Friday, January 22, 2010

ஷாஜிக்கு ஒரு பதில் ...


வன்மத்தோடு சிலரை குறிவைத்து எறியப்படும் விஷ அம்புகளின் வீர்யத்தை பார்க்கும்போது எய்தவனின் மன விகாரம் எப்படிப்பட்டது என்று தெரியும். அவ்வாறு குறி வைத்து தாக்கப்படும் மனிதர்களில் இளையராஜா முக்கியமானவர். என் வாழ் நாளில் நான் கண்டு பிரமித்த , பல ஆயிரம் பாடல்களாலும், திரைப்படத்திற்கான பின்னணி இசையாலும் என்னை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களை மனம் உருக வைத்த, மிக சிறந்த ஒரு படைப்பாளியின் படைப்புகளை இன்று வரை யாரும் சரியான பார்வையோடு பார்க்கவில்லை என்பது என் வருத்தம். தங்களை தாங்களே அறிவு ஜீவிகள் என்று கருதிக்கொண்டு அவரின் இசையை இலத்தீன் அமெரிக்க இசை ஞானத்தோடு அணுகி எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் சில ஜீவன்களுக்கு மத்தியில் (இந்த அறிவு ஜீவிகள் சென்னை புத்தக கண்காட்சியில் அல்பேனிய புத்தகங்கள் கிடைப்பதில்லை என்று அங்கலாய்க்கும் புத்திசாலிகள் ! அல்பேனிய புத்தக கண்காட்சியில் தமிழ் புத்தகங்கள் கிடைக்குமா என்றெல்லாம் கூட யோசிக்க தெரியாத அல்லது அதற்கு நேரம் இல்லாத அறிவு ஜீவிகள்..!) ஷாஜி எனும் மனிதர் வேறு பட்டவராக இருக்கிறார். அவரும் இசை பற்றிய கட்டுரைகளை எழுதுவதில்லை இசை அமைப்பாளர்கள் , பாடகர்கள் பற்றிய குறிப்புகளில் மட்டுமே அவர் சிறந்தவர் என்பது அவரை படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இளையராஜா பற்றிய கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியிருக்கிறார் ஷாஜி. உண்மையில் அது கட்டுரை அல்ல.. ஒரு படைப்பாளியை அவரது பிறப்பையும் பின்னணியையும் சுட்டிக்காட்டி 'உன் அளவோடு இரு' என்று எடுத்தியம்பும் மிக வன்மையான கருத்து கொண்ட எரிச்சல் தெறிக்கும் ஒரு அறிக்கை.

ஷாஜி பற்றி இங்கு சொல்ல வேண்டும்..மிக மென்மையான மனம் கொண்ட , இளம் பிராயத்தில் தன சொந்த தந்தையாலே பல முறை தாக்கப்பட்டு ..வாழ்வை மிக துயரத்துடன் கழித்தவர். இப்போதும் கூட அவர் வாழ்வின் துயரம் நீங்கிவிடவில்லை. பல்வேறு துயரங்களை தாங்கிக்கொண்டு வாழும் அவர்க்கு இசை மீது தீராத காதல். ஷாஜி எனக்கும் இணையத்தால் நண்பரானவர்.

ஆனாலும் ஷாஜியின் சமீபத்திய கட்டுரையின் உள்ளடக்கத்தை படித்த பின்பு அதை எழுதியது ஷாஜி தானா அல்லது அவர் டீ குடிக்க வெளியில் சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அறிவுஜீவி சாரு தான் இடையில் தன கருத்தக்களை அள்ளி விட்டிருக்கிறாரா என்று தான் நினைக்கதோன்றுகிறது.
கட்டுரையின் சில பாகங்களை அவர் என்ன மன நிலையோடு எழுதினார் என்று என்னால் கணிக்கவே முடியவில்லை.. ஷாஜி தன வாழ்நாளில் இவ்வளவு துவேஷம் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியதில்லை.

