Saturday, July 31, 2010

மீண்டும் சாரு..



தமிழ் இணைய கட்டுரைகளை வாசித்து விட்டு தூங்க செல்வது இன்றைய வாசர்களின் அன்றாட 'பணியாகி 'விட்டது.இணைய உலகில் தவிர்க்க முடியாத இரு எழுத்தாளர்களான ஜெயமோகனையும், சாரு நிவேதிதாவையும் கிட்டத்தட்ட அனைத்து வாசகர்களும் வாசிக்கிறார்கள் என்று சொல்லலாம். சீரியசான விஷயங்களுக்கு ஜெ.வும் மனம் விட்டு சிரிக்க வடிவேலுவும், சாரு நிவேதிதாவும் என் சாய்ஸ். அதற்காக ஜெ. எழுதும் அனைத்திலும் உடன்பாடு உண்டு என்று சொல்ல முடியாது. ஜாதி துவேஷத்தை ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதன் மூலம் கடந்து விடலாம் என்றெல்லாம் அவர் எழுதுவதில் எனக்கு கடுமையான முரண்பாடு உண்டு. அவர் சொல்லும் கருத்துக்கு உடன்படவில்லை என்றால் 'பயிற்சி' இல்லாதவர்கள் என்றொரு பழிச்சொல்லுக்கு ஆளாகவும் நேரும்.
காந்தியை அவர் கடவுள் ரேஞ்சுக்கு எழுதுவதெல்லாம் கண்டிப்பாக விமர்சனத்துக்கு உரியவை. ஆனால் அவரிடம் நம்மால் விவாதம் செய்ய முடியும். நாம் சொல்லும் கருத்துக்கோ அல்லது கேள்விக்கோ அவர் மதிப்பளித்து விளக்கம் தருவது போல் சாரு செய்வதில்லை. அவர் தளத்தில் பின்னூட்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனாலும் என் மனம் சற்று தளர்வடைந்தால் நான் செல்வது சாருவின் தளத்துக்கு தான். தன்னை பற்றியும் தான் படைப்புகளை(!) பற்றியும் அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் வடிவேலுவின் காமெடியை மிஞ்சி விடும். படிப்பவர்கள் மனம் சிரித்து சிரித்து லேசாகி விடும்.

சமீபத்தில் அவரிடம் 'மாட்டிகொண்ட' ஒரு அப்பாவி எழுத்தாளரை ( அவரது பழைய நண்பராம்) படு ஆபாசமாக திட்டி எழுதி இருந்ததை படித்தேன். ஆள் யாராக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் பாவம் இவரிடம் போய் மாட்டிக்கொள்ளும் அளவுக்கு விஷயம் தெரியாதவராய் இருக்கிறாரே என்று நினைத்துகொண்டேன். யானை கொசுவை புணர்ந்த கதை என்றொரு கதையை சொல்லி தான் யானை என்றும் மாட்டியவர் கொசு என்றும் வெளிப்படையாகவே அசிங்கப்படுத்துகிறார் சாரு. சந்தில் அவர் பாடும் சிந்தில் இணைய எழுத்தாளர்களின் தலை வேறு உருள்கிறது. வலைப்பூ எழுத்தாளர்களை முடிந்த அளவு வசை பாடி இருக்கிறார். அவரை பற்றி கிண்டல் செய்து நான் எழுதிய கட்டுரை ஒன்றை படித்த என் நண்பர் ஒருவர், இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட வேண்டியவர் இல்லை சாரு; இதெல்லாம் அவருக்கு (அவரை புணரும்) கொசுக்கடிக்கு சமம். அவரை 'ஜாலியாக' எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். உண்மை தான். ஆனால் இப்படி 'மாட்டும்' அப்பாவிகளை அவர் ஓட்டும்போது நாம் அவரை ஓட்டுவதில் என்ன தப்பு என்று கேட்டேன். விஷயம் தெரிந்த பலர் அவரை சீந்துவதில்லை, பல இலக்கியவாதிகள் இவர் பல்லில் பட பயந்து எதுவும் சொல்வதில்லை.
ஆனால் அவர் பண்ணும் அலம்பலை நினைத்து எந்நேரமும் சிரித்துகொண்டே இருக்க முடியாதே. ஒரு உறையில் ஒரு வாள் தான் இருக்க முடியும். ஒன்று அவர் அல்லது வடிவேல் என்பதால் அதிகம் எரிச்சல் மூட்டாத காமெடியனாக வடிவேலையே எல்லோரும் prefer செய்கிறார்கள் போலும்.

