றோர்கள் கண்டிப்பானவர்கள் என்பதால் எங்களில் யாரும் இறங்க மாட்டோம். பக்கத்துக்கு தெருவில் இருந்து வரும் செந்தில் தான் அதை எடுப்பான். படிகளில் அனாயாசமாக இறங்கி கையில் ஒரு நீண்ட கம்பொன்றை வைத்து தண்ணீரின் மேற்பரப்பை அடித்து அடித்து பந்தை தன்னருகில் வரவைத்து எடுத்துவிடுவான். அதை ஒரு சாகசம் போல் பார்த்துக்கொண்டிருப்போம். அவனுக்கு நீச்சல் தெரியும் தான் என்றாலும் அவனை பந்தை எடுக்க நாங்கள் பயன்படுத்திக்கொண்டது இன்னும் ஒரு குற்றவுணர்வாக எங்கள் நினைவுகளில் படிந்திருக்கிறது. இந்த சாகசத்துக்கு பரிசாக சில சலுகைகள் அவனுக்கு கிடைத்தன. ஒப்பனிங் ஓவர் அவன் தான் போடுவான். அவன் சேட்டன் ஷர்மாவின் தீவிர ரசிகன். ஆனால் பந்து வீசுமுறை பேட்ரிக் பேட்டர்சன் (நினைவிருக்கிறதா?) போல் தான் இருக்கும். அவன் போடும் பந்துகள் பேட்ஸ்மேனின் தொப்பியை கழற்றி விட்டு ஒரு முறை பூமியில் பட்டு எழுந்து கவிதா வீட்டு பலகணி வழியாக வீட்டு வரவேற்பறைக்குள் சென்று விடும். ஒருமுறை டி.வி.யில் கிரிக்கெட் ஹைலைட்ஸ் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது போல. எங்கள் சேட்டன் வீசிய பந்து அவர்கள் வீட்டு டி.வியில் பட்டு கீழே விழ, கவிதாவின் பாட்டி பந்து டி.வி.குள்ளிருந்து தான் வெளியே வந்து விட்டது என்று பயந்து அலறி சத்தமிட , 'சங்கம் ஒடனே' கலைக்கப்பட்டு அவனவன் அடுத்த தெருக்களில் தென்பட்ட திசைகளில் ஓடிக்கொண்டிருந்தான்.

அணியின் முக்கிய வீரர்கள் என்றால் நாகராஜ் , அவன் தம்பி தேனிமலை, யோகானந்த் அவன் தம்பி கௌதமன்.. நான் என் தம்பி சிவா என்று ஸ்டீவ் - மார்க் வாவ் சகோதரர்கள் போல் எக்கச்சக்கமாய் இருந்தோம். எனவே எங்கள் டீம் A மற்றும் B என இரு அணிகளாக பிரிக்கப்பட்டது. எங்கள் டீம் பிரசத்தி பெற்றது என்று சொன்னேனே! உண்மையில் சில மேட்சுகளில் ஜெயித்திருந்தாலும் பல மேட்சுகளில் மண்ணைக்கவ்விக்கொண்டு வரும் சிறப்பணி அது. எனவே உள்ளூரில் டோர்னமென்ட் நடத்துபவர்கள் தங்கள் சொந்த அணிக்கு எதிராக லீக் மேட்சுகளில் விளையாட எங்களை தான் அழைப்பார்கள். அப்போது தானே அவர்களால் அடுத்த சுற்றுக்கு போக முடியும். ஒரு முறை நாங்களே டோர்னமென்ட் நடத்த வேண்டும் என்று அரந்தாங்கியின் புகழ்பெற்ற அரசியல்வாதி திருநாவுக்கரசுவிடம் சென்று நிதி வாங்கி போட்டி நடத்தினோம்.அப்போது தான் முதன் முறையாக கிரிக்கெட் பால் வாங்கி விளையாடினோம். அதுவரை ரப்பர் அல்லது டென்னிஸ் பந்துகள் தான். கிரிக்கெட் பால் என்பதால் 'பாதுகாப்புக்கு' அப்டமன் கார்டு , ஹெல்மெட் என்று அமர்க்களப்படுத்தியது இன்னும் நினைவிருக்கிறது. சில சமயம் B டீமில் இருந்து சிலரை சேர்த்துக்கொண்டு நாங்கள் எதிர்கொண்ட மேட்சுகளில் தம்பிகள் அணி தளராமல் விளையாடி ஜெயிக்க வைத்தது மறக்க முடியாதது. சிவா , கௌதமன் , தேனிமலை போன்றோர் எதிரணியின் மலிங்கா மண்டையர்கள் கொலைவெறியோடு வீசும் அதிவேக பந்துகளை எதிர்கொண்டு தரையோடு தரையாக படுத்தபடி பேட்டிங்கில் பின்னியெடுத்து பிழைக்க வைத்தார்கள்.