முதலில் அவர் வைக்கும் விமர்சனங்களின் மீதான ஒரு சாதாரண ரசிகனின் கேள்விகள்:

முதலில் பழசிராஜா பற்றிய அவரது 'எண்ணங்கள்'. ஷாஜி முதற்கொண்டு ராஜாவிடம் முன்பு வேலை பார்த்த அவுசப்பச்சன் போன்ற அனைவரும் அப்படத்தின் இசை தோல்வியடைந்தாக சொல்கிறார்கள். ஆதி உஷ, குன்னத்தே, அம்பும் கொம்பும் போன்ற சிறந்த பாடல்கள் கொண்ட ஒரு படத்தின் இசையை தோல்வி என்று இவர்கள் என்ன அளவீட்டில் சொல்கிறார்கள்? பழசிராஜாவை பார்த்த பலர் சொன்ன கருத்து ஆஸ்கார் 'புகழ்' பூக்குட்டி தனது மேதைமையை பயன்படுத்தி ராஜாவின் இசையை தன 'சத்தத்தால்' பல இடங்களில் அமுக்கியிருக்கிறார் என்று . சமீபத்தில் தான் நானும் அப்படத்தை பார்த்தேன்.. தனக்கு கிடைத்த ஆஸ்காருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பூக்குட்டி ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த அவதியில் படத்தின் பின்னணி இசையை பல இடங்களில் தன சத்தம் கொண்டு அடக்கியிருக்கிறார். இது ராஜாவின் தோல்வியா? மிக முக்கியமாக , ஷாஜி போகிறபோக்கில் படத்தின் இசையின் தோல்விக்கு காரணமாக O.N.V குருப் பின் பாடல் வரிகள் அமைந்ததாக ராஜாவே சொன்னதாக குறிப்பிடுகிறார். இது அக்கிரமம். படத்தின் பாடல்கள் தோல்வி என்று ராஜாவே முடிவுகட்டியதாக நினைக்கிறாரா ஷாஜி? அவர் பேசிய பேச்சின் வீடியோ Youtube இல் கிடைக்கும்.கேட்டுப்பாருங்கள். வெள்ளையரை எதிர்த்ததால் இன்னல்களுக்கு ஆளாகி காட்டில் மறைந்து அங்கிருந்து போர் வியூகம் அமைக்கும் ஒரு மன்னரின் சோகத்தையும் அந்த பாடலில் கொடுக்க தெரிந்த ராஜாவையா நீங்கள் குற்றம் சொல்லுகிறீர்கள்? அந்த பாடலின் composing இல் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லும் நேரத்தில் O.N.V. குருப் தன tune க்கு எழுத முடியாமல் சிரமப்பட்டார் என்றார். இத்தனைக்கும் தன இசையில் புகழ் பெற்ற 'தும்பி வா' பாடலை எழுதியவர் அவர் என்று அந்த நேரத்திலும் குறிப்பிட்ட ராஜாவின் வார்த்தைகளை இப்படியா ஷாஜி திரிப்பீர்கள்? அதை தொடர்ந்து அங்கு வந்திருந்த அனைவரையும் 'நீளம்' கருதாமல் மலையாள 'பழசிராஜாவை' பார்க்குமாறும் வேண்டிக்கொண்ட ராஜாவை நீங்கள் அந்த வீடியோவில் பார்க்கலாம். இதற்கு அவருக்கு கிடைத்த சன்மானம் என்ன தெரியுமா ? படத்தின் இயக்குனரான ஹரிஹரன் . O.N.V. விவகாரத்தில் ராஜா கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை ..அது தனக்கும் M.T.V. நாயருக்குமான பொறுப்பு என்று திருவாய் மலர்ந்தார். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா? அதை தொடர்ந்து ஒரு சினிமா விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சி குறித்தும் இளையராஜா குறித்தும் , கேரளா அமைச்சர்கள் முதற்கொண்டு விமர்சனம் செய்ததை இங்கு உள்ளவர்கள் அறியவில்லை என்று நினைக்கிறாரா ஷாஜி? தொடர்ந்து மலையாள மனோரமா இளையராஜாவின் 'பா' இசையை ' recycle' செய்யப்பட்டவை என்ற 'உண்மையை' கண்டு பிடித்து எழுதுகிறது? எதற்காக? தன மண்ணின் கவிஞரான O.N.V பற்றி ராஜா விமர்சித்து விட்டாராம்? என்ன ஒரு ஒற்றுமை?
'பா' படத்தின் பாடல்கள் பால்கியின் விருப்பத்திற்காக ராஜாவால் திரும்ப உபயோகிக்கப்பட்டன என்று படத்தின் இசை வெளியிடுவதற்கு முன்பிருந்தே பால்கியாலேயே அறிவிக்கப்பட்டு வந்த செய்தி. இதை ஒரு விமர்சனமாக இவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது?

அடுத்து ஷாஜி குறி வைக்கும் ராஜாவின் மறுக்க முடியாத மென் பகுதி அவரது பின்னணி. ராஜாவை 'King of folk' (மட்டும் தான்) என்று தன நல்ல முகத்தின் பின் மறைந்திருக்கும் துவேஷதைக்கொண்டு குத்தி காட்டுகிறார். ராஜாவின் பின்னணி அறியாதவர்களா இசை ரசிகர்கள் ? அவரை பற்றி நீங்கள் ஆப்ரிக்க நாட்டிற்கா அறிமுகம் செய்கிறீர்கள்? ராஜா ஒரு தலித் என்று சொல்லி காட்டி அவரை பெருமைப்படுத்துவது போல் , 'பாருங்கள் ஒரு தலித் கூட இசை அமைக்கிறார்' என்று மறைமுகமாக அவரை தாழ்த்தும் சில 'பெருந்தன்மையாளர்களின்' பட்டியலில் நீங்களும் சேர்ந்து விட்டீர்களா ஷாஜி?

தவிர்க்க முடியாமல் ரஹ்மானை இங்கு இழுக்க வேண்டியிருக்கிறது. ரஹ்மான் முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஹிந்து என்பதை தாண்டி .. இந்துவில் அவர் என்ன ஜாதியில் பிறந்தார் என்ற தகவல் யாருக்காவது தெரியுமா ? அதை பற்றி யாரேனும் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இளையராஜா ஒரு தலித் என்று மட்டும் தகவல் எழுதும் 'மனிதர்கள்' எல்லா கலைஞர்களின் பின்னணியையும் தானே எழுத வேண்டும்? ஆனால் இக்கட்டுரையில் ஷாஜி 'தலித்' என்னும் வார்த்தையை மட்டும் கவனமாக தவிர்த்து , அவர் தினக்கூலியாக இருந்தார் என்கிற வரைக்கும் எழுதுகிறார்? இப்போது தான் முதல் படத்திற்கு இசை அமைத்த ஒரு புது இசை அமைப்பாளரையா நீங்கள் எங்களுக்கு அறிமுகம் செய்கிறீர்கள்? ராஜாவை பற்றிய கட்டுரையில் அவரது பின்னணி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் என்னவந்தது?

மேலும் அவரது மேற்கத்திய இசைக்கு மூலம் அவர் 'ஒரு காலத்தில்' தலித் கிறித்துவராக இருந்ததாம். இதை நேரடியாக சொல்லாமல் பல வார்த்தைகளை போட்டு எழுதிகிறார் ஷாஜி. இது வன்மம் அல்லாமல் வேறென்ன?

இதை தவிர தன வன்மத்தை சமன் செய்ய ராஜா பற்றி அனைவரும் அறிந்த (அவர் ஒரே வருடத்தில் பல படங்களுக்கு இசை அமைத்தவர். 'நூற்றுக்கணக்கான' (!) அற்புதமான பாடல்களை தந்தவர்) போன்ற 'புத்தம் புதிய' தகவல்களை நமக்கு 'அளிக்கிறார்' ஷாஜி. ராஜாவின் பாடல்களையும் அவற்றின் தரத்தையும் அனைவரும் அறிந்திருப்பதால் அவற்றை பற்றி எழுத வேண்டியதில்லை என்றும் அதுவல்ல தனது கட்டுரையின் நோக்கம் என்று ' தன எண்ணத்தையும் நோக்கத்தையும்' தன்னை அறியாமேலேயே வெளிப்படுத்திவிட்டார் ஷாஜி. அவரது நோக்கம் ராஜாவின் 'அடாவடி தனங்களை' அம்பல படுத்துவது. அவரை ஒரு கொடுங்கோலராக சித்தரிப்பது.
வெளிநாட்டு இசை கலைஞன் ஒருவன் கொலை செய்து விட்டு வந்து ஆல்பம் போட்டாலும், "அந்த மாதிரியான ஒரு மன நிலைமையிலும் அவருக்கு எங்கிருந்து இசை வந்ததோ!" என்று சிலாகிக்கும் பாணி ஷாஜியுடையது. அவருக்கு பிடிக்க வேண்டுமென்றால் ஒரு இசை கலைஞன் , அகாலத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது.. வாழ் நாள் முழுதும் துயரத்தை அனுபவித்து பின்பு மாண்டிருக்க் வேண்டும். அவரது இசை (கலைஞர்கள்!) பற்றிய கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது எளிதில் புரியும். வெற்றிகரமாக வாழும் இசை கலைஞர்கள் அவரை பொறுத்தவரை 'வணிக ரீதியில் வெற்றி பெற்றவர்கள்' .
(அதிலும் அவருக்கென பிரத்தியேக விதிவிலக்கு ரஹ்மான்! )

இங்கே ராஜா ரசிகர்களை எல்லாம் ஒரு சேர கேவலப்படுத்துகிறார் ஷாஜி. அவரது ரசிகர்கள் அவரை 'கடவுளாக' நினைக்கிறார்களாம். அவரது பொற்காலமான எண்பதுகளில் இசை அமைத்ததை போன்று அல்லாமல் அவ்வளவு தரமில்லாமல் தற்போது இசை அமைக்கும் பாடல்களையும் கண்மூடித்தனமாக ரசிக்கிறார்களாம். என்னை போன்ற பலரும் அவற்றின் அவர் தகுதிக்கு தரமில்லாத பாடல்களை ரசிப்பதில்லை என்றும் , அவருக்கு சரியான படங்கள் அமைந்தால் அக்குறைகளையும் அவ்வப்போது அவர் நிவர்த்தி செய்யும் போது சந்தோசம் அடைவதையும் இவர் அறிவாரா? இளையராஜா ரசிகர்கள் எவ்வளவு திறந்த மனதுடன் அவரை விமர்சனம் செய்த படி இசை பற்றி பேசிக்கொள்ளுகிறார்கள் என்று இணைய தளங்களில் சாதாரணமாக பார்க்கலாமே? வலைப்பூ எழுதும் ஷாஜி இவற்றை எல்லாம் படிக்கிறாரா இல்லையா?
தனது வன்ம வெளிப்பாட்டுக்கு சிகரம் வைத்தாற்போல் பழசிராஜாவின் 'அம்பும் கொம்பும்' பாடல் பாடகி தேர்வு காரணமாக தோல்வியடைந்ததாக குறிப்பிடும் ஷாஜி, அப்பாடல் யார் கவனத்துக்கும் வரவில்லை என்பதிலும் உள்ளூர சந்தோசம் கொள்கிறார்.

பா படத்தின் 'முடி முடி' பாடல் சத்தத்தால் கவனம் கவரும் வீண் முயற்சி என்று சொல்ல அவருக்கு உண்மையிலேயே மனசாட்சி உறுத்தவில்லையா? வெற்றி பெற்று (நினைவுகளில் இருந்து மறைந்த !) ரஹ்மானின் பல பாடல்கள் கவித்துவமான பாடல் வரிகளாலா வெற்றி பெற்றன ? கவனம் கவரும் சத்தங்கள் ஆபிரிக்க , அரேபிய குரல் சத்தங்களை வைத்து 'வித்தியாசமாக' இசை அமைத்த ரஹ்மானின் பாடல்கள் மட்டும் இவருக்கு இனிக்கின்றன. 'பா' பாடலில் அவர் கவித்துவ தரம் பார்க்கிறார். 'Slumdog Millionaire' படத்தில் போலிஸ் துரத்த ஓடும் சேரி சிறுவர்களின் மன ஓட்டத்தை புறக்கணித்து 'லபோ திபோ' என்று ஆபிரிக்க தாளம் தெறிக்க ரஹ்மான் கத்தி ஆஸ்கார் வாங்கினால் சந்தோஷப்பட்டு ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கட்டுரை எழுதுகிறார். 'அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை ' என்ற தமிழ் பழைய பாடலை நினைவுபடுத்தும் ' ஜெய் ஹோ' இவருக்கு அரிய புதிய (!) பொக்கிஷம். ஆனால் தும்பி வா ஒரு வெளி நாட்டு பாடலின் 'நகல்' என்று இணைய தளங்கள் சொல்வதாக அள்ளி விடுகிறார். இப்பாடலும் youtube இல் கிடைக்கிறது. கேட்டுப்பார்த்தேன். ராஜா இந்த பாட்டை தன வாழ்நாளிலே ஒரு முறை கூட கேட்டிருக்க மாட்டார். அவ்வளவு பொருத்தம் கொண்ட அசல் (!) பாடல் இது.

'ராஜா ' என்று தன்னை தானே 'ராஜா' புகழ்ந்து கொள்வதற்காக விசனம் அடைகிறார் ஷாஜி. (அவர் பேர் ராஜா தானே. பின்னே என்ன மந்திரியா? )பாருங்கள் மொசார்ட் தன்னை 'ராஜா' என்று சொல்லி கொள்வாரா என்று கேட்கிறார். மொசார்டும் விதிவ்சத்தில் 'ராசையா' வாக பிறந்திருந்தால் தனது தலித் அடையாளத்தையும் மீறி , இசை துறையில் தவம் போல் உழைத்து , பல வெற்றிகளை கண்ட பின்பும், ராமராஜனுக்கும் மணிரத்னத்துக்கும் ஒரே நாளில் இசை அமைத்தாலும் அதிலும் variety காட்ட தெரிந்து ' பின்பு 'புகழ் ' கொடுத்த மமதையில் தன்னை 'ராஜா ' என்று சொல்லிக்கொண்டு 'திரிந்திருப்பாரோ' என்னவோ? இதெல்லாம் ஒரு இசை விமர்சகன் செய்யும் வேலையா?

முக்கியமான கட்டம் இது தான். இளையராஜா பாப மார்லி , பாப் டிலான் இருவரையும் 'குப்பை' என்று சொன்னதாக கொதிக்கிறார். இதே 'கருத்தை' நம் அறிவு ஜீவி சாரு தூக்கி 'சொமந்தார்.'. நான் கேட்கிறேன். ராஜா அவர்கள் இருவரையும் 'குப்பை' என்று எந்த பேட்டியில் சொன்னார். அல்லது எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ..மேடையில்.. தனது புத்தகங்களில் .. எந்த இடத்தில இந்த மாதிரி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதற்கான ஆதாரம் என்ன? இது கண்டிப்பாக தெளிவாக்கப்படவேண்டும். ஏனென்றால் இந்த குற்ற சாட்டை சொல்லி பல 'குப்பைகள்' குதித்துக்கொண்டிருக்கின்றன.

மேலும் அவர் விரும்பினால் மக்களுக்கு சேவை செய்வார் ஷாஜி. கோவிலுக்கு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். இதை மனதில் வைத்து அவரை 'மனிதம்' இல்லாதவர் என்று கதை கட்டாதீர்கள். ஒரு படத்துக்கு கோடி கணக்கில் வாங்கும் ஹாலிவுட் புகழ் இசை அமைப்பாளர்கள் மட்டும் ஏழை பங்காளர்களா? என்ன மாதிரியான பார்வை இது. இதுவும் உங்கள் இசை புலமையின் வழி வரும் சமூக அக்கறையா?

அவரது ஆன்மீக வாழ்க்கையை குறை சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. தனது இசை வெளியீட்டு விழாவுக்கு இருபது பெண்களை நிர்வாணமாக சைக்கிள் ஓட்ட வைத்து 'புரட்சி' செய்யும் வெளிநாட்டு இசை கலைஞனை வானளாவ புகழ தெரிந்த உங்களுக்கு இசை மீதும் இறை மீதும் பக்தி கொண்டு கட்டுக்கோப்பான முறையில் வாழ பழகிக்கொண்ட ராஜா உங்களுக்கு ஜீரணம் ஆக மாட்டார் தான் .

என்னவோ 1992 இல் தான் ராஜா 56 படங்களுக்கு இசை அமைத்ததாக புது கதை விடுகிறார். அவரது 80 களில் பல மொழிகளில் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஆண்டு தோறும் இசை அமைத்தார் என்பது.. இசை (கலைஞர்கள் !) கட்டுரையாளரான ஷாஜிக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள்.

தவிர கஸ்தூரிமான் படத்திற்கான இசை அமைப்பு சமயத்தில் வந்த இரு பெண்களிடம் , அவர்கள் வேறு இசை அமைப்பாளர்கள் இசை பாடியிருந்ததன் காரணமாகவே கடுமையாக நடந்து கொண்டார் என்று எழுதுகிறார். காரணம் தான் அல்லாத மற்ற இசை அமைப்பாளர்களின் இசையை அவர் ஒத்துக்கொள்ள மறுப்பவர் என்கிறார் ஷாஜி.
இங்கும் எனக்கு தவிர்க்க முடியாமல் ரஹ்மானை இழுக்க வேண்டியிருக்கிறது.. தன முதல் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு 'குமுதம்' நேர்காணலில் தான் சிலரின் (வேறு யார்?) இசையை கேட்பதில்லை என்று சொல்லிவிட்டு தனக்கு பிடித்த இசை அமைப்பாளர்களின் பெயர்களை பட்டியலிடும்போது தமிழ் திரை உலகின் இசை சிகரமான (!) விஜய .T. ராஜேந்தரையும் அதில் சேர்க்கிறார், விடுபட்ட ஒரே பெயர் 'இளையராஜா' .யாரிடம் இசை வாசித்து வந்தாரோ அவர் பெயரை தன ஒரே வெற்றி கொண்டு
புறம் தள்ளிய ரஹ்மானை புகழும் ஷாஜி .. இவ்வளவு வெற்றிக்கு பிறகு ராஜா யாரை மதிக்க வேண்டும் ..ரசிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லி தர தேவை இல்லை. தனது முன்னோர்கள் மீது அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

சினிமா போன்ற தொழில் இடங்களில் ஆயிரம் நடக்கும். உங்கள் ஆதர்சம் மறைந்த லோகிதாஸ் , நடிகை ஒருவரை தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று யாரவது எழுதினால் நீங்கள் கொதிக்க மாட்டீர்களா? இவற்றை எல்லாம் எழுத உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இன்னொரு முரணாக தன்னை 'ராஜா' என்று தற்பெருமை பேசினார் என்று பிதற்றும் ஷாஜி, கட்டுரையின் இறுதியில் அவர் தன்னை குறைவாக மதிப்பிட்டுக்கொண்டார் என்கிறார். ராஜா என்று சொல்லிகொள்வது மரியாதை குறைவான விஷயமா? எதோ ஒரு ஆத்திரத்தில் ராஜாவை பற்றி எதிர்மறையான விஷயங்களை சொல்ல வேண்டும் என்று முனைந்திருக்கிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது.

கடைசியாக ...
அன்புள்ள ஷாஜி

சாருவை பற்றி நான் எழுதிய கட்டுரையை கண்ணில் கண்ணீர் வருமளவுக்கு சிரித்துகொண்டே படித்ததாக சொன்னீர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு. இன்றோ உங்களை பற்றியே ஒருகட்டுரை எழுத வேண்டி எனை தூண்டியது உங்களது வழக்கத்துக்கு மாறான , வன்மம் மட்டுமே நிறைந்த ..இளையர்ஜாவை பற்றிய சமீபத்திய கட்டுரை தான்..வேறெந்த உள்நோக்கமும் அல்ல..

ஏனெனில் நீங்களே என்னிடம் சொன்னது போல் நீங்கள் ஒன்றும் சாரு நிவேதிதா அல்ல..!