'நான் விகடனில் எழுதுகிறேன் என்றால் அதற்கு பின்னால் முப்பத்தைந்து வருட உழைப்பு (!) இருக்கிறது' எனும்போதே அவர் அந்த பத்திரிக்கையில் எழுத எவ்வளவு ஆர்வமாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. இலட்சியத்தை பார்த்தீர்களா? ஆனால் அதற்கு முன் விகடனை பற்றியும் பிராமணர்களை பற்றியும் முடிந்த வரை கேவலமாக எழுதி இருக்கிறார் என்பது அவரை(யும்) படித்தவர்களுக்கு தெரியும். இன்று விகடனில் எழுதுவது தான் இத்தனை நாள் செய்த இலக்கிய சேவையின் பலனா? சரி இதுவும் இவரது காமெடிகளில் ஒன்று எனலாம். இன்னொரு காமெடி விகடனில் அவர் எழுதிய ஒரு விஷயம். ஆர்மோனிய பெட்டியை 'ஏந்தி' கொண்டு, தேர்ந்த இசை கலைஞரை போல் போஸ் கொடுக்கும் படம் ஒன்றும் அது தொடர்பான கட்டுரை ஒன்றும். மிஷ்கின் செய்த 'புண்ணியங்களில்' ஒன்றாக இந்த மாமனிதரை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை பற்றியும் அதில் அவர் நீது சந்திரா, மற்றும் அவரால் ஏகத்துக்கும் புகழப்பட்டு பின்பு அதை விட மோசமாக விமர்சிக்கப்பட்ட அமீருடனும் ஒரு பாட்டுக்கு ஆடும் ஆட்டம் பற்றியும் எழுதி இருக்கிறார். பாருங்கள் ஒரு 'இலக்கியவாதி' சினிமாவில் அடையும் இடத்தை. இதற்காக தான் ஆசைப்பட்டாயா மனமே என்று அவரையே கேட்டுக்கொள்வாரோ?

மஹா காமெடி இது தான். அந்த புகைப்படத்தில் அவரை பார்க்கும்போது நடிகர் ஓமர் ஷெரிப் போல் இருப்பதாக ஒரு வாசகி (வேறு யார்?) சொன்னாராம். தலிவர் புளகாங்கிதம் அடைகிறார். அந்த பெண் 'அந்த ஏழு நாட்களில்' பாக்யராஜின் சிஷ்யனாக வரும் 'ஹாஜா ஷெரிப்பை' சொல்லவில்லை என்று நம்புவோம். அவரும் அதில் 'பொட்டி' தானே தூக்குகிறார்.

நங்கள் எல்லாம் எவ்வளவோ படித்து விட்டு, எழுதிவிட்டு, சினிமா பார்த்துவிட்டு எழுதுகிறோம் என்று ஒரு நியாயமான விஷயத்தை சொல்கிறார். இது உண்மையிலேயே சீரியசான விஷயம். உண்மையிலேயே கவனிக்கப்பட்ட படைப்புகளை ஆரம்பத்தில் தந்தார் என்கிற முறையில் அவருக்குரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் தான். ஆனால் நீர் தொடர்ந்து நன்றாகவே எழுதிக்கொண்டிருந்தால் வாசகர்களாகிய நாங்கள் என்ன 'ரோமத்துக்கு' எழுதபோகிறோம்? நீர் எழுதும் அபத்தத்தை சகிக்க முடியாமல் தானே நாங்கள் எழுத தொடங்கினோம். ஓசியில் இன்டர்நெட் கிடைத்தால் எல்லோரும் ப்ளாக் எழுதுகிறார்கள் என்று வேறு ஒரே புலம்பல். நான் உட்பட பலர் வீட்டில் சொந்தமாக இன்டர்நெட் வைத்திருக்கிறோம். இவரை போல் இன்டர்நெட்டில் 'இதை எழுத வேண்டும் என்றால் ரூபாய். இரண்டாயிரம் அனுப்பவும். இதை எழுதாமல் இருக்க வேண்டும் என்றால் இருபதாயிரம் அனுப்பவும் என்று யாசகமா (கௌரவ வார்த்தை!) எடுக்கிறோம்? இணையம் என்பது திறந்த வெளி. அதில் யார் வேண்டுமானாலும் எழுதலாம். நாங்கள் எழுதுவதால் உமக்கு நட்டம் வந்துவிடும் என்று நீர் பயப்படுவது தான் தெரிகிறதே. இணையத்தில் எழுதியதை (எல்லாம்!) புத்தகமாக்கி இருபத்தேழு முப்பத்தேழு என்று மொய் கணக்காய் வெளியிட்டால் அது ஒரு சாதனையா? மனுஷ்யபுத்திரனை மிரட்டி நீர் செய்யும் அக்கிரமங்களில் இதுவும் ஒன்றல்லவா?

மதுரையில் அடிபட்டு (உண்மையாகவே) மானாமதுரையில் வந்து அழுத கதை தானே உங்கள் கதை? அப்படி இருக்க பாவம்.. உங்களிடம் இலக்கியம் பேச வந்த அப்பாவியை புரட்டிபோட்டு அடிப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம் சாரு?

Friday, July 16, 2010

ஓவியமும் நானும்...

சிறு வயதிலிருந்தே ஓவியம் மீது ஆர்வம் ஏற்பட என்ன காரணம் என்று சரியாக சொல்ல முடியவில்லை. பாட புத்தகங்களில் வரும் வண்ண ஓவியங்களில் மனதை பறிகொடுக்க ஆரம்பித்து, வணிக பத்திரிக்கைகளில் வரும் ஓவியங்கள், என்றென்றைக்கும் மறக்க முடியாத ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற சித்திரக்கதை புத்தகங்களில் வரும் ஓவியங்களில் மூழ்கினேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நானும் வரைய ஆரம்பித்தேன். பள்ளி நாட்களில் ஓவியத்துக்காக பரிசுகள் வாங்கியதுண்டு.

கல்லூரி நாட்களில் எந்த பயிற்சியும் இல்லாமல் ஓவியத்தின் மீதிருந்த ஆர்வம் ஒன்றை மட்டும் கொண்டு வரைய ஆரம்பித்தேன். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த 'மலர்' பத்திரிக்கையில் என் ஓவியங்கள் வெளியாகின. பின்பு தீவிர இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்த மங்களேஸ்வரன், தனிக்கொடி, ராசி. பன்னீர்செல்வன் ஆகியோர் இணைந்து நடத்திய 'கவித்வா' எனும் பனிரெண்டே பக்கங்கள் கொண்ட கவிதைக்கான சிற்றிதழில் வரைய ஆரம்பித்த போது நவீன ஓவியம் மீது ஆர்வம் ஏற்பட்டது. இரண்டாண்டுகள் வந்த கவித்வா பரவலான கவனம் பெற்றது. அது நின்று விட்ட பிறகு, வாழ்க்கையின் ஓட்டத்தில் பின்பு ஓவியம் வரைய சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. வாசிப்பை மட்டும் விடவில்லை.

2005 இல் டெல்லி வந்த புதிதில் திரு.ஷாஜஹான் இலவசமாக நடத்திக்கொண்டிருந்த 'தலைநகர தமிழோசை' இதழில் வரைய வாய்ப்பு கொடுத்தார்.

டெல்லியில் நவீன நாடகங்களின் முகவரியாய் இருக்கும் திரு. யதார்த்தா பென்னேஸ்வரன் ஆரம்பித்த 'வடக்கு வாசல்' தான் என் அடையாளம். பிரபல எழுத்தாளர்களில் இருந்து புதிதாய் எழுத வரும் எழுத்தாளர்கள் வரை நிறைய பேரின் படைப்புகளை படித்து விட்டு அதற்கேற்ப ஓவியங்கள் வரைவது மிகவும் பிடித்திருக்கிறது. பென்னேஸ்வரன் அவர்கள் தரும் உற்சாகமும், படைப்பை எழுதியவர்களின் பாராட்டும் என்னை உற்சாகப்படுத்தின. ஒவ்வொரு முறை ஓவியங்களை அனுப்பும்போதும் பென்னேஸ்வரன் அவர்கள் எழுதும் பதில் இன்னும் வரைய தூண்டும். அவரை பற்றி நிறைய எழுதலாம். க.நா.சு முதல் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் வரை அவரை அறியாத எழுத்தாளர்கள் யாரும் இல்லை. வடக்குவாசலில் ஒரு அங்கமாக இருப்பதை என் பேறாக நினைக்கிறேன்.

பிறகு உயிர்மையில் வரைய ஆரம்பித்தேன். பிரபஞ்சன் தொடங்கி எஸ். ராமகிருஷ்ணன் போன்ற சிறந்த எழுத்தாளர்களின் கதை, கட்டுரைகளுக்கு வரைவதில் உண்மையில் ஒரு பெருமிதம் உண்டு. முக்கியமாக இலங்கையிலிருந்து எழுதும் நண்பர் தீபசெல்வனின் கட்டுரைக்கு வரைந்த ஓவியங்களுக்கு அவர் தந்த பாராட்டு மறக்க முடியாதது. தனது blog இல் அந்த ஓவியங்களை அவர் பயன்படுத்தி கொண்டார். நானும் என் தோழி அனார்கலியும் நடத்தும் blog இன் முகப்பில் இருக்கும் படம் வடக்குவாசலில் தீப செல்வன் எழுதிய 'புகைப்படத்தில் கொல்லப்பட்ட எனது சகோதரன்' என்ற கவிதைக்காக வரைந்தது. தன் இறந்த சகோதரனை நினைவுபடுத்துவதாக சொன்னார் தீபன்.

மனுஷ்யபுத்திரன் என் ஓவியங்கள் பெற்றவுடன் அவற்றை பாராட்டி சொல்லும் வார்த்தைகள் சந்தோஷம் தருபவை.

நண்பர் சேதுபதி அருணாசலம் தந்த உற்சாகத்தில் சொல்வனத்திலும் சில படைப்புகளுக்கு வரைந்தேன். எனது படைப்புகளை படித்து உற்சாக படுத்தும் சேதுபதி சொல்வனத்தில் என் விமர்சன கட்டுரை ஒன்றை பிரசுரித்தார். தொடர்ந்து எழுதவும் வரையவும் சொல்லி ஊக்கம் தரும் அவர் போன்றவர்களுக்கு என் நன்றிகள். அவ்வப்போது என் ஓவியங்களை பார்த்து சரியான விமர்சனம் சொல்லும் என் பெருமதிப்புக்குரிய ஓவியர், எழுத்தாளர், விமர்சகர் என்று பல்வேறு முகங்கள் கொண்ட ஜீவானந்தம் அவர்களுக்கும் நன்றி.

வடக்குவாசல், உயிர்மை ஆகிய பத்திரிக்கைகளில் வெளியான எனது சில ஓவியங்கள் கீழே.


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------

Tuesday, July 13, 2010

ராஜ்நீதி;ராவண்: கசக்கியெறிந்த காவியங்கள்.



ஒரே நேரத்தில் இந்தியாவின் இரண்டு பெரும் இதிகாசங்களை தழுவிய கலைப்படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஒன்று பிரகாஷ் ஜாவின் ‘ ராஜ்நீதி’. மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட படம். (என்று சொல்லப்பட்டது). மணிரத்னத்தின் Magnum Opus என்று வருவதற்கு பரபரப்பை ஏற்படுத்திய ‘ராவணன்’, ராமயணத்தை அடிப்படியாக கொண்டது. இரு பெரும் கதைகளையும் எத்தனையோ கிளைக்கதைகளையும் தம்முள் கொண்ட, இந்தியாவின் எல்லா பகுதி மக்களாலும் நன்கு அறியப்பட்ட இந்த இரு இதிகாசங்களையும், இந்தியாவின் சிறந்த இயக்குநர்கள் என்று நம் மீடியாக்கள் கொண்டாடுபவர்கள் எவ்வாறு உள்வாங்கி இருக்கிறார்கள், அதைத் தாம் கற்ற சினிமாவில் எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்க்க ஆர்வம் இருந்தது. ஆனால் படங்களைப் பார்க்கும்போது இதிகாசம் மட்டுமல்ல தம் சமகாலத்தையும் நிகழ்வுகளையும் இந்தியாவின் பிரதேசங்களையும் இவர்கள் அறிந்து வைக்கவில்லை அவற்றைக் கையாள தமக்கு எந்த தகுதியும் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள் என்றே தோன்றியது.


இந்தியாவின் பத்திரிக்கைகளும், சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஞானிகளும் இவ்விரு படங்களையும் பாராட்டித் தள்ளுகிறார்கள். ராவணன் பற்றிக் கூட சில இணைய தளங்கள் சரியான விமர்சனத்தை எழுதியிருக்கின்றன. ஆனால் ராஜநீதி பற்றி Times of India-வும், சில வட இந்திய பத்திரிகைகளும் எழுதிய விமர்சனத்தைப் படிக்கையில் இவர்களுக்கு சினிமா ஞானம் என்ன, உலக அறிவே இல்லையோ என்று தான் நினைக்க தோன்றியது.
முதலில் ராஜ்நீதி.


அரசியலின் நீதி எப்படிப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும். உறவுகளையும் நட்பையும் எவ்விதத்திலும் பொருட்படுத்தாத வெற்றியை மட்டுமே குறிக்கோளாய் கொண்ட அரசியல்வாதிகளால் நேரடி பாதிப்புக்குள்ளாகும் மக்களிடம்தான் அதே அரசியல்வாதிகள் நியாயம் கேட்டு நிற்பார்கள். அரசியல் சார்ந்த வன்முறைகளைப் பிரதானமாக வைத்து வந்த படங்கள் தமிழிலும் தெலுங்கிலும்தான் அதிகம். சத்யா போன்ற சில படங்களும் ஹிந்தியில் வந்திருக்கின்றன. ஆனால் வன்முறை சார்ந்த அரசியலை மையமாகக் கொண்டு வந்த படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ராஜ்நீதி. வடக்கத்திய இதழ்களால் ஆஹா ஓஹோவென்று பாராட்டப்பட்ட படம். எனக்கு இவர்கள் செய்த ஆராவாரமே சந்தேகம் தருவதாக இருந்தது.


ஏதோ விஷயம் இருக்கிறது என்பது போல் படங்காட்டும் முதல் அரை மணி நேரத்துக்குப் பிறகு வரிசையாக மக்கள் காதில் பூ சுற்றுகிறார்கள். அரசியல் என்றால் என்னவென்று, அதுவும் வாரிசு அரசியல் என்றால் என்னவென்று நம் இந்திய மக்களுக்குப் புதிதாகச் சொல்லித்தரத் தேவையில்லை. ஆனால் இவ்வளவு வெளிப்படையாக ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவதும் நியாயத்துக்காகச் செய்கிறேன் என்று சொல்லி, எதிரியை விட படு பாதகமாக நடந்துகொள்வதும், பின்பு காதல், குடும்பப் பாசத்தில் உருகுவதுமாகச் செல்லும் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகளை நாம் சுந்தரத் தெலுங்கில் பலமுறை பார்த்திருக்கிறோம். இதையும் ஒரு பெரும் முயற்சி என்று இங்குள்ளவர்கள் பாராட்டுகிறார்கள்.


பலம் பொருந்திய கட்சியில் ஒரு சாதாரண கபடி வீரரான தலித் அஜய் தேவ்கன், கட்சி ஆட்களிடமே மோதி உள்ளே நுழைகையிலேயே நாடகத்தனம் ஆரம்பமாகிறது. திடீரென்று பக்கவாதத்தில் படுத்துவிடும் சந்திர பிரதாப் தனக்குப் பிறகு அரசை ஆளத் தன் தம்பிக்கு அதிகாரம் கொடுக்கிறார். அவர் மகனான மனோஜ் வாஜ்பாய் அதிர்ந்து போய் விடுகிறார். அர்ஜுன் ராம்பால் கடுமையாக அஜய்யை எதிர்க்க, சந்தர்ப்பம் வேண்டி காத்திருக்கும் மனோஜ் பாஜ்பாய் அவரைஆதரிக்கிறார். உடனே ஆரம்பமாகிறது வன்முறை அரசியல். எனில் ஒரு தலித்அரசியலுக்கு வந்தால் வன்முறைதான் செய்வானா?


அவரைப் பயன்படுத்தி அடுத்து முதல்வராக வரவிருக்கும் சித்தப்பாவை மனோஜ் காலி செய்ய அமெரிக்க ரிட்டர்ன் ரன்பீர் தனது அப்பா சாவுக்கு காரணமான அனைவரையும் ‘முடித்துவைக்கிறார்’. இடையில் தன்னை சிறுவயதிலிருந்தே காதலிக்கும் கத்ரினாவை அரசியல் பொருளாதார சமரசம் என்ற பெயரில் கத்ரினாவின் தந்தை சொல்வதற்குத் தலையாட்டி தன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இவை அனைத்துக்கும் வழிகாட்டியாய் இருந்து கிருஷ்ணலீலை செய்கிறார் அவரது தாய்மாமனான நானா படேகர்.


இறுதியாக இவர்களின் உள்விரோதங்களின் காரணமாக ரன்பீரின் அமெரிக்க மனைவியும் அர்ஜுன் ராம்பாலும் குண்டு வெடிப்பில் இறக்க இறுதிவரை காதலுக்காக போராடி பிறகு ‘மக்களின் ‘ விருப்பத்துக்கிணங்க தேர்தலில் போட்டியிடுகிறார் காத்ரீனா. அவர் மேடையில் பேசும் உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்கும்போது மயக்கமே வந்து விடுகிறது. “என் குடும்பத்தில் பலரை இழந்தேன்… இதற்கெல்லாம் யார் காரணம்? பதில் சொல்லுங்கள்…” என்று இந்த வன்முறைகளிலோ சூழ்ச்சிகளிலோ எந்தவித தொடர்புமில்லாத ஆரம்பம் முதல் ஒரு பரிதாப பார்வையாளராக இருக்கும் அப்பாவி மக்களிடம் ‘நீதி’ கேட்கிறார். இயக்குனர் இதில் என்ன சொல்ல வருகிறார்? பதவிக்காக எதையும் செய்ய துணியும் ஒரு குடும்பம், தன் அழிவுக்கு எந்தப் பாவமும் அறியாத மக்களிடம் சென்று முறையிடுகிறது. நல்ல அரசியல் பார்வை கொண்ட இயக்குனர் எனில் இந்த முரண்பாட்டை தன் வழியில் பார்வையாளர்களிடம் முன்வைத்திருப்பார். ஆனால் காலம்காலமாக சினிமா எனும் மிகப்பெரிய ஊடகத்தை புரியாமல் கையாண்டு வருபவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியுமா?


இது மகாபாரதக் கதை என்பதால் கதைப்படி துரியோதனனான மனோஜ் பாஜ்பாயுடன் நல்ல நட்பில் இருக்கும் தலித்தான அஜய்யைக் கொல்ல நானா செல்லும்போது அந்த அப்பாவி தலித் பெற்றோர் “இவன் எங்கள் சொந்த மகன் அல்ல. ஆற்றில் கிடைத்தான்” என்று அந்தக் குழந்தையுடன் கிடைத்த துணியைக் காட்டிக் கதறுகிறார்கள். இதையெல்லாம் தளபதியிலேயே பார்த்து விட்ட நமக்கு எரிச்சல்தான் வருகிறது. மகாபாரத காலத்தில் ஒருவரை ஒருவர் கொன்றார்கள் என்றால் சமகாலத்தில் நடக்கும் அரசியல் அடிப்படை கதையிலும் ஒருவரை ஒருவர் கொன்று தான் தீர்வு காண்பார்களா?


இங்கு தான் பிரகாஷ் ஜா தான் ஒரு அறிவிலி என்று காட்டுகிறார். கிருஷ்ணர் போன்ற கதாபாத்திரத்தில் வரும் நானாவின் அதிகபட்ச ‘ராஜதந்திரமே’ இவனைக்கொல், அவனைக்கொல் என்று ரன்பிரையும் அர்ஜுன் ராம்பாலையும் தூண்டிவிடுவது தான் . இதில் எங்கே வருகிறது ராஜதந்திரம்? அது போன்றகாட்சிகளில் நானா சிரித்துகொண்டே தலையை திருப்பிக் கொள்கிறார். அவருக்கே இது நகைச்சுவையாய் தோன்றியிருக்கும்.
தன் எதிரிகள் தன் சகோதரர்கள் என்று தெரிந்தும் தன் தாய் அழைத்தும் நட்பு காரணமாக மனோஜை விட்டு விலகாத அஜய் கொலைவெறியுடன் திரியும் நானா, ரன்பிரிடம் இருந்து மனோஜை காப்பாற்ற வரும்போது ‘இந்த வன்முறையை இத்தோடு நிறுத்திக்கொள்வோம் ‘ என்று நேர்மையாக பரிதாபமாக சொன்னாலும் அவரையும் கொல்லச் சொல்லி ரன்பிரிடம் சொல்கிறார் நானா. ‘அரசியல் நீதியில் இவை செய்யப்பட வேண்டியவையே ..’ என்று காரணம் சொல்கிறார். இதுதான் பிரகாஷ் ஜாவின் கிருஷ்ணர் சொல்லும் பகவத் கீதை. எல்லாம் முடிந்து ரன்பீர் தன் ‘கடமைகளை’ முடித்துவிட்டு அரசியல் அறிவே இல்லாத காத்ரினாவிடம் பொறுப்பை விட்டு அமெரிக்கா புறப்படுகிறார். இப்படி நடந்துகொள்பவர்களை விமர்சன நோக்கில் படமாக்காமல் ஆதரிப்பது போல் படம் எடுப்பது என்ன அரசியல் நீதி என்று தான் புரியவில்லை.


ஏறக்குறைய ஒரு மாத இடைவெளியில் இன்னொரு இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருக்கிறது ராவண். தமிழில் ராவணன். மணிரத்னத்தின் பெரும்பாலான படங்கள் inspired படங்கள். மௌனராகம் மகேந்திரனின் ‘நெஞ்சதை கிள்ளாதே’ படத்தின் திருந்திய பதிப்பு; காட்ஃபாதரின் தமிழ் வடிவம்தான் நாயகன் என்று எல்லோருக்கும் தெரியும்; ரோஜா ‘ சத்யவான் சாவித்ரி’ ; தளபதி ‘கர்ணன் கதை’ என்று பல படங்களின் கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்டவை.
மணிரத்னத்தின் மிகப்பெரிய பலவீனம் குறைந்த செலவில் அதிக லாபம் பார்க்க நினைத்து ஒரே நேரத்தில் ரெட்டைச் சவாரி செய்வது. பூகோள ரீதியில் மட்டுமல்லாது கலாசாரரீதியிலும் நுண்ணிய வேறுபாடுகள் கொண்ட வட மற்றும் தென்னிந்தியாவை சினிமா சமரசத்தில் ஒன்று போல் காட்டி தோற்பது மணியின் வாடிக்கை. வட இந்திய பனியாவை திருநெல்வேலி பாஷை பேச வைத்ததன் மூலம் தனது அறிவுஜீவுதனத்தை நிலைநாட்டி கொண்டவர். இவ்வளவுக்குப் பிறகும் ஒரே நேரத்தில் இருவேறு மொழிகளில் மாறுபட்ட கதாபாத்திரத்தை விக்ரம் செய்வதையும், ஒளிப்பதிவில் படம் சாதனை செய்திருக்கிறது என்று விஷயம் அறிந்த பலர் சொன்னதாலும் படம் பார்க்கச் சென்றிருந்தேன்.(அதிலும் படத்துக்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு எண்பது சதவீதம் ஒளிப்பதிவு செய்த மணிகண்டனை விட்டு விட்டு மீதியை முடித்துக்கொடுத்த சந்தோஷ் சிவனை மட்டும் பாராட்டும் மீடியா ஒரு பக்கம்!) டெல்லியின் PVR ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஷோ காற்று வாங்கி கொண்டிருந்தது.


என்ன base , என்ன place, என்ன cause என்று காட்டாமலேயே கதையைநகர்த்துகிறார் மணி. போலீஸ் எஸ்.பி.யான தேவின் (விக்ரம்) மனைவி ராகினியை பீரா (அபிஷேக்) கடத்தும் முதல் காட்சியின் ஒளிப்பதிவு அற்புதம். சரி சீதையை கடத்தியாயிற்று. எஸ்.பி. தேவும் அவரது போலீஸ் படையும் எங்கு இருக்கிறான் என்று கூட தெரியாமல் காட்டுக்குள் தேடுதல் நடத்துகிறார்கள். ராமசேனைக்கு அனுமன் வேண்டுமே. காட்டிலாக அதிகாரியாக கோவிந்தா அறிமுகம்ஆகிறார். அவரை ஹனுமானாகக் காட்ட வேண்டுமே. அவர் திடீரென்று நியூட்டன் விதிகளை காற்றில் பறக்கவிட்டு மரத்துக்கு மரம் தாவுகிறார். என்ன ஒரு கற்பனை வறட்சி. தமிழில் இந்த பாத்திரத்தை கார்த்திக் செய்திருக்கிறார். மெளனராகத்தில் அவர் செய்த அற்புதமான பாத்திரம் நினைவுக்கு வருகிறது.பாவம்.


கடத்தப்பட்ட இரண்டு நாட்களுக்கு முரண்டு பிடித்து அபத்த வசனம் (தமிழில் சுகாசினி வசனம்!) பேசி உறுமும் ஐஸ்வர்யா கட்டு அவிழ்க்கப்பட்ட பிறகு தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் அங்கேயே தங்கிவிடுகிறார். அவ்வப்போது அபிஷேக் அவரிடம் காதல் வசனம் பேசுகிறார். தேடி வரும் தேவ் காட்டில் வாழும் மக்களிடம் பீராவை பற்றி விசாரிக்க அதில் ஒருவன் ‘பீராவிடம் பெண்கள் மயங்குவார்கள்’ என்று சொன்னதை கேட்டதும் தேவ், மற்றும் சஞ்சீவனி (கோவிந்தா) வின் முகம் மாறுகிறது. என்ன ஒரு மட்டமான சிந்தனை! அதன் பிறகும் கதை என்கிற வஸ்துவை நம் கண்ணில் காட்டாமல் மணிகண்டனின் காமெராவை வைத்துக்கொண்டு இமயம் முதல் குமரி வரை இருக்கும் மலை காடு என்று சுற்றியலைகிறார் மணி. அது வரை அபிஷேக்கின் முதிர்ச்சியற்ற எரிச்சல் மூட்டும் நடிப்பை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.


அவ்வப்போது பதினைந்து வருடங்களுக்கு முன் காலாவதியான பாடல்களுக்கு ஒரு பெரும் க்ரூப்பே ஸ்டெப் போட்டு ஆடுகிறார்கள். சினிமாவில் இருபது வருடங்களாக இருக்கும் மணிரத்னம் அடுத்த கட்டத்தை தாண்ட இன்னும் யோசிக்க கூட ஆரம்பிக்கவில்லை என்பதை இது தெளிவாக காட்டுகிறது. இப்படி அபத்தங்களை எழுதிக்கொண்டே இருக்கலாம். இதில் மிக முக்கியமான அபத்தம், புரட்சி செய்கிறேன் என்று கடைசியில் ராகினிக்கு (சீதா) பீராவின் (ராவணன்) மேல் மெல்லிய காதல் (?) இருக்கிறது என்பது போல் காட்டுகிறார் மணிரத்னம். சரி அதற்காக கதையின் சம்பவங்களில் என்ன முடிச்சு வைத்தார் என்றால் எதுவும் இல்லை. கடைசியில் தன்னை மீட்டுக்கொண்டு போகும் தேவ் தன்னை பீராவுடன் சேர்த்து பேச கோபம் கொள்ளும் ராகினி செயினை பிடித்து ரயிலை நிறுத்திவிட்டு இவ்வளவு நாட்கள் கட்டிலும் மேட்டிலும் அலைந்து போலீஸ் தேடிய பீராவை பார்க்க டூரிஸ்ட் பஸ்ஸை பிடித்து போய் சேருகிறார். அங்கும் துரத்திக்கொண்டு வரும் தேவ் தலைமையிலான போலீஸ் படை, பீராவை சுட்டுகொல்கிறது. பீராவின் இறப்பைத் தாங்க முடியாத ராகினி ‘பீரா’ என்று கத்துவதோடு படத்தை முடிக்கிறார் மணி. மீதியை பார்வையாளர்களான நாம் சிந்திக்க வேண்டுமாம். நமக்கு வேறு வேலை இல்லை பாருங்கள். கதையின் இடையில் எதோ ஞாபகம் வந்தாற்போல் சூர்ப்பனகை, விபீஷணன் போன்ற இராமாயண சாயல் கதாபாத்திரங்கள் அவர்கள் இஷ்டத்துக்கு வருகிறார்கள், போகிறார்கள். இது தான் ஒரு மூத்த இயக்குனர் இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் ஒரு பெரிய இதிகாசத்தை கையாளும் முறையா? இதற்காகத்தான் இதனை வருட உழைப்பா என்று கேட்காமல் யாரும் திரையரங்கத்தை விட்டு வெளியில் வர முடியாது.


ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக்கதைகளை எடுத்தாள்வதில் ஒரு சௌகரியம் உண்டு. ‘ஓஹோ ‘ ப்ரொடக்ஷன் நாகேஷ் போல் ‘கதை’ க்காக அலையவேண்டியதில்லை. ராமாயணம் என்றால் கதாநாயகியை வில்லன் கடத்துவது, மகாபாரதம் என்றால் குடும்ப-அரசியல் தகராறு என்று ஒரு மெல்லிய கதையை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படம் எடுத்துவிடலாம். இந்த இருபெரும் காவியங்களில் வரும் ஒவ்வொரு சின்னச்சின்ன பாத்திரமுமே அதற்கென்ற தனித்தன்மையுடனும், ஆழத்துடனும் இருக்கும். ஆனால் உங்கள் திரைவடிவக் கதையில் அதை எவ்வளவு எளிமையும், மலினமும் செய்யமுடியுமோ அவ்வளவு செய்துவிடலாம். இப்படிப் புராணங்களைப் படமாக எடுத்தால் உங்களைப் பழமைவாதி என்று யாராவது முத்திரை குத்திவிட்டால்? அதற்கும் ஒரு வழி இருக்கிறது. காவியங்களில் நல்லவர்களாக வருபவர்களை திரைவடிவத்தில், குரூர மனப்பான்மை கொண்ட சாடிஸ்டுகளாக மாற்றிவிடலாம். ராஜ்நீதி கிருஷ்ணனைப் போல, ‘ராவண்’ ராமனைப் போல. உங்கள் அகலமுதுகில் ஒரு முற்போக்கு முத்திரை விழும்!


ராவண் திரைப்பட இடைவேளையில் PVR கலாசாரத்தில் இருநூறு ரூபாய்க்கு கிடைக்கும் பெப்ஸி மற்றும் பாப்கார்னுக்கான விளம்பரம் திரையில் ஒளிர்ந்தது. Good movies taste better with this combo என்று எழுதப்படிருந்த அந்த வாசகத்தை படித்த ரசிகர் ஒருவர் சத்தம்போட்டு சொன்னார், ” யே தோ பேட் மூவி ஹை..” (மோசமான படமாயிற்றே!) சத்தமாக எழுந்த சிரிப்பலை கேட்டு, மணிரத்னத்தின் அரைகுறை இராமாயண முயற்சிக்கு கிடைத்த சன்மானம் இதுதான் என்று நான் நினைத்துகொண்டேன்.
-------------------------------------------------------------------------------------------------
புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு 'சொல்வனம்' மூலம் அறிமுகப்படுத்தும் இனிய நண்பர் சேதுபதி அருணாச்சலத்துக்கு நன்றி.