நாங்கள் விளையாட வெளியிலிருந்து கிடைத்த தொந்தரவுகளை விட அணியின் 'நெஹ்ராக்கள்' பண்ணிய சேட்டைகள் மறக்க முடியாதவை. நாகராஜிடம் சொந்தமான பேட் ஒட்ன்று இருந்தது. அவன் தான் அதை அப்படி அழைத்தானே ஒழிய அது எங்களை பொறுத்தவரை ஆப்பை(அகப்பை) தான். அதை பிடித்துக்கொண்டு அவன் பேட்டிங் செய்தான் என்றால் ஷெர்லக் ஹோம்ஸ் வந்தாலும் ஸ்டெம்ப் இருக்குமிடத்தை கண்டு பிடிக்க முடியாது. எனவே நாகராஜை அவுட் செய்வதென்பது வேர்ல்ட் கப்பில் ஹாட்ரிக் எடுப்பது போல் பெரும் சாதனை தான். அதையும் மீறி பந்து ஸ்டெம்ப் (சுவற்றில் வரையப்பட்ட கரிக்கோடுகள்) மீது மிக துல்லியமாக பட்டாலும் அவன் ஒத்துக்கொள்ளவே மாட்டான். துக்க நாளன்று துலாபாரம் படம் பார்த்தவன் போல் கண்ணீர் அருவியாக ஓட அழுது புலம்பிவிடுவான். பந்து அவன் தலைக்கு மேல் பத்தடி உயரத்தில் பறந்து சுவற்றில் பட்டதாக சொல்லி அவன் நடத்தும் 'சீரியலை' சகிக்காமலேயே நாட் -அவுட் என்று அறிவித்து நொந்து போய் விளையாடுவோம். அதே போல் நன்னப்பன் பேட்டிங் செய்து விட்டு பில்டிங் செய்ய லாங் ஆனுக்கு அனுப்பினால் சில பல நிமிடங்களில் காணாமல் போய் விடுவான். அங்கு தான் அவன் வீடு இருக்கிறது. அவனை அவன் குகையிலேயே சந்தித்து திரும்ப கொண்டு வருவது என்பது இயலாத காரியம். அவன் அம்மா ' கொதிக்கிற வெயில்லே அவனை ஏண்டா விளையாட கூப்புடுறீங்க.. போங்கடா ' என்று விரட்டி விடுவார். 'அவன் இவ்வளவு நேரம் பேட்டிங் செய்தான் அம்மா .. பீல்டிங் செய்யும் முறை வரும்போது இப்படி வீட்டுக்குள் புகுந்து வரமறுப்பது தர்மமாகுமா?' என்று நெடுநேரம் கெஞ்சி அவனை திரும்ப பெறுவதற்குள் மாலை மங்கி விடும். சண்முகவேல் என்றொரு நண்பன் இருந்தான். பெரிய தலைக்கு கீழ் காற்றிலாடும் சட்டையும் தொங்கும் கால்சட்டையும் தான் இருக்கும். அவ்வளவு ஒல்லியாக இருப்பான். ஆனால் காற்றோடு காற்றாக அவன் ஓடிவந்து வீசும் பந்துகள் உய்ரதரமானவை. அறந்தாங்கியின் பெரிய கிரிக்கெட் வீரர்களே அவனை பாராட்டி பேசுவார்கள். அவர்களோடு சேர்ந்து விளையாடவும் செய்தான், சில மேட்சுகளில்.

எப்போதும் ஆச்சர்யங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் குறைச்சலில்லாத கிரிக்கெட் இடையில் சூதாட்டம் -மேட்ச் பிக்சிங் என்று மலிந்து விட அதன் மீதான ஈர்ப்பு சற்று குறைந்தது என்னவோ உண்மை தான். நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு சவால் விட்டுக்கொண்டு விரல் நகங்களை பல்லுக்கு கொடுத்து பார்த்த பல மேட்சுகள் அரங்கேற்றப்பட்டவை என்ற தகவல்கள் வந்த பின்பு நான் கிரிக்கெட் அவ்வளவாக பார்ப்பதில்லை. சமீப காலமாக குதிரை ஏலம் போல் வீரர்களை விலைக்கு வாங்கி , பணம் கொழித்தவர்கள் நடத்திக்கொள்ளும் ஐ. பி. எல் போட்டிகள் ஏனோ என்னை கவரவில்லை. எனவே சில ஆண்டுகளாக அணியில் யார் விளையாடுகிறார்கள் என்றெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இந்த உலகக்கோப்பையில் முதற்கட்ட மேட்ச் ஒன்றை பார்க்கும்போது டி.வி.யில் கோட் போட்ட படி பிட்சின் நடுவில் நின்று பேசிக்கொண்டிருந்த கங்குலியை பார்த்ததும் ' ஏன்டா தம்பிகளா ..நம்ம தாதா என்ன கோட் போட்டு நிக்கிறான்.. ஒபெனிங் அவன் இல்லையா ? " என்று கேட்டு தொலைத்துவிட்டேன். சற்று நேரம் அமைதி நிலவியது. திரும்பி நம் தமிழ் நண்பர்களின் முகங்களை பார்த்தேன். பல முகங்களில் பளீரென்று எரிந்து கொண்டிருந்தது ... ரத்த வெறி!!

Wednesday, April 6, 2011

இன்னும் சில ஓவியங்கள்..





மேலும் சில ஓவியங்கள்..





உயிர்மையில் சில ஓவியங்கள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு உயிர்மையில் சில ஓவியங்கள் வரைந்தேன். அ. முத்துலிங்கம் எழுதிய கதை மற்றும் ஒரு மலையாள மொழிபெயர்ப்பு கதைக்கு வரைந்த ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு..